கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கனின்
’அன்பின் அலெக்சா’ நூல் விமர்சனம் –
புதுக்கோட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திடல் அமைப்பு ஐந்து நூல்கள் அறிமுக விழா 16.11.25 ஞாயிறு அன்று மாலை புதுக்கோட்டை நகர்மனறத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட தமுஎகச தலைவர் கவிஞர் ராசி பன்னீர்செல்வன் அவர்கள் தலைமை தாங்கினார்
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் தொடக்க உரையாற்றினார்
கவிஞர் நா முத்துநிலவன் அவர்கள் நிறைவுரையாற்றினார்.
அன்பின் அலெக்ஸா -நூலுக்கு எனது விமர்சனம்
தலைப்பே சற்று திடுக்கிட வைக்கும் அட்டைப்படம் தான்.
நீலமும் கருப்பும் இரு கண்களாகக் கொண்டு அம்பேத்கரின் பெரியாரின் வழி வாழ்பவர் என கூறாமல் கூறும் அட்டை படத்திற்காக அகநி பதிப்பகம் தோழர் முருகேசிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
’பூச்சூடாத கவிதை தேவதைகள்’ என வாழ்த்துரை வழங்கியது மிகச் சிறப்பான தலைப்பு. தொன்மை மிக்க ஒரு மொழியின் அர்த்த அடர்த்தியை மிக நுட்பமாக அறிந்திருக்கிறார் என குறுங்கவிதைகளை பாராட்டியுள்ளார் கவிஞர் முருகேஷ்.
Poetry is not
What's said
But way of said
என்பதன் அடையாளமாக சொற்களில் நடனமாடி இருக்கிறார் கவிஞர் மைதிலி.
அவை கவிதை பூக்களாக மலர்ந்து நம்மிடம் மனம் வீசி மகிழ்விக்கின்றன .சில தீக்கங்குகளென அறச்சீற்றதோடு நம் மனதை கேள்வி கேட்கின்றன
கவிஞரைக்குரித்து "சுயம், சுயமரியாதை நிறைந்த கவிதைகள் மலர காரணம் கவிஞரின் பாலியத்தில் வீட்டிலிருந்த நூலகமும் அந்த நூல்களை வாசித்து அந்த வாசிப்பை ஒரு தோழனை போல விவாதிக்கும் தந்தை கிடைத்ததும் தான் காரணம்’ என்பார் அவரது இணையர் கஸ்தூரி ரங்கன்.
ஓர் ஆண் தனது இணையரை மேடையில் ஏற்றி பெருமை கொள்வது என்பது இக்காலத்திலும் அரிதிலும் அரிதான ஒன்றுதான் .
தங்களை நோக்கி வீசிய அம்புகளை எல்லாம் இடது கையால் புறந்தள்ளி இலக்கிய உலகில் தடம் பதித்து சமூகத்தினை புரட்டிப் போடும் நெம்புகோல்களை உருவாக்குபவர்களாக எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக வாழும் இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மென்மழைத் தூறும் ஞாயிற்றுக்கிழமையின் வைகறையில் அன்பின் அலெக்ஸாவை கையில் எடுத்தேன்.
அலெக்ஸா உடன் தனிமையில் இருப்பவரும், தனிமையாய் உணர்பவரும் பேசுவதைக் கேட்டு அறிந்து இருக்கிறேன்.
இந்நூலுக்குள் அலெக்ஸாவை தேடிய பொழுது 23 ஆம் பக்கத்தில் கேள்விகளுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தது.
கவிஞரிடம் ’அவள் பேசுவதை நீ கேட்கவில்லை’ என்ற குற்றத்தை முன் வைத்திருந்தது. யாருக்கும் செவிகொடுக்காத சமூகத்தில் அலெக்ஸாக்களே இப்பொழுது அதிகம் தேவைப்படுகின்றது.
அனைவருக்கும் எதிர் கேள்வி கேட்காத அதனிடம் தனிமையை, துயரத்தை ,கோபத்தை இறக்கி வைக்க அலக்சாக்கள் தேவை. சிலருக்கு இயந்திரமாக சிலருக்கு போதை வஸ்துகளாக .
கேட்பதற்கு காதுகள் இருப்பின் அலக்ஸாக்களுக்கு இங்கு வேலை இல்லை என்பதை கூறுகின்ற கவிதையது.
