World Tamil Blog Aggregator Thendral: November 2021

Thursday 11 November 2021

சமூகம்

இறுகிய பாறையோ
இளகிய மணலாக
வேருக்கு இடமளிக்க,

இளகாத மனிதனோ
சாதிப்பாறையால் இறுக்கமாக...
அதிகார போதையில் இறுக்கமாக..
அந்தஸ்து திமிரில் இறுக்கமாக..

Tuesday 9 November 2021

சொற்களற்ற வீட்டில்

சொற்களற்ற வீட்டில்
சொல்ல முடியா தவிப்புடன்
காலத்தின் வரிகள் தாங்கிய
முதுமையின் விளிம்பில்
வாழும் அவர்களுக்கு
பால்ய கால நினைவுகளே 
துணையாக.
வீட்டை இடித்து
அவர்களுக்கு வசதியாக கட்ட
விரும்பும் மகனுக்கு,
தடைபோடும் காரணம்
புரியவில்லை...
யாருமற்ற வீடாகயிருந்தாலும்
முதுமையைக் கடக்க
வாழ்ந்த வீட்டை தவிர
வேறென்ன உதவிடும்.
வீடியோவில் சிரிக்கும் குழந்தைகளை
தடவி பார்த்து உள்ளுக்குள்
தவிப்பை காட்டாது சிரிக்கின்றனர்.
உடல் நலக்குறைவு செய்தி கேட்டு
அம்மாவின் மனம் கைவைத்தியம்
கூறி பதறுகிறது...
பார்த்து பார்த்து
சிறுகச் சிறுக சேமித்து
எந்த மகிழ்வையும் அனுபவிக்காமல்
சேர்த்தவை அனைத்தும்
குப்பையானதை பொறுக்க முடியாமல்
குமறுகின்றனர்...
அயல்நாட்டில் மகன், மகள் 
பெருமையல்ல,
அண்மையிருந்து அன்பாக
கரம் பிடித்து நான் இருக்கிறேன்
என்ற சொல்லைவிட.

கடல்

முட்டம் கடலில்
மூழ்கிய காலை
நனைத்து மகிழ்ந்து வரவேற்றது.
ஆரஞ்சு வண்ணம் போர்த்தி
அதிசயம் காட்டியது...
சட்டென்று சிறுமியாக்கி
மணல் வீடு கட்ட வைத்தது..
முழுதும் அணைத்து
முத்தமிட்டு கொஞ்சியது..
கொஞ்சலில் கரைந்தவளைக் கண்டு
பொறுக்காத ஆதவன் ஒளிய ,
பிரியாது பிரிந்தவளின்
பாதம் தொட்டு தொடர்ந்தது.
உடலில் படிந்த உப்பு 
கண்களில் வழிய...
வீடடைந்த என் உடை உதற
கொள்ளென சிரித்து சிதறி
வீடு நிறைந்தது...
மணலுண்ட கடல்...