World Tamil Blog Aggregator Thendral: கட்டுரை
Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Monday, 29 January 2024

தியாகிகள் தினம்

இன்று தியாகிகள் தினம்.

எங்கள் தாத்தா திருமிகு மாணிக்கம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தரப்பெருமாள் கோவிலில் தீவிர சுதந்திர போராட்ட வீரர்.
நான்  பார்க்கும் போது அவர் உடல்நலக்குறைவில் இருந்தார்.
பத்து வயதாகும் போது அவரின் மறைவு நினைவுகள் இப்போது இலேசாக நிழலாடுகிறது.

தாத்தாவைப் பற்றி ஆத்தாவிடம் அதிகம் பேசுவதுண்டு. வீட்டையும், மனைவியையும், குழந்தைகளையும் கவனிக்காமல் சுதந்திர போராட்டமே கதியென்று கிடந்துள்ளார்.

ஆத்தா தனது ஒன்பது குழந்தைகளில், உயிரோடு ஆறு குழந்தைகளையும் வளர்க்கப் பட்டச் சிரமங்கள் ,தாத்தா மீது கோபம் இருந்தாலும் அவரை எப்போதும் வெறுத்ததில்லை.

ஆத்தா சிறுகச் சிறுக சேமித்து வைக்கும் நகைகளை தாத்தா வீட்டுக்கு வரும் போது எல்லாம் அடுக்குப் பானைகளை அப்படியே  கவிழ்த்துப் போட்டு அதிலிருக்கும் நகைகளை எடுத்து, சுதந்திர போராட்டத்திற்கு தந்துவிடுவார் எனக் கூறி திட்டிக் கொண்டு இருப்பார்.

"அவர் தலையில் காங்கிரஸ் தொப்பியை மாட்டிக் கொண்டு சுதந்திர கொடியை சுமந்து கொண்டு வந்தேமாதரம் என்று முழங்க தெருவெங்கும் நடந்த காட்சியைக் கண்டு காங்கிரஸின் மூத்த தலைவர் மதிப்பிற்குரிய கருப்பையா மூப்பனார் அவர்கள் சிறு வயதில் பார்த்து, சுதந்திர போராட்டத்தின் மீது ஆவல் கொண்டு கலந்து கொண்டதாக "தினமணி பொன்விழா மலரில் ஒரு கட்டுரையில் எழுதி உள்ளார்.

தாத்தாவின் அப்பா
,வங்காரம் பேட்டை,கஞ்சமேடு, உள்ளிக்கடை ,கபிஸ்தலம் உள்ளிட்ட ஏழு கிராமத்திற்கு காரியகாரராக இருந்து பல  வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். தீராத வழக்குகளைத் தீர்த்து வைப்பாராம்.சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமது.

ஒரு வழக்கில் தீர்ப்பு சொல்ல மூன்று நாட்கள் தாமதமாக, மூன்று நாட்களும் வந்திருக்கும் அத்தனை பேருக்கும் தாத்தா வீட்டில் உணவளித்து தங்க இடமளித்து பிறகு தீர்ப்பு வழங்கி உள்ளார்..

ஒரு தீர்ப்பில் குற்றவாளி குற்றத்தை ஒத்துக்கொள்ள மறுக்க, அவர் வீட்டிற்கு அந்த ஊரில் நடக்கும் காளிக்கோவில் திருவிழாவின் போது காளியம்மன் அவர் வீட்டிற்கு வராது என்று கூறி உள்ளார்.குற்றவாளியோ காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.காவலர்கள் "காளியம்மன்" அவரது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.
திருவிழா நாளன்று "காளியம்மன் " அனைவரின் வீட்டிற்கும் சென்று ஆசிர்வாதம் வழங்குவது வழக்கம்.அதுபோல் அன்றும் ஒவ்வொரு வீடாகச் சென்று பின்னர் குற்றவாளியின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் காளியம்மனின் பின்புறம் வந்த தாத்தாவின் அப்பா காளியம்மனை அந்த வீட்டில் விட்டு விட்டு நடக்க, அவரோடு வந்த ஊரிலுள்ள அத்தனை பேரும் அவரைப் பின்பற்றி செல்வதைக் கண்ட காவலர்கள் உண்மையை உணர்ந்து கொண்டனராம்.

ஒரு வழக்கில் விறகை வெட்டி யாரோ எடுத்துச் சென்று விட்டனர் என புகார் வந்ததைக் கண்டு தாத்தாவின் அப்பா அவரிடம் பணி புரிபவரிடம் யார் வீட்டில் எல்லாம் புதிதாக விறகு கிடக்கிறது என்று பார்த்து வரக் கூறி உள்ளார்.அவரது வீட்டிலும் இருப்பதாகக் கேட்டு அதிர்ந்த தாத்தா,விறகை எடுத்து வந்த தனது மனைவியை வேப்பமரத்தில் கட்டி விளார் குச்சியால் எடுத்து சரமாரியாக அடிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார். 

நியாயம் என்று வந்தால் குடும்பமாவது மனைவியாவது என்று வாழ்ந்துள்ளார்.
ஊருக்காக வாழ்ந்தவரை யாரோ குறை கூற ,அதைக் கேட்ட எங்கள் தாத்தா இனி ஊர்ப்பணி எதுவும் பார்க்க கூடாது என சத்தியம் வாங்கி அவரைத் தடுத்துள்ளார்.மீறி அவர் ஊர்க்கணக்கை ஒரு நாள் பார்த்ததைக் கண்டு குறிப்பேடுகளைக் கோபத்தில் கிழித்து போட்டுள்ளார். 

அதனால் தான் அவரும் அந்த பதவிக்கும் செல்லவில்லை.

சுதந்திர போராட்டம் துவங்கி உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடக்கும் நிலையில் தாத்தா சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை மற்றவரிடம் கூறிக் கொண்டு இருந்ததைக் கேட்ட அவரின் அப்பா,"நீ சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்" என்று கூற, ஊரே திரண்டு வந்து தாத்தாவை திருவலஞ்சுழி வரை வந்து உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு வழி அனுப்பி வைத்துள்ளதைக் கேட்ட போது கண்ணீர் வந்தது.

அதனால் ஆங்கிலேய அரசு இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை அளித்தது .சிறையில் பல்வேறு சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்துள்ளார். 

சிறையில் வேதாரண்யம் வேத ரத்தினம் பிள்ளை பிள்ளை உள்ளிட்ட பல தலைவர்களுடன் இருந்த நட்பால், தான் வாழ்ந்த சுந்தரப் பெருமாள் கோவில் ஊரில் அரசு மருத்துவமனை வரக் காரணமாக இருந்துள்ளார்.அந்த மருத்துவமனை அமைக்க ரூ 16000 குறைந்த நிலையில்,அவர் சிறை சென்றதற்காக அரசு சன்மானமாக அளித்த 15 மா நிலத்தை விற்று அதிலிருந்து வந்த பணத்தைத் தந்துள்ளார். அக்காலத்தில் அந்தத் தொகை எவ்வளவு பெரியது?

ஊரிலுள்ள பெண்களுக்காக மாதர் சங்கம் அமைத்து தையற்பள்ளி,ராட்டை நூற்கும் பயிற்சி அளித்து அவர்கள் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக துணை செய்துள்ளார். நெசவாளர்களுக்காக சொசைட்டி,கூட்டுறவு பண்டகச் சாலை அமைத்துள்ளார்.

நிறைய விதவைப் பெண்களை ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து ஆசிரியராக உருவாகக் காரணமாக இருந்துள்ளார்.

அவரால் படித்த பெண் ஆசிரியர் ஒருவரின் குடும்பம் இன்று  தஞ்சை மாவட்டத்தில் மிகப் பெரிய செல்வந்தராகத் திகழ்வதைக் கண் முன் காண்கிறேன்.அவர்கள் அதையெல்லாம் மறந்துவிட்ட காலமிது.

அம்மாப்பேட்டையில் வாழ்ந்த போது 40 நெசவாளிகளுக்காக இலவச  வீட்டுமனைப் பட்டாக்களைப் போராடி பெற்றுத் தந்துள்ளார். அவருக்கு ஒரு இடமும் சிலையும் தருவதாக நெசவாளர்கள் கூறியதை மறுத்துவிட்டார்

தனது குழந்தைகளின் நலனுக்காக எதுவும் செய்யவே இல்லை, ஏன் அவர்கள் எந்த வகுப்பு படிக்கிறார்கள் என்பது கூட அவருக்கு தெரியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆத்தாவின் வேதனைக்கு காரணம் இதுவே.

தனது குடும்பத்தை மறந்து நாட்டுக்காக உழைத்த திருமிகு மாணிக்கம் எனது தாத்தா என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.தியாகிகள் நினைவு மண்டபத்தில் தாத்தாவின் போட்டோவைப் பார்த்து மனம் நெகிழ நின்றேன்.

இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பெற்ற சுதந்திரத்தைச் சீர்குலைக்கும் மனிதர்களைக் கண்டு வேதனை மிகுகின்றது.
அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் கூட இல்லை என்பது எத்தனை கொடுமை.

