World Tamil Blog Aggregator Thendral

Thursday, 21 September 2017

கலைப் பண்பாட்டு நிறுவனம் பயிற்சி

கலை பண்பாட்டுத்துறையின் மூலம் மூன்று நாள் பயிற்சி 20.9.17-22.9.17 வரை

காலை மதிப்பிற்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் , இராணியார் அ.ம.மே.நி.பள்ளியின் தலைமைஆசிரியர் மற்றும் CCRT யின் DRP திருமிகு ரெங்கராஜன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

முகாமில் முதல் நாள் நிகழ்வில் ஆய்வாளர், முனைவர், யு.ஜி.சி.விருது பெற்றவர்.... இந்தியாவில் எங்கு ஆய்வாளர்கள் கூட்டம் நடந்தாலும் மரியாதையுடன் அழைக்கப்படக்கூடிய மதிப்பிற்குரிய மன்னர் கல்லூரியின் பேராசிரியர் சந்திரபோஸ் அவர்கள் கருத்துரை வழங்கினார்.
பல்லாண்டுகளாக ஆய்வு செய்த மகதப்பேரரசு வட நாட்டில் இருந்து தென்னாட்டிற்கு இடம் பெயர்ந்த வரலாற்றை சான்றுகளோடு விவரித்தார் கள்.
இந்தியாவில் ஆதியில் இருந்தவர்கள் நாகர்களே . அவர்கள் ஆயிரக்கணக்கான பிரிவில் உலகெங்கும் சிதறி வாழ்ந்துள்ளனர்.
மேலும் நாகர் என்ற பெயரில் சங்க இலக்கியச்சான்றுகளை எடுத்துரைத்த போது மலைத்து நின்றோம்.

நாகர்களின் வாழ்க்கை முன்னேற்றமே நாகரீகமானது என்றார்.

10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுக்காக அர்ப்பணித்து செய்த அவரது பணி பாராட்டத்தக்கது.
வாழ்த்துகள் சார்.

அத்தோடு என்னால் விட முடியாது எங்கிருந்தோ வட மாநில அரசின் வரலாற்றை ஆய்வு செய்த நீங்கள் கீழடிக்காக செய்தது என்ன என்றேன்?

கீழடி ஆய்வாளர்கள் எனக்கு பிறகு வந்த சமீபத்திய மாணவர்கள் தான்.... எனக்கு தெரிந்தவர்கள் தான் என்றார்...
கீழடி ஆதாரங்கள் உண்மை எனில் தமிழ் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் அனைவரும் அமர்நாத் அவர்களுக்காக குரல் கொடுக்காதது ஏன் என்றேன்?

உண்மை அறிந்தவர்கள் சுயநலவாதி யாக இருப்பதால் தான் இந்த நிலமை என்றார்.

ஒன்றும் அறியாத நாங்கள் குரல் கொடுப்பதை விட நீங்கள் ஆதாரங்களோடு குரல் எழுப்பினால் உங்கள் பின் அனைவரும் போராடுவார்களே என்றேன்....போராடிக்கொண்டே தான் இருக்கிறோம் எல்லாம் அரசியல்.....

இப்படி உண்மை அறிந்தும் மௌனமாய், சுயநலமாக இருப்பது தமிழினத்திற்கு செய்யும் துரோகமில்லையா என்று எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்........

ஆய்வாளர்கள் மனது வைத்தால் முடியும்....
வித்தியாசமான பயிற்சி தான்.....கலைப் பண்பாட்டு பயிற்சி.இரண்டாம் நாள்.

 தஞ்சாவூர் பெரிய கோவில், சரஸ்வதி மகால் களப்பயணம்.

எத்தனை முறை பார்த்தாலும் பிரமிப்பையே தரும் தஞ்சாவூர் பெரிய கோவில்...
எந்த பொறியியல் கல்லூரியில் படித்து இருப்பார்கள்.
இப்பதான் தரம் குறைவான கல்வி  தருகின்றோமா...

100ஆண்டுகள் வரை வாழும் வன்னி மரம்....

1000 ஆண்டுகளுக்கு மேலான கோவில்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்குள் இருக்கும் மண் தன்மை போல் தான் இத்தனை ஆண்டுகள் ஆகியும் கோவில் தன் நிலை மாறாமல் உள்ளது ....என்ற செய்தி.

பட்டு போல் மென்மையாக இருக்கும் சரஸ்வதி மகால் சுவர்கள்....அதை பாதுகாக்காமல் தங்கள் பெயர்களை கீறி எழுதியுள்ள மக்கள்.....
அங்கு உள்ள அருங்காட்சியகம்....
பல்லாண்டுகளுக்கு முன்பே மனித உடல்.விலங்குகளின் உடல்....அறுவை சிகிச்சை பற்றிய தகவல்கள்... பின்னர் ஏன் மருத்துவம் தமிழில் இல்லாது போனது?

அரிதான கலை பொருட்கள்....

தஞ்சாவூர் மாவட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் ஒளி ஒலி காட்சி....

சரபோஜி மன்னரின் தர்பார் மண்டபம்....

கண்கள் போதவில்லை....



























...

