World Tamil Blog Aggregator Thendral

Thursday, 31 August 2017

யாருக்கான கல்வி இது?

யாருக்கான கல்வி இது?
கொஞ்சம் கூட சிந்தித்திருப்போமா....
எக்காலத்திலும் தமது வணிகத்திற்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்று திட்டமிட்டு , சிந்தனையை தூண்டி விடக்கூடாது என்று....மெக்காலேவால் உருவாக்கப்பட்ட கல்வி முறையை.....
இன்றைய இந்தியாவில் உள்ள முதலாளிகளுக்காகப் பணி செய்ய கற்பித்துக் கொண்டு உள்ளோம்.
சிலர் மட்டுமே செல்வச்செழிப்பில் வாழ 99 சதவீத மக்கள் வறுமையால் வாடக் காரணமென்ன என்று கேள்வியைத் தூண்டாதக் கல்வியால் பயன் என்ன?
ஒவ்வொருவரும் தாம் மட்டும் வறுமையில் இருந்து விடுபட எண்ணி வாழ்கிறோமே...ஒட்டுமொத்தமாக வறுமையை ஒழிக்க போராடுகிறோமா?
ஜனநாயக நாட்டில் கல்வி சமத்துவமாக அமையவில்லை ....சமமாக கொடுக்கவில்லை என்றால் அது எப்படி ஜனநாயக நாடாகும்....?
இதை கற்பிக்கும் ஆசிரியர்கள் உணர்ந்துள்ளோமா?
இந்த கல்வியறிவும் இல்லையெனில் நம் கதி என்ன?
இதைக்கூட அனைவருக்கும் கொடுக்க முடியவில்லையே....
சென்னை மாநகராட்சியில் படித்து முதுகலை பட்டம் வாங்கிய துப்புரவாளர்களின் இளைஞர்கள் மாநகராட்சி பணியாளர் பணிக்கு விண்ணப்பித்த போது ... அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி என்ன தெரியுமா...
கல்வி அறிவு இல்லாத அவர்களின் தாத்தா , அப்பா.செய்து வந்த அதே துப்புரவாளர் பணி.... வேணும்னா செய் இல்லைனா போவென துரத்தும் போது அரசுப் பணின்னு ஏற்று கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்....
என்ன படித்தாலும் இறுகப் பிடித்து இருக்கும் மூட நம்பிக்கையை ஒழிக்காத கல்வி...... ஒரு கல்வியா?
கல்வி என்பது எழுத்தறிவு தருவது அல்ல... மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதாக அமைய வேண்டும் என்று பாவ்லோபிரேயர் சொன்னபோது அவரை சிறையில் அடைத்தார்களே....ஏன்?
ஒரு போதும் மக்கள் சிந்திக்கவே கூடாதென நினைக்கும் முதலாளித்துவ அதிகாரம் ...
மக்களுக்கு எதிரான விசயங்களை சட்டப்படி நியாயம் என்று நம்மையே ஏற்க வைக்க தானே இந்த கல்வியறிவு.... பயன்படுகிறது.
சமச்சீர் கல்வி வேண்டும் என்ற போராட்டத்தில் உருவானது இந்த"கல்விமேம்பாட்டு கூட்டமைப்பு"என்ற அமைப்பு.....என்றார் . தோழர் சு.மூர்த்தி.
கல்வி அனைவருக்கும் சமமாகக்கொடுக்க வேண்டும் என்று ஏன் ஆசிரியர்கள் போராட மறுக்கிறோம்?
சமூகச்சிந்தனையே வரக்கூடாது என்று கிரிக்கெட் பின்னால்...... கேளிக்கை களுக்கு பின்னால் இளைஞர்களை.    துரத்தும் காரணம் என்ன?
மதம்......வறுமையை, துன்பத்தை,தலைவிதி என்று ஏற்றுக்கொள்ள வைப்பது எந்த விதத்தில் நியாயம்?
உப்பு மூட்டை சுமக்கும் கழுதை கதை.....முதலாளிக்கு துரோகம் செய்யக்கூடாது என்று குழந்தையிலேயே கற்றுக் கொடுக்கிறதே.....
இந்த பத்து ஆண்டுகளுக்கஅரசு பள்ளி மாணவர்கள் 256 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரி யில் படித்து உள்ளனர்.இனி அதுவும் கிடையாது.
இப்போ மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கும் கிடையாது என்கிற போது தான்.....உணரத்துவங்குகிறோம்.
நடுத்தர வர்க்கம் தனக்கு ஆபத்து வந்தால் மட்டுமே சமூக நீதி கேட்கும் நிலை.
சமவெளி மாணவர்களுக்கே இந்த நிலை என்றால் மலைவாழ் மக்களுக்கு என்ன நீதி கிடைக்கும்.அவர்களுக்கு கல்வி உத்திரவாதம் உண்டா....?
என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சு.மூர்த்தி அவர்கள் கேட்ட போது..........
சிந்திக்க வேண்டிய சூழ்நிலை......
இந்த வாய்ப்பை தந்த புதுகை செல்வா அவர்களுக்கு மிக்க நன்றி..

