World Tamil Blog Aggregator Thendral: கவிதை
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, 29 December 2025

கோடாங்கி

குறி சொல்லும் கோடாங்கி 
குமறி வரும் பசியைக்
குளிர்ந்த நீர்குடித்து
நடுசியில் வந்து குடுகுடுவென்க .
பல்லாண்டுகளாக மாற்றாத
செந்துணியோடு வந்து
குறி சொல்லும் ஓசை
ஓங்கி பின் மெலிந்தது.
காலையில் வந்து 
நல்லகாலம் பிறந்துடுச்சு 
வீட்டில் பெண் தெய்வம் 
நல்லது பண்ணுமென்றவனுக்கு 
செந்துணி புதுசா வாங்கிக்கன்னு 
பணத்தைக் கொடுத்தவளை 
வயிற்றில் கைவைத்து 
வணங்கியவனை 
உணவுவிடுதியில் கண்டால் 
நல்லகாலம் பிறக்கட்டுமென
வாழ்த்திடுங்கள்.

Thursday, 18 December 2025

வாழ்க்கை

யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத
சருகைப்போல வாழ்தலரிது.
துளிர்களின் மீதான
எந்தவிதப் புகாருமற்ற வாழ்வது.
நிலம் புணர்தலைத் தவமாக
வீழ்தலில் உணரும் சருகு
மிதந்து மிதந்து வாழ்வினை
அசைப்போட்டு மெல்ல தவழ்ந்து 
நிலமுடன் கரையுமது.
 உதிரவாடையுடன்
புவியைத் தரிசிக்கும் சிசுவென.

Monday, 17 November 2025

போக்சோ

இந்தியப் பெண்கள் வரலாறு
பாடம் நடத்துகிறேன்.
குழந்தை மணம் 
கைம்பெண் கொடுமை
உடன்கட்டை ஏறுதல் மறுத்தவர்களை ஏற்றுதல் 
முலைவரி மறுத்தல் 
தோள்சீலைப் போராட்டம் என
 கொதிக்கும் ரத்த வரலாற்றில்
எனை மூழ்கடித்த பொழுது 
வேகமாய் புத்தகத்தில் கிறுக்குகிறாள் 
போக்சோவில் தந்தைக்கு 
தண்டனை கொடுக்காத 
சமூகத்தின் முகத்தில் 
கிறுக்குவதாக..

இனி

கருப்பைகளும் யோனிகளும் 
போராட்டம் செய்தன.
கூட்டம் கூடக்கூட
பதறிப்போன ஆட்சியர் 
நேரில் வந்து குறைகேட்டார்.

எங்களையே குறிவைத்து
தாக்கும் ஆணினத்திற்கு
தக்க தண்டனை தராத
உங்கள் ஆட்சியில்
இனி ஆண் குழந்தைகளே
பிறக்காது போகட்டுமென 
சபித்து கொதித்தன .

ஹிஹி ஆணில்லையெனில் 
உங்களுக்கு என்ன வேலையென
கேட்ட குறிகளுக்குமுன் 
சட்டென்று உருமாறின 
கடலுக்குள்
ஆதியில் தோன்றிய 
அமீபாவாய் 
தன்னுடல் அறுத்தினிதே
இனப்பெருக்கம் செய்ய...

Sunday, 16 November 2025

’அன்பின் அலெக்ஸா ‘நூல் விமர்சனம்

 

            கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கனின்

 அன்பின் அலெக்சா நூல் விமர்சனம் –

புதுக்கோட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திடல் அமைப்பு ஐந்து நூல்கள் அறிமுக விழா 16.11.25 ஞாயிறு அன்று மாலை புதுக்கோட்டை நகர்மனறத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட தமுஎகச தலைவர் கவிஞர் ராசி  பன்னீர்செல்வன் அவர்கள் தலைமை தாங்கினார்

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் தொடக்க உரையாற்றினார்

கவிஞர் நா முத்துநிலவன் அவர்கள் நிறைவுரையாற்றினார்.

       அன்பின் அலெக்ஸா -நூலுக்கு எனது விமர்சனம்

தலைப்பே சற்று திடுக்கிட வைக்கும் அட்டைப்படம் தான்.