 மு.கீதா
புதுக்கோட்டை

Sunday, 11 June 2023

விடியல்

திடீரென தொலைக்காட்சியில் விளம்பரங்களிலும் ஆண்களே எண்ணெய், நெய்,காப்பி விளம்பரத்திற்கு சமைத்து தருவதாக எடுக்கப்பட்டு அட்டகாசமாக இருந்தது.
ஒரு பெண் உலகின் நவீன காரை வேகமாக ஓட்டி வர, பின்னால் பைக்கில் ஓடி வரும் இளைஞர்கள்,.
அவள் உடனே ஒரு செண்டை எடுத்து ஆடையில் ஸ்பிரே செய்ய ஆதிவாசி ஆண்கள் முதல் விண்வெளிக்கு சென்று கொண்டிருக்கும் ஆண்கள் வரை பணியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு ஓடிவந்து அவளுக்காக ஜொல்லுவிட அவளோ அவர்களை அலட்சியமாகப் புறந்தள்ளி பறக்கிறாள்.
என்ன ஒரு கொடுமை திரும்பி நின்னு ஒரு பறக்கும் முத்தமாவது தந்து இருக்கலாம்.
அட அடுத்த விளம்பரத்தில் குழந்தைகளை அப்பாக்களே குளிப்பாட்டி ,உணவூட்டி பள்ளிக்கு அனுப்ப அம்மா வரும் வழியில் குழந்தையை பிக்கப் செய்து,கடைக்கு அழைத்துச் சென்று கேட்டதை வாங்கித் தந்து வீட்டுக்கு வந்தால் அப்பா சுடச்சுட பஜ்ஜியோடு மணக்க மணக்க வரவேற்கிறார்கள்..
என்ன ஒரு புடவை விளம்பரம், மேக்கப் விளம்பரம், நகை விளம்பரத்தைப் காணோமே என்று திகைக்க, அந்த நாட்டின் பெண் பிரதமரும், பெண் முதலமைச்சரும் இணைந்து இனி பெண்கள் மேக்கப் இன்றி நகையும் புடவையும் அணியாமல் கோட் போட்டு டை கட்டி தான் பணிக்கு வர வேண்டும் என்ற சட்டத்தை இயற்றி விட்டனராம்.
 என் கண்கள் நம்பாமல் வியப்பில் விரிந்தது.
போதாதென்று மண்டபங்களில் பதாகை ஆண்கள் வயதுக்கு வந்ததை கொண்டாடும் பூப்பு நன்னீராட்டு விழா.ஒரு தாத்தா எங்க காலத்துல இதெல்லாம் இல்லையேன்னு புலம்பிக் கொண்டிருக்க, பெண்கள் தாங்கள் வயதுக்கு வந்ததை பொருட்டாக எண்ணாமல் வேலைக்கு கிளம்பிக் கொண்டு இதெல்லாம் தேவையில்லாத செல்வுன்னு அலட்சியம் செய்தார்கள்.
பெரிய தொழிலதிபர்களாக, அரசியல்வாதிகளாக பெண்கள் எங்கும் திகழ,எங்கடா இந்த நடிகர்கள் பின்னாடி ஓடின இளைஞர்களைத் தேட ,அவர்களோ போதைக்கு அடிமையாகி வட நாட்டில்,அயல்நாட்டில் கூலிக்கு வேலை செய்து கொண்டு இருந்தனர்.
சாதி சாதின்னு அலைந்த கூட்டமோ பொத்திக்கொண்டு இருந்தது.
ஏன்னா எங்களுக்கில்லாத சாதி உங்களுக்கு மட்டும் எதுக்குன்னு நாட்டிலேயே சாதி இல்லயாம்.
ஆண்களை கிண்டல் செய்தாலோ,காதலிக்கவில்லையெனில் ஆசிட் ஊத்தினாலோ, பலவந்தப்படுத்திக் கொடுமை படுத்தினாலோ கடுமையான சட்டங்கள் பாய்ந்தன.
தெருக்களில் இரவில் நடக்க ஆண்கள் அஞ்சி 6 மணிக்கு மேல் வீட்டுக்குள் அடைந்தனர்.
அப்பா அம்மாவிடம் சொல்லாமல் எந்த ஆணும் அடி எடுத்து வைக்கக்கூடாது.
பெண்களால் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தை ஆண்களுக்கு திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் ஊட்டிக்கொண்டே இருந்தன.

தாத்தாக்களின் வலிமையான ஜீன்கள் அவர்களின் போதைப்பழக்கத்தால் அழிந்து பேரன்கள் நோயாளிகளாகப் பிறந்தனர்.

தெருக்களில்,டீக்கடைகளில் எங்கும் பெண்கள் அதிகாலையில் கிளம்பி அரசியல் பேச, அதிகாலையில் கோலமிட்டு ,சமைத்துக் கொண்டிருந்த அப்பாக்கள் புலம்பிக் கொண்டே குழந்தைகளைப் பள்ளிக்கு கிளப்ப, எந்த வித மன உளைச்சலுமின்றி பேப்பர் படித்துக் கொண்டிருந்த பெண்கள் குளித்து விட்டு வந்து சாப்பாட்டில் உப்பில்லை காரமில்லை என்று தட்டைத் தூக்கி எறிந்து விட்டு ஹோட்டலுக்குச் சென்றனர்.

இது எந்த நாடு என்ற குழப்பத்தில் எதுவும் புரியாமல் நான் திகைக்க, கனவைக் கலைத்து கதிரவன் வர, இன்னும் விடியவே இல்லை .
மு.கீதா
புதுக்கோட்டை

Thursday, 20 October 2022

நானும் தீபாவளியும்

நானும் தீபாவளியும்
சிறுவயதில் தீபாவளிஎன்பது அத்தனை ஆனந்தமானது .துணி எடுத்து தைத்து தருவார்கள்.தீபாவளிக்கு மட்டும் தான் புத்தாடை.நான்கு நாட்கள் முன்னதாகவே சொசைட்டியில் வெடி வாங்கி வந்து விடுவோம்.. அதை தினமும் காலையில் காயவைத்து எடுத்து வைக்க வேண்டும்.அப்பா தீபாவளி முதல் நாளில் நான் தம்பி மாமா வீட்டு பிள்ளைகள் சீனு ஆஷா எல்லாருக்கும் பிரித்து தருவார் .சில நேரங்களில் எங்கள் இருவருக்கு மட்டும் கிடைக்கும்.துப்பாக்கி வைத்து பொட்டுவெடி வெடிப்பதும் ஒத்தைவெடி வெடிப்பதும் நீண்ட நேர மகிழ்வைத் தரும்.
ஒரு வாரமாக முறுக்கு ஓலைபக்கோடா தட்டை மிக்சர் அதிரசம் தேங்காய் பர்பி ,சோமாஸ் , மைசூர் பாகு என வீடு அதகளம் ஆகும்.சிறுவயதில் மகிழ்வைத்தந்த பலகாரங்கள் வளர்ந்த பிறகு எவன் இதைக்கண்டுபிடிச்சான்னு கோவமா. வரும் வேலை பெண்டு எடுக்கும்.
தீபாவளி அன்று காலை நான்கு மணிக்கு ஆத்தா எழுந்து எண்ணெய் வெடி வைத்து சாமி கும்பிட்டு தலையில் வைத்து விடுவார்கள்...பெரிய செப்புத் தவலையில் தண்ணீர் கொதிக்கும் ஆவி பறக்க குளித்து விட்டு வெடியை முதலில் வைப்பது யாரென்று எங்களுக்கும் பக்கத்து வீடுகளில் செல்வி வீடு கண்ணகி வீடுகளுக்கும் போட்டி நடக்கும்.இதில் தம்பி முதலில் வெடி வைக்கணும்னு துடித்துக் கொண்டு இருப்பான்.

மறுபடி புத்தாடைகள் பலகாரங்கள் வைத்து சாமி கும்பிட்டு (தீபாவளி பலகாரங்களை சுடும் போதே சாப்பிடலாம் என்பதால் காலியாகிக்கொண்டே இருக்கும்.

பத்து வீடுகளுக்கு மேல் சென்று தர தனித்தனி பாத்திரங்களில் எடுத்து வைப்பார்கள் அந்த கால இரும்பு டின்களில் வரிசையாக பலகாரம் எண்ணி அடுக்கி இருக்கும்.
முதலில் மும்தாஜ் வீட்டுக்கு பிறகு கண்ணகி வீடு, செல்வி வீடு கொடுத்தபின் அடுத்த தெருவில் எஸ் ஆர் மாமா வீடு ஆத்தாவின் அண்ணன் வீடு என்பதால் நல்லதா பார்த்து ஆத்தா வைத்திருப்பார்கள்.
அடுத்தது மாமா வீடு அங்கு மாமா வீட்டு பிள்ளைகள் மற்றும் எங்களுக்கும் புத்தாடை இருக்கும்.காலில் விழுந்து கும்பிட்டு ஆடையுடன் ஒரு ரூபாய் பணமும் வாங்கிக் கொண்டு அடுத்தது ஆத்தாவின் அக்கா வீடான சத்திரத்திற்குச் செல்வோம்..அங்கு ஒரு தாத்தா காதில் கடுக்கனுடன் இருப்பார்கள்.அங்கு பெரியம்மா லெச்சுமி அக்கா எல்லாரையும் பார்த்துவிட்டு பலகாரம் கொடுத்து அவர்கள் தரும் தீபாவளி காசையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவோம்..
அப்பறம் வெடி வெடிப்பது தான் வேலை மதியம் மாமா வீட்டிற்கு அனைவரும் சென்று விடுவோம்.மாலை ஏதாவது ஒரு திரைப்படம் ...இப்படியாக தொலைக்காட்சி வரும் வரை சொந்தங்களுடன் கழிந்தது.மறுநாள் கௌரி நோன்பு மிகவும் சுத்தபத்தமாக ஆத்தி இப்போ நினைச்சாலும் கண்ணீர் வரும் வேலை வேலை என்று அடி நிமிர்த்தி விடுவார்கள்.
தொலைக்காட்சி வந்த பிறகு காலையில் பத்து மணிக்குள் அனைத்தையும் முடித்துவிட்டு சாலமன் பாப்பையா பட்டி மன்றம் என தொடர்ந்து டிவி தான்...டிவி பார்க்கும் போது ஏதாவது வேலை சொன்னால் வரும் பாருங்க கோவம்...காலை உதைத்து கொண்டு செய்வோம்.
வேலைக்கு வந்த பிறகு இந்த ஆவல் இல்லை என்றாலும் சேலை எடுக்கப்போவதே திருவிழாவிற்கு செல்வது போல அனைவரும் போவோம்.அதென்னவோ மலைபோல் குவித்து வைத்தாலும் அடுத்ததைப் பார்த்து இறுதியாக முதலில் பார்த்ததை வாங்கி வருவோம்...சினிமாக்கு போவது தான் பிடித்த பொழுது போக்கு.

பதினோராம் வகுப்பு படிக்கும் போது தேவகோட்டை சித்தப்பா வீட்டிற்கு வர பெரியார்  அறிமுகம்  ஆனார்... அதெப்படி சாமி கும்பிடாமல் இருப்பது ....

பாலகுமாரன் ரமணிசந்திரன் நாவல் படிக்கும் போது கடவுளர் கதைகள் நூலை படிக்க நேர்ந்தது... இருந்தாலும் விழாக்கள் கொண்டாட்டம் தான்.வாசிப்பு தெளிவைக் கொடுக்க தீபாவளிக்கு சித்தப்பா வீட்டிற்கு வரத்துவங்கினோம் பிறகு தீபாவளி அன்று ஏதாவது சுற்றுலா செல்வது வழக்கமானது . உறவினர்கள் சூழ அது தனி கொண்டாட்டமானது.. ஒவ்வொரு தீபாவளியும் எங்களுக்கு சுற்றுலாக்காலமானது.
காலையில் மாணவர்கள் ஏன் நீங்கள் தீபாவளி கொண்டாட  மாட்டீர்கள் என்று கேட்ட போது அசுரன் என்பது தமிழரைக் குறிக்கும் மேலும் ஒருவர் இறந்த நாளை கொண்டாடுவது என்பது பிடிக்காததால் . பொங்கல் தான் எங்களுக்கு மட்டும் அல்ல தமிழர்களின் திருநாள் அதை மிகச் சிறப்பாக கொண்டாடுவோம் என்றேன்.

