World Tamil Blog Aggregator Thendral

Thursday, 23 July 2026

மாமன்னர் கல்லூரி

"தமிழ் நாட்டின் சிற்பி காமராசர் " 
என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நேற்று பேச வாய்ப்பு கிடைத்தது.
மதிப்பிற்குரிய முதல்வர் முனைவர் சேதுராமன், முனைவர் கணேசன் முனைவர் ஆதவன் பேராசிரியர் பாலமுருகன் முனைவர் இரவிச்சந்திரன் ஆகியோர் நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தினர்.

முதலாண்டு அறிவியல் கணினிப்பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

எனது உரையில் உங்களில் எத்தனை மாணவர்களின் தாத்தா பாட்டி படித்துள்ளனர் என்று கேட்டேன் ஒருவரும் கை தூக்கவில்லை . உங்கள் பெற்றோரில் எத்தனை பேர் கல்லூரியில் படித்து உள்ளனர் என்று கேட்டேன்.ஏழு பேர் மட்டுமே கை உயர்த்தினார்கள்.சங்க காலத்தில் அத்தனை பேர் பாட்டு எழுதும் அறிவு பெற்றிருக்க இரண்டாயிரம் ஆண்டுகளாக நம் தாத்தா பாட்டிகள் படிக்காததன் காரணம் என்ன என்று யோசியுங்கள்.

Zee tamil தொலைக்காட்சியில் சுமன் என்ற மாணவன் தனக்கு கிடைத்த எதுவும் என் தந்தைக்கு கிடைக்கவில்லை .பண்டிகை நாளன்று நிம்மதியாக வயிறு நிறைய சோறு சாப்பிட்டதில்லை என்று கூறி தனது தாத்தாவையும் தந்தையையும் மேடைக்கு அழைத்தார்.

கை கட்டிக்கொண்டுகூனிக்குறுகி நின்ற  தாத்தாவிடம் இனி யார் முன்னாலும் கை காட்டாதீர்கள் என்று கையை விலக்கி விட்டார்.தாத்தா கண்கலங்க தமுக்கடித்து வாழ்ந்தவன் நான் என் பிள்ளையை கல்லூரியில் சேர்க்க காசில்லாமல் அத்தனை கஷ்டப்பட்டேன்.ஆனால் இன்று என் பேரன் கொண்டு தாத்தா என்ற எனது பெயரை பாடகரின் தாத்தா என் மாற்றி விட்டேன் என கண்கலங்கி கூறினார்...

ஏன் அவர்கள் இப்படி கூனிக்குறுகி வாழ வேண்டும்...

இவர்களின் மேன்மைக்காக பாடுபட்ட எளிய மனிதர் கர்ம வீரர் காமராஜர்..

தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆனதும் உடனே கல்வியில் முன்னேற பள்ளிகளைக் திறந்து கல்லூரி மருத்துவக்கல்லூரி தொழிற்கல்லூரி என ஒருபக்கமும் மறுபக்கம் அவர்கள் வெளியே வந்தால் வேலை கொடுக்க மத்திய மாநில உதவியுடன் மாவட்டந்தோறும் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள்,தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் கிடைக்க நீர் மின் நிலையம், அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையம் என மின்துறை வளர்ச்சி மேலும் நீர்ப்பாசனத்திற்காக ஒவ்வொரு நதி தோறும் கட்டப்பட்ட அணைகள் வியக்க வைக்கும் அரசியல் அறிவு...

என் மாமனிதர் காமராஜர் பற்றி உரையாற்றினேன். 

காமராஜரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள நல்வாய்ப்பு.

மன நிறைவான நாளாக 22.7.26 அமைந்தது.

Wednesday, 18 March 2026

பெயர்

தமிழில் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட தேவையான இணையத்தளம்.

தற்போது பள்ளிகளில் 1000 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் 10% மாணவர்கள் பெயர் மட்டுமே தமிழில் உள்ளது.

ஸ்ரீ ஜ ஷா ஸ ஹ க்ஷ இல்லாத பெயர்களே இல்லை எனும் அளவிற்கு புரியாத பெயர்களில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது இக்காலத்தில் நடைமுறை வழக்கமாக உள்ளது.

