World Tamil Blog Aggregator Thendral: August 2014

Sunday 31 August 2014

இரோம் ஷர்மிளா

நான் நேசிக்கும்போராளி தேவதை



இக்காலப் பெண்களின் ரோல் மாடல்

இரோம் ஷர்மிளா

அவரின் கவிதை -புதியதலைமுறை பத்திரிக்கையிலிருந்து

“இன்னும் என்னை மரணம் விரும்பாததால்
நான் பிறந்த மண் கங்க்லாய்
சிவந்த மையினால் எழுதப்பட்ட புதிய வரலாற்றுப் பக்கமாய்
என் கண்களுக்குள் விரிகிறது
அமைதியின் நறுமணமாய்
கங்க்லாயிலிருந்து
பிரபஞ்சமெங்கும் நான் பரவுவே
வரப்போகும் நூற்றாண்டுகளுக்கும்”

இறையாண்மை என்ற பெயரால் மணிப்பூர் மக்களை வகை தொகையில்லாமல் ராணுவம் மூலம் வேடையாடும் இந்திய அரசாங்கத்தின் ARMED FORCES SPECIAL POWER ACT என்ற கொடியச் சட்டத்தை எதிர்த்து வாய்வழி உண்வோ நீரோ அருந்தாமல் உண்ணா நோன்பு மேற்கொண்டுவரும் இந்தப் போராளி தேவதை”

“காதல் தன் போராட்டக்குணத்திற்கு வலு சேர்க்கிறதே தவிர சோடை வைக்கவில்லை என நம்பிக்கையைத் தெரிவிக்கும் பெண்.....

இவளிடம் வாழ்கிறது மனிதம்...

மீண்டும் தொன்மைக்கு...

மீண்டும் தொன்மைக்கு...

தங்கையின் 14வயது பெண்ணுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது  என அதிர்ச்சியுடன் புலம்பினார்கள்...எதிர் வீட்டு பெண்மணி..

எனக்கு அதிர்ச்சியாயில்லை...7ஆவது 8ஆவது படிக்கும் குழந்தைகளே இப்போதெல்லாம் காதலில்......

திரைப்படங்களின் உபயம்...காதலைத்தவிர எல்லாம் அலட்சியமாய் போயிற்று.....கண்டிக்கும் பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்கள் பார்வையில் கொடுமைக்காரர்களாய் மாற்றியப் பெருமையும் திரைப்படங்களுக்கே .....

விளைவு சிறுவயது திருமணம் மீண்டும்...நிறைய குழந்தைகள் தடுமாறி தடம் மாறுவதைத் தடுக்கிறோம் என்று பெற்றோர்களே இப்போது  திருமணம்  செய்யத் துவங்குகிறார்கள்..

வாழ்வின் குறிக்கோளே காதல் தான் என்ற நஞ்சை சமூகம் பதித்துள்ளதன் விளைவாய்....தகுதியற்றவனா இல்லயா என்று உணர முடியாத வயதில் காதலில் வீழ்ந்து மீள முடியாமல் தவிக்கும் குழந்தைகள்...ஆண்களும் பெண்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றார்கள்....

மாற்றத்தை விரும்புகின்றவர்களும் பேச்சில் மட்டுமே..உள்ள நிலையில் மீண்டும் குழந்தைத்திருமணங்கள் தொடரும் நிலை....

Saturday 30 August 2014

நினைவுகள்



மகிழ்வோ, சோகமோ
அசைபோடுவது இதமே....

தாயின் மடியில் புதைந்த
கணமாய்....

பிரிதல்

அத்தனை எளிதாயில்லை
வழியனுப்ப மறுக்கும்
பிஞ்சுக்கண்களை விட்டுப்
பிரிவது.....!

பார்வை

தருமர் பார்வை மறுத்து
துரியோதனப் பார்வையே
எங்கும்....எப்போதும்!

Friday 29 August 2014

செப்டம்பர் -7






செப்டம்பர் -7

புதுகை- நகர்மன்றத்தில்..

