World Tamil Blog Aggregator Thendral: June 2023

Friday 30 June 2023

முப்பாலில் ஒன்று

முப்பாலில் ஒன்று..

பட்டும் படாமலும் தொட முயலும்
கரங்களுக்கு ஆயிரம் வோல்ட்
மின்சாரம் தந்தது யார்?

 கூந்தல் கலைத்து மகிழும் தென்றலுக்கோ,
 நுதலில் படிமமாகும்
முத்த அருவியின் வாஞ்சை.

கோடைக்காற்றின் உப்புசத்திற்கு
கலவி முடித்துதிர்த்த
வியர்வையின் வாசம்.

ஊடலுக்கு பின்னான நெருக்கத்திற்கே
காற்றைக்கூட விட மறுக்கும் வேகம் .
கண்மூடி களித்துப் பிறக்கும் தலைவியின் புன்னகை நாடுபவன்,
நீளும் உச்சத்தின் பெருவெளியில் 
மகிழ்ந்து கரைந்து மறைபவளைக் கண்டு 
தவிக்குமவன் உயிர்.

கார் காலம் வர 
கடிதுமுயங்கும் புலிகளைக் கண்டு
வேட்டையாட மறந்த,
 தலைவனது தேரிலிருந்து
விரைந்து ஒலிக்கும் மணிகளின்
ஓசையைக் கேட்டாயோ தோழி.
அதென் தலைவனின் பெருமூச்சென
என்னையடைந்து மலர்த்துகிறது.
.

Sunday 11 June 2023

விடியல்

திடீரென தொலைக்காட்சியில் விளம்பரங்களிலும் ஆண்களே எண்ணெய், நெய்,காப்பி விளம்பரத்திற்கு சமைத்து தருவதாக எடுக்கப்பட்டு அட்டகாசமாக இருந்தது.
ஒரு பெண் உலகின் நவீன காரை வேகமாக ஓட்டி வர, பின்னால் பைக்கில் ஓடி வரும் இளைஞர்கள்,.
அவள் உடனே ஒரு செண்டை எடுத்து ஆடையில் ஸ்பிரே செய்ய ஆதிவாசி ஆண்கள் முதல் விண்வெளிக்கு சென்று கொண்டிருக்கும் ஆண்கள் வரை பணியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு ஓடிவந்து அவளுக்காக ஜொல்லுவிட அவளோ அவர்களை அலட்சியமாகப் புறந்தள்ளி பறக்கிறாள்.
என்ன ஒரு கொடுமை திரும்பி நின்னு ஒரு பறக்கும் முத்தமாவது தந்து இருக்கலாம்.
அட அடுத்த விளம்பரத்தில் குழந்தைகளை அப்பாக்களே குளிப்பாட்டி ,உணவூட்டி பள்ளிக்கு அனுப்ப அம்மா வரும் வழியில் குழந்தையை பிக்கப் செய்து,கடைக்கு அழைத்துச் சென்று கேட்டதை வாங்கித் தந்து வீட்டுக்கு வந்தால் அப்பா சுடச்சுட பஜ்ஜியோடு மணக்க மணக்க வரவேற்கிறார்கள்..
என்ன ஒரு புடவை விளம்பரம், மேக்கப் விளம்பரம், நகை விளம்பரத்தைப் காணோமே என்று திகைக்க, அந்த நாட்டின் பெண் பிரதமரும், பெண் முதலமைச்சரும் இணைந்து இனி பெண்கள் மேக்கப் இன்றி நகையும் புடவையும் அணியாமல் கோட் போட்டு டை கட்டி தான் பணிக்கு வர வேண்டும் என்ற சட்டத்தை இயற்றி விட்டனராம்.
 என் கண்கள் நம்பாமல் வியப்பில் விரிந்தது.
போதாதென்று மண்டபங்களில் பதாகை ஆண்கள் வயதுக்கு வந்ததை கொண்டாடும் பூப்பு நன்னீராட்டு விழா.ஒரு தாத்தா எங்க காலத்துல இதெல்லாம் இல்லையேன்னு புலம்பிக் கொண்டிருக்க, பெண்கள் தாங்கள் வயதுக்கு வந்ததை பொருட்டாக எண்ணாமல் வேலைக்கு கிளம்பிக் கொண்டு இதெல்லாம் தேவையில்லாத செல்வுன்னு அலட்சியம் செய்தார்கள்.
பெரிய தொழிலதிபர்களாக, அரசியல்வாதிகளாக பெண்கள் எங்கும் திகழ,எங்கடா இந்த நடிகர்கள் பின்னாடி ஓடின இளைஞர்களைத் தேட ,அவர்களோ போதைக்கு அடிமையாகி வட நாட்டில்,அயல்நாட்டில் கூலிக்கு வேலை செய்து கொண்டு இருந்தனர்.
சாதி சாதின்னு அலைந்த கூட்டமோ பொத்திக்கொண்டு இருந்தது.
ஏன்னா எங்களுக்கில்லாத சாதி உங்களுக்கு மட்டும் எதுக்குன்னு நாட்டிலேயே சாதி இல்லயாம்.
ஆண்களை கிண்டல் செய்தாலோ,காதலிக்கவில்லையெனில் ஆசிட் ஊத்தினாலோ, பலவந்தப்படுத்திக் கொடுமை படுத்தினாலோ கடுமையான சட்டங்கள் பாய்ந்தன.
தெருக்களில் இரவில் நடக்க ஆண்கள் அஞ்சி 6 மணிக்கு மேல் வீட்டுக்குள் அடைந்தனர்.
அப்பா அம்மாவிடம் சொல்லாமல் எந்த ஆணும் அடி எடுத்து வைக்கக்கூடாது.
பெண்களால் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தை ஆண்களுக்கு திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் ஊட்டிக்கொண்டே இருந்தன.