உனது பெயரின் பொருள் என்ன என்று கேட்டால் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியாத நிலை.

தமிழரின் பண்பாட்டில் பெயர்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன.அவர்கள் எங்கு சென்றாலும் தனது ஊர் பெயர்களையே சுமந்து செல்லும் வழக்கம் என்பது ஆய்வின் முடிவு.

படித்த பெற்றோர்கள் அதிலும் 90%ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்ப்பெயர்களின் அருமை தெரிவதில்லை.

உங்கள் குழந்தைக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்டி இதோ தமிழ் நாடு அரசு வழிசெய்துள்ளது.

பகிர்வு
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதற்கான பெயர்கள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்கள் - தமிழக அரசின் அசத்தல் முயற்சி

குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வசதியாக தமிழ்நாடு அரசின் சார்பாக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

முதலமைச்சரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேசமயம் தமிழ் மொழியின் பெருமையை உலகறியும் வண்ணம் பல வகைகளில் திட்டங்களை வகுத்து வருகிறது. இப்படியான நிலையில் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி திமுக பிரமுகர் மயிலை வேலு இல்ல திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அவரின் பேச்சை சுட்டிக்காட்டி நிதின் சிற்றரசு என்ற இணைய பயனாளர் ஒருவர், "குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க நினைத்தாலும், குழந்தை பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்துகொள்ள சரியான சமூக வலைதளங்கள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வலைத்தளம் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் தலைவரே!” என தெரிவித்திருந்தார்.

அவரது ட்வீட்டை மேற்கோள் காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், “குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் - அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்!” என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் பெயர்களுக்கு பிரத்யேக இணையதளம்
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின்படி, குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை தேர்வு செய்யும் வகையில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், “அன்புக் குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்கள் மற்றும் அவற்றின் பொருள் அடங்கிய பிரத்யேக இணையப் பக்கத்தைத் தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கியுள்ளது. நமது மழலைச் செல்வங்களுக்குச் சூட்டி மகிழ, தனித்துவமான தமிழ்ப் பெயர்களைத் தேடுபவர்கள் https://tamildigitallibrary.in/tamilnames இந்தத் தளத்தைப் பயன்படுத்தி பயன்பெறுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைத்தளத்தில் ஆண், பெண் ஆகிய பாலினம் அடிப்படையிலும், அகர வரிசையில் இரண்டு பாலினமும் இணைந்த பெயர்களும் அதன் அர்த்தங்களுடன் இடம் பெற்றுள்ளது. இந்த இணைய தளத்தை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

மேலும் 2 வலைத்தளங்கள்
அதோடு மட்டுமல்லாமல் அதிக எண்ணிக்கையிலான தமிழறிஞர்கள், எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நூல்களைப் பெருமளவில் வாசகர்களிடம் கொண்டுசேர்க்க தமிழ் வளர்ச்சித் துறை நிதிநல்கையுடன் 'நாட்டுடைமை நூல்கள்' சிறப்பு இணையப் பக்கம் (https://tamildigitallibrary.in/nationalisedbooks) உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு பண்பாட்டு மின் நிலவரை ஏடு (https://tamilculturalatlas.in) திட்டத்தில், முதல் கட்டமாக மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள கோவில்கள், தொல்லியல் தளங்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், கைவினைக் கலைகள் முதலியவற்றின் விவரங்கள், புகைப்படங்கள், காணொலிகள் ஆகியவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கும் பண்பாட்டு ஆர்வலர்களுக்கும் பயன்படும் வகையில் இத்தளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, 29 December 2025

கோடாங்கி

குறி சொல்லும் கோடாங்கி 
குமறி வரும் பசியைக்
குளிர்ந்த நீர்குடித்து
நடுசியில் வந்து குடுகுடுவென்க .
பல்லாண்டுகளாக மாற்றாத
செந்துணியோடு வந்து
குறி சொல்லும் ஓசை
ஓங்கி பின் மெலிந்தது.
காலையில் வந்து 
நல்லகாலம் பிறந்துடுச்சு 
வீட்டில் பெண் தெய்வம் 
நல்லது பண்ணுமென்றவனுக்கு 
செந்துணி புதுசா வாங்கிக்கன்னு 
பணத்தைக் கொடுத்தவளை 
வயிற்றில் கைவைத்து 
வணங்கியவனை 
உணவுவிடுதியில் கண்டால் 
நல்லகாலம் பிறக்கட்டுமென
வாழ்த்திடுங்கள்.