அனைவருக்கும் விருந்து படைக்க காத்திருக்கின்றோம்....ஒன்றல்ல ,இரண்டல்ல ,மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழா...

கவிஞரும் ,எழுத்தாளரும்,நல்லாசிரியரும்,பட்டிமன்ற பேச்சாளரும்,எங்களின் வழிகாட்டியுமான அய்யா   முத்துநிலவன் அவர்களின் மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன...

சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கமாகக் கொண்ட நூல்கள்...

அன்பான வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்...நாங்களும்,உங்களின் பார்வையின் வருடலுக்காய் நூல்களும்.....

உரிமை

என்னை உரிமையாக்கும்
போட்டியில் வெற்றிப்பரிசாய்
எனக்கே நான் ......!

Monday 25 August 2014

மரம்2

கண்டிக்கும் தந்தையை
முறைக்கும் மகனென
அசையாதுமுறைக்கின்றது
கிளை கழித்த
மரம் .....

Sunday 24 August 2014

அஹிம்சை



                                          அஹிம்சையாய் வாழ்வது அத்தனை எளிதாயில்லை. பல உயிர்களைக் கொன்றே தினமும் வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது.கரப்பான் பூச்சிகள்,எறும்புகள்,கொசுக்கள் என நம்மால் அழிக்கப்படும் உயிர்கள் கணக்கிலடங்காதவை....

கொல்லாமையை வலியுறுத்திய சமணர்களை நினைத்துப் பார்க்கின்றேன்...தலையில் கத்தி வைத்தால் உயிர்கள் துன்புறும் என்பதால் கைகளால் முடிகளைக பிடுங்குவார்களாம்...!


சாலையில் நடக்கையில் விசிறிக்கொண்டு நடப்பார்களாம்..எந்த பூச்சியும் காலால் நசுங்கி இறந்து விடக்கூடாதென்பதற்காக...ஏயப்பா!

எத்தகைய கட்டுப்பாடான வாழ்க்கை..அப்பப்பா நினைக்கவே முடியவில்லை..ஆனால் வாழ்ந்து காட்டியிருக்கின்றனர்.சித்தன்னவாசல் கூறும் சமணர்களின் வாழ்க்கை முறை கண்டு நம்பமுடியாது வியந்திருக்கின்றேன்..

அத்தகைய சிறு உயிர்களுக்குக் கூடத் தீங்கு செய்யாது வாழ்ந்த சமணர்கள் 3000 பேரைக் கழுவேற்றிக்கொன்றே இப்போதுள்ள சமயங்கள் வளர்ந்திருக்கின்றன...என்பது மறுக்கவியலா உண்மை...

ஒரு கரப்பான்பூச்சிக்கு மருந்தடித்து விட்டு அது சாவதற்கு பட்ட பாட்டைக் கண்டு பொறுக்க முடியாமல் எழுந்த நினைவுகள்...

நானெல்லாம் இந்த உலகத்துல உருப்படுவனா....தெரியல...

சொல் பதர்கள்

அதிகாலை
நடைப்பயிற்சியில் சிதறப்பட்ட
மனதின் புற்றாய்
சொல் பதர்கள்..
காற்றில் அலைகின்றன
அள்ளுவோரின்றி......

கவிதைகளால் இணைவோம்....24.08.14

கவிதைகளால் இணைவோம்....24.08.14

நகர்மன்றத்தில்....காலை 10மணியளவில் துவங்கப்பட்டது...

கவிஞர் வைகறை அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு அழைத்த போது சாதாரணமாகத்தான் நினைத்தேன்..ஆனால் நிகழ்ச்சிக்கு நான் மிகவும் மதிக்கும்இயக்குநர். நந்தன் ஸ்ரீதரன் ,கவிஞர் யாழி ,கவிஞர் நாணற்காடன் மற்றும் பலரை சந்திக்க வைத்து நெகிழ்வில் ஆழ்த்தி விட்டார் கவிஞர்வைகறை..
நிகழ்வில் வாசிக்கப்பட்ட ஒவ்வொரு கவிதைக்கும் சரியான விமர்சனம் தந்து வியப்பில் ஆழ்த்தினார்..கவிஞர்.ஸ்ரீபதி...
கவிதைகள் கேட்க கேட்க செவிப்பசி தீரமறுத்தது.