தொடர்ந்து போராட வேண்டிய நியாயங்கள் அதிகம்......
அதற்கு சிந்திக்க க்கூடிய தோழமைகள் ஒன்றிணைய வேண்டும்......



Tuesday, 29 August 2017

என்ன சொல்ல..?(

சாப்பிட்டியாடா......கமர் நிஷா...

ஒரு வார்த்தை தான் கேட்டேன்...பொங்கி வரும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல்...... வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இல்லை என்று தலையாட்டினாள்....
சாப்பிடலயா.... உனக்கு தானே காய்ச்சல் னு மாத்திரை கொடுத்து விட்டேன்...சாப்பிடாமலா போட்ட....அல்சர் வந்து விடுமேடா.....(பள்ளியில் என் கைப்பை தான் மருந்துக்கடை 29 வருடங்களாக)

சரி ஏன் முடியாம வந்துச்சு.....
நிறைய பாத்திரம் தேய்ச்சேன் மா....தண்ணில நின்னது ஒத்துக்கல....சுரம் வந்து விட்டது...(அவளின் அம்மா சென்ற வருடம் இறந்து விட்டார்.நல்ல தெளிவாக சிந்திக்க கூடிய புத்திசாலி மாணவி)

அப்பா எங்கே?
காலைலயே வேலைக்கு போய்டாரும்மா....
வீட்ல வேற யாரு இருக்கா...?

அண்ணன் இருக்காம்மா....அவன் தூங்கி கிட்டு இருந்தான் மா...
நான் தான் தம்பிய கிளப்பி விட்டு....வீட்டு வேலை முடிச்சேன்மா....

சாப்பாடு கொண்டு வரலயா.....இரு வாங்கிட்டு வரச் சொல்றேன்....
அதற்குள் ஒரு மாணவி அம்மா நான் இட்லி கொண்டு வந்துருக்கேன் சாப்ட சொல்லுங்கம்மா என்று சாப்பாடு டப்பாவை தூக்கி கொண்டு ஓடி வர....
வேண்டாம் மா.... நான் தோசை கொண்டு வந்துருக்கேன் என்றாள்...

சரி அவளது டிபன் பாக்ஸ எடுத்து வாங்கன்னு சொல்லி பார்த்தால்... அழகாக தோசை மை மடக்கி.குழம்பை மேல் டப்பாவில் ஊற்றி எடுத்து வந்திருந்தாள்...
யார்டா சமைச்சா?
நான் தான் மா...
எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒரு வீட்டையே சுமக்கும் கொடுமை.....
மனம் துடிக்க..கண்கலங்கி விட்டேன்.
என்ன கொடுமை.... அண்ணா உனக்கு உதவி செய்வானா என்றதற்கு மாட்டான் அம்மா என்றபோது...

சமத்துவம் வந்து விட்டது என கூறுபவர்கள் முகத்தில்.....துப்ப வேண்டும் போல் பொங்கியது...

14வயது சிறுமி வீட்டு வேலை அனைத்தும் செய்ய, தூங்கி எழுந்து அவளை குறை கூறும் 20 வயது ஆண்மகன்.

அருகில் அணைத்து ஒரு தோசையை நான் ஊட்டி விட்டதை,  நிலவேம்பு கசாயம் குடிக்கச் சென்று திரும்பிய எட்டாம் வகுப்பு மாணவிகள் கண்கள் விரிய பார்த்த போது....
உன் கூடப் படிக்கும் தோழி சாப்பிட்டாளா இல்லையானு கேட்க மாட்டீர்களா?. அவளுக்கு முடியலன்னா உதவி செய்ய மாட்டீர்களா.....?

அம்மா இல்லாமல் அவள் படும் வேதனையை நீங்கள் தானே தீர்க்க வேண்டும் என்ற போது மாணவிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்தனர்.


மனித நேயம் தான் முக்கியம்.... படிப்பு அடுத்தது தான் என்றேன்....

அரசுப் பள்ளி குழந்தைகள்..... கவனிக்க பட வேண்டிய தெய்வங்கள்....

Friday, 25 August 2017

வீதி கலை இலக்கியக்களம் -42

 வீதி கலை இலக்கியக்களம் -௪௨

"மனம் சுடும் தோட்டாக்கள் "மு,கீதா ,

"ஒரு பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும் "மீரா செல்வகுமார் .

கவிதை நூல்கள் அறிமுக விழா .

எளிமையாக அறிமுகம் செய்ய நினைத்து ....கவிஞர் முத்துநிலவன் அண்ணாவால்  கலை கட்டுகின்றது....