தாத்தாக்களின் வலிமையான ஜீன்கள் அவர்களின் போதைப்பழக்கத்தால் அழிந்து பேரன்கள் நோயாளிகளாகப் பிறந்தனர்.

தெருக்களில்,டீக்கடைகளில் எங்கும் பெண்கள் அதிகாலையில் கிளம்பி அரசியல் பேச, அதிகாலையில் கோலமிட்டு ,சமைத்துக் கொண்டிருந்த அப்பாக்கள் புலம்பிக் கொண்டே குழந்தைகளைப் பள்ளிக்கு கிளப்ப, எந்த வித மன உளைச்சலுமின்றி பேப்பர் படித்துக் கொண்டிருந்த பெண்கள் குளித்து விட்டு வந்து சாப்பாட்டில் உப்பில்லை காரமில்லை என்று தட்டைத் தூக்கி எறிந்து விட்டு ஹோட்டலுக்குச் சென்றனர்.

இது எந்த நாடு என்ற குழப்பத்தில் எதுவும் புரியாமல் நான் திகைக்க, கனவைக் கலைத்து கதிரவன் வர, இன்னும் விடியவே இல்லை .
மு.கீதா
புதுக்கோட்டை

Saturday 3 June 2023

அந்தமான்

அந்தமான் பயணம் 26.5.23-30.5.23 வரை ஐந்து நாட்கள்.
தமிழ்நாட்டில் இருந்து வெளியே அதிகம் செல்லாத எனக்கு அந்தமான் பயணம் மிகவும் புதிய ஆர்வத்தை உண்டாக்கியது. முதலில் இனிய நந்தவனம் குழுவினர் செல்வதை அறிந்து செல்லலாம் என்று நினைத்தபோது முடியாத நிலையில். அதனால் ஆசிரியர் குழுவில் தோழி அல்லிராணி, அவர்கள் குழுவினர் 17 மே மாதம் அந்தமான் பயணம்செல்கின்றனர்,  விமானக்கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், அழைத்துச் செல்லும் பேரூந்து கட்டணம்,நுழைவுக்கட்டணங்கள்,5 நாட்கள் உணவு சேர்த்துரூ30,000, ,நாம் செல்வோமா என்று கேட்டபோது சரி என்றேன்.
இப்படியாக அந்தமான் பயணத்திற்கு நானும், கீதாஞ்சலியும் ஆயத்தமானோம். பத்தாம் தேதி வரை எதுவும் தகவல் இல்லாத நிலையில், என்னவென்று கேட்ட பொழுது பயணத்தில் சிறிது தடை, தள்ளிப் போகிறது என்றார்கள், பிறகு இறுதியாக 26 ஆம் தேதி பயணம் துவங்கும் என்றார்கள், பள்ளியின் சூழல் தடை தான் இருந்தாலும் பணம் கட்டிய நிலையில் வேறுவழியின்றி செல்லத் துவங்கினோம்.சில தலைமையாசிரியர்கள் வரவே இல்லை.அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் முனைவர் பெரியண்ணன் அவர்கள் குழுவுடன் இணைந்து சென்றோம்.கடலூர் கிளை நிர்வாகிகள் ஏழுமலை மற்றும் புதுச்சேரி கிளை நிர்வாகிகள் இச்சுற்றுலாவைக் கடலூர் இதயம் டிராவல்ஸ் நிறுவனர் பிரகாஷ் அவர்களுடன் இணைந்து நடத்தினர்.
 சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் 26 ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் கிளம்பினோம். விமானம் அந்தமானுக்கு 7 10 மணியளவில் சென்றது. அனைத்திந்திய எழுத்தாளர் சங்க உறுப்பினர் 54 பேர் ஆசிரியர் 16 பேர் என 70 பேர் கொண்ட குழு கிளம்பியது.
முதல் 16 பேர்  கொண்ட குழு காலை 9 மணி அளவில் அந்தமானை அடைந்து, அங்கு உள்ள இதயா என்ற விடுதியில் தங்கினோம். எதிரே கடல் தன் மெல்லிய அலைக் கரங்களால் வரவேற்றது. கடலை பார்த்த அறை வேண்டுமென்று கேட்டு அறைக்கு வந்தோம். சிறப்பான தங்கும் வசதி 50%நிறைவைத் தந்தது எனலாம்.உடைமைகளை வைத்துவிட்டு. சற்று ஓய்வு எடுத்து விட்டு இறங்கி, கடலை பார்க்கும் ஆவலில் நடந்தோம் .