குடும்ப நண்பர்கள் போல,நீண்ட நாள் பழகியவர்களாய், அனைவரும் இயல்பாய் பழகிய விதம் இனிமையாய் இருந்தது...

முகம் பாரா முகநூல் நட்பு இன்று முகம் கண்டு மகிழ்ந்தது....

பொள்ளாச்சி,கோவை,சிவகாசி,கடலூர்,சென்னை,என பல திசைகளிலிருந்தும் முகநூல் பறவைகள் கவிதை நீர் அருந்த வலசையாய் புதுகைக்கு வந்திருந்தனர்.கவிஞர் வைகறைக்கு மனம் நிறைந்த நன்றி...

இந்நிகழ்வு நடக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி...
தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்....

Friday 22 August 2014

மாறுமா?






மனம் நிறைந்த பாராட்டுக்கள்

23.08.14தமிழ் இந்துவில்..

வருவாய் அல்லை மக்கள் நலனே முக்கியம் என்பதால் மதுவிலக்கு கொண்டு வரப்போகும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவர்களுக்கு...




மனுவை வாபஸ் பெற வைத்தது யார்?

தி.இந்து..தமிழ் 23.08.14

16 வயதில் சிறுமிகளை கதாநாயகி வேடத்தில் நடிக்க வைப்பது மனரீதியாகவும்,உடல்ரீதியாகவும் அவர்களிடம் பாதிப்பை உண்டாக்கும் இதை தடுக்கும் விதத்தில் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை முத்துச்செல்வி அவர்களால் கொடுக்கப்பட்ட பொதுநல மனு விசாரணைக்கு வந்த .....

சமூக நோக்குடன் தொடுக்கப்பட்ட வழக்கு .....வாபஸ் பெற வைக்கப்பட்டுள்ளது ...சமூக நோய்களால்....

முன்பெல்லாம் திரைப்படத்தில் வரும் கதாநாயகிகள் அறிவு முதிர்ச்சி உள்ளவர்களாக உடல் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்களாக இருந்தனர்....

இப்போதோ பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளை நடிக்க வைத்து அறிவை விட ஒல்லியான ,அழகுப்பதுமையே கதாநாயகி என்ற நஞ்சை விதைத்து அரைகுறை ஆடையில் ஆடவைத்து பெண்களைப் போதைப்பொருளாக்கி,பெண்குழந்தைகளை தவறான பாதையில் வழிநடத்தும் திரைப்படங்களைத் தயாரிக்கும் சமூக நோய்க்கிருமிகளை அழிக்க முடியாமல்...

சந்ததிகள் பாழாவதைத் தடுக்க முடியாமல் வாழ்வது கொடுமை...

Wednesday 20 August 2014

ச்சீ

ச்சீ ச்சீ
வெட்கம் கெட்டவர்கள்
திட்டிக்கொண்டே
திரையிட்டுக் கொண்டது
குளியலறைக் கண்ணாடி....

Tuesday 19 August 2014

நம்பமுடியவில்லை!இன்னும் .....!




நம்பமுடியவில்லை!இன்னும் .....!

நான் இதற்கு தகுதி தானாவென....

சனிக்கிழமை சுதந்திரதின விழா கொண்டாட்டம் முடிந்து ஓய்வில் இருந்த போது ஒரு அழைப்பு ...அலைபேசியில் ..

”நான் கவிராசன் அறக்கட்டளை முருகபாரதி பேசுகின்றேன்...ஒரு மகிழ்ச்சியான செய்தி” என்றார்...இவர் என்ன சொல்லப்போகின்றார் என்ற நினைவில் சொல்லுங்க  சார் என்றேன் ...