ஒவ்வொரு இடத்திற்கும் தீபாவளியின் காரணங்கள் வெவ்வேறாக உள்ளது . ஆனால் பொங்கல் அப்படி அல்ல இயற்கையைக் கொண்டாடுவது என்றேன்.சிறுவயதில் பொங்கலும் நான்கு நாட்கள் பெண்டெடுக்கும் விழா தான்.முதல் நாள் முற்றம் வைத்த பெரிய வீட்டை கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து கழுவி பித்தளை பொருட்களை விளக்கி போகி அன்று மாலை கொழுக்கட்டை செய்து சாமி கும்பிட்டு நிமிர்ந்தால் அடுத்த நாள் காலையில் மீண்டும் வீட்டைக் கழுவி மறுபடி அத்தனை விளக்கு பித்தளைப் பாத்திரங்களைப் கழுவி சாமி கும்பிட்டு நிமிர்ந்தால் மீண்டும் மூன்றாவது நாளாக வீட்டுச்சாமிகும்பிட காலையில் மாவு இடித்து அதிரசம் செய்து ஆமைவடை உளுந்து வடை சுழியன் செய்து சாமி கும்பிட வேண்டும்...
இந்நாட்களில் மாதவிலக்கு வந்து விட்டால் அவ்ளோதான் மூதேவி நாளும் கிழமையுமா ஒதுங்கி நிக்குது பாருன்னு அம்மாவின் கோவம் ஏன்னா அவ்ளோ வேலையும் அவர்களே செய்யனும்னு ...பரந்த மாதிரிகாட்டி நானும் புத்தகமும்னு ஜாலியா உலக்கைக்கு பின் எனது நாட்கள் கழியும்..

அசைபோடும் எண்ணங்கள்
தொடரும்
மு.கீதா
புதுக்கோட்டை

Friday, 23 September 2016

சொல்

ஒரு வார்த்தையை வீணாக்கிட்டீயே அக்கா..

இன்று தம்பி வில்வத்துடன் பேசிக்கொண்டிருந்த போது என்னக்கா...இந்த வார்த்தையை வீணடிச்சிட்டீயே..
இதற்கு உரியவர்களிடம் சொல்லியிருந்தா...மகிழ்ந்திருப்பாங்களே என்ற கூறினார்கள்...

பொட்டில் அடித்த மாதிரி இருந்தது..வார்த்தைகளை நாம் எவ்வளவு எளிதாக செலவு செய்கின்றோம்...

செலவழிக்கின்ற வார்த்தைகளால்...நாம் பெறும் பயன்கள் என்ன?தீமைகள் என்ன?யோசித்து வார்த்தைகளை விட கற்றுள்ளோமா?

விலங்குகளோ,பறவைகளோ தேவையற்று ஒலிப்பதில்லையே....

சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை என்ற கண்ணதாசனின் வரிகள் எத்தனை உண்மை...

Tuesday, 16 September 2014

இன்று பிறந்தார்....நமக்காக....

இன்று பிறந்தார்....நமக்காக....

தமிழர் தலை நிமிரக்காரணமானவர்.



இன்னுமும் அடிமை மோகத்தில் வாழும் தமிழருக்கும் தன்மானம் உண்டு என்று அறைகூவியவர்.

சுதந்திரப்போராட்டத்தில் தன் பதவிகளை எல்லாம் தூக்கி எறிந்து கதர் மூட்டைச் சுமந்து தெருதெருவாக விற்றவர்......

பெண்களின் கையிலிருந்து கரண்டியைப் பிடுங்கி புத்தகத்தைக் கொடுங்கள் என முழங்கியவர்....

இன்றைய அரசியலுக்கு அடித்தளமிட்ட தன்னலமற்ற தொண்டர்...

கடவுளை காரணம் காட்டி மனிதரை ,மனித நேயத்தை மறந்தவர்களைத் துணிவோடு எதிர்த்தவர்...
:
”தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மணடைச் சுரப்பை உலகு தொழும் “

என பாரதிதாசனால் போற்றப்பட்டவர்....

பெண்களால் பெரியார் என பாராட்டப்பட்டவர்....

இன்றைய விஞ்ஞானத்தை அன்றே எடுத்துக்கூறிய தீர்க்கதரிசி...

அவர் தாம் பெரியார்...அவரே பெரியார்....
தலைவணங்குகின்றேன் ....அவரின் தொண்டுக்கு...

Tuesday, 1 July 2014

வீரமங்கை வேலுநாச்சியார்

வீரமங்கை வேலுநாச்சியார்
தமிழகம் மறந்த வீரப்பெண்மணி.நினைத்து போற்ற வேண்டிய பெண்மணி.

தற்செயலாக என் சகோதரி புவனாவேலு நாச்சியார்நாவலைத் தந்து இந்நாவலைப்படித்து பார் என்றார்கள்.படித்து கொண்டிருக்கும் போதே என்னுள் உறைந்து என்னை சீர்படுத்திய தாயவள்.

கி.பி 1730ல் பிறந்து ,கி.பி1796வரை வாழ்ந்து மறைந்த மாணிக்கம்.

எனது இளமுனைவர் ஆய்விற்காக ஜீவபாரதி எழுதிய வேலுநாச்சியார் நாவலையே ஆய்வு செய்தேன்.அவள் கால் பட்ட இடங்களில் ,வாழ்ந்த இடங்களில் நான் நின்றபொழுது காற்றாய் அவள் நிறைந்திருப்பதை உணர முடிந்தது.அவளை உங்களுக்கு அறிமுகம் செய்வதை எண்ணி பெருமைப்படுகின்றேன்.



Saturday, 21 June 2014

இப்படி கேள்வி கேட்டால்?

1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?


வேண்டாம்மா போதும்னு தோணுது இப்பவே பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏதும் செய்து அவர்கள் என்னை நினைத்தால் போதும் அந்நாளில்...

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

கற்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு தெரியாதவற்றையெல்லாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் .செருப்பு தைக்கும் தொழிலாளியின் லாவகத்தை ரசிப்பேன்.தற்போதைய ஆசையாய் பறை அடிக்க,கீ போர்டு வாசிக்க பயில வேண்டும்.15 பேர் இருந்தால் பறை கற்று தர ஆள் ரெடி...

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

எதிர் வீட்டு 8 மாதக் குழந்தையின் சேட்டையைக் கண்டு காலையில்...

4. 24மணி  நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

பகல் என்றால் புத்தகத்துடன் தோட்டத்தில், இரவெனில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அல்லது மொட்டைமாடியில் நினைவுகளின் துணையுடன் பால்யங்களை அசைபோட்டுக்கொண்டு .

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

என் வாழ்வில் நிகழ்ந்த தவறுகள் அவர்கள் வாழ்வில் நிகழாமல் நடக்க வேண்டுமென..

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

மனிதநேயமற்று நடக்கும் செயல்களை....

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

.என் நெருங்கிய நண்பர்களிடம்

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

அந்த அளவு என் வளர்ச்சி உள்ளதென எண்ணி மேலும் வளர்வேன்

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

என்ன சொல்வது? வேறு துணை வேண்டும் என வலியுறுத்துவேன் உடனே அல்ல வலி மறைந்த பின்

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

புத்தகம்,பாட்டு,முகநூல்..... 
 

Wednesday, 14 May 2014

கல்லும் நானும்

சிறுவயதில் எங்கள் ஆத்தாவிடம் விடுமுறை நாட்களில் போரடிக்குதுன்னா, வாம்மான்னு சொல்லி துவரை,உளுந்து பயிர்களோடு திருகை கல்லுடன் உட்கார்ந்துடுவாங்க .என்னையும் பக்கத்துல உட்கார வச்சி நீ இந்த பயிற எல்லாம் திருகையில போடுவியாம் ,நான் உனக்கு கதை சொல்லுவேணாம்னு சொல்வாங்க .நாங்களும் ஆவலா உட்கார்ந்துகிட்டு கல்லுல கொஞ்சம் கொஞ்சமா பயிற போட்டுக்கிட்டே அரிச்சந்திரன் கதை,பஞ்ச தந்திரக்கதை எல்லாம் கேட்போம்.கொஞ்ச நேரத்தில பயிறெல்லாம் பருப்பா உடைச்சிடுவாங்க.ஒரு கல்லுல ரெண்டு மாங்கால்ல...மாவு கூட திருகையிலேயே அரைப்பாங்க...




அப்படியா....?உண்மையா?



கட்டாயத்தின் பேரிலாவது ஏதாவது தெரிஞ்சுக்கலாமேன்னு மே மாதத்தில் படிப்பது வழக்கம்.அதன் விளைவாக இன்று படித்தது...

நாட்டுப்புறவியல் கல்வியும் களப்பணியும்--அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பாட நூலில்....இருந்து....

”தமிழ்நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள்,இஸ்லாமியர்கள் நீங்கலாக ஏனையோர் இந்து சமயத்தவராகக் கருதப்படுவது ஒருபொதுவான மரபாக உள்ளது.ஆனால்,உண்மையில் இந்து சமயமென்ற சொல்லுக்குள் பெரும்பாலான தமிழர்களை அடக்குவது ஒரு வசதியின் பொருட்டே அன்றி உண்மையின் அடிப்படையில் அல்ல.தமிழ்நாட்டின் சமய வரலாற்றில் வேத சமயம்,சைவ சமயம்,வைணவ சமயம் என்ற மூன்று முக்கியச் சமய நெறிகள் வழக்கில் இருந்தமை மறுக்க முடியாத வரலாற்றுண்மையாகும்.”

“காலப்போக்கில் சில அரசியல்.பொருளாதாரச் சூழல்களுக்கேற்ப இச்சமயங்களை இணைத்து,இவையனைத்தும் ஒரே சமயம் என்ற புறத்தோற்றத்தை உருவாக்க முயன்றதன் வெளிப்பாடே இந்து சமயமாகும்”என்பார் ஆ.சிவசுப்பிரமணியன்.

இன்று இந்தியத் துணைக்கண்டத்தில் இந்துக்கள் ,இந்து சமூகத்தினர் என்றழைக்கப்படும் மக்கள் ஆங்கிலேயரின் வருகைக்கு முன் அவ்வாறு தம்மை அழைத்துக்கொள்ளவில்லை.