Tuesday, 19 September 2017

லீவு வேண்டாம்

அம்மா அடிச்சிக்கிட்டே இருக்காங்க..
வீட்ல இருக்க பிடிக்கல...
ஏழாம் வகுப்பு மாணவி ...கலைவாணி..
ஏன் அடிக்கிறாங்க?
விளையாடும் பொழுது கடைக்கு அடிக்கடி போகச் சொல்றாங்க நான் போலன்னா அடிக்கிறாங்க....
அப்படியா.... ஓகே இனி நீ கடைக்கு போக வேண்டாம்..அம்மாவே கடைக்கு போகட்டும்.நீ அம்மாவோட வேலைகளை மட்டும் செய்தால் போதும்.
பசங்களா அம்மா என்னென்ன செய்வாங்க?
காலைல வாசக்கூட்டி கோலம் போடுவாங்க ....
ஓகே நீ இனி செஞ்சுடு...
பாத்திரம் தேய்ச்சி..அடுப்பு மோடைய தொடச்சி டீ போடுவாங்க...
சரி அதையும் செஞ்சுடு...
வீட்டக்கூட்டி காலப்பலகாரம் செய்வாங்க
ஓகே அதயும் செஞ்சிடு..
ஒரு மாதிரியாக என்னைப்பார்த்துக்கொண்டே.....நின்ற கலைவாணியின் முகம் ..என்னடாஇதுன்னு....
சரிடா அப்பறம் என்ன செய்வாங்க....
மறுபடியும் பாத்திரம் தேய்ச்சி,துணி துவச்சி ,கடைக்கு போய் காய் வாங்கி ....மத்தியானத்துக்கு சமைப்பார்கள்...
சரி அதையும்.... நான் சொல்றதுக்குள்ள ..... அம்மா நான் கடைக்கே போய்டுறேன்னு சரண்டர் ஆன குழந்தைய....
சபாஷ் வாவழிக்கு என்றேன்......
இன்னும் நிறைய பேசனும்....குழந்தைகளிடம் நேற்று மாலை குழந்தை நேயப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் தோழர் கவிதா மற்றும் தோழர் புதுகை செல்வா இருவரும் பள்ளிக்கு வந்து குழந்தைகளின் உரிமைகள் குறித்து பள்ளியில், வீட்டில் , சமூகத்தில் என்னென்ன என்று கலந்துரையாடும் முன் நடந்த உரையாடல்....
மிக அருமையாக இருவரும் மாணவிகளிடம் உரையாடினார்கள்.
தலைமையாசிரியரிடமும் குழந்தைகளின்,ஆசிரியர்களின் உளவியல் சிக்கல்களை கேட்டு அறிந்தனர்....
வேறு ஒரு தளத்திற்கு .....பாதை அமைத்து உள்ளனர்.....
கல்வியாளர் வசந்தி தேவி அவர்களின் கனவு குழந்தை நேயப்பள்ளியாக ஒவ்வொரு பள்ளியும் மாற்ற வேண்டும்.....தடம் பதிப்போம்.....





தங்கச்சி வீட்டுக்கு வாங்க

வாவ் அசத்தல் "தங்கச்சி வீடு."
புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 3ஆம் வீதியில்...s s hospital சாலையில்..
புதிய பேருந்து நிலையம் எதிரில்..
இனி புதுக்கோட்டை பெண்கள் கொஞ்சம் சமையலறை தாண்டி புத்தகம் படிக்கலாம்... சமூகப் பணிகளில் ஈடுபடலாம்.
சமையலறையில் இருந்து விடுவிக்கிறார் சகோதரி ரேகா (புதுகை செல்வா).
இதமான வரவேற்பில்....
"தங்கச்சி வீடு"
சாதம் நீங்க குழம்பு நாங்க என அழைக்கிறார்கள்....
இருவர் தாராளமாக சாப்பிடக்கூடிய வகையில்....
சுவையான அசைவ,சைவக்குழம்புகள் மணக்கிறது....வீட்டுத்தயாரிப்பில்.....
அசைவம்
மட்டன் குழம்பு-1 கப் -₹70
நாட்டுக்கோழி கோழிக் குழம்பு1கப்-₹60
மீன் குழம்பு-1கப்-₹50
கருவாட்டு குழம்பு1 கப்-₹40
நண்டு குழம்பு 1கப்₹40
-----+++++++----
கிரேவி
சிக்கன் கிரேவி1கப்-₹50
இரால் கிரேவி 1கப்-₹50
நண்டு கிரேவி1கப்-₹50
_----------------
சைவம்
சாம்பார்1கப்-₹20
வத்தக்குழம்பு1கப்-₹20
ரசம் 1 கப்-₹10
கூட்டுப் பொரியல்1கப்-₹10
வறுவல்1கப்-₹10
மோர்.1கப்-₹10
--------------
இதற்கு மேல் வேறென்ன வேண்டும்......
மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.. மென்மேலும் வளர..

இன்று இரவு பேலியோ உணவாக செக்கு எண்ணெயில் தயாரிக்கப்பட்ட சிக்கன், இறால் கிரேவி ..... வாங்க சாப்பிட....







Saturday, 16 September 2017

மகளிர் மட்டும்

மகளிர் மட்டும்

பெண்களின் உலகு பேரழகு நிறைந்ததாக காட்சி படுத்தியதற்கு ஒரு கைதட்டல்.

தோழமைகள் இழந்த பெண்கள் மீண்டும் சந்திக்கும் தருணங்கள் வீணையின் இசையாய்....
சாரலாய் நம்மை நனைக்க வைக்கிறது.
முகநூல் மூலம் இணைக்க வைக்கும் ஜோதிகாவின் அட்டகாசமான நடிப்பில் இளமை துள்ளுகிறது.

புடவையும் நகையும் சுதந்திரமில்லை என்பதை பெண்கள் உணரும் காலம் விரைவில் வரவேண்டும்.

குடும்பம் பெண்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி ஒரு நோயாளியாக ஆக்கிவிடுவதை பல வீடுகளில் காண்கிறோம்.

பட்டாம்பூச்சி யென பறந்து திரியும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு விட்டில் பூச்சியாய் மாறி தன் சுயத்தை அழித்து கொள்வதை அழகாக காட்டியுள்ளனர்.

ஆணாதிக்க சமூகத்தில் இப்படி எல்லாம் சிந்திக்க ,பெண்களை முழுமையாக உணர்ந்தவர்களால் தான் முடியும்.

தன் தனித்துவத்தை இழந்த பெண்களே தியாகிகளாக குடும்ப குத்துவிளக்குகளாகப் போற்றப்படுகின்றனர்.

அரிதாக சில பெண்கள் இன்னும் பள்ளி நட்பை விடாது .... தொடர்கின்றனர்.

பெண்களுக்கு அவர்களுக்காக மட்டும் சில தினங்களை ஒதுக்கி கொடுத்தால் வாழ்க்கை இனிமையானதாக மாறும் என்பதை மறுக்க இயலாது.

ஒரு ஏக்கப்பெருமூச்சோடு படத்தைப் பார்த்த பெண்கள் வெளியேறியதைக்கண்டேன் .

ஊர்வசி ,பானுப்ரியா , சரண்யா.வாழ்ந்துள்ளனர்.அவர்களுடன் நடித்த ஆண்கள் இன்னும் பேத்தி வயது பெண்களுடன் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கையில்....
பெண்கள் தங்கள் உடல் நலத்தை கூட கவனிக்காது குடும்பத்தில் மூழ்கி தன்னை பற்றி உணரும்போது உடல்.மனம்.சுயம் எல்லாம் இழந்ததை உணர்கையில் சுயபச்சாதாபம் கொள்வது உளவியல் சிக்கல்.