நீமும் கருப்பும் இரு கண்களாகக் கொண்டு அம்பேத்கரின் பெரியாரின் வழி வாழ்பவர் என கூறாமல் கூறும் அட்டை படத்திற்காக அகநி பதிப்பகம் தோழர் முருகேசிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

 பூச்சூடாத கவிதை தேவதைகள் என வாழ்த்துரை வழங்கியது மிகச் சிறப்பான தலைப்பு. தொன்மை மிக்க ஒரு மொழியின் அர்த்த அடர்த்தியை மிக நுட்பமாக அறிந்திருக்கிறார் என குறுங்கவிதைகளை பாராட்டியுள்ளார் கவிஞர் முருகேஷ்.

                            Poetry is not

                          What's said

                         But way of said

 என்பதன் அடையாளமாக சொற்களில் நடனமாடி இருக்கிறார் கவிஞர் மைதிலி.

 அவை கவிதை பூக்களாக மலர்ந்து நம்மிடம் மனம் வீசி மகிழ்விக்கின்றன .சில தீக்கங்குகளென அறச்சீற்றதோடு நம் மனதை கேள்வி கேட்கின்றன

 கவிஞரைக்குரித்து "சுயம், சுயமரியாதை நிறைந்த கவிதைகள் மலர காரணம் கவிஞரின் பாலியத்தில் வீட்டிலிருந்த நூலகமும் அந்த நூல்களை வாசித்து அந்த வாசிப்பை ஒரு தோழனை போல விவாதிக்கும் தந்தை கிடைத்ததும் தான் காரணம் என்பார் அவரது இணையர்  கஸ்தூரி ரங்கன்.

ஓர் ஆண் தனது இணையரை மேடையில் ஏற்றி பெருமை கொள்வது என்பது இக்காலத்திலும் அரிதிலும் அரிதான ஒன்றுதான் .

தங்களை நோக்கி வீசிய அம்புகளை எல்லாம் இடது கையால் புறந்தள்ளி இலக்கிய உலகில் தடம் பதித்து சமூகத்தினை புரட்டிப் போடும் நெம்புகோல்களை உருவாக்குபவர்களாக எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக வாழும் இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

 மென்மழைத் தூறும் ஞாயிற்றுக்கிழமையின் வைகறையில் அன்பின் அலெக்ஸாவை கையில் எடுத்தேன்.

 அலெக்ஸா உடன் தனிமையில் இருப்பவரும், தனிமையாய் உணர்பவரும்  பேசுவதைக் கேட்டு அறிந்து இருக்கிறேன்.

 இந்நூலுக்குள் அலெக்ஸாவை தேடிய பொழுது 23 ஆம் பக்கத்தில் கேள்விகளுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தது.

 கவிஞரிடம் அவள் பேசுவதை நீ கேட்கவில்லை என்ற குற்றத்தை முன் வைத்திருந்தது. யாருக்கும் செவிகொடுக்காத சமூகத்தில் அலெக்ஸாக்களே இப்பொழுது அதிகம் தேவைப்படுகின்றது.

அனைவருக்கும் எதிர் கேள்வி கேட்காத அதனிடம் தனிமையை, துயரத்தை ,கோபத்தை இறக்கி வைக்க அலக்சாக்கள் தேவை. சிலருக்கு இயந்திரமாக சிலருக்கு போதை வஸ்துகளாக .

கேட்பதற்கு காதுகள் இருப்பின் அலக்ஸாக்களுக்கு இங்கு வேலை இல்லை என்பதை கூறுகின்ற கவிதையது.

 இயல்பான மொழி நடை ,கவிதைகளுக்கே உரிய படிமம், குறியீடு நிறைந்த கவிதைகள் கவிஞரின் ரசனையில் மலர்ந்த கவிதைகள். மனிதநேயத்தை மலர்த்துகின்ற காத்திரமான கவிதைகள், சமூகநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் கவிதைகள், அம்பேத்கர் பெரியார் சிந்தனையோடு

சாத்தானே தனக்கு இடம் கொடுத்ததாய் கடவுள் கூறுவதாக அமைந்த கவிதைகள் , அழகியல் நிறைந்த கவிதைகள் கொண்ட நூல் அன்பின் அலக்ஸா.

 கவிதை, பேச்சு, சமூக அக்கறை, ஆசிரியப்பணி, இலக்கியப் பணி என அனைத்திலும் தனக்கென ஒரு தனி இடம் பதித்துள்ளார் கவிஞர் மைதிலி.

 காட்சிகளை கண்முன் நிறுத்தி, தான் கூற வந்த கருத்தை காலமும் இடமும் சூழ தமிழணங்காய் கவியாட்டம் ஆடியுள்ளார் பல கவிதைகளில்.