அவர்கள் பல்வேறு அடையாளங்களுடன் பல்வேறு சமூகங்களாக வாழ்ந்தனர்.அவர்கள் வாழ்ந்த இடங்கள்,பேசிய மொழிகள்,அவர்களது சாதிகள்,தொழில்கள்,சமய நெறிகள் அவர்கள் சார்ந்திருந்த சமயக் குழுக்கள் முதலியவைதான் அவர்களது அடையாளங்களை வரையறுத்தனேவேயன்றி.அவர்கள் அனைவரையும் ஒரே திணைக்குள் கொண்டு வருகிற ‘இந்துக்கள்’ என்ற சொல் அல்ல.பார்ப்பனிய தர்ம சாத்திரத்திலும் கூட இந்து சமூகம் என்பது ஏதும் குறிக்கப்படவில்லை என்பார் தே.லூர்து.

இதிலிருந்து இந்தியாவில் ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பு இந்து சமயம் என்ற ஒரு மரபு இல்லை என்பதை அறிகின்றோம்.”

மேற்கூறியதனைத்தும் பல்கலைக்கழக பாட நூலில் உள்ள கருத்துக்கள் தான்.

நானா ஏதும் சொல்லலப்பா....

Thursday, 8 May 2014

செய்வோமா?



இன்று பிளஸ் டூ தேர்வு முடிவு.எத்தனை உயிர்கள் பலி தரப்போகின்றோமோ என்ற கவலையில் ...

தன் குழந்தைகள் பெறும் மதிப்பெண்களே தங்களின் ஸ்டேடஸை கூட்டுவதாக நடுத்தர குடும்பங்களின் கவலையிலும் வேண்டுதல்களிலும் இன்றைய பொழுது விடிந்துள்ளது .பல நாட்களாகத் தூங்காது தவிக்கின்றனர் பெற்றோர்களும் ,எவ்ளோ எடுத்தாலும் போதாதென்றே கூறுவார்களே என்ற தவிப்பில் மாணவர்களும்.

இந்த மாய வலையான மதிப்பெண் சுனாமியிலிருந்து விடுபடும் நாள் எப்போது.இயந்திரங்களை உருவாக்கும் கல்வி நோக்கி ஓடாமல் பண்பாடுகளை வளர்க்கும் கல்வியை எப்போது திரும்பி பார்க்கப் போகின்றோம் .நானும் இந்த வலையில் வீழ்ந்தவள் என்பதால் இதன் தாக்கத்தை உணர முடிகின்றது.

ஒரு குழந்தையின் வேண்டுதலாய் இன்று யாரும் போன் செய்து மார்க் எவ்ளோன்னு கேட்காம இருக்க வேண்டுமே என...

உறவினர்கள்,நண்பர்களின் குழந்தைகள் பெறும் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் தோன்றுவது இயற்கை தான் .ஆனால் அது குழந்தைக்கு எவ்ளோ மன அழுத்தத்தை உண்டாக்குகிறது என்பது நாம் அறிந்தோமில்லை

.நிறைய மதிப்பெண்கள் வாங்கும் குழந்தைகளே அறிவாளி என்று மதிப்பிடும் நிலை குழந்தையை மரணத்தை நோக்கித் தள்ளும் பாதை.

முகநூல் நண்பர்கள் இதை மற்றவர்களிடமும் கூறி யாரும் யாரிடமும் மதிப்பெண்கள் பற்றி கேட்க வேண்டாம் எனக் கூறுங்கள்.அவர்களே கூறும் வரை பொறுமை காக்கச் சொல்லுங்கள்.எந்த குழந்தையையும் இன்றைய தேர்வு முடிவு பறிக்காமல் பாதுகாப்பது நம் கடமை.செய்வோமா?

Wednesday, 7 May 2014

மழையில் வர்றீங்களா..



நேற்று உறவினர் நெடுநாட்களாக அழைத்ததனாலும், மழை நேர பேரூந்து பயணத்தை நேசித்தும் தூறலில் கிளம்பினேன்.

பேரூந்தில் ஓரச் சீட்டை பிடித்து அமர்ந்து யாரும் வந்து எழுப்பிட கூடாதென்ற நினைவில் இருக்கையில்.ஒரு கையில் மஞ்சள் துணியால் சுற்றப்பட்ட சொம்புடன் ஒரு சிறுவன் எல்லோரிடமும் காசு கேட்டு வந்தவன் என்னை பார்த்தது வேகமாக நகர்ந்தான். சிரித்து கொண்டேன் .ஏன்னா அவன பார்க்கும் போதெல்லாம் பள்ளிக்கூடத்துல சேர்க்கிறேன் வா படிக்கலாம்பான்னு சொல்வேன் என்பதால் என்னை பார்க்காமல் கடந்தான்.

மெதுவாக என்னை கடந்தோடின கட்டிடங்களும் மரங்களும் .மழை நீண்ட நாள் கழித்து வந்த மகிழ்வில் வேகமாக நாட்டிய மாடியது.கண்கள் போதவில்லை.இது கோடைக்காலமென்பதை மறக்க வைத்து சிரித்தது.என்னைத் தானே ரசிக்க வந்தாய் என்று குறும்பு சிரிப்புடன் பேரூந்துக்குள்ளும் புகுந்து என்னை நனைத்து அணைக்க ரசித்தேன் அதன் சேட்டையைஅரசு பேரூந்தாச்சே வேற வழி.

ஒரு வழியாக உறவினர் வீட்டிற்கு சென்றால் மழழைகள் கூட்டம். மழையில் மழழைகளின் சேட்டைகள் மிகவும் இனிமையானது,என் பால்ய கால விடுமுறை நாட்களை நினைவூட்டினர்.

எனக்காக காத்திருந்தது மழை தூறலாய்...அவர்களின் அன்பு பிடியிலிருந்து என்னை பிடுங்கி கொண்டு விடைபெற்று மீண்டும் பேரூந்தில் ஏற, இனிமையான பாட்டுக்களைப் போட்டு பயணத்தை மேலும் சுகமாக்கினார் ஓட்டுநர்.கையில் ஜெயமோகன் நாவலா ?பாட்டா? என மனம் தவிக்க என்னைப்பாரேன் என மழை காத்திருக்க.. ...வாழ்க்கை சொர்க்கம் தான் சில நேரங்களில்..

அறந்தாங்கியில் பேரூந்து மாறி அமர்ந்தேன் .கடலை விற்ற சிறுவன் பேரூந்தில் எனைக் கடந்தான் .மழைத் தூறலில் சூடான கடலை ஆசை வந்தும் வேண்டாமென நாவலில் நான் மூழ்க.மீண்டும் அவன் என் அருகில் ஏதோ சிந்தனையுடன் .வழக்கமாய் கேட்பது போல் படிக்கிறியாப்பா என்றதற்கு பதிலாய் ஓ ஒன்பதாப்பு என்றான்.நல்ல ஆடை உடுத்தியிருந்தான்.அவன் வயது சிறுவர்கள் சட்டென்று என் கண்முன் வந்து போனார்கள்.இவன் கையில் உள்ள பொட்டலங்கள் சிறுவனை கவலையில் ஆழ்த்தி விட்டன போலும் .

ஏன்பா ஒரு பாக்கெட் வித்தா உனக்கு எவ்ளோ கிடைக்குமென்றேன்.ஒரு ரூபாக்கா .ஒரு நாளைக்கு ஐம்பது பாக்கெட் விற்பேன் ஐம்பது ரூபா கிடைக்கும்னு அந்த குழந்தை கூறிய போது மனம் வலித்தது.இரவில் ,மழைத்தூறலிலும் அவன் உழைக்க வேண்டிய கட்டாயம்.ஆனால் அவன் உழைக்க தயாராக இருந்தான் என்பதை அவன் முகத்தில் உணர்ந்தேன் .கொஞ்சம் பொட்டலங்களே கையில் வைத்திருந்தான் .இது எல்லாம் வித்தாச்சின்னா வீட்டுக்கு நீ போலாம்ல என்ற கேள்விக்கு அவன் முகம் பிரகாசமாகி ஆமாக்கா என்றான். அப்படின்னா எல்லாத்தையும் கொடு என்றேன் நம்ப முடியாமல் பார்த்தான் .கொடுப்பான்னு வாங்கிய போது பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் இது கிறுக்கா என்பது போல் பார்த்தனர். அவன் படிக்கும் பள்ளியில் வேலை பார்க்கும் என் தோழியின் பெயரைக்கூறி தெரியுமான்னு கேட்டேன் .ஓ தெரியுமே என்றான். நீ நல்லா படிக்கனும் நான் ,உன் டீச்சர் கிட்ட கேட்பேன் என்றேன் ,வேகமாக தலையாட்டி வீட்டுக்குச் செல்லும் மகிழ்வில் ஓடினான்.மழை தந்த மகிழ்வை விட உழைப்பை கேவலமாக எண்ணாத சிறுவனைக் கண்ட மகிழ்வில் நான் மீண்டும் நாவலிலும் .மழைத்தூறலிலும்..

சமூகம் இந்த குழந்தைக்கு நல்ல வழி காட்டுமாவென்ற கவலை மனதில் ஓடியதைத் தவிர்க்க முடியவில்லை

Tuesday, 6 May 2014

மலைக்குள் வர்றீங்களா...




.

 அழகர்சாமியின் குதிரை,மைனா,கும்கி படம் எடுத்த மலையில் பயணம்....
பாதைகளற்று பாறைகளில்
ஏறி இறங்கி எங்களை அதிர வைத்தது ஜீப்.ஓட்டுநரோ சரளமாய் ,அன்பாய் பேசிக்கொண்டே ...மனமோ பாதைய பாத்து ஓட்டுப்பா...என பதறியது.இருந்தாலும் மனம் சுவாரசியத்தில்..திகிலில்,பரவசத்தில்...பெரியவர்களோடு குழந்தைகளும் அலறிக்கொண்டே பயணத்தில்...இயற்கையின் மடி புகுவதென்றால் சும்மாவா...கண்களுக்கு எட்டிய தூரம் வரை அண்ணாந்து பார்த்து மலைக்க வைத்தது மலை.

ஒரு வழியாக ஏறி இறங்கிய இடமோ மலைக்குடிமக்கள் வாழும் பகுதி.போகும் வழியில் உள்ளமலைவாழ் பெண்கள் வண்டியைக்கண்டதும் முகம் காட்ட மறுத்தனர்.ஏன் என்பதற்கு நாட்டாரிடம் முகம் காட்ட மாட்டார்களாம் கட்டுப்பாடு.

