World Tamil Blog Aggregator Thendral: July 2016

Wednesday 27 July 2016

நடமாடும் தமிழ் நூலகம்-மதிப்பிற்குரிய பேராசிரியர் கலியபெருமாள் அவர்கள்

தமிழ் நூலகம் மனித உருவெடுத்து எங்களுடன் கலந்ததுவோ..



 இன்று 27.7.16 புதுக்கோட்டையில் நடந்துகொண்டிருக்கும் பத்துநாட்கள் விழாவில் ஆறாம் நாளாகிய இன்று தமிழிசையும் நற்றமிழ் முற்றமும் நிகழ்வுகளாய்...

 அந்நிகழ்வை நிறைவு செய்ய எழுந்தார் மதிப்பிற்குரிய பேராசிரியர் கலிய பெருமாள் அவர்கள்.அவரின் எளிமை ,எல்லோரையும் என்ன பேசப்போகின்றார் இவர் என நினைக்க வைத்தது.அத்தனை ஓர் அமைதி தமிழ் முழுமையாகக் கற்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

புதுகை இலக்கியவாதிகளை பிரமிக்க வைத்து பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறார் மனதில். ஒன்றரை லட்சம் பாட்டுக்கள் மனப்பாடமாய் சொல்வாராம்..இப்போது சொல்லுங்கள் ..அவர் நூலகம் என்பது சரிதானே...

தமிழில் உள்ள இலக்கியங்கள் அனைத்தையும் மனப்பாடமாகப் பொழிகின்றார்...அவரின் தமிழ் மழையில் நனைந்து மீள விரும்பாது மணி பத்தரைக்கு மேல் ஆனபோதும் அகலாமல் நின்றோம். அத்தனை பாடல்களும் மறவாமல் அவரிடம் வந்து என்னை சொல்லு என்பது போல் கையேந்தி நிற்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

 தொல்காப்பியம் அட்டை டு அட்டை,பதிணென்கிழ்க்கணக்கு ,பதிணென் மேல்கணக்கு ,காப்பியங்கள்,பக்தி இலக்கியங்கள்,புராணங்கள்,தனிப்பாடல் திரட்டு,இன்னும் தமிழில் என்னென்ன இருக்கோ...இப்ப உள்ள பாடலாசிரியர்கள் பாடலும் மனப்பாடம் என்கிறார்...அவரைப்பற்றிக்கூறியவர். அவரிடம் பாடம் படிக்காதவர்கள் பாவம் செய்தவர்கள் தான் போல.

 ஒருத்தர் கூட எழமுடியாது தமிழால் கட்டிப்போட்டுவிட்டார். அத்தனை புலவர்களையும் ஒருவரிடத்திலே கண்டோம்..

 என் இனிய தோழி திருமிகு ரேணுகா தேவி அவர்கள் ”அய்யோ ”என்ற சொல் பட்ட கவலையைக்கூறி வியக்க வைத்தார்..அவரை இன்று கண்டதில் மனநிறைவு ...மேலும் பல உயர்வுகள் அவர் வாழ்வில் வரட்டும்.

 திருமிகு சந்திரசேகர் கம்பனில் பறவைகள் பற்றி அருமையாக கூறினார். 

புதுகை தமிழால் நனைந்தது இன்று.

வாழ்வில் ஒருமுறையாவதுபேராசிரியர் கலிய பெருமாள் அவர்களை எல்லோரும் நாம் சந்திக்கவே வேண்டும். தமிழில் இலக்கியத்தில் சந்தேகமா நாடுங்கள் அவரை .எத்தனை எளிமை எத்தனை அடக்கம்..


இறுதியில் பாடினார் பாருங்க...நல்ல தமிழ்பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்..என அங்கு தான் அவர் மென்மேலும் உயர்ந்து நிற்கிறார்.