உங்கள் வரவு எங்கள்வீ தியை சிறப்பிக்கும் அவசியம் வருக...











Monday, 21 August 2017

manam sudum thottakkal-மனம் சுடும் தோட்டாக்கள் நூல் வெளியீடு

காகிதம் பதிப்பகத்தின்
 "மனம் சுடும் தோட்டாக்கள். 
"ஒரு பட்ட மிளகாயும் கொஞ்சம் உப்பும் " ,
"அழுக்கு தேவதைகள் "ஆகிய மூன்று கவிதை நூல்களின் வெளியீட்டு விழா 


புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில்சிந்துவெளி அமைப்பின் மூலம் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா 19.8.21 சனிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் ...

 வயலோசை முனைவர் பாலதண்டாயுதம் பாடலுடன் இனிமையுடன் துவங்கியது .

 வரவேற்புரை:

 கவிஞர் முனைவர் செல்வகுமாரி அவர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்றார் ....

 வாழ்த்துரை

 திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தை ,சிந்துவெளி நாகரீகத்தின் சிறப்புகளை விரிவாக எடுத்துரைத்து வாழ்த்தினார் .கவிஞர் முனைவர் சிவ.இளங்கோ அவர்கள் .


           கவிஞர் சண்முகசுந்தரம் அவர்கள் நகைச்சுவையான வாழ்த்துரையால் அரங்கத்தை கலகலப்பாக்கினார் .

 நூல் வெளியீடு

                     புதுச்சேரி அரசு கொறடா திரு இரா.அனந்தராமன் அவர்கள் கவிஞர் தேவதாவின் "மனம் சுடும் தோட்டாக்கள் ", கவிஞர் மீரா செல்வகுமாரின் "ஒரு பட்ட மிளகாயும் கொஞ்சம் உப்பும் " கவிஞர் ஆயுதாவின் "அழுக்கு தேவதைகள் " ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டு வாழ்த்தினார் ..தமிழ் மேல் இருந்த அவரது பற்றை உணர்த்தும் வகையில் சிறப்பானதொரு வாழ்த்தை வழங்கினார் .

              நூல்களை பெற்று சிறப்பித்த தமிழ்மாமணி பூங்கொடி பாராங்குசம் அவர்கள் புதுச்சேரியில் பாவேந்தர் வாழ்வில் முக்கிய இடம் பெற்ற கவிஞர் புதுகை சிவம் அவர்களின் மகள் என்பது எனது நூலுக்கு கிடைத்த பெருமையாகக் கருதுகின்றேன் .
 நூல் பற்றிய மதிப்புரை

 முனைவர் அவ்வை .நிர்மலா , கவிஞர் மு.பாலசுப்ரமணியன் மற்றும் கவிஞர் முனைவர் ப.இரவிக்குமார் ஆகியோர் நூல்களின் சிறப்புகளை மிக அழகாக எடுத்துரைத்தனர் .
 தலைமையுரை

                     கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் புதுகைக்கும் புதுவைக்கும் பாரதிதாசன் காலத்திலேயே இருந்த உறவை அழகாக எடுத்துக்காட்டி கவிதை நூல்கள் குறித்தும் நூலாசிரியர்கள் குறித்தும்சிறப்புடன் உரையாற்றி புதுவை மக்களின் மனம் கவர்ந்தார் .

 நிறைவுப்பேருரை பேரா.முனைவர் .நா.இளங்கோ அவர்கள் தமிழ்க்கவிதையியல் வரலாற்றில் ,வளர்ச்சியில் இன்றையக் கவிஞர்களின் பொருத்தப்பாடு குறித்து நகைச்சுவையாக சிறப்புடன் பேசினார் .

ஏற்புரை

              நூலாசிரியர்களான கவிஞர் மீரா செல்வகுமார்
 கவிஞர் கீதா @தேவதா தமிழ் மற்றும் கவிஞர் ஆயுதா ஆகியோர் ஏற்புரை வழங்கினர் .

 நன்றியுரை

                 பண்டிதர் சா.து.அரிமாவளவன் அவர்கள் நன்றி கூறினார் .

 நிகழ்ச்சி தொகுப்பு
                   திருமதி சுபாசினி அவர்கள் சிறப்புடன் நிகழ்வைத்தொகுத்தளித்தார் . 

விழாவிற்கு புதுச்சேரியின் இலக்கியவாதிகள், தோழர் தமிழ்நெஞ்சம் ஆகியோர் கலந்து   கொண்டு சிறப்பித்தனர் .



                                 சென்னையிலிருந்து சகோ முரளி@Muralee Tharan ,சுபஸ்ரீ Subhasree Muraleetharan,காரைக்குடியில் இருந்து சகோ Kanmani Sundaramoorthy,திருச்சியில் இருந்து சகோ வி.சி. வில்வம் மற்றும் கியூபா ,செஞ்சையில் இருந்து தோழி Alli Ramadass,பாண்டிச்சேரியில் இருந்து தோழி Thanam Ragothaman மற்றும் வலைப்பதிவர் கலையரசி எனது அத்தை உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .


                         விழா இத்தனை சிறப்புடன் அமையக்காரணமானவர்கள் அன்புநிறை பெண்ணியம் செல்வக்குமாரிஅவர்களும் பண்டிதர் சா.து. அரிமாவளவன் அவர்களும் தான் .எனை அறியாத புதுவையில் என்னை அறிமுகப்படுத்திய விதம் வாழ்வில் என்றும் மறக்கவியாலாது .... மனம் நெகிழ்ந்த அன்புடன் அவர்களை மறுநாள் பார்த்துகலந்துரையாடி வந்தேன் .... 

என் வாழ்வில் மறக்கமுடியாத விழா இது ...

 வாழ்த்து கூறிய அன்புள்ளங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் அன்பும் ..

Thursday, 17 August 2017

மனம் சுடும் தோட்டாக்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா



அன்புடன் அழைக்கின்றோம்

கவிதை நூல்கள் வெளியீட்டு விழா...

நாள் 19.8.17 சனிக்கிழமை
காலம் மாலை 5 மணி
இடம் தமிழ் சங்கம் பாண்டிச்சேரி
தலைமை கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்

கடற்கரை
மணல்வெளியில்
கவிதைகளை
விதைத்து விட்டு
கலைந்திடத்தான்
முதலில் திட்டம்..

புதுகைக்கும்
புதுவைக்கும்
பூர்வீக சொந்தம்
உண்டோ?
தங்க மனசுகள்
எம் கவிதைகளை
சங்கத்தில் வைத்து
ஆராதிக்கப் போகின்றன..

அப்பன் பாரதி
அவன் தாசன்
குரல்கள்
கேட்டிருந்த
குயில் தோப்பின்
மிக அருகில்..

முக்கவிஞர்
முத்தெடுத்த
கவிதைகளை
உங்கள்
அகம் சேர்க்க
ஆவலுடன்
அன்பின் விழா!!

அருமைப் பெரியோரே!
அன்புநிறை தோழர்களே!!

புதுவை
தமிழ்ச்சங்க வாசலிலே.

காத்திருப்போம்
கவிதைகளோடு
நாங்களும்.

வந்து சேருங்கள்...

Friday, 4 August 2017

தயாரா சென்னை

சென்னை நலமா
செல்லமாய் மென்மையாய் கேட்க
 பறக்கின்ற நகர்வில்
ஒரு நிமிடம் அது வார்தாவின் நினைவில்
ஓலமிட்ட அவலத்தை
உயிர் பறித்த உடலாக
உறைந்து உறைந்தது.

தயாரா சென்னை ...?
ஆட்டோ ஓட்டுநர்
ஆர்வமாய் தயாரென்க...

பாலத்தில் தொங்கியத் துயில்

அம்மாயியின் நடுக்கத்தையோ
அலறி இழுத்து சென்ற
அம்மாவின் கதறலையோ..
பிறந்து கண் விழிக்காமல்
மிதந்து மறைந்த மழலையின்
அழுகையையோ.......
எதை உறைத்து
படபடத்தது.....

Tuesday, 18 July 2017

மனம் சுடும் தோட்டாக்கள்

அன்புடன் அழைக்கின்றேன் .

எனது முன்றாவது கவிதை நூல் ....

புதுகை நூல் --------புதுவையில் உதயமாக உள்ளது ...

நாள் :19.8.17 -சனிக்கிழமை

இடம் :தமிழ் சங்கம். புதுச்சேரி .

"மனம் சுடும் தோட்டாக்கள்"

கவிதை நூல் வெளியீடு ...

அழைப்பிதழ் விரைவில் ..

Tuesday, 11 July 2017

எனது இரண்டாவது நூல் "விழி தூவிய விதைகள் "

எனது இரண்டாவது நூலும் முதல் கவிதை நூலுமான

"விழி தூவிய விதைகள்"

வளரி சிற்றிதழின்2015 [௨௦௧௫] ஆண்டிற்கான கவிப்பேராசான் மீரா விருது பெற்ற நூல் ...எனது மனம் உடைந்த காலங்களில் கவிஞ்சர் சுவாதியின் தூண்டலால் பிறந்த நூல் ....இதில் மூழ்கியதால் என்னையே நான் மறந்து இந்நூலை பிரசவித்தேன் என்று தான் சொல்ல வேண்டும் .

எனது கவிதைகள் இல்லை என் உணர்வுகளை அப்பட்டமாக பிரதிபலிக்கும் நூல் .இதில் தான் பல்லாயிரக்கணக்கில் இன்றும் உலா வரும் பெண்ணியக் கவிதை "எங்கே போவேன் "என்ற கவிதை வாழ்கிறது ...