எங்கள் அறக்கட்டளையிலிருந்து உங்களுக்கு
” நல்லாசிரியர் விருது”         வழங்க முடிவு  செய்துள்ளோம் .வாழ்த்துக்கள் எனக் கூறி வைத்துவிட்டார்...

கனவா நனவா என விழித்துக்கொண்டிருக்கின்றேன் இன்னும் .....!
இச்செய்தி அறிந்த என் மேல் உண்மையான அன்பு வைத்த நட்புகள் எனக்கு வாழ்த்துகள் கூறிக்கொண்டுள்ளனர்....!
என்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றிதனைச் சமர்ப்பிக்கின்றேன்...!
ஆனந்த அதிர்ச்சி என்பது இது தானோ...!
இந்த விருது தகுதியானவளாக இன்னும் நான் உழைக்க வேண்டும் என்ற அச்சமும் எழுகின்றது....விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்..!



Monday 18 August 2014

வியர்வை

சுவற்றுக்கும் வியர்த்தது
வெளியே மழை

29.07.14 அம்மாவின் நினைவு நாளில்...







புதுகை பல்நோக்கு சமூக சேவை நிறுவனத்தினரால் நடத்தப்படும்
உண்டு உறைவிடப்பள்ளியில் ....
குழந்தைகளுடன் இருக்க விரும்பி மாலைப்பொழுதில் சென்றேன்...
அன்புடன் கண்களில் ஆர்வம் பொங்க வரவேற்றனர்..அறுபது குழந்தைகட்கு மேல் இருந்தனர்..
தூய்மையான வளாகம்...கட்டுப்பாட்டுடன் நடந்த குழந்தைகள் அங்குள்ள ஆசிரியரும் மற்றவர்களும் எங்களை கவனித்த விதம் அருமை...
பல்வேறு மனக்கவலைகளை தாங்கிய முகங்கள் கனிவுடன் என்
மனதில் அழுத்திய சுமைதனை புன்னகைப்பூக்களால் துடைத்தனர்.
பாடல்,கதை, நடனம் என ஆர்வமுடன் எங்களுடன் கலந்துரையாடினர்.
மனம் நிறைந்த நிகழ்வாக அன்றைய தினத்தை மாற்றினர்...

Sunday 17 August 2014

வார்த்தைகள்

வார்த்தைகளால் வசமாகும்...உலகு
வளமான வார்த்தைகளால்
மனதை நிறைப்போம்....

Saturday 16 August 2014

சுதந்திர தின விழா-2014

சுதந்திர தின விழா-2014
புதுக்கோட்டை மாவட்ட அளவிலான சுதந்திர தின விழா, புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று வெகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது.கலைநிகழ்ச்சிகளும் சிறப்புடன் நடந்தன.

அதில் எங்கள் சந்தைப்பேட்டை,அரசு மகளிர்மேல்நிலைப் பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டனர்.

பாரதிதாசனின்” புதியதோர் உலகம் செய்வோம்”என்ற பாடலுக்கு வெகு சிறப்பாய் ஆடி அனைவரின் மனதைக் கவர்ந்தனர்.கோலாட்டம் ,ஒயிலாட்டம்,வெஸ்டர்ன்,நாட்டுப்புற நடனம்,பரதநாட்டியம்,பொம்மலாட்டம்,சேலைநடனம்,சிலம்பாட்டம் மற்றும் பாரதிதாசன் வேடமிட்டு எட்டுவகைகளில் ஒரே பாடலுக்கு84 மாணவிகள் நடனமாடினர்.
காலையில் கிளம்பும் முன்



 ஆயுதப்படை மைதானத்தில்

Thursday 14 August 2014

அவர் ஒரு பொது நலவாதி



காரைகாரர் என அழைக்கப்படும் அவரது குடும்பம்...

அவர்,தனது குடும்பம் மறந்து கதராடை உடுத்தி, நாட்டிற்காக போராடியவர்.....!