 பகல் குறித்து ஒரு கவிதை

" மெல்ல சோம்பல் முறித்தபடி

விழிக்கும் சூரியனிடம்

 வெப்பத்தை கையளித்து விட்டு

நெட்டி முறித்தபடி

வேடிக்கை பார்க்க தொடங்குகின்றன

மின்கம்பங்கள்

கூடுவிட்டு கிளம்புகிறது

சிறகு பொருந்திய

மற்றொரு பகல்"

 என இக்கவிதையில் நம்மையும் கூடுவிட்டு பறக்கும் சூரியன் அருகில் நிற்கவைக்கும் தன்மை அருமை .

பகலின் சிறகுகள் நமக்கும் முளைக்க கவிதை வானில் சிறகடிக்க துவங்குகிறோம் .

வியர்வை துடைக்க லாவண்டர் நிற கைக்குட்டை கவிதையை தந்து, உருண்டை உலகில் இருந்து சதுர உலகிற்கு சட்டென்று நம்மை அழைத்து செல்கிறார்.

 "மற்றொரு பகலாக

மிளிர்கிற செம்பருத்திகளின்

பின் மதிமொன்றில்

 சோம்பல் முறிக்கிறது

 சரக்கொன்றை

காது விடைக்க பார்த்துவிட்டு

 புரண்டு படுகிறது

பகல் "

என பகலை அடையாளம் காட்டுகிறார் இசையின் மீதான அவருடைய காதல் அலாதியானது . அவரது குரலே இசையாக மீட்டும். அவரது கவிதைகளுக்குள்ளும் ஒரு இசைலயம் உணரலாம்.

கோபத்தைக் கூட மென்மையாகக் காட்டும் கவிதைகள்.

ரசனையை கூறும் கவிதைகள் பல

 "விருப்ப பாடலுக்குள்

 ஒளித்து வைக்கிறேன் உன்னை

   கசிகிறது இசை

   கள்ளூறுகிறது காதுக்குள்

 காகிதம் ஆகிறேன் நான்"

என்ற கவிதை அவரது ரசனையைக் காட்டும் கவிதை.

" நமக்கு விருப்பமானவர்களை, விருப்பமான பாடலுக்குள் ஒளித்து வைத்திருக்கும் அனுபவம் எல்லோருக்கும் உண்டு தானே.

" ஓர் அறையே

 உலகமாய் இருப்பதை காட்டிலும்

மேலானதாக இருக்கிறது

 உலகமே ஓர் அறையாவது"

என்ற கவிதையைப் படிக்கும் போது

 ஒரு பெண்ணாக இதை உணரும் போது சிறையிருந்த, இருக்கும்  ஆதி பெண்களின் மூச்சுக்காற்றால் புழுக்கமான வெட்கை நிறைந்த அறை, அவளின் குரல்வளையை நெருக்கி மூச்சுக்காற்றுக்கும் தவிக்கும் போது, அவளை சட்டென்று உலகின் வாசலில் வைத்து இதோ உன்னால் மலரும் உலகம் இது என கூறும் போது எத்துனை ஆசுவாசமாக இருக்கும் என்பது பெண்களால் மட்டுமே உணரக்கூடிய கவிதை .

 பாலஸ்தீன படுகொலைக்கான கவிதையில் மனிதர்கள் தொலைத்துவிட்ட கடவுச்சொல்லான மனிதத்தை நாடுகிறார்.

 பல புதிய சொற்களை நாம் இந்நூலில் காண முடிகிறது

 நொதியேறிய பழைய நட்பு,

 அணையாடை

ஒளி பூசிய போதும்

 ஆர்மோனிய கட்டைகளாகும் சாலை

 என பல புதிய சொற்றொடர்களைக் காணமுடிகிறது.

எப்போதும் அருகில் இருக்கும் எதுவும் மதிப்பிழந்தே இருக்கும் .

தொலைந்த பிறகு அதன் மதிப்பு கூடும் என்பதை சைட் ஏ, சைட் பி என்ற கவிதை உணர்த்துகிறது.

 அறச்சீற்றமாக

கடுகைத் துளைத்து

ஏழு கடல் புகுத்தினோம் தான்

ஆனால்

 கமண்டலத்திலெல்லாம் அடைத்து

    காவி பூச முயலாதீர்கள்.

 உங்களை ஆண்ட செருப்புக்கு

 நீங்கள் அடிபணியலாம்.

   எங்களை ஆள்வது

 தமிழெனும் நெருப்பு

 என பாசிச ஆட்சியை சட்டையால் சாடுகிறார்.