Monday 25 July 2016

வீதி கலை இலக்கியக்களம் 29 ஆவது கூட்டம்

                                                  வீதி
 கலை இலக்கியக்களம் 29 ஆவது கூட்டம்
 நாள் :31.7.16
 இடம் :ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லுரி
            புதிய பேரூந்து நிலைய மாடி.புதுகை
 அன்புடன் அழைக்கின்றோம்.....
 வீதி நிறுவனர் முனைவர் அருள்முருகன் அவர்களின் நூல் பாறை ஓவியங்கள் அறிமுக விழா .....

 கவிஞர் வைகறையின் மகன் ஜெய்க்குட்டிக்காகத் திரட்டிய நிதி வழங்கும் விழா...

 உதவிய நல்ல உள்ளங்களை ,உதவப்போகும் நல்ல உள்ளங்களை விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைக்கின்றோம். நிதி உதவி அளிப்பவர்களின் ஆதரவால் இதுவரை ரூ 1,85,000 சேர்ந்துள்ளது.மொத்தமாகக் கொடுத்தால் ஜெய்க்குட்டியின் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... இது முதல் தவணை தான்.

 இன்று வரை அவருக்காக அரசுப்பணம் எதுவும் வராத நிலையில் கல்விக்கட்டணம் கூட கட்டமுடியாமல் தான் பள்ளியில் சேர்ந்திருக்கிறான்.அவன் முன் இருந்த நிலையும் தற்போது அவன் வாழும் வீட்டையும் காண்கையில் மனம் பேதலித்து நிற்கின்றது.வைகறை ஏன் இப்படி செய்தாய் என அலறவே தோன்றுகிறது.

 முடிந்தவரை புதுக்கோட்டை வைகறைக்குடும்பத்திற்கு இயன்ற உதவியைச்செய்யும்.முகநூலிலும்,வலைப்பூவிலும் வைகறைக்காக எழுதி நிதி திரட்டித்தந்த நல்ல உள்ளங்களுக்கு பொள்ளாச்சி இலக்கிய வட்டமும்,வீதி கலை இலக்கியக்களமும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.
 உதவிகள் தொடர்ந்து வேண்டுகிறோம்.
 கவிஞன் அனாதை இல்லை என்பதை உணர்த்தவே...

Tuesday 19 July 2016

எப்போது குறையும்?

எப்போது குறையும்?

 மக்களுக்காக குரல் கொடுத்ததை..தனது திரைப்படங்களின் மூலமும் , வாழ்விலும் நடத்தி காட்டினார் என்பதாலும் தமிழக மக்களிடையே இன்றும் மாறாத இடத்தை பிடித்து வைத்திருப்பவர் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள்.

 இன்று தமிழக மக்களிடையே வரட்டு கவுரமாக முளைத்துள்ளது...கபாலிக்கு முன்பதிவு செய்து விட்டேன் என்பது...இவரும் நடிப்பதை, வாழ்விலும் சாதிப்பார் என்று எதிர்பார்த்ததால் இத்தனை ஆரவாரங்கள்.

ஆனால்....????

 எத்தனை படித்தாலும் தமிழன் திருந்த மாட்டானா..திருந்த விட மாட்டார்களா?

தற்காலத்துக்கு தேவையானகல்வி பற்றிய விழிப்புணர்வைத்தந்த” அப்பா” படத்துக்கு இத்தனை ஆர்வம் காட்டாத தமிழரும், ஊடகங்களும்..ஒரு பொழுது போக்கு படத்துக்கு இத்தனை ஆர்வம் காட்டுவது எப்போது குறையும்.? 

அப்போது திருந்தும் தமிழ்நாடு...

Monday 18 July 2016

ஏன்மா நேத்து வரல?

ஏன்மா நேத்து வரல?

ஆறாம்வகுப்பில்  சேர்ந்துள்ள.,பள்ளியிலேயே குட்டிச்சிறுமி அவள்....
எல்லோருக்கும் பிடிக்கும் அமைதியான முகம்.