களிமண்ணில் குச்சிகளை நடுவில் வைத்து கட்டிய குடிசை வீடுகள்..எளிமையுடன்..அழகாய்..
 சுற்றிலும் மலை சூழ நடுவில் நாங்கள்...
தூய்மை,சுத்தமான மூலிகைகள் கலந்த காற்று,எளிமையான வாழ்க்கை...யாருக்கும் எந்த தீங்கும் தராத மலைமக்கள்..
அவர்களும் தற்போது டாஸ்மார்க்கு காலையிலேயே வருவதாக ஓட்டுநர் கூறிய போது வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

அங்கிருந்த பள்ளிக்கூடமோ பூட்டியிருந்தது ஒரு ஆசிரியர் மட்டும் தானாம்.மாணவர்கள் வரவே மாட்டார்களாம்.பூட்டியே நிறையநாள் கிடக்குமாம்.பார்த்த கணத்தில் ஏதும் அந்த குழந்தைகளுக்கு செய்ய வேண்டுமே என மனம் ஆசைப்பட பேசாம நீ இங்க மாறுதல் பெற்று வந்துடுன்னு கூட வந்தவர்கள் கலாய்க்க .....ஓட்டுநரோ 10 நாட்களுக்கு மேல் உங்களால் இங்க இருக்க முடியாதென சவால் விட்டார்...
ஒரு பக்கம் வரலாமென மனம் நினைத்தாலும் கடினமென்றே அறிவு கூறியது...
  எங்கு நோக்கினும் பச்சைபச்சை...கண்களில் விழுங்கி ,மனதை நிறைத்துக்கொண்டோம்,.யாருமே இல்லாத காட்டில் கும்கி,அழகர்சாமியின் குதிரை,மைனா இன்னும் நிறைய படங்கள் இங்கு எடுத்ததாகவும் ,அவர்கள் பட்ட சிரமங்களையெல்லாம் கூறிய போது...
இதையெல்லாம் அறியாமல் எவ்ளோ எளிதாக படம் நல்லால்லன்னு
கூறிவிடுகிறோம்னு வருத்தம் வந்தது.

வண்டுகளின் ரீங்காரம் மலைகளில் எதிரொளிக்க மரங்களினூடே புகுந்து சிற்றோடையில் மீன்களாய் மாறி மகிழ்ந்து எழ மனமின்றி வீழ்ந்து கிடந்தோம் காலம் நகர்வதறியாமல்,பசியறியாமல்..ஓட்டுநர் போலாமென விரட்டும் வரை..

காட்டெருது மனிதர் எதிரில் வந்தால் மலையில் ஏறிவிடும் என்றும் ஏற முடியவில்லையெனில் மனிதரை கொன்று விடும் எனவும் கூறி மனதை உறையவைத்தார் ஓட்டுநர் பாஸ்..

ஓட்டுநரும் எங்களில் ஒருவராய் மாறி மலையின் ரகசியத்தை விளக்கிய போது வியப்பில் விழிகள் விரிந்தன.நடையே மறந்த நகரத்து வாழ்வில் நடை மட்டுமே வாழ்வாய் வாழும் மக்கள் அதிசயமாய் தெரிந்தனர்.விண் தொடும் மரங்கள் என்னை பார்த்து நக்கலாய் சிரிப்பது போல் உணர்ந்தேன்.

இயற்கையுடன் வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும்.சில மணி நேரமாவது இருக்கும் வாய்ப்பு கிடைத்ததே என்ற ஆறுதலில் மீண்டும் வரத் திட்டமிட்டு கண்கள் கலங்க உறவை பிரியும் வேதனையுடன் பிரியாவிடைப் பெற்றோம் மலைத்தாயிடம்...



Sunday, 30 March 2014

நட்பு

நல்ல நட்பில் மேலும் சில பூக்களென
..................................................................

 ஒரு பொன் மாலைப்பொழுதில் தஞ்சை புத்தகக்கண்காட்சியை காணும் வாய்ப்பு தற்செயலாக நேர்ந்தது.தஞ்சை சென்றால் கரந்தை ஜெயக்குமார் சகோதரரை பார்த்து வாங்கன்னு முத்து நிலவன் அய்யா கூறியிருந்தார்.நானும் ஜெயக்குமார் சகோதரரிடம் பேசிய பொழுது அவசியம் வருகின்றேன் என்றார்.

முதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்பட்ட கணினி பயிற்சியில் அவர் எங்களுக்கு வலைத்தளத்தில் என்ன எழுதுவது?என பயிற்சி அளித்தார்.ஆசிரியர் என்றாலே ஒரு மரியாதையும் அச்சமும் வருமல்லவா? அவரைப் பார்த்ததும் அப்படித்தான் தோன்றியது .மிக எளிமையாக என்னை காண அவரின் துணைவியாரையும் அழைத்து வந்தது மிகவும் மகிழ்வாய் உணர்ந்தேன்..

புன்னகை பூத்த முகத்துடன் தஞ்சை மண்ணுக்கே உரிய பாசத்துடன் அவரின் துணைவியாரைப் பார்த்ததும் வேற்று ஆளாகத்தோன்றவில்லை நீண்ட நாள் பழகிய உணர்வில் பழகினேன்.நல்ல உறவுகள் வாழ்வில் கிடைப்பது அரிது.வலைத்தளம் எனக்கு வழங்கிய கொடையில் இவர்களும் உறவுகளாக ....

   கீழே  அவரின் வலைத்தளத்தில் இருந்து ..
.நன்றி சகோதரருக்கும் ,தோழிக்கும்..

” நல்லாரைக் காண்பதுவும் நன்றே

------------------------------------------------------------
 நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நலம்மிக்க
நல்லார்சொல் கேட்பது வும்நன்றே – நல்லார்
 குணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு
 இணங்கி இருப்பதுவும் நன்று

      நண்பர்களே, ஔவையின் அமுத வரிகளில், எளிமையும், இனிமையும், பொருள் வளமையும் நிறைந்த, இப்பாடலைப் பலமுறைப் படித்துப் படித்து, நீங்கள் நிச்சயம் பரவசப்பட்டிருப்பீர்கள். இப்பாடலின் பொருளினை நேரிடையாய் உணர்ந்து, அனுபவிக்கும் ஓர் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
      கடந்த 14.2.14 முதல் 23.2.14 வரை பத்து நாட்கள், தஞ்சையில் ரோட்டரி புத்தகக் கண்காட்சி நடைபெற்றதைத் தாங்கள் நன்கறிவீர்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தமிழறிஞரின் சொற்பொழிவு இனிதாய் அரங்கேறியது.

 நண்பர்களே, புத்தகத் திருவிழாவின்
நிறைவு நாளான, 23.2.2014 ஞாயிற்றுக் கிழமை, காலை அலைபேசி அழைத்தது. மறு முனையில் தென்றல் தவழ்ந்து வந்தது.

 தேங்கிய குட்டையல்ல
துள்ளும் அருவி
பாய்ந்தோடும் ஆறு
அள்ளிச் செல்வேன் அனைத்தையும்....

 தென்றலாய் தொடங்கி, தேவைபெனில் பெரும் சுழற் காற்றாய் மையம் கொள்ளவும் தயார், என, இலக்கிய வானில், தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்தவரும், உயர் சிந்தனைகளும், சமூகக் கவலையும், துயரம் துடைக்கும் தன்னம்பிக்கையும் கொண்ட கவிஞர், வேலு நாச்சியாரின் விழுது,


கவிஞர் கீதா அவர்கள்
தென்றல்

http://velunatchiyar.blogspot.com/

பேசினார்



     நான் தஞ்சைக்கு வந்திருக்கிறேன். மதியம் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன். உங்களைச் சந்திக்க வேண்டுமே என்றார்.

இதைவிட வேறு என்ன வேலை. பிற்பகல் எனது மனைவியுடன் சென்று சந்தித்தேன். நான் பேசியது குறைவுதான். அவர்கள் இருவரும் நெடுநாள் பழகிய தோழிகள் போல் பேசி மகிழ்ந்தனர்.

சகோதரியார் கவிஞர் மு.கீதா அவர்கள்,

விழி தூவிய விதைகள்

என்னும், தனது கவிதை நூலினை வழங்கினார்.

 டீச்சர்
  எனக்குப் பிறந்த நாள் என
 மழலை கொடுத்த இனிப்பை
மாணவிகளுக்கு ஊட்ட
பிறந்தனர்  எனக்கு
நாற்பது குழந்தைகள்

----

”ஏன் படிக்கல?
கலங்கிய சிறுமியை
ஏன்டாம்மா? என்னாச்சு
சாப்டியா?
தலைவருடி இதமான வார்த்தைகளால்
பதமாய் மனம் வருட
விழி மேகம் மடை திறக்க
சாப்டல டீச்சர் .... பசிக்குது...”

   கவிஞராய் மட்டுமல்ல, நல்லாசிரியராய், மழலைகளின் உள்ளத்தில், விதைகளைத் தூவி, நல் விருட்சங்களாய் வார்த்தெடுக்கும், வளர்த்தெடுக்கும் கவிஞர் மு.கீதா அவர்களின

   கவிஞராய் மட்டுமல்ல, நல்லாசிரியராய், மழலைகளின் உள்ளத்தில், விதைகளைத் தூவி, நல் விருட்சங்களாய் வார்த்தெடுக்கும், வளர்த்தெடுக்கும் கவிஞர் மு.கீதா அவர்களின், எண்ணங்கள், பெண்ணியச் சிந்தனைகள் எல்லாம், எழுத்துக்கள்ய், வார்த்தைகளாய், வரிகளாய், கவிதை மொழிகளாய், பக்கத்துக்குப் பக்கம் ததும்பி வழிகின்றன.

   நண்பர்களே, நீங்களே கூறுங்களேன், வலையுலக உறவுகளை, நல்லாரைச் சந்தித்த இவ்வாரம், நட்பு வாரம்தானே.

ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை

இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே

                          - வெற்றி வேற்கை





Friday, 7 March 2014

மகளிர் தினம்


 

இன்றைய  8.3.14 தினகரன் செய்தித்தாளில்......பெண்ணிய வரலாறாய்....

1789ம் ஆண்டு பிரஞ்ச் புரட்சி நடந்தபோது பெண்களும் போராட்ட களத்தில் இறங்கினர். சமத்துவ உரிமைகள் வேண்டும் என்றும் எட்டு மணி நேர  வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம், பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தக் கூடாது என்றெல்லாம் கோரிக்கைகளை முன்வைத்து  போராடினர். அதை நசுக்க நினைத்த மன்னர் லூயிஸ் பிலீப், போராட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போராட்ட காரர்களை சமாதான  படுத்திப் பார்த்தான். ஆனால் முடியவில்லை. இதனால் தன் மன்னர் பதவியை துறந்தான்.

அதன் வெற்றி ஐரோப்பா முழுக்க பெண்கள் போராட்டம் நடத்த உத்வேகம் ஊட்டியது. ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த  பெண்களின் தொடர் போராட்டங்களைக் கண்டு அரசு ஆடிப்போனது. இத்தாலிய பெண்கள், வாக்குரிமை கேட்டு போராடினர். பிரான்ஸில் பிரஷ்யனில்  இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் சேர்க்கவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும்  ஒப்புக்கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8. அந்தநாளைத்தான் உலகம் முழுக்க பெண்கள் உரிமை தினமாக கொண்டாடுகின்றனர்.  