Thursday, 18 December 2025

வாழ்க்கை

யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத
சருகைப்போல வாழ்தலரிது.
துளிர்களின் மீதான
எந்தவிதப் புகாருமற்ற வாழ்வது.
நிலம் புணர்தலைத் தவமாக
வீழ்தலில் உணரும் சருகு
மிதந்து மிதந்து வாழ்வினை
அசைப்போட்டு மெல்ல தவழ்ந்து 
நிலமுடன் கரையுமது.
 உதிரவாடையுடன்
புவியைத் தரிசிக்கும் சிசுவென.

Thursday, 4 December 2025

காட்டிற்கு திரும்பிய ருகன்

காட்டிற்கு திரும்பிய ருகன்..

"ஏய் தள்ளு நாங்க தீபஜோதிய பத்தியே தீருவோம் இல்லன்னா இந்த நாடே பத்தி எரியும் நாங்க யாருன்னு தெரியுமான்னு" ஓரே சத்தம்.

வள்.....யோடு வேட்டைக்கு போயிருந்த ருகன் மருப்பரங்குன்றத்தில் கூச்சலும் கலகமும் செய்பவர்களைக் கண்டு திகைத்தான்.
வேகமாக ஓடி வந்தான்.
 என்ன கூட்டம் அங்கே? என்று கூட்டத்திற்கு நடுவே எட்டி எட்டிப் பார்த்தான் .
எதற்காக இந்த கலவரம் என்று தெரியாமல் புரியாமல் சுற்றும் முற்றும் நோக்கினான்.
 அவன்தான் ருகன் என்று அறியாத கலகக்காரர்கள் அவனை" பின்னாடி தள்ளி தள்ளிப் போ! நாங்க .போட்டோல தெரியனும் போபோ "என்றார்கள் 

ருகன்"என்னப்பா இப்படி விரட்டுற எதுக்கு இங்க கூட்டமா நிக்குறீங்க?சொல்லு முதல்ல"
".அதெல்லாம் சொல்ல முடியாது போபோ "என விரட்டினர்.