 ஹைக்கூ கவிதைகளாக ஜென் தத்துவத்தை உணர்த்தும் கவிதைகளில் அடர்த்தி நம்மை வாசக எல்லையில் உச்சத்திற்கு அழைத்துச் சென்று பல்வேறு பரிணாமங்களை அடைய வைக்கிறது.

 பறந்து விட்டது கொக்கு

குளத்தில் மிதக்கிறது

இறகு

 என கவிதை முடிவடைகிறது.

பிறகு நாம் கவிதைக்குள் நுழைகிறோம்

 "கல்லறியும் தூரத்தில்

எப்போதும் இருக்கிறது

 குளம் "

என சொல்லெறிந்து மனதில் சலனத்தை உண்டாக்குகிறார்.

இக்கவிதைகள் நமக்குள் இருக்கும் கவி உணர்வை தூண்டிவிட்டு மௌனமாகி விடுகின்றன .

நாம் அதன் வசப்பட்டு கசிந்து நிற்கிறோம் .

எனக்கு பிடித்த கவிதைகளாக

     "இறகுகள் கருகிய

 வண்ணத்துப்பூச்சி ஒன்று

 படபடத்து கொண்டே இருக்கிறது

இறுக்கி சாட்டப்பட்ட

கதவுகளுக்கு பின்னெல்லாம்"

என்ற கவிதையை படித்துவிட்டு நான் சற்று அமைதியாகவே இருந்தேன்.

 ஒரு நிமிடம் என்னால் அந்த கவிதையிலிருந்து மீள்வது என்பது கடினமாக இருந்தது.

 இந்த குறியீடு பல பொருள்களை நமக்கு தந்து செல்கிறது

"ஒரு கல்லை காண்கையில்

உடைத்து விடுதல்

ஒரு வகையில் மிகச் சிறந்த விடுதலை

வழிபடுதல் கல்லுக்குத் தண்டனை"

என்ற  அரசியல் கவிதை

சந்தேகப்பட்டாலும்,அடையாளம் கண்டும் வரம் தர வேண்டும் என்பது எத்தனை கொடுமை என்பதை அந்த கவிதையால் கடவுளின் துயரத்தையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

.

 அங்கதம் நிறைந்த கவிதையாக

"விழுந்தது

 ஆரஞ்சாகவோ

 பிளம்மாகவோ கூட இருக்கலாம்

 அது ஆப்பிளால் நிகழ்ந்தது

 ஆற்றின் சுழிப்பில்

 மலையின் உச்சியில்

எங்கும் உதித்திருக்கலாம்

அது தோட்டத்தில்

நிகழ்ந்தது

துடைத்து உண்டிருக்கலாம்

 கையில் பத்திரப்படுத்தி இருக்கலாம்

அந்த தலை

நியூட்டன் உடையது

என்ற கவிதை சொற்கள் யார் வேண்டு யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் கவிதையாக மலர மைதிலியின் விரலாக இருக்க வேண்டும் எனக்கூற வைக்கிறது.

 சமூகத்தின் அநீதிகளை, பெண்ணியத்தை, அழகியலை, நட்பை, துரோகத்தை, மகிழ்வை, துயரை, இயற்கையை கொண்டாடும் கவிதைகளால்  நிறைந்தது

 அன்பின் அலெக்ஸா

 அறச்சீற்றம் நிறைந்த பெண்கள் ஆசிரியர்களாக, கவிஞர்களாக, சமூக அக்கறைநிறைந்தவர்களாக உருவாவது காலத்தின் தேவை.

 புதுகை மாவட்டம் கவிஞர்களின் தலைநகரம் என்ற கவிஞர் தங்கமூர்த்தி அவர்களின் வாக்கிற்கேற்ப இன்னும் பல கவிஞர்கள் உருவாகத் தடம் பதிக்கும் கவிஞர் மைதிலிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