பெண்களின் போராட்டம் அமெரிக்காவிலும் நடைபெற்றது. 1908ம் ஆண்டு வாக்குரிமை கேட்டு பெண்கள் நடத்திய போராட்டத்தை கண்டு அமெரிக்க  ஜனாதிபதி பியோடர் ரூஸ்ரெல்ட்டே அஞ்சினார். 1910ம், ஆண்டு  ஓப்பன் ஹேகனில் கிளாரா ஜெட்கின் தலைமையில் அனைத்துலக பெண்கள்  மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் சர்வதேச மாதர் அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் சார்பாக 1911ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி  டென்மார்க் ஆஸ்திரியா ஜெர்மனி இன்னும் சில ஐரோப்பிய நாடுகளின் பெண் பிரதிநிதிகள் முதலாவது சர்வதேச மாதர் தினத்தைக் கொண்டாடினர்.
 இந்த கொண்டாட்டத்தின் போதுதான் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மாதர் தினமாக கொண்டாட வேண்டுமென்பது முடிவு செய்யப்பட்டது. சமீபகாலமாக  ஐ.நா.சபையின் பெண்கள் அமைப்பு சார்பில், மார்ச் 8ம் தேதியை சர்வதேச மாதர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கின்றனர். சுமார் 226  ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் போராடிப்போராடி தங்கள் உரிமைகளை பெற்றுவருகின்றனர்”. நன்றி தினகரன் செய்தித்தாள்


இன்று மகளிர் தினம் ஒரு பக்கம் முன்னேற்றமடைந்த பெண்களின் கொண்டாட்டம்.
 ஒரு பக்கம் பெண்களின் இன்றைய உண்மையான நிலை என்ன ?என்ற ஆய்வாகவும் செய்தித்தாள்களில் காண்கிறோம்.
மகளிர் தினம் என்பது இருநூறு ஆண்டு கால போராட்டத்தின் வெற்றி.அரசியலை உருவாக்குவதில் எங்களுக்கு பங்கு வேண்டும் என போராடி ஆண்கள் வேறு வழியின்றி ஓட்டுரிமை தந்த நாள் இன்று.

இருநூறு வருடங்கள் கழிந்த பின்னும் வாழ்வதற்கான போராட்டமாகவே பெண்களின் நிலை இன்றும் உள்ளதை இன்றைய ”தினமணி” செய்தித்தாளில் தோழி இன்சுவை அவர்களின் கட்டுரை சுட்டுகிறது.
”தி இந்து” செய்திதாளில் அடித்தட்டு பெண் தொழிலாளர்களின் வாழ்வு நிலையில் மாற்றம் ஏற்படுவது எப்போது என்ற கேள்வி சமூகத்தை நோக்கிய வினாவாகத் தொடுக்கப் பட்டுள்ளது.

” ஒரு பெண்ணால் எப்போது அச்சமின்றி உலகில் வாழ முடியுமோ அப்போது தான் பெண்களுக்கு சமத்துவமும் சுதந்திரமும் கிடைத்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும் என்பதே உண்மை”.

பெண்கள் வாழ்வதற்கே போராட வேண்டிய நிலையில் இன்று எத்தனை உயிர்களை இழந்திருக்கின்றோம்.உடல் சார்ந்த போராட்டத்தில் கண்ணுக்குத் தெரிந்த நிர்பயா,அமுதா,என்ற தொடரில் இன்று உமாமகேஸ்வரி என தொடரும் நிலைக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்க போகின்றோம்.

இனியாவது ஆண் ,பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வார்ப்பை மாற்றி இருவரும் சமமான மனிதர்கள் என்ற கருத்தை குழந்தைகளிடம் வேரூன்றச் செய்வோம்.

ஊடகங்களும் பெண்களை அழகிற்கான பொருளாய்க் காட்டாமல், அறிவை நோக்கி அவள் பாதை அமைப்பவளாக காட்ட முயற்சிக்கட்டும்.















Monday, 10 February 2014

நம்ப முடியவில்லை



2012 ,டிசம்பர் 6ஆம் நாள் கணினி யில் எனது வேலு நாச்சியார் வலைத்தளத்தை  எந்த வித முன் அனுபவம் இல்லாமல் விளையாட்டாய் துவங்கினேன்
.எனது கவிதை நூலான விழிதூவிய விதைகள் வெளியான (2.12.2012 )சில தினங்களில் இவ்வலைத்தளத்தை ஆரம்பித்தேன் .முன் அனுபவம் இல்லாமல் துவங்கியதால் அது வளர்ச்சியின்றி நடை பழகாத குழந்தையாகவே இருந்தது

Sunday, 26 January 2014

65வது குடியரசு தினத்தில் ..........வேர்களின் நினைவில் ........


"ஊழலும் ,சாதியும் ஒழியட்டும்"

"எங்கள் ஊரில் மாணிக்க முதலியார் என்ற தியாகி இருந்தார் .அவர்தான் எங்கள் ஊரில் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளுக்குத் தளபதி.எப்போதும் ஏதாவது அரசியல்நடவடிக்கைகளை நடத்திக் கொண்டே இருப்பார் .
கதர் ஜிப்பா ,காந்தி தொப்பி அணிந்து ,கையில் மூவர்ணக் காங்கிரஸ் கொடியுடன் "மகாத்மா காந்திக்கு ஜே " என்று அவர் கோஷம் போட்டுக் கொண்டே சென்றது இன்னும் என் கண்ணுக்குள் திரைப்படக் காட்சி போல ஓடுகிறது .

Tuesday, 7 January 2014

பொங்கல் வழிபாடு

இன்றுஎன் வகுப்பு மனம் நிறைந்த வகுப்பாய் கொண்டாட்டங்களுடன் அமைந்தது.ஆரவாரத்திற்கும் பஞ்சமில்லை .இப்படி என் மாணவிகள் வகுப்பில் இருந்து நான் பார்த்ததே இல்லை.ஒவ்வொரு நாளும் எனக்கு கற்றுக்  கொடுக்கிறார்கள் குழந்தைகள் . புத்தாண்டில் எப்படி