வேலுநாச்சியார் பதிப்பகம் என்ற பெயரில் நானே பதிப்பித்த நூல் .தரமான தாள்கள் இருக்க வேண்டும் என்று கூறியதும் அச்சிட்ட திருமிகு எம்.எஸ் ஆர் .ரவி சகோதரர் ....அட்டை படத்தை முப்பரிமாணத்தில் எனக்கே தெரியாமல் சிவகாசியில் அச்சிட்டு சஸ்பென்சாக காட்டினார் .

முதலில் இந்த படத்தை தேர்வு செய்த போது இது வேண்டாம்மா ...பெரிதாக்கினால் உடைந்து வரும் என்றார் ...மிகவும் தேடி இணையத்தில் எடுத்த படம் ....ஓவியர் மகேந்திரனிடம் பெரிதாக வரைந்து தாருங்கள் எனக்கேட்டு வாங்கினேன் . பின் அதை சிறிதாக்கி உடையாமல் வரும் என்று அவரிடம் கூற அட்டையாக்கி தந்தார் ....

காரசாரமான கவிதைகள்...அழகியல் தவிர்த்த நேர்மையான கவிதைகள் என்று இதற்கு முன்னுரையும் அணிந்துரையும் எழுதிய கவிஞர் முத்து நிலவன் அவர்களும் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களும் ஒரே மாதிரியான உரையை அளித்த போது மனம் அடைந்த மகிழ்வைச் சொல்ல வார்த்தைகள் இல்லை ..

தொட்டாலே எனது குழந்தையை தொடும் உணர்வு ...வேதனையான காலங்களில் மடியில் வைத்துக்கொண்டு தடவிக்கொண்டிருப்பேன் ....சிறுபிள்ளையென...



இந்நூல் புதுகை நகர்மன்றத்தில் பெண்கள் மட்டுமே அலங்கரித்த மேடையில் தோழர் பானுமதி அவர்கள் வெளியிட கவிஞர் பாலா அவர்களின் இணையர் திருமிகு மஞ்சுளா அம்மா பெற்றுக்கொண்டார்கள் ...

Saturday, 8 July 2017

இவர்களால் உலகம் வாழ்கின்றது ...

இவர்களால் உலகம் வாழ்கின்றது ...

தன குடும்பத்தையே கண்டுக்காமல் சுயநலமாக எல்லோரும் வாழும் காலத்தில் ...

தனது குடும்பம் ,எவ்வளவு பெரிய தொழில் நிறுவனம் இருந்தாலும் அத்தனையையும் விட்டுவிட்டு மக்களுக்கு தங்களால் இயன்ற நன்மையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு, வாரந்தோறும் ஒரு மாவட்டத்தில் எந்த வித பலனையும் எதிர்பாராமல் ...

நாங்க நல்லா இருக்கும் நீங்களும் நல்லா இருக்கவே நாங்கள் சேவை செய்கின்றோம் என்று உணவு தூக்கம் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு குழு செயல் பட்டுக்கொண்டு இருக்கின்றது என்றால் நம்ப முடிகின்றதா?

ஆம் தோழமைகளே ....சிறிய குழுவாக ஆரம்பித்து இன்று நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு ஆரோக்கியம் & நல்வாழ்வு என்ற குழு தமிழகத்திலிருந்து சர்க்கரை என்ற நீரிழிவு நோயை விரட்டியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு அதில் வெற்றியும் அடைந்து வருகின்றது ...

இவர்களால் நன்மை அடைந்தவர்கள் தாங்கள் பெற்ற நன்மைகளைப் பட்டியல் போட்டு உலகுக்கு அறிவித்துக்கொண்டுள்ளனர் .

நோயாளிகளை குணப்படுத்தி நோயற்றவர்களாக மாற்றினால் வரவேற்க தானே வேண்டும் ஆனால் தனது சுயலாபத்திற்காக சிலர் இக்குழுவைப்பற்றியும் பேலியோ என்ற உணவுமுறைக்குரித்தும் ,முழுமையாக படித்து அறியாமல் தூற்றி வருகின்ற நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது பாதையில் சென்று அனைவருக்கும் பயனை அளிக்கின்ற உணவுமுறையை வழிகாட்டிக்கொண்டுள்ளனர்பேலியோ குழும நிர்வாகிகள் ...

சென்ற மாதம் திருச்சியில் நடந்த பேலியோ மாநாட்டை நடத்திய சகோதரர்வி .சி.வில்வம் தனது கால் அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையிலும் மிகச்சிறப்பாக நடத்தி அசத்தினார் ...அங்கு பேலியோ குழுவைச்சேர்ந்த தன்னார்வலர்கள் ...ஒரு ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் அவர்களது பணியைத்திறம்பட செய்தது கண்டு வியப்பாக இருந்தது ...