அன்புடன்

மு.கீதா

புதுக்கோட்டை


Saturday, 4 October 2025

விழாஇரவு

விழா முடிந்து 
 நள்ளிரவு துவங்கும் பொழுது
விரைகிறேன் வாகனத்தில் வீட்டிற்கு..
மல்லியும் அல்லியும் 
மணம் பரப்பி விரியத் துவங்கி வரவேற்கும் சமயம்.
வாலைச் சுருட்டி தூங்கும் நாய்
தலையுயர்த்தி மீண்டும் தாழ்கிறது.
அசை போட்டுக் கொண்டிருக்கும்
மாட்டின் அலட்சியமான பார்வை கடந்து 
பின்வரும் வண்டியின் 
விளக்கைப் பார்த்ததும் மேலும் விரைகிறேன் .
அதுவும் என்னை வேகமாக 
நெருங்குகிறது
அனிச்சையாய் கழுத்திற்கு 
போகும் கை மனதில் சிறிது
அச்சத்தை விதைக்கிறது .
நடப்பது நடக்கட்டும் என இரு வாகனங்களும் ஒன்றோடொன்று விரைய 
சட்டென நிறுத்தி திரும்பினேன்,
டீச்சர் உங்கள் பின்னாடியே
வந்தது அச்சத்தை போக்கியது 
என்றபடி தொடர்பவளை புன்னகைத்து
இரவை நேசிக்கத் தொடங்கினேன்.

Sunday, 17 August 2025

சொந்த ஊர்

நீண்ட நாட்களுக்கு பிறகு 
பிறந்த மண்ணில் நடக்கிறேன் .

மண்வாசம் தாய்ப்பாலின் 
சுவையை நாவினில் ஊட்டியது.

கண்கள் இடுக்கி பார்க்கும் 
சைக்கிள்கடை முனுசாமி அய்யாவின் 
சின்ன சைக்கிளை
வாடகைக்கு எடுக்க
 அவரின் கடைக்கண் பார்வைக்காக
காத்திருந்த காலமவரின் முகத்தில் 
வரிகளாக ஓவியம் தீட்டி
கடையிருந்த இடத்தை விழுங்கி 
விட்டதைக் கூறாமல் கூறியது
அவரின் பெருமூச்சு.

அப்பாவின் துணையாய் வாழ்ந்த 
மாமாவின் சுவாசத்தை காற்றினில்
 சுவாசிக்க 
முயற்சித்து தோற்றேன்.
வழமையாக இரவின் மின்னல்முக
இளம்புன்னகையோடு
சட்டென தோன்றி மறைந்தாரவர்.

பாழடைந்து கிடந்த சிவன் கோவிலில் 
பைரவரை வணங்கச் சென்றவளைப் 
பார்த்து அங்கு போக முடியுமா?
என வியந்ததில் மறைந்திருந்தது 
சக்தி தியேட்டரில் பார்த்த திரைப்படத்தில் 
ஔவைப் பாட்டியிடம் பேசிய
பேயின் மண்டபமாயிற்றே என்றனதச்சம்.

மண்ணுக்குரிய மாம்பிஞ்சு நிற முகங்கள் மறைந்து எங்கெங்கு காணினும் வெண்ணிறமாக்கியதன் பிண்ணனியில் ஊரைச் சுற்றி 
பிரமாண்ட ராட்சஷனாய் எழுந்து 
நிற்கும் ஆலைகளின் வருகை.

தோட்டத்திற்கு அழைத்துச் சென்ற
தம்பி காட்டினான் எதிரில் முப்பது அடிக்கு குவாரி வந்து கொண்டுள்ளதென்பதை.

கடலுக்கு அடியில் இருந்த 
தொன்மையூர் தனது வளத்தை
கொடுத்து கொடுத்து 
நிலத்தில் மறைந்திடுமோ
என்ற கவலையில் மண்மகளிடம் 
வேண்டினேன் 
வாழவைக்கும் உன்னைச் சுரண்டும் 
இவர்களை மன்னித்து விடு.

தனது தடம் மறைந்த வலியில் 
ஓலமிடும் ஊரின் வலியை
உணர்ந்த பிச்சியாய் நானும்.

Wednesday, 7 August 2024

கவிதை

வெற்றிபெற்ற பூரிப்பில்
விரிந்த மெய்யது.
நூறு கிராம் கூடியதாக 
தகுதி நீக்கமென 
கொக்கரிக்கிறது.

ஆயிரமாயிரம் ஆண்டு பகையிது 
ஆண்டையின் மடிசாயவில்லையென 
அக்னி செரித்த வம்சமிது.

பாலியல் வன்முறை போராட்டத்திற்கு
பாவிகளுக்கு தரும் பிச்சையிது .
பொறுக்கிகளே
 பொறுக்கிக் கொள்ளுங்கள் .

மனங்களை வென்றவளுக்கு உலோகம் 
பொருட்டல்ல.