எதிரே இருந்த கடையை ஒட்டி ஒரு சிறிய சந்துவழியில்  கடலுக்கு செல்லும் பாதை இருக்க, அதில் இறங்கி கடலை அடைந்தோம். அத்தனை தெளிவான நீரை ஹரித்துவரில்தான் நான் பார்த்திருக்கிறேன். கலர் கலரான கற்களை கடற்கரையில் தள்ளித் தள்ளி மகிழ்ந்து வரவேற்றது.
 தூய்மையான கடல் கண்கொள்ளாக் காட்சியாக, மனம் நிறைந்தது .
கீதாஞ்சலி ,சந்திரலேகா ,ஹேமாவதி ஆகிய மூன்று ஆங்கில ஆசிரியருடன் நானும் ஒரு மணி நேரம் அங்கு கழித்து, புகைப்படங்கள் எடுத்து, மீண்டும் அறைக்கு வந்தோம்.
 இரண்டாவது குழு வர தாமதமான நிலையில் , புகழ்பெற்ற செல்லுலார் சிறைச்சாலைக்குச் செல்ல முடிவெடுத்தோம்.குழுவை அந்தமானைச்சேர்ந்த  சகோதரர் ஆனந்த் வழிநடத்தினார். குளிர்சாதன வாகனத்தில் புகழ்பெற்ற காலாபாணித்துறை என்னும் செல்லுலார் சிறைச்சாலையின் வாயிலை அடைந்தோம்.உள்ளே நுழைய நுழைவுச்சீட்டு வாங்க வேண்டும். எங்கள் குழுவிற்கு விமானப்படையில் பணி செய்த அரிமா பத்மநாபன் அவர்கள் தலைமையேற்று அழைத்துச் சென்றார். பெரிய கோட்டை போன்ற வாயிலை அடைந்து, உள்நுழைந்து வலப்பக்கமும், இடப்பக்கமும் உள்ள புகைப்படங்களை பார்த்து , வரலாற்றில் நுழைந்தோம். அங்கே  அந்தமான் சிறையின் சிறிய மாடல் பார்த்தோம் .சைக்கிள் சக்கரத்தின் கம்பிகள் வடிவத்தில் சிறைச்சாலை அமைப்பு. நடுவே ஒரு வட்ட அறை மூன்றடுக்கு சிறைச்சாலையைக் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் காவலர்கள் இருந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்களாம். 3 அடுக்காக இருந்த அந்தச் சிறைச்சாலை எங்களை வரவேற்றது.
 அடுத்ததாக எங்களை வழிகாட்டி அழைத்துச் சென்ற இடம்தான் தூக்கு மேடை. ஒரே நேரத்தில் மூன்று பேரை தூக்கிலிடும் கயிறுகள் தொங்கிக் கொண்டிருந்தன.  அந்த கயிற்றின் நுனியில் ஒரு இரும்பு வளையம் இருந்தது. தூக்கிலிடும் போது சிலர் உயிர் விடாத நிலையில் ,அவர்களை மறுபடியும் தூக்கிலிட முடியாது என்பதற்காக அந்த இரும்பு கம்பி அவர்களின் குரல் நாணை, தொண்டையை அழுத்தி உயிரை எடுக்கும் என்று வழிகாட்டி கூறினார் ஒவ்வொரு கயிற்றுக்கு கீழும் வெண்ணிற வட்டங்கள் பலகையில் இருந்தன, கீழே 20 ஆடி ஆழத்தில் அவர்களை எடுக்கும் அறை உள்ளது. மனம் சொல்ல முடியாத உணர்வில் தள்ளாடியது. கண்கள் கலங்க அடுத்தது ஒரு நீண்ட ஓடுகள் வேய்ந்த ஒரு அறைக்குச் சென்றோம் அங்கு செக்கு ஒன்று இருந்தது .அது கைதிகள் இழுக்கும் செக்கு. அந்த செக்கை பார்த்து, மூன்று கைதிகளின் உருவ பொம்மைகள் அங்கு இருந்தன .அதில் ஒன்று கைதியின் இரு கைகளை கம்பியால் கட்டியிருந்தது. இன்னொன்று கைகளும் கால்களும் இணைத்து கட்டப்பட்டிருந்தது, அவர்கள் நேராக நடக்க முடியும் .மற்றொரு பொம்மையை உருவத்தில் கம்பிகள் கீழ கட்டப்பட்டிருந்தது அப்படி கட்டி இருக்கும் பொழுது அவர் நடப்பதே சிரமம். மேலும் கைதியை ஒரு பலகையில் சாய்வாக கட்டி இந்தியர் ஒருவர் சாட்டையால் அடிக்கும் பொம்மைகளும் இருந்தன. ஆங்கிலேயர் அடித்தால் அனைத்து இந்தியரும் உணர்வால் ஒன்று சேர்ந்து விடுவர் என்று இந்தியரை வைத்தே அடித்துள்ளனர். இது ஒரு உளவியல் தாக்கல் .