36 வயதினிலே ஜோ வா இது..... மீண்டும் குஷி ஜோவாக மிளிர்கிறார்.

அழகென்பது உடல் சார்ந்தது இல்லை என்பதை பெண்களும் ஆண்களும் உணரும் காலம் எப்போது?

ஒளிப்பதிவு மிகச் சிறப்பு.

80 களில் இன்ஹேலர், பரோட்டா தமிழகத்தில் வரவில்லை என்று நினைக்கிறேன்.

புறம் மறுக்க பட்ட பெண்கள் வெளிக்காற்றை சுதந்திரமாக சுவாசிக்கும் காலம் எப்போது என்று கேட்க நினைக்கையில் ஹாசினியின் நினைவு முள்ளாய் மனதில்.

பெண்களுக்குஇந்த பூமியில் வேறு எந்த விலங்குகளாலும் ஆபத்தில்லை ஒன்றைத் தவிர.........

ஆனாலும் அவள் ஆதிசக்தியாக உருவாகி வருவதை தடுக்க இனி யாராலும் முடியாது.


வாழ்த்துகள் மகளிர் மட்டும் குழுவினருக்கு.

Thursday, 14 September 2017

மதிப்பிற்குரிய நீதியரசர் அவர்களுக்கு...

மதிப்பிற்குரிய நீதியரசர் அவர்களுக்கு..... அரசு பள்ளிகளில் எத்தனை மனநலம் குறைவாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.தெரியுமா.

எங்கள் பள்ளியில் அப்படிப்பட்ட மாணவிகளை அன்பு ஒன்றின் மூலமாக வே....அவளை முன்னேற்றி உள்ளோம் தெரியுமா?

.பல வீடுகளில் இப்போது தான் முதல் தலைமுறையே பள்ளியின் வாசலை மிதிக்கின்றனர்.

தங்கள் குழந்தைகளை மதிய உணவிற்காக வும்.பாதுகாப்பிற்காகவும் மட்டுமே அனுப்பும் பெற்றோர் எத்தனை பேர் தெரியுமா?

இன்னும் பலருக்கு கல்வியின் முக்கியத்துவம் அறியாதவர்களின் குழந்தைகளுக்கு நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம்.

நாட்டின் சிறந்த மனிதர்களாக ஆக்கும் முயற்சி எங்களுடையது.

மதிப்பெண் நோக்கி ஓடத்துவங்கும் பொழுது எத்தனை குழந்தைகள் விரட்டி அடிக்கப்பட்டு எங்களை நாடுகின்றனர் தெரியுமா?

படித்த பெற்றோரின் கல்வியின் முக்கியத்துவம் தெரிந்த பெற்றோரின் குழந்தைகளும்
வாழ்க்கையே பிரச்சினையாக இருக்கும் பெற்றோரின் குழந்தைகளும் ஒன்று அல்ல.

எஙகளுக்கு பள்ளி ப்பணி மட்டுமல்ல..... அரசுப் பணி அத்தனைக்கும் ஆசிரியர்கள் தான் செய்ய வேண்டும்.

ஒரு குழந்தை வளர்கையில் கண்டிக்காமல் இரு என்று கூறுவது அந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கும் என்பது தெரியுமா?

இப்போது இருக்கும் சமூகச்சீரழிவை உண்டாக்கும் பல காரணிகளோடு ஒத்துழைக்காத பெற்றோரின் குழந்தைகளை வைத்து கொண்டு நாங்கள் படும் வேதனையை என்னவென்று கூறுவது?

நாங்கள் மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களை உருவாக்கவில்லை.
அடிமட்ட மக்களின் பிரச்சனையில் கை கோர்க்கிறோம்.

ஹாசினி பேசுகிறேன்...

ஹாசினி பேசுகிறேன்.

அம்மா உங்கள் மகளை இழந்து வருத்தப்பட வேண்டாம்.தினம்தினம் பெண் குழந்தைகளை கொடுமையாக வன்முறை செய்யும் இந்த நாட்டில் இருந்து விரைவில் இறந்ததை எண்ணி நிம்மதி அடையுங்கள்.

உங்களிடம் பேசனும் போலருக்கு அம்மா.

என்னை அவன் தூக்கி சென்ற போது ஏனோ அடிவயிற்றில் மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்தேன்.
அவன் படுத்திய பாடுகளை ..... எப்படி கூற அம்மா....

அவன் என் உடல் எங்கும் கடித்தான்.எப்படி வலித்தது தெரியுமா?.. வலியில் கத்தியபோது வாயில் துணியை வைத்து அடைத்து விட்டான்.அண்ணா வேண்டாம் என்று கதறிய போதும் விகாரமான முகத்தை என் உடலெங்கும் தேய்த்தான்.
அம்மான்னு துடித்து உதைத்த என் கால்களை விரித்து அய்யோ அம்மான்னு கண்ணீர் விட்டு கதறிய பின்னும் என் பிறப்பு உறுப்பில்.......
வீடெங்கும் சிதறிய ரத்த துளிகளை துடைத்தான்.மயங்கிய என்னை அய்யோ இன்னும் என்ன செய்வானோ என்று மனம் பதறியது....

வீட்டில் இருந்த சாக்கை எடுத்து வந்து அதில் என்னை அமுக்கினான்....நீட்டிய கால்களை உடைத்து கட்டினான்....இப்பவாவது என் அம்மா கிட்ட விட்டு விட மாட்டானான்னு ஆசைப்பட்டேன் மா..
ஆனால் என் மீது சில்லென்று தண்ணீர் போல் நனைத்தது.....அய்யோ பெட்ரோல் வாசம் வருதே அம்மா நான் உன்னை இனி பார்க்கவே மாட்டேனா.... எறிந்து கொண்டே துடித்தேன் மா.ஏனோ ஒரு நாள் நான் கம்பிமத்தாப்பில் சுட்டுக்கொண்டபோது நீ பதறி அழுத நினைவு வர கருகி கருகிப் போனேன் மா.

கடைசிவரை அப்பாவை பார்க்கத் தோணவில்லை.... அம்மா.

Wednesday, 13 September 2017

ஆசிரியர்கள் போராட்டம் ஏன்?