வேட்டையில் சிக்கிய மானை அனாயசமாக கழுத்தில் சுமந்து தூக்கிக் கொண்டு வந்த  வள்...க்கோ எதுவும் புரியவில்லை? என்ன நடக்குது இங்கே? "என்ன ருகா என்ன நடக்கிறது?" என்று அவள் கேட்க,
வள்...ளி எனக்கும் தெரியல இது ஏதோ கலகக்காரர்கள் போல இருக்குது . எப்பவும் வருகிற பக்தர்கள் போல இல்லை.
"எதற்காக கலகம் பண்றாங்கன்னே தெரியல? நாம ஆயிரக்கணக்கான வருஷங்களாக இங்கே இந்த மலைமேல இருக்குறோம். ஆனா இதுவரைக்கும் இப்படி ஒரு கலகம் நடந்தது இல்லையே"  வள். ...ளி
 "ஆமா ருகா". ஆனா சில மாதங்களுக்கு முன்னாடி எதற்கோ புதிதாக சிலர் வந்து  போராட்டம் செய்தாங்கன்னு  "கேள்விப்பட்டேன் என்றாள்.
  "இரு நான் தெளிவாக கேட்டு வருகிறேன்"
 என்று ருகன் அருகில் நின்று கத்திக் கொண்டிருந்த  மஞ்சள் கலர் துண்டுடன்  நெற்றியில் பட்டையும் குங்குமமும் வைத்திருந்த ஒருவரின் தோள் மீது கையை வைத்தான் .
அவர் திரும்பி "என்ன? என்றார்
 "எதற்காக இங்கே கலவரம் நடக்கிறது .தெரிந்து கொள்ள விழைகிறேன் "என்றான்.
 "உனக்கும்  தெரியலயா உண்மையில் எனக்கும் தெரியவில்லை அட போயா 
இங்க வந்து ஜெ... ஸ்ரீ ..ரா...ஜெ..ஸ்ரீ ரா.. என்று கத்துன்னா  ₹500 கொடுக்கிறேன்னாங்க.
 ஒரு பிரியாணி பொட்டலமும் தருவாங்களாம் .உனக்கும் வேணா நீயும் கத்து "என்க. 
ருகன் "ஆமா  நீங்க எந்தூரு?" என கேட்க
நாங்க தென்காசி அதோ அவங்கல்லாம் கோயம்புத்தூர்ல இருந்து வந்திருக்கோம்னு கூறினார்.
 ருகன்,வள்...ளியிடம் வந்து "கலகக்கார ஆளுக்கே தெரியவில்லை வள்..ளி.
 என்ன செய்யறது இப்ப நாம மலைக்கு மேலே போகணுமே நாம எப்படி போறது?."
 "இருங்க நான் போய் கேட்டுட்டு வரேன்னு" வள்..ளி வந்தாள். பெண்ணை பார்த்ததும் பல்லிளித்துக் கொண்டு ஒரு மஞ்சள் துண்டுகாரன் என்ன வேண்டும்மா?என்றான் 
"எதுக்கு இங்க கும்பலா நிக்குறீங்கன்னு கேட்டாள்.
நாங்க கார்த்திகை தீப ஜோதி ஏத்த வந்திருக்கோம்.
உனக்கு தெரியாதா போலீஸ்காரங்க விடமாட்டேங்குறாங்க "
"அப்படியா இத்தனை ஆண்டா நீங்க வரலயே இப்ப மட்டும் என்ன திடீர்னு தீபஜோதி?"
".அட ஏம்மா நீ வேற.வ...னுங்க இங்கு வந்து கலகத்த உண்டாக்க திட்டம் போட்டு தான் இதை செய்றாங்க."
"நீங்க தமிழர் தானே இப்படி செய்யலாமா இது ருகனுக்கு பிடிக்குமான்னு" வள்..ளி கேட்டாள்.

 "என்ன பண்றது  பணம் படுத்துற பாடு.உனக்கு ஒரு விசயம் சொல்றேன் இது பணத்துக்காக கூடும் கூட்டம்.நாளைக்கே கலைஞ்சிடும்னு "சொன்னார்.
வள்..ளி ருகனிடம் வந்தாள் "என்ன உனக்காவது புரிந்ததா" என ருகன் பார்க்க.
"புரிந்தது புரிந்தது" எங்கிங்கிருந்தோ வந்திருக்காங்களாம்மா.
 அவங்க உம் பேர சொல்லி இங்க ஒரு குழப்பம் பண்ண போறாங்க போல இருக்கு". எல்லாம் உம்பேர வச்சிகிட்டு இருக்குற ஒரு ஆளு, 6 மணி 6 .05 ன்னு தூண்டி உடுறாரு"
 "எதற்கும் ஜாக்கிரதையாக இருந்துக்கோ ருகா.
 உனக்கு நீ போட்டிருக்க பட்டையை நாமம்மா போடறதுக்கு முன்னாடி நீ கொஞ்சம் கவனமா இரு "என்றாள் வள்..ளி.

" சரிசரி வள்..ளி நாம இப்போதைக்கு காட்டுக்கே போயிடலாம் காலைல வருவோம்னு  வா "என்று வள்..ளியை அழைத்துக் கொண்டு ருகன் காட்டிருக்கே திரும்பி விட்டான்.

தேவதா தமிழ் கீதா

Wednesday, 19 November 2025

நின்று கழிக்கும் வெய்யில் கவிதை நூல் விமர்சனம்

 

  நின்று கழிக்கும் வெய்யில் – கவிஞர் ரேவதி ராமின் நூல் விமர்சனம்.

