World Tamil Blog Aggregator Thendral: May 2020

Wednesday 13 May 2020

தப்பட் திரைவிமர்சனம்

தப்பட்
ஒரு அறை....ஒரே ஒரு அறை....என்ன செய்யும்? கணவர் விக்ரம் (pavil gulati)மீது பேரன்பை செலுத்தும் மனைவியாக தனது மாமியாரைக் கண்ணும் கருத்துமாக காக்கும் மருமகளாக  டாப்ஸி நடித்துள்ள இந்தியில் வெளியாகியுள்ள படம் "தப்பட் "
இந்த மாதிரி படம் எடுக்க துணிந்த இயக்குநர் அனுபவ் சின்காவிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்....
தனது அலுவலகத்தில் இருந்துஇலண்டனுக்கு பணி நிமித்தம் மற்றும் பதவி உயர்வில்  செல்லும் வாய்ப்பு கிடைத்ததை கொண்டாடும் விருந்தில் ஓடி ஓடி அனைவரையும் கவனிக்கும் அமிர்தா(டாப்ஸி)
விருந்து நடக்கும் பொழுதே தனது வாய்ப்பு பறி போனதை அறிந்து கோபத்தில் சண்டையிட்டு அடிக்க போகும் கணவனை பிடித்து இழுக்கும் போது எதிரியின் மீதுள்ள அத்தனை  கோபத்தையும் மனைவியின் கன்னத்தில் ஒரே அறையாக.....
ஆணாதிக்க சமூகத்தில் இதென்ன ஒரு விசயமா....கணவன் மனைவிக்குள் வரும் சண்டை இயல்பு தானே என்று தோன்றினால் நீங்கள் இன்னும் வளரவில்லை என்று உணருங்கள்..
ஒரு அறைக்குள்ளேயே மனைவியை அடிப்பது சட்டப்படி குற்றம் என்பது இன்னும் காகிதத்தில் மட்டுமே உள்ளது..
அத்தனை பேர் மத்தியில் அமிர்தா இழந்தது சுயமரியாதையை மட்டுமல்ல..
தனது கணவனின் மீது தான் வைத்த  அன்பையும் தான்.. அதற்கு பிறகு அவளால் தூங்கவே முடியவில்லை...
அவளது அப்பா அவளுக்கு சப்போர்ட் பண்ணும் போது அவளது அம்மா தனது பாட்டு பாடும் திறமையை கணவருக்கு பிடிக்கவில்லை என்பதால் அழித்துக் கொண்டதை கூறி சமாதானம் செய்கிறாள்...
கணவனுடன் விருப்பமின்றி வாழ விரும்பாத அமிர்தா விவாகரத்திற்காக பெண் வக்கீலை நாடுகையில் பெண்ணியத்திற்காக குரல் கொடுக்கும் அந்த வக்கீலே கணவனின் வன்முறைகளைத் தாங்கி வாழ்வதால் இதற்கு ஏன் விவாகரத்து என்று வியக்கிறார்...
பிடிவாதமாக தனது சுயமரியாதையை விட்டு கொடுக்காத அமிர்தா தான் தாயாகப் போவது தெரிந்தும்....விவாகரத்து பெறுகிறாள்.தனது செயலுக்கு இறுதி வரை மன்னிப்பு கேட்காத கணவன் ஆணாதிக்க சமூகத்தின் சீரழிந்த பகுதி.
ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முடிந்தது என்பதன் அடிப்படை பெண்களுக்கு  சுயமரியாதை இல்லாத அப்படி ஒன்று அவர்களுக்குத் தேவையே இல்லை என்று கருதும் சமூகத்தின். ...பண்பாட்டுச் சிதைவு...
மேலோட்டமாக பார்த்தால் இது பெரிது அல்ல தான்....
அந்த இடத்தில் கணவன் மனைவியிடம் அறை வாங்கி இருந்தால் பொங்கி எழாதோ ஆண்குரல்கள்...
செயல் ஒன்று தான்... ஆளுக்கு தகுந்தாற்போல் தீர்ப்பு சரியல்ல என்பது மறுக்க முடியாத உண்மை.
தப்பட் துவக்கம் தான்....
தனது நடிப்பால் வாழ்ந்திருக்கிறார் டாப்ஸி வாழ்த்துக்கள்.
இந்த கருவை தேர்வு செய்த இயக்குநருக்கு மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்.