ஏன் போராட்டம்?
  88 இல் நான் பணியில் சேர்ந்த போது ₹610 மட்டுமே ஊதியம்.
ஒரு மிதிவண்டி வாங்க கூட கடனில் தான் வாங்க வேண்டிய நிலை.நான் பணி புரிந்த அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவளூர் பள்ளிக்கு வீட்டில் இருந்து பேரூந்து நிலையத்திற்கு ஒரு கி.மீ தூரம் நடந்து வந்து பின் பேரூந்தில் கீழப்பழுவூர் வந்து அங்கு இருந்து பேரூந்து இல்லையெனில் சிமெண்ட் ஆலைக்குக்கல் ஏற்றிச்செல்லும் லாரியில் ஏற முடியாமல் ஏறி புதுப்பாளையம் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து 9.10 மணிக்குள் சிறுவளூர் ஊ.ஒ.து.பள்ளிக்கு சென்று.மாலை அதே போல் இரண்டு கிலோமீட்டர் நடந்து லாரி அல்லது பேரூந்தில் ஏறி கைகாட்டி என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து அரியலூருக்கு வர வேண்டும்.
தாமதமாக எப்போதும் சென்றதில்லை...அந்த ஊரில் கடைகள் எதுவும் கிடையாது என்பதால்.... மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் மக்களுக்கு தேவையான மருந்துகள் வாங்கிச் செல்வது வழக்கம்.
கிராமத்தில் பணி புரியும் ஆசிரியர்கள் நிலை மிகக் கொடுமை.
மழையூரில் பணி புரிந்த போது கழிப்பறை இன்றி வீடு வீடாக சென்று கொடுமை.
ஆசிரியர்கள் போராட்டத்தால் ஊதிய உயர்வு கிடைத்தது என்பது உண்மை.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் மூலம் ஊ.ஒ..பள்ளிகள் பஞ்சாயத்து கீழ் வருவதை தடுக்க தில்லியில் ஜந்தர் மந்திர் என்ற இடத்தில் 1993 இல் நடந்த போராட்டத்தில் மாண்புமிகு நரசிம்ம ராவ் அவர்கள் ஆட்சியில் கண்ணீர் புகை க்குண்டு வீசிய போதும், இந்தியா முழுவதும் திரண்ட ஆசிரியர்கள் கொதித்து எழுந்து போராடி வெற்றி பெற்றோம்...

இன்னும் தில்லி ஜந்தர் மந்திர் போராட்டத்தின் போது  அடைத்து வைத்த கதவை உடைத்து எறிந்து சென்ற போராட்ட வீரர்கள் கண்ணீர் புகைக்குண்டுக்கு பயப்படாமல் முன்னேறிய காட்சி அடிக்கடி கண்முன் தோன்றும்.
எங்கள் முன்னோர்கள் போராடி பெற்ற பலன்களை இழந்து விடக்கூடாது என்ற உண்மையான தவிப்பில் களம் இறங்கி உள்ளோம் GPF இல் உள்ளவர்கள் CPS ஆல் பாதிக்க பட்ட சகோதர சகோதரிகளுக்காக...

சகோதரர் வைகறை இறந்த பொழுது அந்த குடும்பம் எந்த வித வருவாயும் இன்றி தவித்த நிலையில் அவர்களுக்கு உதவி செய்ய என்ன பாடுபட்டோம் என்று எங்களுக்கு தான் தெரியும்.
6 வயது சிறுவன் தன் தந்தையை இழந்து பொருளாதாரமும் இல்லாமல் அவர் மனைவி எப்படி துடித்திருப்பார்.

இது போல் எத்தனை சகோதர சகோதரிகள் துயரத்தில் உள்ளனர்.
ஐந்து வருடங்கள் மட்டுமே பதவியில் இருந்து தமிழ் நாட்டை சுரண்டி சேர்க்கும் எம்.எல்.ஏ., எம்.பிக்கு ஊதிய உயர்வு ஓய்வூதியம் வழங்கும் பொழுது...
ஆசிரியர்கள் எந்த விதத்தில் குறைந்து போனார்கள்....
சமூகப் பிரச்சினைகளுக்கு போராடவில்லை என்ற வருத்தம் எனக்கும் உண்டு.இருந்தாலும் இன்று அவர்கள் ஊதியத்தில் பிடித்து வைத்து உள்ள 16000 கோடி ரூபாய் எங்கே என்று கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு....

ஆசிரியர்களைக்குறை கூற நினைப்பவர்கள் முழுமையாக தெரிந்து கொண்டு கூறுங்கள்...
இதோ இன்று நீட் தேர்வு எதிர்ப்பு க்குரல் எழுப்பி உள்ளனர்.....

இனி சமூகத்திற்காக போராடவும் களம் இறங்குவார்கள்.....













இந்த
ஆசிரியர்கள் போராட்டம் வெல்லட்டும்....நீட் தேர்வு அழியட்டும்...

Thursday, 31 August 2017

யாருக்கான கல்வி இது?

