World Tamil Blog Aggregator Thendral: January 2024

Monday 29 January 2024

தியாகிகள் தினம்

இன்று தியாகிகள் தினம்.

எங்கள் தாத்தா திருமிகு மாணிக்கம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தரப்பெருமாள் கோவிலில் தீவிர சுதந்திர போராட்ட வீரர்.
நான்  பார்க்கும் போது அவர் உடல்நலக்குறைவில் இருந்தார்.
பத்து வயதாகும் போது அவரின் மறைவு நினைவுகள் இப்போது இலேசாக நிழலாடுகிறது.

தாத்தாவைப் பற்றி ஆத்தாவிடம் அதிகம் பேசுவதுண்டு. வீட்டையும், மனைவியையும், குழந்தைகளையும் கவனிக்காமல் சுதந்திர போராட்டமே கதியென்று கிடந்துள்ளார்.

ஆத்தா தனது ஒன்பது குழந்தைகளில், உயிரோடு ஆறு குழந்தைகளையும் வளர்க்கப் பட்டச் சிரமங்கள் ,தாத்தா மீது கோபம் இருந்தாலும் அவரை எப்போதும் வெறுத்ததில்லை.

ஆத்தா சிறுகச் சிறுக சேமித்து வைக்கும் நகைகளை தாத்தா வீட்டுக்கு வரும் போது எல்லாம் அடுக்குப் பானைகளை அப்படியே  கவிழ்த்துப் போட்டு அதிலிருக்கும் நகைகளை எடுத்து, சுதந்திர போராட்டத்திற்கு தந்துவிடுவார் எனக் கூறி திட்டிக் கொண்டு இருப்பார்.

"அவர் தலையில் காங்கிரஸ் தொப்பியை மாட்டிக் கொண்டு சுதந்திர கொடியை சுமந்து கொண்டு வந்தேமாதரம் என்று முழங்க தெருவெங்கும் நடந்த காட்சியைக் கண்டு காங்கிரஸின் மூத்த தலைவர் மதிப்பிற்குரிய கருப்பையா மூப்பனார் அவர்கள் சிறு வயதில் பார்த்து, சுதந்திர போராட்டத்தின் மீது ஆவல் கொண்டு கலந்து கொண்டதாக "தினமணி பொன்விழா மலரில் ஒரு கட்டுரையில் எழுதி உள்ளார்.

தாத்தாவின் அப்பா
,வங்காரம் பேட்டை,கஞ்சமேடு, உள்ளிக்கடை ,கபிஸ்தலம் உள்ளிட்ட ஏழு கிராமத்திற்கு காரியகாரராக இருந்து பல  வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். தீராத வழக்குகளைத் தீர்த்து வைப்பாராம்.சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமது.

ஒரு வழக்கில் தீர்ப்பு சொல்ல மூன்று நாட்கள் தாமதமாக, மூன்று நாட்களும் வந்திருக்கும் அத்தனை பேருக்கும் தாத்தா வீட்டில் உணவளித்து தங்க இடமளித்து பிறகு தீர்ப்பு வழங்கி உள்ளார்..

ஒரு தீர்ப்பில் குற்றவாளி குற்றத்தை ஒத்துக்கொள்ள மறுக்க, அவர் வீட்டிற்கு அந்த ஊரில் நடக்கும் காளிக்கோவில் திருவிழாவின் போது காளியம்மன் அவர் வீட்டிற்கு வராது என்று கூறி உள்ளார்.குற்றவாளியோ காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.காவலர்கள் "காளியம்மன்" அவரது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.
திருவிழா நாளன்று "காளியம்மன் " அனைவரின் வீட்டிற்கும் சென்று ஆசிர்வாதம் வழங்குவது வழக்கம்.அதுபோல் அன்றும் ஒவ்வொரு வீடாகச் சென்று பின்னர் குற்றவாளியின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் காளியம்மனின் பின்புறம் வந்த தாத்தாவின் அப்பா காளியம்மனை அந்த வீட்டில் விட்டு விட்டு நடக்க, அவரோடு வந்த ஊரிலுள்ள அத்தனை பேரும் அவரைப் பின்பற்றி செல்வதைக் கண்ட காவலர்கள் உண்மையை உணர்ந்து கொண்டனராம்.

ஒரு வழக்கில் விறகை வெட்டி யாரோ எடுத்துச் சென்று விட்டனர் என புகார் வந்ததைக் கண்டு தாத்தாவின் அப்பா அவரிடம் பணி புரிபவரிடம் யார் வீட்டில் எல்லாம் புதிதாக விறகு கிடக்கிறது என்று பார்த்து வரக் கூறி உள்ளார்.அவரது வீட்டிலும் இருப்பதாகக் கேட்டு அதிர்ந்த தாத்தா,விறகை எடுத்து வந்த தனது மனைவியை வேப்பமரத்தில் கட்டி விளார் குச்சியால் எடுத்து சரமாரியாக அடிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார். 