வேரல் பதிப்பகம் கவிதைப்போட்டிக்கு தேர்வான  நூல்

விலை ரூ 140

 

சிறந்த அட்டைப்படமும் வடிவமைப்பும் மனதைக் கவர்வதாக அமைந்துள்ளன வேரல் பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்.

 

மழை எல்லோருக்கும் பிடிக்கும் என்றாலும் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாகப் பெய்தால் போதும் என்றே தோன்றும், எப்படா வெய்யில் வருமென தான் கூறுவோம். வெய்யில் எல்லோரும் விரும்புவது .

சிறு வயதில் கோடை விடுமுறைகளில் ஆண் பெண் வித்தியாசமின்றி அனைத்து விளையாட்டுகளையும் விளையாடுவதுண்டு. நல்ல கோடைமாதமொன்றில் தான்  வாடகை மிதிவண்டிக்காக காத்திருந்து கற்றுக்கொண்டதையும், ஸ்கூட்டர் கற்றுக் கொண்டதையும் இந்த நூல் நினைவூட்டுகிறது.

மே மாத விடுமுறை எனக்கு மிகவும் பிடித்தமானது. ஒன்று பள்ளிக்குச் செல்ல வேண்டியக் கட்டாயமில்லை. இரண்டாவதாக மாமா வீடு ,அத்தை வீடு, பாட்டி வீடு , பெரியம்மாவீடு,சித்தி வீடு என  நாட்களை எண்ணி வைத்துக்கொண்டு ஊர் ஊராக   நானும் தம்பியும் கிளம்பி விடுவோம் …

பால்யவயதின் மகிழ்வை,ஏக்கங்களை அப்படியே கவிதைகளாக வடித்து வெய்யிலில் சுட்டு நமக்கு மீண்டும் பரிமாறியிருக்கிறார் கவிஞர்.

வெய்யிலொன்றே மையமாகக் கொண்டு தமிழுலகில் எழுதப்பட்ட முதல் நூலாக  கவிஞர்களால் போற்றப்படும் நூலிது.

சூரியன்,வெக்கை,கள்ளிச்செடி,வெய்யில்,பாலை,கொற்றவை,பிள்ளையின் வயிற்றுப்பசி,வியர்வை,உஷ்ணம்,புழுக்கம்,வெப்பக்காற்று,வற்றல்,

வடகம்,கோடை,வேப்பம்பூ, நுங்கு,திருவிழா,கானல் நீர்,செம்பந்து,தாகம், என வெய்யிலின் பிரதிகளால் கவிதைகளை பாலை நிலமென நூலில் காய வைக்கிறார். ஒவ்வொன்றும் மனதில் குடியேறி நம்மை வெய்யிலின் மீது காதல் கொள்ள வைக்கின்றன.

அன்பு ,காதல் , நெருக்கம், கோபம்,வலி என உணர்வுகளைக் கலந்து எடுத்து அறுசுவை விருந்தெனப் பரிமாறியுள்ளார்.

தன்னைச் சமைத்த கவிஞரை வாழ்த்த சூரியன் பக்கத்தில் வந்து சிறு பிள்ளையென மகிழ்ந்து கொஞ்சி மகிழ்கிறது.

சூரியனை அறைந்திடும் செங்கல் சூளை பெண், சூரியனை இட்டிலியாகச் சுடும் பெண், மகன் தரும் வெய்யிலை கவிதைக்குள் பத்திரப்படுத்தும் அம்மா, தலை சிலுப்பும் பிடாரி , கொற்றவை என பல கவிதைகள் பெண்ணாக ,சுடராக, வெக்கையாக வியர்வையாக உருக்கொள்வது கற்பனையின் உச்சம்.