யாருக்கான கல்வி இது?
கொஞ்சம் கூட சிந்தித்திருப்போமா....
எக்காலத்திலும் தமது வணிகத்திற்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்று திட்டமிட்டு , சிந்தனையை தூண்டி விடக்கூடாது என்று....மெக்காலேவால் உருவாக்கப்பட்ட கல்வி முறையை.....
இன்றைய இந்தியாவில் உள்ள முதலாளிகளுக்காகப் பணி செய்ய கற்பித்துக் கொண்டு உள்ளோம்.
சிலர் மட்டுமே செல்வச்செழிப்பில் வாழ 99 சதவீத மக்கள் வறுமையால் வாடக் காரணமென்ன என்று கேள்வியைத் தூண்டாதக் கல்வியால் பயன் என்ன?
ஒவ்வொருவரும் தாம் மட்டும் வறுமையில் இருந்து விடுபட எண்ணி வாழ்கிறோமே...ஒட்டுமொத்தமாக வறுமையை ஒழிக்க போராடுகிறோமா?
ஜனநாயக நாட்டில் கல்வி சமத்துவமாக அமையவில்லை ....சமமாக கொடுக்கவில்லை என்றால் அது எப்படி ஜனநாயக நாடாகும்....?
இதை கற்பிக்கும் ஆசிரியர்கள் உணர்ந்துள்ளோமா?
இந்த கல்வியறிவும் இல்லையெனில் நம் கதி என்ன?
இதைக்கூட அனைவருக்கும் கொடுக்க முடியவில்லையே....
சென்னை மாநகராட்சியில் படித்து முதுகலை பட்டம் வாங்கிய துப்புரவாளர்களின் இளைஞர்கள் மாநகராட்சி பணியாளர் பணிக்கு விண்ணப்பித்த போது ... அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி என்ன தெரியுமா...
கல்வி அறிவு இல்லாத அவர்களின் தாத்தா , அப்பா.செய்து வந்த அதே துப்புரவாளர் பணி.... வேணும்னா செய் இல்லைனா போவென துரத்தும் போது அரசுப் பணின்னு ஏற்று கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்....
என்ன படித்தாலும் இறுகப் பிடித்து இருக்கும் மூட நம்பிக்கையை ஒழிக்காத கல்வி...... ஒரு கல்வியா?
கல்வி என்பது எழுத்தறிவு தருவது அல்ல... மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதாக அமைய வேண்டும் என்று பாவ்லோபிரேயர் சொன்னபோது அவரை சிறையில் அடைத்தார்களே....ஏன்?
ஒரு போதும் மக்கள் சிந்திக்கவே கூடாதென நினைக்கும் முதலாளித்துவ அதிகாரம் ...
மக்களுக்கு எதிரான விசயங்களை சட்டப்படி நியாயம் என்று நம்மையே ஏற்க வைக்க தானே இந்த கல்வியறிவு.... பயன்படுகிறது.
சமச்சீர் கல்வி வேண்டும் என்ற போராட்டத்தில் உருவானது இந்த"கல்விமேம்பாட்டு கூட்டமைப்பு"என்ற அமைப்பு.....என்றார் . தோழர் சு.மூர்த்தி.
கல்வி அனைவருக்கும் சமமாகக்கொடுக்க வேண்டும் என்று ஏன் ஆசிரியர்கள் போராட மறுக்கிறோம்?
சமூகச்சிந்தனையே வரக்கூடாது என்று கிரிக்கெட் பின்னால்...... கேளிக்கை களுக்கு பின்னால் இளைஞர்களை.    துரத்தும் காரணம் என்ன?
மதம்......வறுமையை, துன்பத்தை,தலைவிதி என்று ஏற்றுக்கொள்ள வைப்பது எந்த விதத்தில் நியாயம்?
உப்பு மூட்டை சுமக்கும் கழுதை கதை.....முதலாளிக்கு துரோகம் செய்யக்கூடாது என்று குழந்தையிலேயே கற்றுக் கொடுக்கிறதே.....
இந்த பத்து ஆண்டுகளுக்கஅரசு பள்ளி மாணவர்கள் 256 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரி யில் படித்து உள்ளனர்.இனி அதுவும் கிடையாது.
இப்போ மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கும் கிடையாது என்கிற போது தான்.....உணரத்துவங்குகிறோம்.
நடுத்தர வர்க்கம் தனக்கு ஆபத்து வந்தால் மட்டுமே சமூக நீதி கேட்கும் நிலை.
சமவெளி மாணவர்களுக்கே இந்த நிலை என்றால் மலைவாழ் மக்களுக்கு என்ன நீதி கிடைக்கும்.அவர்களுக்கு கல்வி உத்திரவாதம் உண்டா....?
என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சு.மூர்த்தி அவர்கள் கேட்ட போது..........
சிந்திக்க வேண்டிய சூழ்நிலை......
இந்த வாய்ப்பை தந்த புதுகை செல்வா அவர்களுக்கு மிக்க நன்றி..

தொடர்ந்து போராட வேண்டிய நியாயங்கள் அதிகம்......
அதற்கு சிந்திக்க க்கூடிய தோழமைகள் ஒன்றிணைய வேண்டும்......



Tuesday, 29 August 2017

என்ன சொல்ல..?(

சாப்பிட்டியாடா......கமர் நிஷா...

ஒரு வார்த்தை தான் கேட்டேன்...பொங்கி வரும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல்...... வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இல்லை என்று தலையாட்டினாள்....
சாப்பிடலயா.... உனக்கு தானே காய்ச்சல் னு மாத்திரை கொடுத்து விட்டேன்...சாப்பிடாமலா போட்ட....அல்சர் வந்து விடுமேடா.....(பள்ளியில் என் கைப்பை தான் மருந்துக்கடை 29 வருடங்களாக)

சரி ஏன் முடியாம வந்துச்சு.....
நிறைய பாத்திரம் தேய்ச்சேன் மா....தண்ணில நின்னது ஒத்துக்கல....சுரம் வந்து விட்டது...(அவளின் அம்மா சென்ற வருடம் இறந்து விட்டார்.நல்ல தெளிவாக சிந்திக்க கூடிய புத்திசாலி மாணவி)

அப்பா எங்கே?
காலைலயே வேலைக்கு போய்டாரும்மா....
வீட்ல வேற யாரு இருக்கா...?

அண்ணன் இருக்காம்மா....அவன் தூங்கி கிட்டு இருந்தான் மா...
நான் தான் தம்பிய கிளப்பி விட்டு....வீட்டு வேலை முடிச்சேன்மா....

சாப்பாடு கொண்டு வரலயா.....இரு வாங்கிட்டு வரச் சொல்றேன்....
அதற்குள் ஒரு மாணவி அம்மா நான் இட்லி கொண்டு வந்துருக்கேன் சாப்ட சொல்லுங்கம்மா என்று சாப்பாடு டப்பாவை தூக்கி கொண்டு ஓடி வர....
வேண்டாம் மா.... நான் தோசை கொண்டு வந்துருக்கேன் என்றாள்...

சரி அவளது டிபன் பாக்ஸ எடுத்து வாங்கன்னு சொல்லி பார்த்தால்... அழகாக தோசை மை மடக்கி.குழம்பை மேல் டப்பாவில் ஊற்றி எடுத்து வந்திருந்தாள்...
யார்டா சமைச்சா?
நான் தான் மா...
எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒரு வீட்டையே சுமக்கும் கொடுமை.....
மனம் துடிக்க..கண்கலங்கி விட்டேன்.
என்ன கொடுமை.... அண்ணா உனக்கு உதவி செய்வானா என்றதற்கு மாட்டான் அம்மா என்றபோது...

சமத்துவம் வந்து விட்டது என கூறுபவர்கள் முகத்தில்.....துப்ப வேண்டும் போல் பொங்கியது...

14வயது சிறுமி வீட்டு வேலை அனைத்தும் செய்ய, தூங்கி எழுந்து அவளை குறை கூறும் 20 வயது ஆண்மகன்.