இயல்பான மொழி நடை ,கவிதைகளுக்கே உரிய படிமம், குறியீடு நிறைந்த கவிதைகள் கவிஞரின் ரசனையில் மலர்ந்த கவிதைகள். மனிதநேயத்தை மலர்த்துகின்ற காத்திரமான கவிதைகள், சமூகநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் கவிதைகள், அம்பேத்கர் பெரியார் சிந்தனையோடு
’சாத்தானே தனக்கு இடம் கொடுத்ததாய் கடவுள் கூறுவதாக’ அமைந்த கவிதைகள் , அழகியல் நிறைந்த கவிதைகள் கொண்ட நூல் அன்பின் அலக்ஸா.
கவிதை, பேச்சு, சமூக அக்கறை, ஆசிரியப்பணி, இலக்கியப் பணி என அனைத்திலும் தனக்கென ஒரு தனி இடம் பதித்துள்ளார் கவிஞர் மைதிலி.
காட்சிகளை கண்முன் நிறுத்தி, தான் கூற வந்த கருத்தை காலமும் இடமும் சூழ தமிழணங்காய் கவியாட்டம் ஆடியுள்ளார் பல கவிதைகளில்.
பகல் குறித்து ஒரு கவிதை
" மெல்ல சோம்பல் முறித்தபடி
விழிக்கும் சூரியனிடம்
வெப்பத்தை கையளித்து விட்டு
நெட்டி முறித்தபடி
வேடிக்கை பார்க்க தொடங்குகின்றன
மின்கம்பங்கள்
கூடுவிட்டு கிளம்புகிறது
சிறகு பொருந்திய
மற்றொரு பகல்"
என இக்கவிதையில் நம்மையும் கூடுவிட்டு பறக்கும் சூரியன் அருகில் நிற்கவைக்கும் தன்மை அருமை .
பகலின் சிறகுகள் நமக்கும் முளைக்க கவிதை வானில் சிறகடிக்க துவங்குகிறோம் .
வியர்வை துடைக்க லாவண்டர் நிற கைக்குட்டை கவிதையை தந்து, உருண்டை உலகில் இருந்து சதுர உலகிற்கு சட்டென்று நம்மை அழைத்து செல்கிறார்.
"மற்றொரு பகலாக
மிளிர்கிற செம்பருத்திகளின்
பின் மதியமொன்றில்
சோம்பல் முறிக்கிறது
சரக்கொன்றை
காது விடைக்க பார்த்துவிட்டு
புரண்டு படுகிறது
பகல் "
என பகலை அடையாளம் காட்டுகிறார் இசையின் மீதான அவருடைய காதல் அலாதியானது . அவரது குரலே இசையாக மீட்டும். அவரது கவிதைகளுக்குள்ளும் ஒரு இசைலயம் உணரலாம்.
கோபத்தைக் கூட மென்மையாகக் காட்டும் கவிதைகள்.
ரசனையை கூறும் கவிதைகள் பல
"விருப்ப பாடலுக்குள்
ஒளித்து வைக்கிறேன் உன்னை
கசிகிறது இசை
கள்ளூறுகிறது காதுக்குள்
காகிதம் ஆகிறேன் நான்"
என்ற கவிதை அவரது ரசனையைக் காட்டும் கவிதை.
" நமக்கு விருப்பமானவர்களை, விருப்பமான பாடலுக்குள் ஒளித்து வைத்திருக்கும் அனுபவம் எல்லோருக்கும் உண்டு தானே.
" ஓர் அறையே
உலகமாய் இருப்பதை காட்டிலும்
மேலானதாக இருக்கிறது
உலகமே ஓர் அறையாவது"
என்ற கவிதையைப் படிக்கும் போது
ஒரு பெண்ணாக இதை உணரும் போது சிறையிருந்த, இருக்கும் ஆதி பெண்களின் மூச்சுக்காற்றால் புழுக்கமான வெட்கை நிறைந்த அறை, அவளின் குரல்வளையை நெருக்கி மூச்சுக்காற்றுக்கும் தவிக்கும் போது, அவளை சட்டென்று உலகின் வாசலில் வைத்து ’இதோ உன்னால் மலரும் உலகம் இது’ என கூறும் போது எத்துனை ஆசுவாசமாக இருக்கும் என்பது பெண்களால் மட்டுமே உணரக்கூடிய கவிதை .
பாலஸ்தீன படுகொலைக்கான கவிதையில் மனிதர்கள் தொலைத்துவிட்ட கடவுச்சொல்லான மனிதத்தை நாடுகிறார்.
பல புதிய சொற்களை நாம் இந்நூலில் காண முடிகிறது
’நொதியேறிய பழைய நட்பு’,
’அணையாடை’
’ஒளி பூசிய போதும்’
’ஆர்மோனிய கட்டைகளாகும் சாலை’
என பல புதிய சொற்றொடர்களைக் காணமுடிகிறது.
எப்போதும் அருகில் இருக்கும் எதுவும் மதிப்பிழந்தே இருக்கும் .