அவர் மனைவியோ ஆறு குழந்தைகளுக்கு உணவிட வழியின்றி தவித்து குடும்பத்தைக் காப்பாற்ற போராடினாள்....அவள் சேர்க்கும் சிறுவாட்டு காசு கூட சுதந்திரத்திற்காக கணவரால் பறித்து செல்லப்பட்டது....!

அவரின்  சுதந்திர முழக்கம் கேட்டு ஆசைப்பட்டு பலர் சுதந்திரப்போராட்டத்தில் இணைந்தனர்....அவர்களில் ஒருவர் தான் ஜி.கே.மூப்பனார்....தினமணி பொன்விழா மலரில் மூப்பனார் எழுதியக் கட்டுரைக்கூறும் உண்மை இது...!

அவரால் பலனடைந்தோர் பலர்....தனது உழைப்பு,சொத்து அனைத்தும் நாட்டுக்கே அர்ப்பணித்தவர்....

தன் குடும்பத்திற்காக பலன் ஏதும் பெற விழைந்தாரில்லை...
உண்மையான தியாகி ..... சென்னையில் உள்ள தியாகிகள் மண்டபத்தில் புகைப்படமாய்த் திகழ்கின்றார்...

அவர் ,கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுந்தரப்பெருமாள் கோவிலைச் சேர்ந்த தியாகி மாணிக்கமுதலியார்....
அவரது மனைவிபட்டம்மாள்....இவர்களின் மகள் சுசீலா, எனது அம்மா...
என் தாய்வழி தாத்தா...அவர்...
சுதந்திர தினத்தில் மகிழ்வுடன் நினைவு கூர்கிறேன்...செவிவழிக் கேட்ட என் தாத்தாவின் சுதந்திரப்போராட்ட அனுபவங்களை....

இன்றைய சுதந்திரநாளின் கனவாய்...

இனி மலரும் காலங்கள்...

பெண் குழந்தைகள் பயமின்றி
மகிழ்ந்தாடும் நாட்களாய் அமையட்டும்...!

புவியின் வளம் அழியாமல்
சந்ததிகளைச் சேரட்டும்......!

மனிதர்கள் மனிதத்துடன் நடக்கட்டும்....!

Wednesday 13 August 2014

காப்பி

ஒரு காப்பி போடத்
தெரியாது
கணவன் மீது  குறை...

மகனை வளர்க்கிறாள்
அப்படியே
மருமகள் குறை கூற....!

Tuesday 12 August 2014

சொல்

சொற்களின் ஆளுமையில் நாம்.....

சிதறிய வார்த்தைகள்
மனதைத் துளைத்து
கண்களின் வழியாக...

Monday 11 August 2014

மென் தணலாய்

குற்றாலக்குளிர் என்னை நாடி புதுகைக்கு.....
போர்வைக்குள் வரவேற்றேன்...மென் தணலாய்

வாராது வந்த..மாமழையால்



புதுகை குளிர்ந்து,
நனைந்து ,நனைக்கின்றது
தினம் தினம்...
அந்திமழை...

நன்றி விகடனுக்கு...

நன்றி விகடனுக்கு...


 பொறுக்க முடியாமல் போனில் கீழ் உள்ள கருத்தை ஆன்ந்தவிகடனுக்கு கைபேசியில் தெரிவித்தேன்.இன்று தகவல் செல்லிற்கு வந்துள்ளது.கருத்திற்கு நன்றி கூறி..ஆசிரியர் பார்வைக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்...முரணான கருத்தை ஏற்க தயங்கவில்லை விகடன்..அந்த வகையில் பாராட்டுகின்றேன்...செயலிலும் காட்டினால் நன்றாக இருக்கும்...இல்லையெனில் தரமான வாசகர்களை இழக்க அவர்களே காரணமாவார்கள் என்பதில் ஐயமில்லை...