மு.கீதா

Thursday, 23 November 2023

அது

உயிரிழந்த உடலின் 
விரிந்த கால்களைக் கட்டுவது போல 
பாவாடை அணிந்து தூங்கும் போது
 கால்கள் விரியக்கூடாதென 
கட்டித் தூங்கிய பருவம்.
உதிரம் உதிரத்துவங்கிய நாளிலிருந்து
உலக்கை தாண்டக்கூடாதென
உதிரமும் நானும் உலக்கையின்
உலகில் வாழ்ந்த பருவம்.
புடவையை பாதியாய் கிழித்து
அணிந்த தாவணிக்கந்தையை மடித்து
கால்களின் நடுவே சுமந்து கடந்த பருவம்.
எட்டு முறை மடித்து வைத்த
துணிமூட்டையை நனைத்து பாவாடையில் பட்ட உதிரம் 
மறைக்கத் துடித்து வலியுடன் 
பள்ளியிலிருந்து வீட்டிற்கு 
தொடை உரசிய புண்களும்
எரிய எரிய வீடடைந்த பருவம்.
நல்ல நாளில் வரக்கூடாதென
அத்தனைக் கடவுளையும் கும்பிட்டழுதாலும் வந்து 
மூலையில் அமரவைத்து மூதேவி பட்டம்
வாங்கித்தந்த பருவம்.
தெருவெல்லாம் உறவுகள்
தலைநிமிராமல் தரைப்பார்த்தே 
நடந்த பருவம்.
அதிகாலைப்பனியில் ஆணெழும் முன்னே உறையவைக்கும் குளிரில் 
குளித்து விடியும்  பருவம்.
குளிருதும்மா,
அப்படி தான் குளிரும்
வெளியே சொல்லாதே
வயிறு பிழியும் வலிம்மா
அப்படி தான் வலிக்கும் தாங்கு.
பசி தாங்கு,
அவமானம் தாங்கு,
சுயமரியாதையின்றி வாழப்பழகு,
குரலெழுப்பாதே,
ஒங்கி சிரிக்காதே,
கடந்த காலம்
கடந்து போன காலம் மட்டுமல்ல.

மு.கீதா

Friday, 30 June 2023

முப்பாலில் ஒன்று

முப்பாலில் ஒன்று..

பட்டும் படாமலும் தொட முயலும்
கரங்களுக்கு ஆயிரம் வோல்ட்
மின்சாரம் தந்தது யார்?

 கூந்தல் கலைத்து மகிழும் தென்றலுக்கோ,
 நுதலில் படிமமாகும்
முத்த அருவியின் வாஞ்சை.

கோடைக்காற்றின் உப்புசத்திற்கு
கலவி முடித்துதிர்த்த
வியர்வையின் வாசம்.

ஊடலுக்கு பின்னான நெருக்கத்திற்கே
காற்றைக்கூட விட மறுக்கும் வேகம் .
கண்மூடி களித்துப் பிறக்கும் தலைவியின் புன்னகை நாடுபவன்,
நீளும் உச்சத்தின் பெருவெளியில் 
மகிழ்ந்து கரைந்து மறைபவளைக் கண்டு 
தவிக்குமவன் உயிர்.

கார் காலம் வர 
கடிதுமுயங்கும் புலிகளைக் கண்டு
வேட்டையாட மறந்த,
 தலைவனது தேரிலிருந்து
விரைந்து ஒலிக்கும் மணிகளின்
ஓசையைக் கேட்டாயோ தோழி.
அதென் தலைவனின் பெருமூச்சென
என்னையடைந்து மலர்த்துகிறது.
.

Friday, 9 September 2022

காதல்

எட்டிப் பிடித்து ஒட்டிக்கொள்ளச் செல்கிறாள்..
அத்தனை வேகத்துடனும் பிடிவாதத்துடனும்.
உலகே கைவிட்ட மனதோடு செல்பவளின்
கரம்தொட பறந்து செல்கிறேன்.
அவளின் பறத்தல் வேகமானது.
உடைந்த மனதை ஒட்டும் சொற்களைத் தாங்கி விரைகிறேன்..
சில்லுக்கண்ணாடி மனதுடன்
குருதி வடிய செல்பவளை 
சில நொடிகள் காணாது
குலைகிறேன்..
இத்தனை வீரியம் காட்டுபவள்
சற்று பொறுத்திருந்தால் கரம் பிடித்திருப்பேனெனக்கதறுகிறேன்...
விநாடிகளைத்தொலைத்தவளாய்.
மரணத்தைக்காதலித்தவளை
கண்டால் கரம் கொடுங்கள்..