Friday, 27 December 2013

வீரமங்கை

நான் மிகவும் நேசிக்கும் வீரமங்கை மட்டுமல்ல வெற்றிமகள்

டிசம்பர் 25: ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் இன்று

Saturday, 16 November 2013

கவிஞர் மு.கீதாவின் கவிதைத் தொகுப்புக்கு எனது அணிந்துரை நேர்மையான கவிதைகள்



 அணிந்துரைநா.முத்துநிலவன்
மகளாய், மனைவியாய்,  தாயாய்,  ஆசிரியராய்,  இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படும் கோடிக்கணக்கான இந்தியப் பெண்களில் தானும் ஒருவராய், சமூக உணர்வுள்ள சிறந்த மனிதருள் ஒருவராய்,  தன் சுயஅனுபவங்களையே, கொஞ்சமாய்க் கற்பனை கலந்து(?) நெஞ்சைச் சுடும் கூர்மையான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் போட்டு, நேர்மையான கவிதைகளாய்த் தந்திருக்கிறார் கீதா.
இதற்காகவே இவரது படைப்புகளை
வரவேற்க வேண்டும்.   
ஏனெனில்,  நான் ஏற்கெனவே மும்பைக் கவிஞர் புதிய மாதவியின் ”ஹேராம்“ கவிதைத் தொகுப்பிற்குத் தந்த முன்னுரையில் சொன்னதுபோல, “எழுதும் பெண்கள் நம் சமூகத்தில் குறைவு. அதிலும் சமூக உணர்வோடு எழுதும் பெண்கள் மிகவும் குறைவு. அதிலும் அரசியலை-பெண்ணியக் கருத்துகளைச் சரியாகப் பாடுவோர் மிகமிகவும் குறைவு. இந்த மிகமிகவும் குறைவான எண்ணிக்கையில் கீதா இடம் பெற்றிருப்பதே முதலில் பாராட்டுக்கு உரியது தானே? 
கவிதைக்குரிய அழகியல் சற்றுக் குறைவாகவே இருந்தாலும், எடுத்த பொருளைக் கவிதையாக்கிக் கொடுத்த முறையில் பாசாங்கில்லை. இவை நேர்மையான கவிதைகள் என்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அமெரிக்காவின் அதிகாரம், க்யூபாவின் தன்மானம், அரபு நாடுகளின் கச்சா எண்ணெய், ஆப்பிரிக்காவின் அடிமை வாழ்வு, சிங்களரின் சித்ரவதை, ஈழத் தமிழரின் விடுதலை என பல்வேறு உலகளாவிய பாடுபொருள்களையெல்லாம் தொட்டுச் செல்லும் கீதா, கொத்தடிமைகள், குவாரியில் குழந்தைகள், நெகிழியால் நிகழும் சுற்றுச் சூழல் கேடு, என நேரடி உலகத்தின் நெஞ்சைத் தொட்ட இடங்களையும் பாடுகிறார்.
தனது ஆசிரியப் பணியில் ஓவிய வீடு,  ஏதும் புரியல டீச்சர், எனும் கவிதைகளைத் தந்த கீதாவின் மாணவப் பிள்ளைகள் பாக்கியம் செய்தவர்கள்!
மழலை கொடுத்த இனிப்பை
மாணவிகளுக்கு ஊட்ட
பிறந்தன எனக்கு  நாற்பது குழந்தைகள் ..எனும் கீதாவிற்குள் பார்த்தால், சமுத்திரக்கனி அவர்களே! தயா இருக்கிறார்தானே? இது உண்மையான சாட்டை!
எடுத்த எடுப்பிலேயே கீதா தன்னைப் பற்றிச் சொல்லிவிடுகிறார் -
நான் தேங்கிய குட்டையல்ல
துள்ளும் அருவி ..
பாய்ந்தோடும் ஆறு எனும் போது 
பேண்ணே நீ ஒரு புண்ணிய ஆறு,
        உன்னைத் தடுக்க ஒருகை நீண்டால்,
        பொங்கு புறப்படு பொடிப்பொடி யாக்கு” – என்ற, கவிஞர்களின் வேடந்தாங்கலான அன்னம்மீரா தான் நம் ஆழ்ந்த பெருமூச்சுக்கிடையே அழியாத நினைவாகத் தோன்றுகிறார்!
ஈழவலி                                                          
ஒரே வலிக்கு
எத்தனை வைத்தியம் என்று கேட்கும் கீதாவின் கேள்வி எனக்குள் பல ஆயிரம் கேள்விகளை  எழுப்பியது! நமது காலத்தின் பெரும் சோகம் இதுதானே?
நமக்கு வேண்டியவர்களுக்கு உடல்நலமில்லை யென்றால், அக்கறை யுள்ளவர்கள் எல்லாம் ஏதாவது வைத்தியத்தைச் சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள். அது போலும் நிலையில் நான் சொல்வது, “அக்கறையா சொல்றவங்க சொல்றத யெல்லாம் கேட்டுக்கங்க... ஆனா, மருத்துவர் சொல்வதை மட்டும் மறக்காம செய்ங்க... என்ன நா சொல்றது சரிதானே? உடம்பப் பாத்துக்கங்க”  என்பதுதான்!
 கட்டிடக் கூண்டுக்குள்
மனிதப் பறவைகள்
நகரம்   - எனும் கவிதையில் வரும் கீதாவின் கற்பனை, எழுத்தாளரும் காவல் துறைத் தலைவராக இருந்தவருமான திலகவதியின் எழுத்தோடு தழுவி நிற்பதில் ஒன்றும் வியப்பில்லை! இதே பொருளில் கல்மரம் எனும் நாவலை எழுதி சாகித்திய அகாதெமி விருதையே பெற்றுவிட்டார் திலகவதி என்பதை கீதா கவனிக்க வேண்டும். கீதாவின் பல நல்ல கவிதைகள் குட்டி குட்டியாக இருக்கிறதோ? இன்னும் விவரித்து நீட்டி எழுதலாமோ? என்று எனக்குத் தோன்றியதையும் இந்த இடத்தில் சொல்லி வைக்கிறேன்.
பல்லாயிரம் கோடியில்
நான்கு வழிச்சாலை
தவறேதும் செய்யாமல்
மரண தண்டனையில்
தருக்கள்  எனும் இடத்தில் மீண்டும் கவிஞர் மீராதான் நினைவுக்கு வருகிறார். மனிதனைப் பட்டினி போட்டு மாட்டின்மேல் கருணைகாட்டும் ஜீவ காருண்யம் யாருக்கு வேண்டும்? அதுபோல, மரத்தை வெட்டாமல் மனிதவாழ்வு கிடையாது!  என்ன..? ஒரு மரம் வெட்டினால் பத்து மரங்களையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதே என் கருத்து.
அறிந்தே அடகாய்
மீண்டும்  என்பது ஒரு நல்ல அரசியல் கவிதை.
       காட்டினில் மாநாடு  கவிஞர் சிற்பி பாணியிலான ஒரு கதைக் கவிதை. தமிழில் கதைக் கவிதைகள் மிகவும் கம்மி. நீங்கள் தொடர்ந்து எழுதலாம் கீதா!
ஒவ்வொரு புத்தாண்டும்
இதே சபதம் தான் - எனும் கவிதையில் ,  நக்கல் நையாண்டி,
கேட்க முடியுமா ?
கேட்க முடியுமா ? எனும கவிதை எழுப்பும் தர்ம ஆவேசம்,
பெண்ணை
பெண்ணாய் பாராமல்
மனிதராய் பார்க்கும் நாள்
எந்நாள் வரும்? எனும் கவிதையின் பெண்ணுரிமைக் குரல்,
உணர்ந்து உணர வைக்க முயன்றால்
என் இனமே எனக்கெதிரி
எத்தனை வேலுநாச்சிகள் …!   - எனும் கவிதையில் ஆற்றாமை என விதம் விதமான பாடுபொருள்களை எடுத்துக்கொண்டு வெளுத்து வாங்குகிறார்.
இன்னும், கனவுகளின் நாட்குறிப்பு, தடைக்கல்லும் படிக்கல்லாய், மரணம், ஐந்தறிவினம், மிதியடி ஆகியவையும் நல்ல கவிதைகளின் வரிசையில் இடம்பிடிக்கின்றன.
உணவைப் பரிமாறும் சிறுவன்
சாப்பிடல எனக் கூறுகையில் -
பூப்பறிக்கும் பிஞ்சு விரல்கள்
தீக்குச்சி அடுக்கி நொந்து போகையில் -
உறுத்துகின்றது  எனும் கீதாவின் கவிதை வரிகளைப் படிக்கும்போது, புதுமைப்பித்தனின் மனித எந்திரம் சிறுகதையும், சார்லிசாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் மௌனப்படமும் கவிஞர் சகாராவின்; ‘நதிக்கரையில் தொலைந்த மணல்” (2001) கவிதைத்தொகுப்பின் முதல் கவிதையும் நினைவிலாடுகிறது
அவசரமாய்ப் போகும்போது
ரோட்டில் கிடந்த முள்ளை
எடுத்துப் போடாமல் வந்ததற்கு
மனசு குத்தியதுண்டா?’ - என்று தொடங்கி அடுக்கிக் கொண்டே போய்
பாதையைக் கடக்கையில்
அணிற்பிள்ளை குறுக்கிட
பதறியடித்து
பிரேக் போட்டதுண்டா?
அப்படியானால் வாழ்த்துகள்,
இன்னும் நீங்கள்
மனிதராய் இருக்கிறீர்கள்! - என்று முடியும் போது நம்மை நமக்குள்ளேயே பார்க்க வைத்துவிடுவார் சகாரா! இன்னும் பலப்பல சந்தோஷம் மற்றும் துயரங்களுக்குப் பின்னும் - கீதா மனுஷியாய்த்தான் இருக்கிறார் என்பது மட்டுமல்லாமல் நல்ல கவிஞராகவும் பரிணமித்து வருகிறார் என்பதற்காகவும் கவிஞர் சகாராவுடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்.
வேலுநாச்சியார்கள் வீணாய்ப் போவதில்லை!  
கால மாற்றத்தில் ஆலமரம் விழுதுகள் வழி வாழுமேயன்றி வீழ்ந்து விடுவதில்லை! கீதா, வேலுநாச்சியாரின் விழுது! அடுத்தடுத்த படைப்புகள், அரசியல் பார்வையோடு சமூகம்பாடும் அழகியலாக வளருமென்று நம்புகிறேன், வளர வேண்டி வாழ்த்துகிறேன்!
அன்புத் தோழன்,
நா.முத்து நிலவன்
புதுக்கோட்டை 622 004        
-----------------------------------------------------------------------------



Wednesday, 23 October 2013

பாரதி கண்ட கனவு நனவாகவில்லை

புதுகை மணிமன்றம் அறக்கட்டளை சார்பில் பாரதி நினைவை போற்றும் விழா 11.09.2013 அன்று பாரதி கண்ட கனவு நனவாகவில்லை என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடந்தது.

பாரதி கண்ட கனவு நனவாகவில்லை என்பது என் வழக்கு.
வழக்கின் சாரம்சம்
------------------------
      விடுதலை பெறும் முன்னே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென கனவு கண்டான் மகாகவி.பெற்ற சுதந்திரத்தைப் பேணி காத்தோமா?பன்னாட்டு வணிகம் சுனாமியாய் சிறு வணிகர்களை  தூக்கி எறிந்து கொண்டுள்ளதே...அடிமையாகிக் கொண்டுள்ளோமே... மீண்டும் கனவு காண பாரதி பிறக்க வேண்டுமோ?

 பெண்ணியத்தில் பாரதியின் கனவு நனவாகியுள்ளதா ?

     பாரதி பெண்களைப் போற்றினானே.....புதுமைப் பெண்ணாய் கனவு கண்டானே.....இன்றைய பெண்களின் நிலைமை என்ன?
         
               “ஓடி விளையாடு பாப்பா-நீ
                ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
           
                 பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நீ
               பயங்கொள்ளலாகாது பாப்பா

               மோதி மிதித்துவிடு பாப்பா-அவர்
              முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா”
                
     என்றான் பாரதி.....            
    
           உமிழும் முன் அமிலம் வீசும் ஆண்மகனை அறியவில்லை பாரதி!

.கல்வி கற்றிருக்கிறார்கள், புகழின் உச்சியில் இருக்கிறார்கள் என்று எதிரணியினர் வாதிடலாம். நான் கூறுவது அடிமைத்தளையில் சிக்கி ஆணாதிக்கத்தில் மூச்சு திணறி வெளிவர முடியாது ,குடும்ப ஆழியில் தடுமாறும் பெண்ணினம் பற்றி....

 இன்றைய பெண்களின் நிலை

                பெண் சிசுக்கொலை முற்றிலும் தடுக்கப் பட்டுவிட்டதா?உசிலம்பட்டி நினைவில் வருகிறதே கூற முடியாமல்.
.குழந்தை மணம்?
அண்மையில் கூட 16வயது பென்ணிற்கு நிகழ இருந்த திருமணம் தடுக்கபட்ட செய்தி வந்துள்ளதே.

       ” கொலை செய்வதை விட கொடுமையானது குழந்தைமணம் ”

எனச் சாடினான் .100 ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று.குறைந்துள்ளதே என்பார்கள். விடம் சிறிதானாலும் விடம் தானே?

யூனிசெப் நிறுவன ஆய்வு..

சேலம் ,கிருட்ணகிரி,தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் குழந்தைத்திருமணம் அதிக அளவில் நிகழ்வதாக கூறுகிறதே...

 ”  வீரபாண்டி ஒன்றியத்தில் 16 வயது நிர்மலாவின் திருமணம் யாராலும் தடுக்க முடியவில்லை.நெய்க்காரப்பட்டி 15வயது கவிதாவின் திருமணம் அவரது ஆசிரியரால் தடுக்கப்பட்டுள்ளது .

    குழந்தை மணத்தை பெற்றோர்கள் விரும்பக் காரணம் என்ன?பாலியல் ரீதியான துன்பத்திலிருந்து குழந்தையை பாதுகாக்க திருமணமே வழி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.குறைந்த வயதில் திருமணம் செய்து கொடுத்தால் குறைவான வரதட்சணை போதுமாம்.மேலும் சின்ன குழந்தை யாரைக் காட்டினாலும் எதிர்க்காமல் தலை காட்டும்ல.
 பெண்குழந்தைகளே இன்று வலிய ஆண்களிடம் சென்று மாட்டிக்கொள்ளத் தூண்டுகின்றதே இக்காலத் திரைப்படங்கள் .இதன் குறிக்கோள் காதலை வளர்ப்பதே நோக்கமாக உள்ளதே .காதல் தவறல்ல .அது முறையானதாக இருந்தால்.ஒரு திரைப்படத்தில் ஒரு அழியாக்காதல்ஒன்று பிறந்து சில மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை தொட்டவுடனே அந்த அழியாக்காதல் தோன்றிவிடுகிறதாம்....இந்த வெட்கக்கேட்டை நாமும் பார்த்து சிரிப்போம். ஏன் இவ்வளவு கோபம் எனக் கேட்கலாம் .பள்ளிக்கு வரும் மாணவியர் சிலர் மாற்றுத்துணியுடனே பள்ளி வருகின்றனர்.கனவிலேயே நடக்கின்றனர்  .எப்படா ஆசிரியர்களையும் ,பெற்றோரையும் ஏமாற்றலாம் என்பது போலவே அவர்களின் நடத்தை உள்ளது.