இத்தனைக்கும் காலையில் கூட்டம் மதியம் அனைவருக்கும் அவர்களுக்கு டயட் சார்ட் தருவது என்ற நிலையில் ...

மதிய உணவைக்கூட எடுத்துக்கொள்ளாமல் தங்களை நாடி வந்த மக்களுக்கு அன்புடன் அவர்கள் அக்கறையாக டயட் சார்ட் கொடுத்த போது ...மிகச்சிறந்த நிர்வாகத்தின் கீழ் சேவையே நோக்கமாக கொண்டு அவர்கள் செயல் படுவதைக்கான்கையில் மனம் நெகிழ்ந்து போனது ..

இந்த உணவு முறை குறித்து சந்தேகக்கண் கொண்டு பார்த்தவர்கள் முழுமையாக உணர்ந்து நலன் பெற்று வருவதைக்கான்கையில் மனம் மகிழ்கின்றது ..

அவர்களுக்கு எந்த விதத்தில் கைம்மாறு செய்ய முடியும் ...நீங்கள் பெற்ற ஆரோக்கியத்தை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்று கூறாமல் கூறிக்கொண்டு அவர்கள் சேவை செய்கின்றனர் ...

முகநூலில் மட்டுமே இயங்கி மக்களுக்கு எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் உழைத்துக்கொண்டு வருகின்றனர் ...



அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள் ...

Wednesday, 5 July 2017

முதல் நூல்

எனதுமுதல் நூலான

கே ஜீவபாரதியின் "வேலு நாச்சியார் நாவலில் பெண்ணியச்சிந்தனைகள் "என்ற இளநிலை முனைவர் பட்ட ஆய்வு புத்தகமாக கவிஞர் ஜீவபாரதி அவர்களின் முயற்சியால் எனது தாத்தா தியாகி மாணிக்கம் அவர்கள் பிறந்த "சுந்தரப்பெருமாள் கோவில் "இல் திருமிகு ரெங்க சாமி மூப்பனார் அவர்களால் 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது .

அந்நூலுக்காக வேலுநாச்சியார் வாழ்ந்த இடங்களுக்குச் சென்ற போது மனம் சொல்ல முடியாத உணர்வலைகளில் மிதந்து கொண்டிருந்தது ...

இன்னமும் அவரை நினைத்தாலே மனம் பெருமிதம் கொள்ளும் ...ஜான்சிரானிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற முதல் பெண்மணி .வரலாறு மறைத்தாலும் அவள் வெளிப்பட்டு வருவது யாராலும் தடுக்க முடியவில்லை ..அவளையும் சாதி விடாமல் துரத்துகின்றது என்பது தான் வேதனை .

பெண்களுக்கென்று தனிப்படை அமைத்து அதில் குயிலி என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை தலைமை ஆக்கி எல்லோருக்கும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் ...

ஐம்பது வயதில் ஒரு பெண் ஆங்கிலேயரை எதிர்த்து யானை மேல் ஏறி போராடியிருக்கிறாள் என்றால் அவளை எப்படி நாம் கொண்டாடி இருக்க வேண்டும் ...

அவளைப்பற்றி தேடுகையில் ஆங்கிலேயர் எழுதி வைத்த சில வரிகளே ஆதாரமாக கிடைக்கின்றது ...தமிழர் வரலாறை இன்றும் மறந்து புறக்கணிக்கத் தானே செய்கின்றோம் ...

எனது முதல் நூல் வேலுநாச்சியார் பற்றி என்பதில் மிகுந்த பெருமை உண்டு ..எனது வாழ்க்கைக்கு அவரே முன்னோடி ,வழிகாட்டி எனலாம் ...

Monday, 3 July 2017

வீதி கலை இலக்கியக்களம் -40

வீதி கலை இலக்கியக்களம் -40

நாள்: 25.6.17
இடம் :ஆக்ஸ்போர்ட் சமையர்கலைக்கல்லூரி புதுக்கோட்டை .
காலம் :10.00 காலை

வரவேற்புரை :கவிஞர்  கீதா .

தலைமை :திருமிகு இரா .ஜெயா
உதவி தொடக்கக்கல்வி அலுவலர் .திருச்சி .

சிறப்பு விருந்தினர் :கவிஞர்  முருக தீட்சண்யா. மயிலாடுதுறை



கவிதை :கவிஞர்  மீரா .செல்வகுமார்,கவிஞர் செந்தில்குமார்.

நூல் அறிமுகம் :செல்வி எழில் ஓவியா "உயிராயுதம் "

பாடல் :கவிஞர் பவல்ராஜ் .

நன்றியுரை :கவிஞர் சிவகுமார் .

