World Tamil Blog Aggregator Thendral: ஆலாவுடன்

Thursday 6 April 2023

ஆலாவுடன்

(5.4.23)
நானும் ஆலாவும் (கார்)

கோவையில் வசிக்கும் தோழியின் குடும்ப விழாவில் கலந்து கொண்டு திருச்சி வரை தொடர்வண்டிப்பயணத்தில் வந்தேன்.
முதல் நாள் மதியம் புதுகையில் இருந்து ஆலாவில் திருச்சிவரை சென்று,ஆலாவை  இரயில் நிலையத்தில் விட்டு விட்டு தொடர் வண்டியில் சென்ற போது சற்று கவலையாக இருந்தது.
ஆலா, சாலையில் நிறுத்திச் செல்கிறேன் கவனமாக இரு என அதனிடம் கூறிவிட்டு கிளம்பினேன். (கார்கிட்ட பேசினியான்னு கிண்டல் பண்ணக்கூடாது... ரஜினிக்கு லெக்ஷ்மி போல எனக்கு ஆலாவாக்கும்)

நாம் பாட்டுக்கு நிறுத்திட்டு வந்துவிட்டோமே, இருக்குமோ இருக்காதோன்னு ஒரு உதறல் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

நேற்று இரவு பத்து மணிக்கு திரும்பி ஆலாவைப் பார்த்தபின் தான் சற்று நிம்மதியானது.

இரவில் கார் பயணம் மிகவும் பிடித்த ஒன்று என்றாலும் முதன் முதலில் என்கையில் வயிற்றில் புளி கரைத்தது.
உனக்கு தேவையா என்று கேட்ட மனதை ச்சுசூ சும்மா இரு என்று அதட்டி விட்டு காரை எடுத்தேன்.

அவசரமாக போக வேண்டும் என்று இல்லை நிதானமாக உன்னால் ஓட்ட முடியும் என்று எனக்கு நானே கூறி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.
பைபாஸ் சாலையைக் தொடும் வரை சற்று அச்சமாக இருந்தது.

இளையராஜா துணையிருக்க கவலை ஏன், என்று மெதுவாக சென்ற ஒரு லாரியின் பின் நானும் மெதுமெதுவாக..

ஆலா விட்டா பறக்கிறேன் என்று துடிக்க..
டேய் நானே கவுண்டமணி வண்டி ஓட்டனமாதிரி ஓட்டுறேன் நீ வேற 40 ஐ தாண்டக்கூடாதென அதட்டினேன்.

லாரி திடீரென்று வேறு சாலையில் நுழைய...எதிரில் கருப்புக் கம்பளம் விரித்து நல்இரவு என்னை வரவேற்றது.

மின்மினிபூச்சிகள் போல வாகனங்கள் எதிரே வரிசைக் கட்டி வர...
ஆலா எதிரே வர்ற வாகனமெல்லாம் ஒன்றாக வருதா அல்லது ஒன்றன் பின் ஒன்றாக வருதான்னு பார்த்துப் பார்த்து வண்டி ஓட்டிய கீதாவை ரசித்தேன்.
அத்தனை வாகனங்களும் கண்சிமிட்டுவது போல் ஒளியின் வரிசையாகச் சென்றது இரவின் சிறப்பு.
இரவுப் பயணம் பிடிக்குமா? ஓட்டும் ஓட்டிப்பாரும் என்று கிண்டலடித்தாள் எனக்குள் ஒருத்தி.

நடுவில் தடுப்பு இருந்ததால் கைபிடித்து நடப்பது போல அதை ஒட்டியே வந்தேன்...
பின் வந்த வாகனங்களை போங்க போங்க என்று வழிவிட்டு, பொறுமையாக வந்ததை நினைத்தால் இப்போது சிரிப்பாக இருக்கிறது.ஆனால் நேற்று நீ பொறுமையாவே போ , குடி முழுகிடாதுன்னு அதட்டிக்கொண்டே ஓட்டினேன்.
அட கீரனூர் மேம்பாலம் கொஞ்ச தூரத்தில் நான்கு விளக்குகள் ஒரே வரிசையில்.
ஒரு பேரூந்து இன்னொரு பேருந்தை ஓவர்டேக் செய்து வர ஆலா கோழிக்குஞ்சு போல் இடது பக்கத்தில் பம்மியது.

நார்த்தாமலை வந்த பிறகு அப்பாடா புதுக்கோட்டை வரப்போகுதேன்னு நிம்மதியாக ஆலா பெருமூச்சு விட்டது.
அப்படி ஓட்டனுமான்னு கேட்கக் கூடாது.
இரவில் கார் ஓட்டிச் செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை... அதற்கான முன்முயற்சி தான் இது.

ஒரு வழியாக ஆலா வெற்றிகரமாக இரவுப் பயணத்தை முடித்து அச்சம் பாதி, மகிழ்ச்சி பாதி என புதுக்கோட்டைக்கு வந்துவிட்டது. இரவு எனை வாழ்த்தி வீட்டுக்குள் அனுப்பியது.
இதெல்லாம் ஒரு விஷயமான்னு சிலருக்கு இருக்கும்.ஆனால் எனது வயதையொத்த பெண்களுக்கு தான் தெரியும் இதன் அருமை.

வயதுக்கு வந்தபிறகு மிதிவண்டி தம்பிக்கு போய்விட்டது.பணிக்காக இருசக்கர வாகனம் துணைக்கு வந்தது.
கார் ஓட்ட முடியுமா என்று சந்தேகம் வந்த போது வேலுநாச்சியார் ஐம்பது வயதுக்கு மேல் தான் யானைமீதேறி போர் செய்து வெற்றி பெற்றார் என்ற வரலாறு என்னாலும் முடியும் என்ற தன்னம்பிக்கையைத் தந்தது.

இந்தப் பயணம் எனது வாழ்வில் மறக்க முடியாத பயணம்.

நன்றி ஆலா.

No comments :

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...