           ‘ எதுவாக வேண்டுமானாலும்

            இருக்கட்டும்

            கொளுத்தும் பாலையில்

            வெய்யில் காய

            கொற்றவையால் மட்டுமே முடியும்

           ஏனெனில்

           அவள்

           பெண்’

இக்கவிதையில் வரும் ’ஏனெனில்’ பெண்ணின் வலிமையை தன்னம்பிக்கையைக் காட்டுவதாக இருக்கையில்,

              ’ஏனெனில் ‘  என்ற கவிதையில் இருக்கின்ற வசவுச்சொற்களெல்லாம் பெண்ணைக்குறித்தே சாடுகையில் வனையப்போகும் ஆணெனும் பாத்திரத்தை எந்தப் பழிவாங்கலும் இல்லாமல் அமைதியாக இருந்தன எல்லாம் என பெண்ணின் தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

 

பல கவிதைகள் நம்மை பனங் குருத்தை வைத்து வண்டி ஓட்ட வைக்கின்றன, சக்கரத்தின் மிதிபடும் வெய்யில் நம் மனதையும் அள்ளிக்கொள்கின்றது

வெக்கையில் மலர்ந்திடும் நேசமும் காதலும் பாலை நிலத்தின் ஈர மனதைக் காட்டுகின்றன.

பல கவிதைகளில் கவிஞரின் தன்னம்பிக்கை, கோபம், காதல் , நேசத்தை உணர்த்துகின்றன. அப்பாவைக் காப்பாற்றத்தவிக்கும் மகளாய நம்மையும் தவிக்க வைக்கும் கவிதை மனதை விட்டு நீங்காமல் உறைந்து விட்டது.

சங்க இலக்கிய பாடல்களின் சாயல் பல கவிதைகளில் காண முடிகின்றது.

நோ நெஞ்சே என்ற கவிதையில்

          ’கொஞ்சிப் பேசிக்

          கரை கடந்தவனின்

          நினைவுகளில்

          கள்ளிச்செடியைக்

           கூர்முள்ளால் கீறுகிறாள்

       சங்கக் காதலி

       கள்ளிப்பாலின் வாடையில்

        மிதந்து கொண்டிருக்கிறது

        ஆண்டாண்டு காலக்

        காதல்’

பிரிவின் துயரம்  மேலிடுவதை உணர முடிகின்றது.

பல விருதுகளைப் பெற்றுள்ள கவிஞருக்கு மென்மேலும் விருதுகள் கிடைக்க, குருவி குடிக்க நீரற்ற குளத்தின் தாகத்தோடு மனம் நிறைந்த வாழ்த்துகளை வேப்பம்பூவின் வாசனையுடன் தூவுகின்றேன்.

அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்களில் இது முக்கியமான நூலாகும்.

மு.கீதா புதுக்கோட்டை



Monday, 17 November 2025

போக்சோ

இந்தியப் பெண்கள் வரலாறு
பாடம் நடத்துகிறேன்.
குழந்தை மணம் 
கைம்பெண் கொடுமை
உடன்கட்டை ஏறுதல் மறுத்தவர்களை ஏற்றுதல் 
முலைவரி மறுத்தல் 
தோள்சீலைப் போராட்டம் என
 கொதிக்கும் ரத்த வரலாற்றில்
எனை மூழ்கடித்த பொழுது 
வேகமாய் புத்தகத்தில் கிறுக்குகிறாள் 
போக்சோவில் தந்தைக்கு 
தண்டனை கொடுக்காத 
சமூகத்தின் முகத்தில் 
கிறுக்குவதாக..

இனி

கருப்பைகளும் யோனிகளும் 
போராட்டம் செய்தன.
கூட்டம் கூடக்கூட
பதறிப்போன ஆட்சியர் 
நேரில் வந்து குறைகேட்டார்.

எங்களையே குறிவைத்து
தாக்கும் ஆணினத்திற்கு
தக்க தண்டனை தராத
உங்கள் ஆட்சியில்
இனி ஆண் குழந்தைகளே
பிறக்காது போகட்டுமென 
சபித்து கொதித்தன .

ஹிஹி ஆணில்லையெனில் 
உங்களுக்கு என்ன வேலையென
கேட்ட குறிகளுக்குமுன் 
சட்டென்று உருமாறின 
கடலுக்குள்
ஆதியில் தோன்றிய 
அமீபாவாய் 
தன்னுடல் அறுத்தினிதே
இனப்பெருக்கம் செய்ய...