எங்க அம்மா மேல சுடுதண்ணி ஊத்திடுச்சு அம்மா ..நான் தான் வீட்டுவேலை பார்த்தேன் அதனால வரலம்மா. இப்ப எப்படிடா இருக்காங்க...பரவால்லமா நடக்க முடியுதா காலில் ஊத்திடுச்சுன்னு சொல்றியேம்மா என்றேன். 

அவங்களால நடக்கவே முடியாதும்மா தவழ்ந்து தான் செல்லமுடியும் போலியோ அட்டாக்ன்னு சொன்னா அதிர்ந்து போனேன்.

 ஏன்னா அவ அப்பாவாலும் நிமிர்ந்து நடக்க முடியாது.அவரும் மாற்றுத்திறனாளி.தனியார் மருத்துவமனையில் சலவைத்தொழிலாளியாகப்பணிபுரிகின்றார். இருவரும் .பத்திரிக்கை மூலம் வந்த விளம்பரத்தில் பார்த்து திருமணம் செய்துள்ளனர் என்றாள்.

 இரண்டு பெண் குழந்தைகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர்.இவள் என்னிடம் ஆறாம்வகுப்பு படித்தாள்...

கஷ்டப்படுகிறார்களே என்று நாம் உதவி செய்ய கேட்டால் வேணாம்மா இன்னும் கஷ்டப்படுற குழந்தைக்கு செய்யுங்கன்னு தன்மானத்தோடு கூறுபவளை அதிசயமாகப்பார்ப்பேன்.

 ஒழுக்கத்திலும் ,மரியாதையிலும் சிறந்த குணமுள்ளவள்...எங்க அப்பா அம்மாவ காப்பாத்தனும் டீச்சர்னு அடிக்கடி சொல்வாள்...அவள் அப்பாவும் எது என்றாலும் உடனே அலைபேசியில் சொல்வது வழக்கம். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 485     /500 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று பெருமை சேர்த்தாள்.

 இவ்வாண்டு[2016] பன்னிரெண்டாம் வகுப்பில் 1116/1200 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாகவும் .ஆங்கிலத்தில் 190/200 மதிப்பெண்கள் பெற்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளாள்.

சென்னை அகரம் பவுண்டேசன் இவளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. சென்னையில் உள்ள ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது.கல்லூரிச்செலவும் விடுதிச்செலவும் அகரம் பவுண்டேசன் செய்யும் போலம்மா.

மற்ற போகவர செலவு,அவளுக்குத்தேவையானவற்றை வாங்குற செலவு நம்முடையதும்மா என அவ அப்பா கூறிய போது..

 நம்மால் என்ன செய்ய முடியும்னு தோன்றியது.நன்கு படிக்கும் அக்குழந்தைக்கு உங்களாலும் முடியுமெனில் உதவலாம்.

 மாற்றுத்திறனாளி பெற்றோரின் போராட்ட வாழ்க்கையில் நாமும் சற்று கை கொடுத்து தூக்கிவிடலாமே.....

 தனது ஆங்கில ஆசிரியரிடமிருந்து ஆங்கிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றமைக்கு பரிசு வாங்கும் எங்களின் நந்தினி அன்னாள்......

உதரவும் கரங்கள் பேச 9659247363

Wednesday 13 July 2016

மனசாட்சி இருக்குமா இவர்களுக்கு...

மனசாட்சி இருக்குமா இவர்களுக்கு...

நேற்று என்னுடன் பணிபுரியும் தோழியின் சோகமான முகத்தை கண்டு என்னவென்று விசாரித்தேன்.போ கீதா நீயும் இல்லாம, நான் யாருகிட்ட சொல்றதுன்னு தெரியாம இருந்தேன்.மனசே பாரமா இருக்குன்னு சொன்ன போது..நீ இப்படி சொல்லமாட்டியே என்னாச்சும்மான்னு கேட்டேன்..

எனக்கு சுகர் இருக்காம் என்றார்... எப்ப பார்த்தே என கேட்டேன் இரண்டு நாள் முந்தி பார்த்தேன்....முழு செக்கப் செய்யலாம்னு போனோம்..வேற ஒன்றும் இல்ல, ஆனா சுகர் இருக்குன்னு சொன்ன போது .