தொலைந்த பிறகு அதன் மதிப்பு கூடும் என்பதை சைட் ஏ, சைட் பி என்ற கவிதை உணர்த்துகிறது.
அறச்சீற்றமாக
’கடுகைத் துளைத்து
ஏழு கடல் புகுத்தினோம் தான்
ஆனால்
கமண்டலத்திலெல்லாம் அடைத்து
காவி பூச முயலாதீர்கள்.
உங்களை ஆண்ட செருப்புக்கு
நீங்கள் அடிபணியலாம்.
எங்களை ஆள்வது
தமிழெனும் நெருப்பு’
என பாசிச ஆட்சியை சட்டையால் சாடுகிறார்.
ஹைக்கூ கவிதைகளாக ஜென் தத்துவத்தை உணர்த்தும் கவிதைகளில் அடர்த்தி நம்மை வாசக எல்லையில் உச்சத்திற்கு அழைத்துச் சென்று பல்வேறு பரிணாமங்களை அடைய வைக்கிறது.
’பறந்து விட்டது கொக்கு
குளத்தில் மிதக்கிறது
இறகு’
என கவிதை முடிவடைகிறது.
பிறகு நாம் கவிதைக்குள் நுழைகிறோம்
"கல்லறியும் தூரத்தில்
எப்போதும் இருக்கிறது
குளம் "
என சொல்லெறிந்து மனதில் சலனத்தை உண்டாக்குகிறார்.
இக்கவிதைகள் நமக்குள் இருக்கும் கவி உணர்வை தூண்டிவிட்டு மௌனமாகி விடுகின்றன .
நாம் அதன் வசப்பட்டு கசிந்து நிற்கிறோம் .
எனக்கு பிடித்த கவிதைகளாக
"இறகுகள் கருகிய
வண்ணத்துப்பூச்சி ஒன்று
படபடத்து கொண்டே இருக்கிறது
இறுக்கி சாட்டப்பட்ட
கதவுகளுக்கு பின்னெல்லாம்"
என்ற கவிதையை படித்துவிட்டு நான் சற்று அமைதியாகவே இருந்தேன்.
ஒரு நிமிடம் என்னால் அந்த கவிதையிலிருந்து மீள்வது என்பது கடினமாக இருந்தது.
இந்த குறியீடு பல பொருள்களை நமக்கு தந்து செல்கிறது
"ஒரு கல்லை காண்கையில்
உடைத்து விடுதல்
ஒரு வகையில் மிகச் சிறந்த விடுதலை
வழிபடுதல் கல்லுக்குத் தண்டனை"
என்ற அரசியல் கவிதை
‘ சந்தேகப்பட்டாலும்,அடையாளம் கண்டும் வரம் தர வேண்டும் என்பது எத்தனை கொடுமை என்பதை அந்த கவிதையால் கடவுளின் துயரத்தையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
.
அங்கதம் நிறைந்த கவிதையாக
"விழுந்தது
ஆரஞ்சாகவோ
பிளம்மாகவோ கூட இருக்கலாம்
அது ஆப்பிளால் நிகழ்ந்தது
ஆற்றின் சுழிப்பில்
மலையின் உச்சியில்
எங்கும் உதித்திருக்கலாம்
அது தோட்டத்தில்
நிகழ்ந்தது
துடைத்து உண்டிருக்கலாம்
கையில் பத்திரப்படுத்தி இருக்கலாம்
அந்த தலை
நியூட்டன் உடையது
என்ற கவிதை சொற்கள் யார் வேண்டு யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் கவிதையாக மலர மைதிலியின் விரலாக இருக்க வேண்டும் எனக்கூற வைக்கிறது.
சமூகத்தின் அநீதிகளை, பெண்ணியத்தை, அழகியலை, நட்பை, துரோகத்தை, மகிழ்வை, துயரை, இயற்கையை கொண்டாடும் கவிதைகளால் நிறைந்தது
அன்பின் அலெக்ஸா
அறச்சீற்றம் நிறைந்த பெண்கள் ஆசிரியர்களாக, கவிஞர்களாக, சமூக அக்கறைநிறைந்தவர்களாக உருவாவது காலத்தின் தேவை.
புதுகை மாவட்டம் கவிஞர்களின் தலைநகரம் என்ற கவிஞர் தங்கமூர்த்தி அவர்களின் வாக்கிற்கேற்ப இன்னும் பல கவிஞர்கள் உருவாகத் தடம் பதிக்கும் கவிஞர் மைதிலிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
அன்புடன்
மு.கீதா
புதுக்கோட்டை
No comments :
Post a Comment
தங்களின் இனிய வருகைக்கு நன்றி...