World Tamil Blog Aggregator Thendral: பிரம்ம ஞானப்பயிற்சி-19.06.15 முதல் 21.06.15 வரை 3 நாட்கள்

Monday 29 June 2015

பிரம்ம ஞானப்பயிற்சி-19.06.15 முதல் 21.06.15 வரை 3 நாட்கள்








 பிரம்ம ஞானப்பயிற்சி-19.06.15 முதல் 21.06.15 வரை 3 நாட்கள்
-------------------------------------------------------------------------------------------------------
இடம் -ஆழியாறு அறிவுத்திருக்கோயில்

19.06.15 முதல் 21.06.15 வரை 3 நாட்களுக்கு ஆழியாறு அறிவு திருக்கோயிலில்..கிட்டத்தட்ட 400 பேர்களுக்கு பிரம்மஞானப்பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுகையிலிருந்து 18 பேர் கொண்ட குழுவாக 18.06.15 அன்று காலையில் கிளம்பினோம்.எங்களுக்கு துணையாக மஞ்சுளாம்மா வந்தார்கள்...

மாலை 4 மணியளவில் நல்ல மழையின் துணையோடு ஆழியாறை அடைந்தோம்.எல்லோருக்கும் இடம் பொதுவான ஹாலிலும்.அறை விரும்பியவர்களுக்கு அறையும் கொடுத்தார்கள்..எங்கு பார்த்தாலும் பசுமை கண்களை நிறைத்தது.7.30மணிக்கு உணவருந்தியபின் அறிமுக வகுப்பு என்றார்கள்...

உணவு வழங்கும் ஹால் ஒரே நேரத்தில் அனைவரும் சாப்பிடக்கூடிய வசதியுடன்...அருமையாக இருந்தது ...சுடச்சுட இட்லி ,கோதுமை ரவா உப்புமாவுடன்,பால் வழங்கப்பட்டது.

அறிமுக வகுப்பில் அறிவு திருக்கோயிலில் நாம் எப்படி நடக்க வேண்டுமென்று கூறினார்கள்...அவர்கள் கூறிய அத்தனை தவறுகளையும் செய்த போதும் கோபப்படாமல் அவர்கள் சமாளித்தபோது வியக்காமல் இருக்க முடியவில்லை.

மறுநாள் அதிகாலை 5மணிக்கு குளித்துவிட்டு தவத்திற்கு சென்றோம்....எங்கு பார்த்தாலும் அமைதியாய் மக்களின் வரிசை..விடியல் துவங்கும் வேளையில் மலையடிவார தவச்சாலையில் கண் மூடி அமர்ந்திருப்பதே மனதை அமைதி படுத்தியது...அங்கிருந்த தூய்மை ...நம்மை தூய்மை படுத்த முயன்றது.

 7மணிக்கு எளிமையான உடற்பயிற்சி அருளகம் என்ற பெரிய ஹாலில்,சிறு குழந்தை முதல் 60வயதுக்கும் மேற்பட்டோரும் ஆர்வமுடன் செய்தது..அடடா...

8மணிக்கு உணவு முடித்து 10 மணிக்கு வகுப்பு துவங்கியது...மிகச்சரியான திட்டமிடலுடன் பிரபஞ்சத்தைப்பற்றி விளக்கினார்கள்...மதியம் 1மணிக்கு வகுப்பு முடித்து உணவு இடைவேளை அருமையான உணவு..அன்பான பரிமாறல்...மதியம் 3.30மணிக்கு டீ குடித்தபின் வகுப்பு துவங்கி 6 மணிக்கு முடித்தவுடன் 7மணிக்கு துரியாதீத தவம்...

எங்களுடன் மழையும் அடிக்கடி வந்து வகுப்பை எட்டிப்பார்த்தது...இப்படியாக 3 நாள் பயிற்சி 21 அன்று மதியம் 1 மணியுடன் முடிந்தது.இடையில் ஒருநாள் குரங்கு அருவிக்கு சென்று வந்தோம்...

எங்களுடன் வந்த அத்தனை பேரும் மிக மகிழ்வுடன் இப்பயிற்சியி கலந்து கொண்டோம்...வழமையான வாழ்க்கை முறையிலிருந்து வித்தியாசமான இவ்வாழ்க்கை மனதை விட்டு நீங்காமல் நிறைந்திருக்கின்றது...

கடவுளை வெளியே தேடாதே நீயும் நீ காணும் பொருள் யாவும் கடவுளே ...உன்னுள் இருக்கும் கடவுளை அடையாளம் காண உன்னையே நீ ஆராய்ந்து உணர் என்ற கருத்தே என்னை இதற்குள் இணைய வைத்தது...கருத்து வேறுபாடுகள் சில இருந்தாலும்...அதிலுள்ள பல நல்ல கருத்துகள் ஏற்கத்தக்கதே...

எங்கு நோக்கிலும் பசுமை ,சுத்தமான காற்று,சாரல் மழை,தூய்மை,அமைதியுடன் கூடிய ஒழுங்கு...கம்பீரமாக நின்று நம்மை வரவேற்கும் மலையும் அடிவாரமும்....வாழ்வின் இறுதியில் இப்படியான ஒரு இடத்தில் அமைதியாக தங்கி சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வித்திட்டுள்ளது..

இவ்வாய்ப்பை நல்கிய பாலாம்மாவிற்கும் ,புதுகை சுப்ரமண்ய தவமையத்தை நடத்தும் செந்தாமரை அம்மாவிற்கும் மனம் நிறைந்த நன்றி...

அங்கு எழுதிய எனது கவிதை
--------------------------------------------------
இவன் தான் இறையென
கூறியது ஒன்று-இல்லை
அவன் தான் பரம்பொருளென
அடித்து உரைத்தது மற்றொன்று
இவனும் இல்லை அவனுமில்லை
உவனே சிறந்தவனென்றது ஒன்று

மனிதம் வளர்க்க வந்த மதங்கள்
மதத்தின் மதத்தைத் தூண்டி
உயிர்களை அழித்தே மகிழ்கின்றன

நசுங்கிய மனிதம் கண்டு
நலிவுற்றவளை அன்புடன்
அமைதியாய் அரவணைத்து
அனைத்து உன்னிடம்
நீயே அவன் ,இவன் உவனென
என்னை அறிந்து என்னுள் புதைந்த
இறையைக்காண வழிவகுத்தது
அறிவுத்திருக்கோயில்

அன்பே நீ அறிவே நீ
ஆழி நீ ஆறும் நீ
விண்ணும் நீ மண்ணும் நீ
ஒன்றாய் ஆன இறையே நீ
என்றே உரைத்து
அன்புடன் உலகை இணைத்தே
அகிலம் சிறக்க ஆசைப்பட்ட
ஆசான் வேதாத்ரி அவர்களின்
சீரிய எண்ணத்திற்கு தலைவணங்குகின்றேன்...

4 comments :

  1. நல்ல பயிற்சி. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. செய்தியும் கவிதையும்
    மன மகிழ்வைத் தந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தான் பெற்ற பட்டறிவை, அடுத்துவர்களுக்கும் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேற்கத்தக்கது...வாழ்த்துகள்!
    –செழியன்.மா

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...