Tuesday 5 July 2016

அப்பா-திரைப்படம்



                                                         அப்பா

 பெற்றோர்கள் தங்களது கனவுகளை குழந்தைகள் மீது சுமத்தி பந்தயக்குதிரைகளாக்கி ஓட விட்டு, சமூகத்தால் கற்பிக்கப்பட்ட தவறான பாதையில் செல்ல நாம் எப்படித்துடிக்கிறோம் என்பதை தோலுரித்துக்காட்டுகிறது.

 ஆண்குழந்தை பிறந்த உடன் சமூகத்தை நேசிக்கும் நல்ல மனிதனாக உருவாக்க வேண்டும் என்ற இலட்சியமே நம்மை திரையினுள் இழுத்துக்கொண்டு விடுகிறது.

 பெற்றோர்கள் எதற்கும் லாயக்கில்லாத கௌரவம் என்ற கோடரியால் தங்களைத்தாங்களே வெட்டிக்கொள்வதை சுட்டிக்காட்டுகிறது.



Monday 4 July 2016

பவித்ரா

அம்மா பவித்ரா வரலம்மா...

 எட்டாம் வகுப்பைக்கடந்து போகும் முன் பவித்ரா இருக்காலான்னு பார்த்துவிட்டு கடந்து செல்வது வழக்கம்.

 சிலநாட்கள் விடுப்பில் இருந்து விட்டு சென்ற பொழுது எட்டாம் வகுப்பு குழந்தைகள் ஓடி வந்து ,அம்மா என அழைத்துவிட்டு அமைதியாக தங்களுக்குள் சிரித்துக்கொண்டு நின்றனர்..

என்னாடான்னு கேட்டு எங்க பவித்ராவைக்காணும்னு கேட்டேன்.. அம்ம்ம்ம்ம்மான்னு இழுத்து அவ வயசுக்கு வந்துட்டான்னு சொன்னார்கள்...மனதில் ஓர் அழுத்தம் வந்தது...நல்லா இருக்குற குழந்தைகளே சிரமப்படுவாகளே...இந்தக்குழந்தை என்ன பண்ணுமோன்னு தோன்றியது..






Sunday 3 July 2016

சமத்துவம் வந்தாச்சா?....

சமத்துவம் வந்தாச்சா?....

 எத்தனையோ பெண்களை இழந்துள்ளோம்...ஆண்களின் வக்கிரங்களுக்கு இரையாக்கி.... ”இன்று தி இந்து பேப்பர் நிறைய சுவாதிக்கொலையே நிறைந்திருந்தது..

மனம் சுவாதிக்காக அழுதாலும் இதற்கு முன்
சென்னையில் ஈவ்டீசிங்கால் சரிகாஷா ,
தர்மபுரியில் பேருந்தில் எரிக்கப்பட்ட கோகிலவாணி,ஹேமலதா,காயத்ரி,

ஓமலூரில் கிணற்றில் வீழ்ந்து இறந்ததாக சொல்லப்பட்ட சுகன்யா,

சித்த மருத்துவக்கிணற்றில் கிடந்த சரண்யா,பிரியங்கா,மோனிஷா.

கோவைக்கிணற்றில் திவ்யா,அத்தனையும் இளம் தளிர்களை கொன்று குவித்த வக்கிரங்கள்,

 ஆசிட் வீச்சுக்கு பலியான காரைக்கால் வினோதினி ,சென்னை வித்யா,தூத்துக்குடி புனிதா,

டெல்லி நிர்பயா,உளுந்தூர் பேட்டை பிரியா,சிதம்பரம் சந்தியா, சென்னை உமாமகேஸ்வரி,மதுரை லீலாவதி,கடலூர் விக்டோரியா,ஆதனூர் பொன்னருவி,மேலப்பாளையம் சகுந்தலா,செல்லஞ்சேரி சிவகாமி,திருச்செங்கோடு விஷ்ணுப்ரியா,புதுச்சேரி பார்வதி ஷா,ஏற்காடு விஜயலெட்சுமி...