                 பள்ளிக்குழந்தைகள் காதலிப்பதும் அதற்காகவே பிறவி எடுத்தாற்போல நடப்பதும் போராடுவதும் தான் வாழ்க்கைஎன்ற கருத்து நிலை நாட்டப்படுகிறது.திரைப்பட நாயகிகள் அணியும் ஆடைகளையும் அணிகலன்களையும்போலவே குழந்தைகளுக்கு அணிவித்து ஆட விடுவதும்,தரமற்ற பாடல்களைப் பாடவைப்பதும் பெற்றோரின் அறியாமையை என்ன சொல்வது?இதில் அலைபேசி வேறு மாணவர்களைக் குட்டிச்சுவராக்க! 
            இது மட்டுமா தொலைக்காட்சிகளில் பெண்களின் நிலையோ மிகமிக கேவலம்
ஒரு AXE ன் விளம்பரத்தில் அந்த வாசனை திரவியத்தை பூசிய ஆணிடம் ஆதி வாசிப் பெண் முதல் நாகரீகப் பெண் வரை நாடி ஓடுவதாகக் விளம்பரம் வருகின்றது”
.பெண்களைப் பற்றிய என்ன சிந்தனை இவர்களுக்கு?

பாரதி கண்டால் 

“மோதி மிதித்து விடு பாப்பா “

என்றே ஆத்திரம் கொள்வான்.உரசலும்,தொடலும்,பார்வை வக்கிரங்களும்,அசிங்கமான சொல் அம்புகளும் குடும்பத்தில்,பணியில் ,சமூகத்தில் பெண்களை தாக்கி மனச்சிதைவிற்கு உள்ளாக்குவதை ஏற்றுக்கொள்வானா அந்த முண்டாசுக் கவி?

பாஞ்சாலியின் கூற்றாய் முழங்கினானே....

”பேயரசு செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்” என அடிமைப் பட்ட பெண் இனத்தின் அழுங்கிய உணர்வின் வெளிப்பாடும்,விடுதலையின் வெளிப்பாடும் பாஞ்சாலியின் குரலில் காட்டினானே....

”கற்பு நிலையென்று சொல்ல வந்தால்
இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம்”

என்றானே ஒத்துக்கொள்வார்களா!முடியுமா?

பெண்களை சக்தியாக,தேவியாகக் கொண்டாடிய அவனால் இந்நிலையைப் பொறுத்துக் கொள்ள இயலுமா?

                       ” உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் 20 இலட்சம் பெண் குழந்தைகள் கடத்தப் பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுகின்றனர்”

என்பது Freedom Firm என்ற உலகு தழுவிய அமைப்பின் பொறுப்பாளர் அனிதா அவர்களின் ஆய்வு கூறுகிறது.
               இந்தியாவில் 10 ஆண்டுகளில் 33இலட்சம் பெண்குழந்தைகளும் ,,தமிழகத்தில் மட்டும் 2 இலட்சம் பெண் குழந்தைகளும்காணவில்லையாமே....இதுவா பரதி கண்ட கனவு.?
                                 பெண்ணுக்கு எதிரியாக குடும்பத்தில்,உறவினரில்,நண்பர்களில், அண்டைவீட்டாரிடத்தில் என விடக் காளான்கள் முளைத்து தூணிலும் துரும்பிலுமாய் காணப்படுகின்றனரே இருக்க வேண்டிய கடவுள் எங்கே?எங்கே?
வீட்டில் அம்மாவிற்கும்,மனைவிக்கும் வித்தியாசம் உணரும் ஆண்களுக்கு வெளியில் காணப்படும் பெண்கள் எல்லாம் போகப் பொருளாய்த் தெரிவதால் தானே
 2 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை பாலியல் வன்புணர்வு செய்ய முடிகின்றது
காதலில் தன்மறுப்பைக் காட்டினால் அமிலம் வீசி சிதைக்கத் தோணுகிறது.

நிர்பயா,அமுதா, என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றதே...நீதி கிடைக்கலாம் வழியின்றி..ஆனால் பாதிப்பு பெண்களுக்குத்தானே..

பிரபல வார இதழில்
ஆண் திமிர் அடக்கு” என்ற கட்டுரையில். இந்த பூமியிலேயே பெண்கள் வாழ்வதற்கு மிகவும் அபாயகரமான நாடுகளில் ஒன்று இந்தியா என பி,பி,சி யின் ஆவணச் செய்தி குறித்து கூறப்பட்டுள்ளதே...
.பெண்ணைத் தெய்வமாக மதிக்கும் நாட்டில் தான் நிலப் பாகுபாடின்றிபாலியல் வன்முறையாட்டம் நிகழ்ந்து கொண்டுள்ளது .
20 நிமிடங்களுக்கு 1பெண் இந்தியாவில் இக்கொடுமைக்குள்ளாகின்றாள் மறுக்க முடியுமா?
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த
மிக்கலா கிராஸ் என்ற மாணவி அளித்தப் பேட்டியில்
          ” நான் இந்தியாவில் இருந்த நாட்களில் 48 மணி நேரத்தில்2முறை பாலியல் வன்முறையில் இருந்து தப்பித்தேன்.இந்தியா அழகான நாடு .ஆனால் ஆண்கள் அருவெறுப்பாக நடந்து கொள்கிறார்கள்”
என குமறியுள்ளார். .இதுவா பாரதியின் கனவு.....
காரணம் என்ன?
சமூகத்தில் ஆணும் பெண்ணும் சம உரிமை உள்ள உயிரியல் கூட்டாளிகள் என்பதை ஆண் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை ,கற்றுத்தரப் படவில்லை.பெண் தன்னை விடத் தகுதி குறைந்தவள் என்ற எண்ணமே ஆண்களின் மனதில் மேலோங்கி உள்ளது.

வாச்சாத்தி முதல் சிதம்பரம் பத்மினி ,திண்டிவனம் ரீட்டா மேரி என நீளும் பட்டியல் காவல்துறை பலாத்காரங்களும்,சூரியநெல்லி போன்ற அரசியல்வாதிகள் சம்பந்தப்பட வழக்குகளையும் பார்க்கும் போது பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக உள்ள இந்தியாவில்

எங்கே பாரதியின் கனவு நனவாகியுள்ளது?

கனல் கனல்  என்பவரின் முகநூல் கவிதையொன்று
மகளிர் மொழியாக

கற்பாம்
ஒழுக்கமாம்
விதவையாம்
வேசியாம்
யாரடா தந்ததிந்த பட்டம்?
 கொண்டு வா அவனை இந்த பக்கம்..

மலடியாம்
வறடியாம்
மகவு ஈனாப் பெண்டீராம்
எவனடா தந்திந்த பட்டம் ?
இழுத்து வா அவனை இந்த பக்கம்..

தீட்டாம்
புனிதமாம்
திருட்டுப் பயல்களே
எவனடா வச்சதிங்கு சட்டம்?
பிடித்து வா அவனை இந்த பக்கம்..

அச்சம்,மடம்,நாணம்.துவரம் பருப்பென்றாம்
எவனடா வச்சதிங்கு சட்டம்?
அடித்து வா அவனை இந்த பக்கம்..

அடுப்படியே திருப்பதி
வாசல்படியே வைகுந்தம்
எவனடா சொன்னதிந்த சொலவடை?
பிடித்து வா சொர்க்கம் இந்த பக்கம்..

பெட்டை கோழி கூவியா
பொழுது விடியப்போகிறது?
சொன்னவனைக் கொண்டு வா இந்த பக்கம்..
சேவல் முட்டையிடப் போவதையும்
பார்ப்போம்.

உங்கள்
சாத்திரம் ,சடங்குகள்,சம்பிரதாயங்கள்
புழுகுகள், புழுக்கைகள்
புராணக்குப்பைகள்
எங்களை அடிமைகள்
என்றே சொல்லட்டும்.
முதுகெலும்பில்லா  புழுக்களே
உங்களை புதைபட புதைபட
நசுக்கியே கொல்வோம்”
 என்கின்றது.பாதிக்கப் பட்ட பெண்ணினத்தின் ஆக்ரோசமான வெளிப்பாட்டையல்லவா  காட்டுகிறது.
ஆனால் உன்மை நிலை இப்படி எத்தனை பேர் பாடினாலும் பென்ணின் மீது செலுத்தப்படும் அடக்குமுறை கடலலை போல ஓயாமல் பெருகும் போது
எங்கே பாரதியின் கனவு முழுமையாக நனவாகியுள்ளது? 
என்று என் வழக்கை முன் வைத்தேன்.

இதற்கு நடுவரின் தீர்ப்பு
பெண்களுக்கு எல்லா சுதந்திரமும் கிடைத்துவிட்டது.அவர்கள் இரவில் வெளியே ஏன் செல்ல வேண்டும?அரைகுறையான ஆடைகளை அணிவதே அவர்களின் துன்பத்திற்கு காரணம்.இனி அவர்கள் பாதுகாப்பான நேரங்களில் பாதுகாப்பான இடங்களுக்கே செல்ல வேண்டும் .என்பதே தீர்ப்பானது.

பார்வையாளர்களின் கருத்துக்களைக் கேட்ட போது
தமிழாசிரியரும் ,கவிஞரும்,பட்டிமன்ற பேச்சாளருமான

திரு.முத்துநிலவன்.அய்யா தனது கூற்றாக

ஆடை தான் பெண்களின் மேல் ஏற்படும் பாலியல் வன்முறைக்கு காரணமெனில் 2 வயது குழந்தையும்,சீருடை அணிந்த குழந்தையும் பாலியல்
வன்முறைக்கு ஆளாகியுள்ளனரே.அவர்களிடம் எந்த ஆடையைக் கண்டனர் ஆண்கள் .ஆண்களின் வக்கிரமான எண்ணங்களே இதற்கு காரணம்.இதை நாம் ஒத்து கொள்ள வேண்டும்.ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான் காரணம் என்று கூறினார்.மனித நேயமுள்ளவராய்...
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திரு பொன்.க அய்யாவும் இதை ஏற்றுகொண்டார்.பெண்ணியம் பற்றி பேச விரிந்த பார்வை வேண்டும் என்றார்.இவர்களை போன்றவர்களால்

மனிதம் வாழ்கிறது இன்னும்.நன்றி