அருகில் அணைத்து ஒரு தோசையை நான் ஊட்டி விட்டதை,  நிலவேம்பு கசாயம் குடிக்கச் சென்று திரும்பிய எட்டாம் வகுப்பு மாணவிகள் கண்கள் விரிய பார்த்த போது....
உன் கூடப் படிக்கும் தோழி சாப்பிட்டாளா இல்லையானு கேட்க மாட்டீர்களா?. அவளுக்கு முடியலன்னா உதவி செய்ய மாட்டீர்களா.....?

அம்மா இல்லாமல் அவள் படும் வேதனையை நீங்கள் தானே தீர்க்க வேண்டும் என்ற போது மாணவிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்தனர்.


மனித நேயம் தான் முக்கியம்.... படிப்பு அடுத்தது தான் என்றேன்....

அரசுப் பள்ளி குழந்தைகள்..... கவனிக்க பட வேண்டிய தெய்வங்கள்....

Friday, 25 August 2017

வீதி கலை இலக்கியக்களம் -42

 வீதி கலை இலக்கியக்களம் -௪௨

"மனம் சுடும் தோட்டாக்கள் "மு,கீதா ,

"ஒரு பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும் "மீரா செல்வகுமார் .

கவிதை நூல்கள் அறிமுக விழா .

எளிமையாக அறிமுகம் செய்ய நினைத்து ....கவிஞர் முத்துநிலவன் அண்ணாவால்  கலை கட்டுகின்றது....

உங்கள் வரவு எங்கள்வீ தியை சிறப்பிக்கும் அவசியம் வருக...











Monday, 21 August 2017

manam sudum thottakkal-மனம் சுடும் தோட்டாக்கள் நூல் வெளியீடு

காகிதம் பதிப்பகத்தின்
 "மனம் சுடும் தோட்டாக்கள். 
"ஒரு பட்ட மிளகாயும் கொஞ்சம் உப்பும் " ,
"அழுக்கு தேவதைகள் "ஆகிய மூன்று கவிதை நூல்களின் வெளியீட்டு விழா 


புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில்சிந்துவெளி அமைப்பின் மூலம் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா 19.8.21 சனிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் ...

 வயலோசை முனைவர் பாலதண்டாயுதம் பாடலுடன் இனிமையுடன் துவங்கியது .

 வரவேற்புரை:

 கவிஞர் முனைவர் செல்வகுமாரி அவர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்றார் ....

 வாழ்த்துரை

 திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தை ,சிந்துவெளி நாகரீகத்தின் சிறப்புகளை விரிவாக எடுத்துரைத்து வாழ்த்தினார் .கவிஞர் முனைவர் சிவ.இளங்கோ அவர்கள் .


           கவிஞர் சண்முகசுந்தரம் அவர்கள் நகைச்சுவையான வாழ்த்துரையால் அரங்கத்தை கலகலப்பாக்கினார் .

 நூல் வெளியீடு

                     புதுச்சேரி அரசு கொறடா திரு இரா.அனந்தராமன் அவர்கள் கவிஞர் தேவதாவின் "மனம் சுடும் தோட்டாக்கள் ", கவிஞர் மீரா செல்வகுமாரின் "ஒரு பட்ட மிளகாயும் கொஞ்சம் உப்பும் " கவிஞர் ஆயுதாவின் "அழுக்கு தேவதைகள் " ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டு வாழ்த்தினார் ..தமிழ் மேல் இருந்த அவரது பற்றை உணர்த்தும் வகையில் சிறப்பானதொரு வாழ்த்தை வழங்கினார் .

              நூல்களை பெற்று சிறப்பித்த தமிழ்மாமணி பூங்கொடி பாராங்குசம் அவர்கள் புதுச்சேரியில் பாவேந்தர் வாழ்வில் முக்கிய இடம் பெற்ற கவிஞர் புதுகை சிவம் அவர்களின் மகள் என்பது எனது நூலுக்கு கிடைத்த பெருமையாகக் கருதுகின்றேன் .
 நூல் பற்றிய மதிப்புரை

 முனைவர் அவ்வை .நிர்மலா , கவிஞர் மு.பாலசுப்ரமணியன் மற்றும் கவிஞர் முனைவர் ப.இரவிக்குமார் ஆகியோர் நூல்களின் சிறப்புகளை மிக அழகாக எடுத்துரைத்தனர் .
 தலைமையுரை

                     கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் புதுகைக்கும் புதுவைக்கும் பாரதிதாசன் காலத்திலேயே இருந்த உறவை அழகாக எடுத்துக்காட்டி கவிதை நூல்கள் குறித்தும் நூலாசிரியர்கள் குறித்தும்சிறப்புடன் உரையாற்றி புதுவை மக்களின் மனம் கவர்ந்தார் .

 நிறைவுப்பேருரை பேரா.முனைவர் .நா.இளங்கோ அவர்கள் தமிழ்க்கவிதையியல் வரலாற்றில் ,வளர்ச்சியில் இன்றையக் கவிஞர்களின் பொருத்தப்பாடு குறித்து நகைச்சுவையாக சிறப்புடன் பேசினார் .

ஏற்புரை

              நூலாசிரியர்களான கவிஞர் மீரா செல்வகுமார்
 கவிஞர் கீதா @தேவதா தமிழ் மற்றும் கவிஞர் ஆயுதா ஆகியோர் ஏற்புரை வழங்கினர் .

 நன்றியுரை

                 பண்டிதர் சா.து.அரிமாவளவன் அவர்கள் நன்றி கூறினார் .

 நிகழ்ச்சி தொகுப்பு
                   திருமதி சுபாசினி அவர்கள் சிறப்புடன் நிகழ்வைத்தொகுத்தளித்தார் . 

விழாவிற்கு புதுச்சேரியின் இலக்கியவாதிகள், தோழர் தமிழ்நெஞ்சம் ஆகியோர் கலந்து   கொண்டு சிறப்பித்தனர் .



                                 சென்னையிலிருந்து சகோ முரளி@Muralee Tharan ,சுபஸ்ரீ Subhasree Muraleetharan,காரைக்குடியில் இருந்து சகோ Kanmani Sundaramoorthy,திருச்சியில் இருந்து சகோ வி.சி. வில்வம் மற்றும் கியூபா ,செஞ்சையில் இருந்து தோழி Alli Ramadass,பாண்டிச்சேரியில் இருந்து தோழி Thanam Ragothaman மற்றும் வலைப்பதிவர் கலையரசி எனது அத்தை உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .


                         விழா இத்தனை சிறப்புடன் அமையக்காரணமானவர்கள் அன்புநிறை பெண்ணியம் செல்வக்குமாரிஅவர்களும் பண்டிதர் சா.து. அரிமாவளவன் அவர்களும் தான் .எனை அறியாத புதுவையில் என்னை அறிமுகப்படுத்திய விதம் வாழ்வில் என்றும் மறக்கவியாலாது .... மனம் நெகிழ்ந்த அன்புடன் அவர்களை மறுநாள் பார்த்துகலந்துரையாடி வந்தேன் .... 

என் வாழ்வில் மறக்கமுடியாத விழா இது ...

 வாழ்த்து கூறிய அன்புள்ளங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் அன்பும் ..

Thursday, 17 August 2017

மனம் சுடும் தோட்டாக்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா



அன்புடன் அழைக்கின்றோம்

கவிதை நூல்கள் வெளியீட்டு விழா...

நாள் 19.8.17 சனிக்கிழமை
காலம் மாலை 5 மணி
இடம் தமிழ் சங்கம் பாண்டிச்சேரி
தலைமை கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்

கடற்கரை
மணல்வெளியில்
கவிதைகளை
விதைத்து விட்டு
கலைந்திடத்தான்
முதலில் திட்டம்..

புதுகைக்கும்
புதுவைக்கும்
பூர்வீக சொந்தம்
உண்டோ?
தங்க மனசுகள்
எம் கவிதைகளை
சங்கத்தில் வைத்து
ஆராதிக்கப் போகின்றன..

அப்பன் பாரதி
அவன் தாசன்
குரல்கள்
கேட்டிருந்த
குயில் தோப்பின்
மிக அருகில்..

முக்கவிஞர்
முத்தெடுத்த
கவிதைகளை
உங்கள்
அகம் சேர்க்க
ஆவலுடன்
அன்பின் விழா!!

அருமைப் பெரியோரே!
அன்புநிறை தோழர்களே!!

புதுவை
தமிழ்ச்சங்க வாசலிலே.

காத்திருப்போம்
கவிதைகளோடு
நாங்களும்.

வந்து சேருங்கள்...

Friday, 4 August 2017

தயாரா சென்னை

சென்னை நலமா
செல்லமாய் மென்மையாய் கேட்க
 பறக்கின்ற நகர்வில்
ஒரு நிமிடம் அது வார்தாவின் நினைவில்
ஓலமிட்ட அவலத்தை
உயிர் பறித்த உடலாக
உறைந்து உறைந்தது.

தயாரா சென்னை ...?
ஆட்டோ ஓட்டுநர்
ஆர்வமாய் தயாரென்க...

பாலத்தில் தொங்கியத் துயில்

அம்மாயியின் நடுக்கத்தையோ
அலறி இழுத்து சென்ற
அம்மாவின் கதறலையோ..
பிறந்து கண் விழிக்காமல்
மிதந்து மறைந்த மழலையின்
அழுகையையோ.......
எதை உறைத்து
படபடத்தது.....

Tuesday, 18 July 2017

மனம் சுடும் தோட்டாக்கள்

அன்புடன் அழைக்கின்றேன் .

எனது முன்றாவது கவிதை நூல் ....

புதுகை நூல் --------புதுவையில் உதயமாக உள்ளது ...

நாள் :19.8.17 -சனிக்கிழமை

இடம் :தமிழ் சங்கம். புதுச்சேரி .

"மனம் சுடும் தோட்டாக்கள்"

கவிதை நூல் வெளியீடு ...

அழைப்பிதழ் விரைவில் ..

Tuesday, 11 July 2017

எனது இரண்டாவது நூல் "விழி தூவிய விதைகள் "

எனது இரண்டாவது நூலும் முதல் கவிதை நூலுமான

"விழி தூவிய விதைகள்"

வளரி சிற்றிதழின்2015 [௨௦௧௫] ஆண்டிற்கான கவிப்பேராசான் மீரா விருது பெற்ற நூல் ...எனது மனம் உடைந்த காலங்களில் கவிஞ்சர் சுவாதியின் தூண்டலால் பிறந்த நூல் ....இதில் மூழ்கியதால் என்னையே நான் மறந்து இந்நூலை பிரசவித்தேன் என்று தான் சொல்ல வேண்டும் .

எனது கவிதைகள் இல்லை என் உணர்வுகளை அப்பட்டமாக பிரதிபலிக்கும் நூல் .இதில் தான் பல்லாயிரக்கணக்கில் இன்றும் உலா வரும் பெண்ணியக் கவிதை "எங்கே போவேன் "என்ற கவிதை வாழ்கிறது ...

வேலுநாச்சியார் பதிப்பகம் என்ற பெயரில் நானே பதிப்பித்த நூல் .தரமான தாள்கள் இருக்க வேண்டும் என்று கூறியதும் அச்சிட்ட திருமிகு எம்.எஸ் ஆர் .ரவி சகோதரர் ....அட்டை படத்தை முப்பரிமாணத்தில் எனக்கே தெரியாமல் சிவகாசியில் அச்சிட்டு சஸ்பென்சாக காட்டினார் .

முதலில் இந்த படத்தை தேர்வு செய்த போது இது வேண்டாம்மா ...பெரிதாக்கினால் உடைந்து வரும் என்றார் ...மிகவும் தேடி இணையத்தில் எடுத்த படம் ....ஓவியர் மகேந்திரனிடம் பெரிதாக வரைந்து தாருங்கள் எனக்கேட்டு வாங்கினேன் . பின் அதை சிறிதாக்கி உடையாமல் வரும் என்று அவரிடம் கூற அட்டையாக்கி தந்தார் ....

காரசாரமான கவிதைகள்...அழகியல் தவிர்த்த நேர்மையான கவிதைகள் என்று இதற்கு முன்னுரையும் அணிந்துரையும் எழுதிய கவிஞர் முத்து நிலவன் அவர்களும் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களும் ஒரே மாதிரியான உரையை அளித்த போது மனம் அடைந்த மகிழ்வைச் சொல்ல வார்த்தைகள் இல்லை ..

தொட்டாலே எனது குழந்தையை தொடும் உணர்வு ...வேதனையான காலங்களில் மடியில் வைத்துக்கொண்டு தடவிக்கொண்டிருப்பேன் ....சிறுபிள்ளையென...



இந்நூல் புதுகை நகர்மன்றத்தில் பெண்கள் மட்டுமே அலங்கரித்த மேடையில் தோழர் பானுமதி அவர்கள் வெளியிட கவிஞர் பாலா அவர்களின் இணையர் திருமிகு மஞ்சுளா அம்மா பெற்றுக்கொண்டார்கள் ...