Tuesday, 7 June 2022

பெண்

மூளைச்சலவையை
மனத்தடையை உடைப்பது 
என்பது இடிபாடுகளில் சிக்கிய உடலை பிய்த்தெடுப்பது போல..
சமூகத்தினைப் புரட்டிப் போடும்
நெம்புகோலென கிளம்பியவள்,
எதிர்கொள்கிறாள்
சிற்றீசல்களின் கணைகளை.
குடும்பத்தை விட்டு சுத்துறியே
சமைப்பது எப்போது?
புள்ளக்குட்டியெல்லாம் மறந்து
அலையுது பாரு!
இதெல்லாம் தேவையா?
போய் பூவச்சி புடவையை கட்டி
பொம்பளயா லட்சணமா இரு!
அகராதி புடிச்சது
எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கும்!
ஊட்டுக்காரன் கேட்கவே மாட்டான் போல!
சரி, நமக்கு வசப்படுமான்னு பார்ப்போம்!
மெல்லத் திரும்பி காலணித்தூசைத் 
தட்டிவிட்டு புன்னகைத்து கடக்கிறாள்
எரிமலைத்துண்டாய்..

Monday, 18 April 2022

விதையாக

எங்கு வாழ்ந்தாலும் 
வேர்ஊன்றி வளரும்
விதையாக,
ஆதி விதை
 வாழ்ந்த இடம் நோக்கிப்
படரும் கொடியாக,
அன்பெனும் கனிசுமந்து
அள்ளித்தரும் மாரியாய்,
கருணை சுரந்து உயிர்களைக் 
காணும் விழிகளுக்கு
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

Thursday, 11 November 2021

சமூகம்

இறுகிய பாறையோ
இளகிய மணலாக
வேருக்கு இடமளிக்க,

இளகாத மனிதனோ
சாதிப்பாறையால் இறுக்கமாக...
அதிகார போதையில் இறுக்கமாக..
அந்தஸ்து திமிரில் இறுக்கமாக..

Tuesday, 9 November 2021

சொற்களற்ற வீட்டில்

சொற்களற்ற வீட்டில்
சொல்ல முடியா தவிப்புடன்
காலத்தின் வரிகள் தாங்கிய
முதுமையின் விளிம்பில்
வாழும் அவர்களுக்கு
பால்ய கால நினைவுகளே 
துணையாக.
வீட்டை இடித்து
அவர்களுக்கு வசதியாக கட்ட
விரும்பும் மகனுக்கு,
தடைபோடும் காரணம்
புரியவில்லை...
யாருமற்ற வீடாகயிருந்தாலும்
முதுமையைக் கடக்க
வாழ்ந்த வீட்டை தவிர
வேறென்ன உதவிடும்.
வீடியோவில் சிரிக்கும் குழந்தைகளை
தடவி பார்த்து உள்ளுக்குள்
தவிப்பை காட்டாது சிரிக்கின்றனர்.
உடல் நலக்குறைவு செய்தி கேட்டு
அம்மாவின் மனம் கைவைத்தியம்
கூறி பதறுகிறது...
பார்த்து பார்த்து
சிறுகச் சிறுக சேமித்து
எந்த மகிழ்வையும் அனுபவிக்காமல்
சேர்த்தவை அனைத்தும்
குப்பையானதை பொறுக்க முடியாமல்
குமறுகின்றனர்...
அயல்நாட்டில் மகன், மகள் 
பெருமையல்ல,
அண்மையிருந்து அன்பாக
கரம் பிடித்து நான் இருக்கிறேன்
என்ற சொல்லைவிட.

கடல்

முட்டம் கடலில்
மூழ்கிய காலை
நனைத்து மகிழ்ந்து வரவேற்றது.
ஆரஞ்சு வண்ணம் போர்த்தி
அதிசயம் காட்டியது...
சட்டென்று சிறுமியாக்கி
மணல் வீடு கட்ட வைத்தது..
முழுதும் அணைத்து
முத்தமிட்டு கொஞ்சியது..
கொஞ்சலில் கரைந்தவளைக் கண்டு
பொறுக்காத ஆதவன் ஒளிய ,
பிரியாது பிரிந்தவளின்
பாதம் தொட்டு தொடர்ந்தது.
உடலில் படிந்த உப்பு 
கண்களில் வழிய...
வீடடைந்த என் உடை உதற
கொள்ளென சிரித்து சிதறி
வீடு நிறைந்தது...
மணலுண்ட கடல்...