Sunday 10 August 2014

ஆனந்தவிகடன்

என்ன ஆச்சு ஆனந்த விகடனுக்கு....?

முகம் சுளிக்க வைக்கின்றன சில படங்கள்...

தரமான இதழ்....தரம் தாழ்வது ஏன்?....அதற்கென்றே இருக்கும் இதழ்கள் ....இப்படி போட்டு குப்பையாகட்டும்...

.ஆனந்தவிகடனுக்கு இப்படி படங்கள் போட்டுத்தான் வாசகர்களைக் கவர வேண்டும் என்ற நிலை இதுவரை வரவில்லை....!இனியும் வரவேண்டாம்....!
சிறுவயது முதல் குடும்பத்தில் ஒருவரான ஆனந்தவிகடன்....எல்லோர் மனம் விரும்பும் இதழாகவே எப்போதும் இருக்க விழைகின்றேன்...!

Thursday 7 August 2014

குளம்

சிறு கல் தூண்ட
நினைவுகளை மீட்டெடுத்து
உயிர்களால் வாழ்ந்த குளம்....

மனம் வெடித்து
இறந்ததென புதைத்து
கல்லறையெனெ
எழும்பின
அடுக்குமாடி குடியிருப்புகள்....


Wednesday 6 August 2014

நான்

நான்
--------------
நானே வாழ்வாய்...!
நானே முடிவாய்...!

நான் அற்ற நிலை
எளியதாயில்லை
புத்தனைப்போல
எல்லோருக்கும்....!

நான் அழியக் காத்திருக்கிறேன்
நாமாக...!

இசை

விரைந்தோடும் கூட்டத்தில்
ஈரமனம் தேடி காணாது
 அவனுக்குள்ளே மறைகின்றது
விழியற்றவனின் இசை....

Tuesday 5 August 2014

தொலைதல்

கிறுக்கல்களில் மறைந்திருக்கும் உயிர்கள்
 குழந்தைகளுக்கு மட்டுமே காட்சி தருகின்றன...!
இது கூடத் தெரியாதான்னு ஒரு பார்வையில்
கேட்கிறாள்....குட்டி...!
தொலைந்து போனேன் எனக்குள் நான்!
யாசிக்கிறேன் மீண்டும் குழந்தை மனதையே!

Monday 4 August 2014

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கில்
 நீர்ச்சுழலில் மீன்குஞ்சுகளென
தண்ணீரில் அலைந்தாடிய
தமிழினம்...

.இன்று
வண்ண மணல் பாய்விரித்து
தலையில் நீர்தெளித்து
ஆடிப்பெருக்கை கொண்டாடுகிறது
காரணம் மறந்து....!



காக்கா வீடு

கார்மேகம் புடைசூழ
காற்றதனைக் கலைக்க பாடுபட
காக்கா வீடெல்லாம்
ஏன் ஆடுதுன்னு கேட்கிறாள்
தலையாட்டும் தென்னையைக்
காட்டி, குட்டி மகள்....

Sunday 3 August 2014

நட்பு

ஒளியுண்ணும் இரவில்
விண்மீன்கள் சாலையில் அணிவகுக்க
சாரல் வருடலில்
நிலவு வழிகாட்ட
 இசையின் துணையோடு
புறவழிச்சாலைப் பயணமாய்...
இதமான நட்பின் கைகோர்த்தல்...

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்

Friday 1 August 2014

குழவி6


அப்பா சிங்கமாய்
அம்மா புலியாய்
தாத்தா கரடியாய்...
பாட்டி பூனையாக
மாமாவோ யானையாய்

திடீரெனெ உருமாறுகின்றன
சிங்கம் அம்மாவாகவும்
புலி அப்பாவாகவும்....
எதையும் ஏற்று சிரிக்கிறது
பிறைநிலவென....!

யானையையே விரும்பும்
குழந்தைக்காக
சட்டென்று அனைத்தும்
யானைகளாகின்றன......

ஒரு வாய் சோறூட்ட
 மிருககாட்சிசாலையாகும் வீடு