நியாயம் என்று வந்தால் குடும்பமாவது மனைவியாவது என்று வாழ்ந்துள்ளார்.
ஊருக்காக வாழ்ந்தவரை யாரோ குறை கூற ,அதைக் கேட்ட எங்கள் தாத்தா இனி ஊர்ப்பணி எதுவும் பார்க்க கூடாது என சத்தியம் வாங்கி அவரைத் தடுத்துள்ளார்.மீறி அவர் ஊர்க்கணக்கை ஒரு நாள் பார்த்ததைக் கண்டு குறிப்பேடுகளைக் கோபத்தில் கிழித்து போட்டுள்ளார். 

அதனால் தான் அவரும் அந்த பதவிக்கும் செல்லவில்லை.

சுதந்திர போராட்டம் துவங்கி உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடக்கும் நிலையில் தாத்தா சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை மற்றவரிடம் கூறிக் கொண்டு இருந்ததைக் கேட்ட அவரின் அப்பா,"நீ சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்" என்று கூற, ஊரே திரண்டு வந்து தாத்தாவை திருவலஞ்சுழி வரை வந்து உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு வழி அனுப்பி வைத்துள்ளதைக் கேட்ட போது கண்ணீர் வந்தது.

அதனால் ஆங்கிலேய அரசு இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை அளித்தது .சிறையில் பல்வேறு சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்துள்ளார். 

சிறையில் வேதாரண்யம் வேத ரத்தினம் பிள்ளை பிள்ளை உள்ளிட்ட பல தலைவர்களுடன் இருந்த நட்பால், தான் வாழ்ந்த சுந்தரப் பெருமாள் கோவில் ஊரில் அரசு மருத்துவமனை வரக் காரணமாக இருந்துள்ளார்.அந்த மருத்துவமனை அமைக்க ரூ 16000 குறைந்த நிலையில்,அவர் சிறை சென்றதற்காக அரசு சன்மானமாக அளித்த 15 மா நிலத்தை விற்று அதிலிருந்து வந்த பணத்தைத் தந்துள்ளார். அக்காலத்தில் அந்தத் தொகை எவ்வளவு பெரியது?

ஊரிலுள்ள பெண்களுக்காக மாதர் சங்கம் அமைத்து தையற்பள்ளி,ராட்டை நூற்கும் பயிற்சி அளித்து அவர்கள் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக துணை செய்துள்ளார். நெசவாளர்களுக்காக சொசைட்டி,கூட்டுறவு பண்டகச் சாலை அமைத்துள்ளார்.

நிறைய விதவைப் பெண்களை ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து ஆசிரியராக உருவாகக் காரணமாக இருந்துள்ளார்.

அவரால் படித்த பெண் ஆசிரியர் ஒருவரின் குடும்பம் இன்று  தஞ்சை மாவட்டத்தில் மிகப் பெரிய செல்வந்தராகத் திகழ்வதைக் கண் முன் காண்கிறேன்.அவர்கள் அதையெல்லாம் மறந்துவிட்ட காலமிது.

அம்மாப்பேட்டையில் வாழ்ந்த போது 40 நெசவாளிகளுக்காக இலவச  வீட்டுமனைப் பட்டாக்களைப் போராடி பெற்றுத் தந்துள்ளார். அவருக்கு ஒரு இடமும் சிலையும் தருவதாக நெசவாளர்கள் கூறியதை மறுத்துவிட்டார்

தனது குழந்தைகளின் நலனுக்காக எதுவும் செய்யவே இல்லை, ஏன் அவர்கள் எந்த வகுப்பு படிக்கிறார்கள் என்பது கூட அவருக்கு தெரியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆத்தாவின் வேதனைக்கு காரணம் இதுவே.

தனது குடும்பத்தை மறந்து நாட்டுக்காக உழைத்த திருமிகு மாணிக்கம் எனது தாத்தா என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.தியாகிகள் நினைவு மண்டபத்தில் தாத்தாவின் போட்டோவைப் பார்த்து மனம் நெகிழ நின்றேன்.

இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பெற்ற சுதந்திரத்தைச் சீர்குலைக்கும் மனிதர்களைக் கண்டு வேதனை மிகுகின்றது.
அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் கூட இல்லை என்பது எத்தனை கொடுமை.

 மு.கீதா
புதுக்கோட்டை