வீதி குறித்து விமர்சனங்கள்

செல்வி எழில் ஓவியா

எழில் ஓவியா added 7 new photos — feeling happy with இரா.ஜெயா and 3 others.
கப்படுத்தினேன்.மது ஒழிப்பிற்காக உயிரைக் கொடுத்த அய்யா சசி பெருமாள் அவர்களின் போராட்ட வாழ்க்கையை அவருடனே 10 வருடங்களுக்கு மேலாகப் பயணித்து இப்புத்தகத்தில் ஆவணப்படுத்தியுள்ளார் அருள்தாஸ் .
இப்புத்தகத்தை அறிமுகப்படுத்த வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள். 😀🙏🙏🙏😀



சிறப்பு விருந்தினர் கவிஞர் முருகதீட்சன்யா அவர்கள்
முருக தீட்சண்யா added 5 new photos.
,வீதி இலக்கிய களத்தின் அழைப்பாளனாக.
39 நிகழ்வுகளை ஒரு இலக்கிய அமைப்பு சத்தமில்லாமல் கடந்திருப்பது பெரும் வியப்பை தந்தது,40 வது நிகழ்வு சோலச்சியின் பாடலோடு தொடங்கியது, தொடர்ந்தது கவிதை வாசிப்பு, படித்ததை பகிரும் தோழர்கள் என்று ஒரு கலை இலக்கியத்திற்கான முழு தேடலாக வீதி இருந்தது,
#எழில்_ஓவியாவின்
நூல் விமர்சனத்தை விடவும் அவர் மேடையை கையாளும் விதம் என்னை கவர்ந்தது
அதை விடவும்
அவருக்குள்ள கோபமும் அதில் உள்ள நியாயமும் அவருக்கு இருக்கும் தெளிவான புரிதலும் வியக்க வைத்தது,தன் இயல்பில் தன்னெழுச்சியாக துடிப்பாக வளரும் இப்படியான குழந்தைகளை பார்க்கிற போது ஒரு மகிழ்ச்சி தோன்றும் ஒரு மகளின் தகப்பனாக.
Devatha Tamil அவர்கள் மிகச் சிறப்பாக நிகழ்வை ஒருங்கினைத்திருந்தார்,தலைமை ஏற்ற இரா.ஜெயா அவர்கள் தன் இயல்பான மொழியால் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்,ஒரு தேர்ந்த கதை சொல்லியைப் போல. இவர் எங்கள் மயிலாடுதுறைக்காரர் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
ஒரு நல்ல அவையில் என் மனம் கவர்ந்த ஆளுமைகள் குறித்து பேசும் வாய்ப்பு Stalin Saravanan வழியாக கிடைத்தது
அவருக்கும் என் அன்பு.
வீதிக்கு என் வாழ்த்துகள்.
நண்பர் Andanoor Sura
தோழர் Neela Alangudi இவர்களின் சந்திப்பும் மகிழ்வை தந்தது.




சோலச்சி புதுக்கோட்டை பாடலுடன் தொடங்கி கவிதை விமர்சனம் கதை என கலை கட்டியது வீதிக்கு வந்த தோழர்கள். இது 40வது கூட்டம். வைகறை நினைவு படுத்திக் கொண்டோம். அவரது மனைவியை சந்தித்தேன். என்னால் முழுமையாக அவர் பற்றிய நினைவை பகிர முடியவில்லை. தாழம்பூ என்ற சிற்றிதழை 39ஆண்டுகளாக நடத்தி வரும் கோவிந்தராசன் அய்யாவை சந்தித்தேன் கிரியா ஊக்கியாக இருந்தார். உள் மனம் அவரை உதாரண புருசராக எடுத்துக்கொண்டு வலுப்பெற்றது. எல்லாவற்றுக்கும் நன்றிகளை கீதா Devatha Tamil தோழருக்கே சொல்ல வேண்டும். நல்ல சைவ சாப்பாட்டுடன் ஊர்த்திரும்பினோம். துண்டு போர்த்தி கௌரவித்தார்கள் பெருசா இருந்திச்சு. நன்றி முருக தீட்சண்யாவுக்கு.

நேற்று தோழர் Neela Alangudi வை சந்தித்ததில் ஒரு மகிழ்ச்சி ஒரு மிகச் சுவாரஸ்யமான புத்தக சேஸிங் அனுபவத்தை சொன்னார். அது கதையாக மாறினால் நன்றாக இருக்குமென தோனியது. கவிஞர் பவுல்ராஜ் மக்களிசை பாடலாக காலம் மாறிப்போச்சு என்று தானே எழுதி இசையுடன் பாடினார் மிக அருமையான தொடக்கம். Devatha Tamil தோழரின் தொடக்கம் அருமை இரா.ஜெயா தோழர் ஆசிரிய பணியில் இருந்து கொண்டு நல்ல தேர்ந்த வாசிப்பாளாராக இருப்பதும் மிக்க மகிழ்ச்சி. அவர்களின் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.