இனி என்ன செய்வது என்ற மனநிலைக்கு கைதியை தள்ளும் சூழல். இப்படி அந்த பொம்மையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதத்தில் நம் குடும்பத்தில் ஒருவரை , தற்செயலாக அங்கு சந்தித்தால் எப்படி இருக்கும்! கடலில் மூழ்கியவனின் கரங்களைப் பிடித்து தூக்கி விடுவது போல, மன துயரச் சூழலில் இருந்த அந்த நிலையில், புதுக்கோட்டை சார்ந்த தமிழ் செம்மல் கவிஞர் தங்க மூர்த்தி அவர்களை அங்கு கண்டபோது மகிழ்விலும் வியப்பிலும் மூழ்கினோம். என்ன இங்க என்று கேட்டபடி அவர் வந்தார் .உங்களை இங்கு பார்ப்போம் என்று நினைக்கவில்லை சார் என்று அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம் .சற்று மனம் தைரியம் அடைந்தது என்று சொல்லலாம். நீங்கள் பாருங்கள் என்று அவர் செல்ல, நாங்கள் சிறைச்சாலையில் பக்கம் நகர்ந்தோம். மெதுவாக சிறைச்சாலையை அடைந்தபோது கதவுகள் எல்லாம் ஒரு அடியில் ஐந்து கம்பிகளை கொண்டு கனமான கதவால் மூடப்பட்டு இருந்தது. அதன் பூட்டு சுவரில் நுழைந்து வெளியே வந்த தாழ்ப்பாழில் பூட்டும்படியான அமைப்புடன் கதவுகள் திறந்து இருக்க, உள்ளே நுழைந்து அந்த அறையை சுற்றி பார்த்த பொழுது, எத்தனை ஆயிரக்கணக்கான இந்தியர்களை அந்த அறை சந்தித்திருக்கும், அவர்களது உணர்வுகளை, வருத்தங்களை வேதனைகளை அடைந்திருக்கும் என்று மனம் மீண்டும் வலியில் மூழ்கியது. அந்த அறை பேசிய சொற்கள், அந்த அறைக்குள் முழங்கிய முனகல்கள், இந்தியரின் உணர்வுகளை உணர முடிந்தது. கண்கள் கசிய மற்ற அறைகளையும் சுற்றி பார்த்து வந்தோம். வழிகாட்டி வீர் சாவர்க்கர் கைதியாக இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். இத்தனை கைதிகள் உயிரை விட்டிருக்க, ஆங்கிலேயரிடம் கடிதத்தில் மன்னிப்பு கேட்ட வீர் சாவர்க்காருக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் என்று கேட்டேன் பதில் மௌனம் தான். வீர் சாவர்க்கர் இருந்த அறைக்கு தனியாக ஒரு காவலர் ,உள்ளே அவரது புகைப்படம் என காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அந்தமான் விமான நிலையத்திலேயே வீர் சாவர்க்கர் விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. என்ன சொல்வது ஒரு வழியாக சிறைச்சாலையை சுற்றிப் பார்த்து வெளியே வந்து அருகில் இருந்த கடற்கரையை அடைந்தோம். இரண்டாவது குழுவினர் வந்துவிட்டதை அறிந்து மீண்டும் அங்கிருந்து செல்லுலார் சிறைச்சாலையின் ஒலிஒளிக் காட்சி நிகழ்வைக் கண்டோம்.இதற்கு தனியாக கட்டணம் கட்டி பார்க்க வேண்டும்.வீரச்சுதந்திரத்தின் குருதி நிறைந்த காட்சிகளைக் கண்ட போது மனம் கொதித்தது.அதிலும் வீர் சாவர்க்கருக்கே முக்கியத்துவம்.பிறகு மிகப்பெரிய தேசியக்கொடி இருந்த பூங்காவிற்கு சென்று மீண்டும் அறையை அடைந்தோம் அந்தமானின் முதல் நாள் நிறைவடைந்தது.