World Tamil Blog Aggregator Thendral: விடியல்

Sunday 11 June 2023

விடியல்

திடீரென தொலைக்காட்சியில் விளம்பரங்களிலும் ஆண்களே எண்ணெய், நெய்,காப்பி விளம்பரத்திற்கு சமைத்து தருவதாக எடுக்கப்பட்டு அட்டகாசமாக இருந்தது.
ஒரு பெண் உலகின் நவீன காரை வேகமாக ஓட்டி வர, பின்னால் பைக்கில் ஓடி வரும் இளைஞர்கள்,.
அவள் உடனே ஒரு செண்டை எடுத்து ஆடையில் ஸ்பிரே செய்ய ஆதிவாசி ஆண்கள் முதல் விண்வெளிக்கு சென்று கொண்டிருக்கும் ஆண்கள் வரை பணியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு ஓடிவந்து அவளுக்காக ஜொல்லுவிட அவளோ அவர்களை அலட்சியமாகப் புறந்தள்ளி பறக்கிறாள்.
என்ன ஒரு கொடுமை திரும்பி நின்னு ஒரு பறக்கும் முத்தமாவது தந்து இருக்கலாம்.
அட அடுத்த விளம்பரத்தில் குழந்தைகளை அப்பாக்களே குளிப்பாட்டி ,உணவூட்டி பள்ளிக்கு அனுப்ப அம்மா வரும் வழியில் குழந்தையை பிக்கப் செய்து,கடைக்கு அழைத்துச் சென்று கேட்டதை வாங்கித் தந்து வீட்டுக்கு வந்தால் அப்பா சுடச்சுட பஜ்ஜியோடு மணக்க மணக்க வரவேற்கிறார்கள்..
என்ன ஒரு புடவை விளம்பரம், மேக்கப் விளம்பரம், நகை விளம்பரத்தைப் காணோமே என்று திகைக்க, அந்த நாட்டின் பெண் பிரதமரும், பெண் முதலமைச்சரும் இணைந்து இனி பெண்கள் மேக்கப் இன்றி நகையும் புடவையும் அணியாமல் கோட் போட்டு டை கட்டி தான் பணிக்கு வர வேண்டும் என்ற சட்டத்தை இயற்றி விட்டனராம்.
 என் கண்கள் நம்பாமல் வியப்பில் விரிந்தது.
போதாதென்று மண்டபங்களில் பதாகை ஆண்கள் வயதுக்கு வந்ததை கொண்டாடும் பூப்பு நன்னீராட்டு விழா.ஒரு தாத்தா எங்க காலத்துல இதெல்லாம் இல்லையேன்னு புலம்பிக் கொண்டிருக்க, பெண்கள் தாங்கள் வயதுக்கு வந்ததை பொருட்டாக எண்ணாமல் வேலைக்கு கிளம்பிக் கொண்டு இதெல்லாம் தேவையில்லாத செல்வுன்னு அலட்சியம் செய்தார்கள்.
பெரிய தொழிலதிபர்களாக, அரசியல்வாதிகளாக பெண்கள் எங்கும் திகழ,எங்கடா இந்த நடிகர்கள் பின்னாடி ஓடின இளைஞர்களைத் தேட ,அவர்களோ போதைக்கு அடிமையாகி வட நாட்டில்,அயல்நாட்டில் கூலிக்கு வேலை செய்து கொண்டு இருந்தனர்.
சாதி சாதின்னு அலைந்த கூட்டமோ பொத்திக்கொண்டு இருந்தது.
ஏன்னா எங்களுக்கில்லாத சாதி உங்களுக்கு மட்டும் எதுக்குன்னு நாட்டிலேயே சாதி இல்லயாம்.
ஆண்களை கிண்டல் செய்தாலோ,காதலிக்கவில்லையெனில் ஆசிட் ஊத்தினாலோ, பலவந்தப்படுத்திக் கொடுமை படுத்தினாலோ கடுமையான சட்டங்கள் பாய்ந்தன.
தெருக்களில் இரவில் நடக்க ஆண்கள் அஞ்சி 6 மணிக்கு மேல் வீட்டுக்குள் அடைந்தனர்.
அப்பா அம்மாவிடம் சொல்லாமல் எந்த ஆணும் அடி எடுத்து வைக்கக்கூடாது.
பெண்களால் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தை ஆண்களுக்கு திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் ஊட்டிக்கொண்டே இருந்தன.

தாத்தாக்களின் வலிமையான ஜீன்கள் அவர்களின் போதைப்பழக்கத்தால் அழிந்து பேரன்கள் நோயாளிகளாகப் பிறந்தனர்.

தெருக்களில்,டீக்கடைகளில் எங்கும் பெண்கள் அதிகாலையில் கிளம்பி அரசியல் பேச, அதிகாலையில் கோலமிட்டு ,சமைத்துக் கொண்டிருந்த அப்பாக்கள் புலம்பிக் கொண்டே குழந்தைகளைப் பள்ளிக்கு கிளப்ப, எந்த வித மன உளைச்சலுமின்றி பேப்பர் படித்துக் கொண்டிருந்த பெண்கள் குளித்து விட்டு வந்து சாப்பாட்டில் உப்பில்லை காரமில்லை என்று தட்டைத் தூக்கி எறிந்து விட்டு ஹோட்டலுக்குச் சென்றனர்.

இது எந்த நாடு என்ற குழப்பத்தில் எதுவும் புரியாமல் நான் திகைக்க, கனவைக் கலைத்து கதிரவன் வர, இன்னும் விடியவே இல்லை .
மு.கீதா
புதுக்கோட்டை

No comments :

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...