Saturday, 8 July 2017

இவர்களால் உலகம் வாழ்கின்றது ...

இவர்களால் உலகம் வாழ்கின்றது ...

தன குடும்பத்தையே கண்டுக்காமல் சுயநலமாக எல்லோரும் வாழும் காலத்தில் ...

தனது குடும்பம் ,எவ்வளவு பெரிய தொழில் நிறுவனம் இருந்தாலும் அத்தனையையும் விட்டுவிட்டு மக்களுக்கு தங்களால் இயன்ற நன்மையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு, வாரந்தோறும் ஒரு மாவட்டத்தில் எந்த வித பலனையும் எதிர்பாராமல் ...

நாங்க நல்லா இருக்கும் நீங்களும் நல்லா இருக்கவே நாங்கள் சேவை செய்கின்றோம் என்று உணவு தூக்கம் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு குழு செயல் பட்டுக்கொண்டு இருக்கின்றது என்றால் நம்ப முடிகின்றதா?

ஆம் தோழமைகளே ....சிறிய குழுவாக ஆரம்பித்து இன்று நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு ஆரோக்கியம் & நல்வாழ்வு என்ற குழு தமிழகத்திலிருந்து சர்க்கரை என்ற நீரிழிவு நோயை விரட்டியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு அதில் வெற்றியும் அடைந்து வருகின்றது ...

இவர்களால் நன்மை அடைந்தவர்கள் தாங்கள் பெற்ற நன்மைகளைப் பட்டியல் போட்டு உலகுக்கு அறிவித்துக்கொண்டுள்ளனர் .

நோயாளிகளை குணப்படுத்தி நோயற்றவர்களாக மாற்றினால் வரவேற்க தானே வேண்டும் ஆனால் தனது சுயலாபத்திற்காக சிலர் இக்குழுவைப்பற்றியும் பேலியோ என்ற உணவுமுறைக்குரித்தும் ,முழுமையாக படித்து அறியாமல் தூற்றி வருகின்ற நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது பாதையில் சென்று அனைவருக்கும் பயனை அளிக்கின்ற உணவுமுறையை வழிகாட்டிக்கொண்டுள்ளனர்பேலியோ குழும நிர்வாகிகள் ...

சென்ற மாதம் திருச்சியில் நடந்த பேலியோ மாநாட்டை நடத்திய சகோதரர்வி .சி.வில்வம் தனது கால் அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையிலும் மிகச்சிறப்பாக நடத்தி அசத்தினார் ...அங்கு பேலியோ குழுவைச்சேர்ந்த தன்னார்வலர்கள் ...ஒரு ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் அவர்களது பணியைத்திறம்பட செய்தது கண்டு வியப்பாக இருந்தது ...

இத்தனைக்கும் காலையில் கூட்டம் மதியம் அனைவருக்கும் அவர்களுக்கு டயட் சார்ட் தருவது என்ற நிலையில் ...

மதிய உணவைக்கூட எடுத்துக்கொள்ளாமல் தங்களை நாடி வந்த மக்களுக்கு அன்புடன் அவர்கள் அக்கறையாக டயட் சார்ட் கொடுத்த போது ...மிகச்சிறந்த நிர்வாகத்தின் கீழ் சேவையே நோக்கமாக கொண்டு அவர்கள் செயல் படுவதைக்கான்கையில் மனம் நெகிழ்ந்து போனது ..

இந்த உணவு முறை குறித்து சந்தேகக்கண் கொண்டு பார்த்தவர்கள் முழுமையாக உணர்ந்து நலன் பெற்று வருவதைக்கான்கையில் மனம் மகிழ்கின்றது ..

அவர்களுக்கு எந்த விதத்தில் கைம்மாறு செய்ய முடியும் ...நீங்கள் பெற்ற ஆரோக்கியத்தை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்று கூறாமல் கூறிக்கொண்டு அவர்கள் சேவை செய்கின்றனர் ...

முகநூலில் மட்டுமே இயங்கி மக்களுக்கு எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் உழைத்துக்கொண்டு வருகின்றனர் ...



அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள் ...

Wednesday, 5 July 2017

முதல் நூல்

எனதுமுதல் நூலான

கே ஜீவபாரதியின் "வேலு நாச்சியார் நாவலில் பெண்ணியச்சிந்தனைகள் "என்ற இளநிலை முனைவர் பட்ட ஆய்வு புத்தகமாக கவிஞர் ஜீவபாரதி அவர்களின் முயற்சியால் எனது தாத்தா தியாகி மாணிக்கம் அவர்கள் பிறந்த "சுந்தரப்பெருமாள் கோவில் "இல் திருமிகு ரெங்க சாமி மூப்பனார் அவர்களால் 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது .

அந்நூலுக்காக வேலுநாச்சியார் வாழ்ந்த இடங்களுக்குச் சென்ற போது மனம் சொல்ல முடியாத உணர்வலைகளில் மிதந்து கொண்டிருந்தது ...

இன்னமும் அவரை நினைத்தாலே மனம் பெருமிதம் கொள்ளும் ...ஜான்சிரானிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற முதல் பெண்மணி .வரலாறு மறைத்தாலும் அவள் வெளிப்பட்டு வருவது யாராலும் தடுக்க முடியவில்லை ..அவளையும் சாதி விடாமல் துரத்துகின்றது என்பது தான் வேதனை .

பெண்களுக்கென்று தனிப்படை அமைத்து அதில் குயிலி என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை தலைமை ஆக்கி எல்லோருக்கும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் ...

ஐம்பது வயதில் ஒரு பெண் ஆங்கிலேயரை எதிர்த்து யானை மேல் ஏறி போராடியிருக்கிறாள் என்றால் அவளை எப்படி நாம் கொண்டாடி இருக்க வேண்டும் ...

அவளைப்பற்றி தேடுகையில் ஆங்கிலேயர் எழுதி வைத்த சில வரிகளே ஆதாரமாக கிடைக்கின்றது ...தமிழர் வரலாறை இன்றும் மறந்து புறக்கணிக்கத் தானே செய்கின்றோம் ...

எனது முதல் நூல் வேலுநாச்சியார் பற்றி என்பதில் மிகுந்த பெருமை உண்டு ..எனது வாழ்க்கைக்கு அவரே முன்னோடி ,வழிகாட்டி எனலாம் ...