துவாரகா சாமிநாதன் added 2 new photos.
 சூழலில் மிகத் திடமாக பேசினாள். என் செல்லப் பெண் துவாரகாவை இப்படித்தான் வளர்க்க வேண்டுமென நினைக்கச் செய்தாள். மக்களிசை பாடலை பாடியதும் தன் விமர்சனமாக பெண்ணின் உடைகளை மட்டுமே விமர்சித்து பாடும் போக்கு தவறெனவும் தனக்கு தாவணி கம்பெர்டா இருந்தா போட்டுகிறேன் அப்படியில்லை ஏதாவது திருநாளில் வீட்டில் மட்டும் தாவணியும் மற்ற நாளில் ஜீன்ஸ் போடுவதில் என்ன குற்றம் கண்டீர் பாப் கட்டிங்கும் குட்டை பாவாடை போட்டால் உங்களுக்கேன் கோபம் வருகிறது அது போல ஆணுக்கான உடையை ஏதும் சொல்கிறீர்களா என பொரிந்து தள்ளினாள். பதில் சொல்லும் வரை பாடிய அய்யாவை விடவில்லை. சபாஷ் போட வைத்தாள். வளர்ப்பும் வாசிப்பும் சரியான பாதையில் சென்றால் அவள் பெரிய ஆளா வருவா..நாமும் அவளை வாழ்த்துவோம். அவளாண்ட போன் நம்பர் வாங்காது வந்துட்டேன். நாமும் அவளோடு உரையாடி உரமேற்ற வேண்டுமே. சமூகத்திற்கு ஒரு போராளி கிடைத்து விட்டாள்.
நம்பிக்கை ஊற்று நீ
வீதிக்கு வா மனிதியே
உலகம் உன் பின்னால் வரும்
கனல்மதிக்கு பிறகு அடுத்ததாக இவளை காண்கிறேன்.
வளர்த்தெடுத்த அன்னை அமிர்தா தமிழ் நன்றியும் அன்பும்.

இன்றைய தினத்தை முருக தீட்சண்யா வோடு வீதியில் களித்தேன். மனப்பாரம் கொஞ்சம் குறைந்திருந்தது. ஒரு மக்களிசை. புத்தக விமர்சனம். கவிதை வாசிப்பு என கலந்து பட்ட விருந்தாக அமைந்தது புதிய அன்பர்கள் நிறைய பேரை சந்தித்த மகிழ்ச்சி. தீட்சண்யாவின் அழகான மென்மையான கதை சொல்லல் முறையில் மூழ்கி திளைத்தேன். எழுத்தும் கலையும் வாழ்வும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டுமென ஊடு இலை பாவாக பேசினார் பாரதியில் தொடங்கி புதுமை பித்தன். கு.அழகிரிசாமி. பிரபஞ்சன் என அவர்களின் கதையை மட்டும் சொல்லாமல் அவர்களைப் பற்றிய நெகிழ்வான செய்திகளை சொல்லி நெகிழச் செய்தார். வைக்கம் பசீரைப் பற்றி அவர் பேசி முடித்த போது அனைவரும் அஞ்சு நிமிசம் அமைதியாய் நெகிழ்ந்திருந்தனர். இதற்கெல்லாம் நன்றிகள் தோழர்களுக்கு Devatha Tamilஅமிர்தா தமிழ்சோலச்சி புதுக்கோட்டைமிடறு முருகதாஸ்Andanoor Sura
கவிஞர் Andanoor Sura
கவிஞர் முருகதீட்சண்யாவின் இன்றைய உரை முக்கியமானது. கவிஞரான அவர் சிறுகதைகள் குறித்து பேசிய விதமும் அவர் எடுத்துகொண்ட கதைகளும் அவரொரு தேர்ந்த வாசிப்பாளர் எனக் காட்டியது. நன்றி கவிஞரே

சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தல்

கவிஞர் துவாரகா அவர்களுக்கு கவிஞர் அந்தோணி அவர்கள் சிறப்பு செய்கின்றார் .
 கவிஞர் முருகதீட்சன்யா அவர்களுக்கு தமிழாசிரியர் திருப்பதி அவர்கள் சிறப்பு செய்கின்றார
 தலைமை வகித்த திருமிகு இரா .ஜெயா அவர்களுக்கு கவிஞர் நீலா அவர்கள்  சிறப்பு செய்கிறார் .
 சென்ற மாதம் சிறுகதை நூல் வெளியிட்ட கவிஞர்  சொலச்சிக்கு கவிஞர்  பவல்ராஜ் சிறப்பு செய்கிறார் .
 சிறுகதைக்காக விருது வாங்கிக்கொண்டே இருக்கும் எழுத்தாளர் சுராவிற்கு தாழம்பூ ஆசிரியர் சிறப்பு செய்கின்றார் .