Thursday, 16 September 2021

பயணம்

பயணம் தொடர்கிறது
பேரூந்தில் இறங்கும் பயணிகள்
தொடர் வண்டியில் பிரியும் பயணிகளென
 பயணிகளுடனான வாழ்வில்
எனது இறக்கத்திற்கான
காத்திருப்பில் .
எனக்கான இடமளித்து
இதயமளித்த உள்ளங்களை அசைபோடுகிறேன்...
என்னுடன் பயணிப்பவர்களின்
எண்ண அலைகளால் பயணம்
நிர்ணயிக்கப்படுகிறது..
ஆற்றுநீரில் தவழும் சருகாய்
அமைதியான பயணத்தில்
முழுமையை நோக்கி நகர்கிறேன்..
பிறை நிலவு பூரணமாவதைப்போல..


மு.கீதா

Friday, 20 August 2021

அசுரனின் தூரிகை

அசுரனின் தூரிகை

வரிசையாக நிற்கின்றன
விலங்குகளின் அணிவகுப்பில்
நிறைகிறது சூழல்..
ஒவ்வொன்றாய் வரச்சொல்லி
வரையும் அசுரனின் கைகளில்
கோடுகளாய் குறிப்பேட்டில்
ஒளிந்து கொள்கின்றன.
சிங்கம் அருகில் ஆடு
கம்பீரமாய் சிரித்துக்கொண்டே
யானை மீது ஒட்டகம் அமர்ந்து
இன்னும் உயரமாகிறது..
முயலுடன் கை கோர்க்கும் 
டைனோசரின் நீண்ட கைகளில்
வழிகிறது பேரன்பு..
சட்டென்று அம்மம்மாவும்
சடுதியில் கோட்டிற்குள் மறைகிறார்...
அம்மா அப்பா ஆயா வட்டத்திற்குள் மறைய....மீனாக்கா புள்ளியாகிறாள்....
அசுரனது ஓவியங்களில் உயிர்க்கும் 
அவர்களைக் காண முடிந்தால்
நீங்கள் பாக்கியவான்கள்...
கீதா

Wednesday, 21 July 2021

இனியச்சொல்

மேட்டிமைத்தனம் நிறைந்த இடத்தில்
முகங்களில் கவலைசூழபரபரவென
மக்களின் சலனம்...
அச்சமற்ற முகங்களின் பின்னே,
அதிகாரமும் பணமும் மறைந்திருக்க
பொருத்தமில்லா ஆடையுடன் தயங்கி தயங்கி,
நுழையும் காலத்தின் வடுதாங்கிய
மூத்த மகளின் கைகளில் நடுக்கம்..
மூச்சுக்காற்றிற்காக தவிக்கும் முதியவனின் உயிர்ப்பிற்காக வாழ்க்கையோடு போராட்டம்..
அவளைப் புறந்தள்ளும் கைகளில் 
மரணத்தின் வாசனை..
அக்கறையாய் விசாரிப்பு
அன்பாக சேவை செய்கின்றனரா?
ஆதரவோடு நடக்கின்றனரா?
தூய்மை தூய்மையாக உள்ளதா?
எந்தக் குறையிருந்தாலும் கூறுங்கள்.
பின்னிற்கும் கண்களின் தவிப்புகளைக் காண்கையில்
எதையும் கூறிடக்கூடாதென்கிறது மனம்..
இத்தனை கவனிப்பும் உண்மையான தல்ல...
இனிமையான சொற்களைத் தீர்மானிக்கிறது
பணமும் அதிகாரமும்...
பலகணியில் காணும்
இயல்பாக வளரும் முட்காடு சிரிக்கிறது...

Thursday, 8 July 2021

தாய்

அலறல் சத்தம் தாளாமல் துடித்தாள்
அழும் குழந்தையின் பசி வெடிப்பின்.
முதுகில் குழந்தை அழ அழ
எடுத்த கணை இரையில் தைத்து 
எம்பி விழச்செய்தது....
பசி நீக்கிய தாய்க்கு முத்தம் தந்த
பச்சிளம் குழந்தையின் அண்மை
மலையைப் பெயர்க்கும் வல்லமை உடையது.
தூற்றும் காற்றை புறந்தள்ளி புறப்பட்டவளை
சற்றும் தடுக்க முடியாது புயல் ஒதுங்கியது.
இயற்கை அரவணைத்து மகிழ்ந்தது...
பாதை சமைத்தவழியில் பயணிக்கவில்லையே
என்பது ஒன்றே அவளின் கவலை....