என தொடரும் துயரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே..”நன்றி தி இந்து 

”உணவை செரிப்பதாகவே கொலைகளையும் செரிக்கின்றோம்”

 சமத்துவம் வந்தாச்சுன்னு சொல்றவங்களுக்கு

இப்படி பெண்கள் வெளியே நடமாட முடியாத,வீட்டுக்குள்ளேயும் இருக்க முடியாத ஒரு நாடாகத்தான் நம் பாரதநாடு உள்ளதை உணர்த்த வேண்டியுள்ளது...

 தி இந்து வில் திரு சஞ்சீவிகுமார் அவர்களின் கருத்தை முன் மொழிகிறேன். 

’முதலில் பெண்களுக்காக நம் சமூகம் தயார் செய்து வைத்திருக்கும் பிம்பங்களை மாற்ற முற்படுவதே பிரச்சனைகளுக்கான தீர்வாக அமையும்.தாய் என்பவள் தெய்வமும் அல்ல:காதலி என்பவள் தேவதையும் அல்ல.அவர்களும் உங்களைப்போலவே அழுக்கும் மணமும் ஒருசேரப்பெற்றவர்கள் தான்.உங்களைப்போல நகமும்சதையுமான சகமனிதர்கள் தான். 

 குழந்தைகளுக்கு கற்பிப்போம்

 குடும்பத்தில் மனைவியை கணவன் அடிப்பது,அதிகாரம் செய்வது போன்ற செயல்கள் எல்லாம் பெண் என்பவள் ஆணால் ஆளப்படுவதற்கானவள் என்கிற பிம்பத்தை குழந்தைகளின் மனதில் ஆழப்பதியச்செய்து விடுகிறது.இதன் முற்றிய வடிவம் தான் ஆணால் ஆளப்பட முடியாமல் போகும் பெண்ணை கொலை செய்வதில் முடிகிறது.

 வேலைகளில் ஆண்வேலை,பெண்வேலை என்று எதுவும் இல்லை.சூழலைப்பொறுத்து அனைத்து பணிகளையும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.மனைவியை மட்டுமின்றி அனைத்து பெண்களையும் விளிக்கும் போது மரியாதையாகப்பேசுங்கள்....”
 இப்படி கட்டுரை எழுத பெண்களை உணர்ந்து கொண்டவர்களால் மட்டுமே முடியும் ...நன்றி சஞ்சீவி சார்.

Friday 1 July 2016

காலம் மாறும்....

பெண்ணுக்கு என்று தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தை ஆணின் மனதில் ஆழமாக விதைத்து விட்ட சமூகத்தின் அவலநிலையின் விளைவு ...

 எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாதென்ற ஆணாதிக்க வெறியின் வெளிப்பாடு தொடர்கிறது வினோதினி, ஸ்வாதி,வினுப்ரியா.. 

இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே போராடிக்கொண்டே இருப்பது என்ற ஆயாசம் வருகின்றது...

 ஒன்று இருக்கின்ற பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கணும் அல்லது செத்து மடியனும்...

 இதைப்பார்த்துக் கொண்டு வாழ்வதெல்லாம் ஒரு வாழ்வான்னு சலிப்பு வருகின்றது சில நேரங்களில்...

பிரச்சனை வரும்போது குரல் கொடுப்பதும் பின் ஓய்வதும், ஓயாத கொடுமைகளை தடுக்கவிக்கவில்லை...

 ஆண்பிள்ளைகளை வளர்ப்பவர்கள் கொஞ்சம் முயற்சி எடுங்கள்....பெண்களை மதிக்கக்கற்றுக்கொடுங்கள்..

 எங்களைப்போல் எதிர்காலப்பெண்கள் சும்மா வேதனைப்பட்டுக்கொண்டு இருக்கமாட்டார்கள்..அவர்கள் எதிர்விளைவு பண்ண ஆரம்பிக்கும் காலம் தொலைவில் இல்லை.