World Tamil Blog Aggregator Thendral: முழு நிலா முற்றம் -6ஆவது கூட்டம்

Thursday 2 July 2015

முழு நிலா முற்றம் -6ஆவது கூட்டம்


முழு நிலா முற்றம்  -6ஆவது  கூட்டம்

நாள் 1.07.15

இடம் :கவிஞர் நா.முத்துநிலவன் அய்யா இல்லம்

மாலை 6 மணி அளவில் அய்யாவின் வீட்டில் முழுநிலா முற்றம் துவங்கியது.எங்களுக்கு முன் நிலா வந்து காத்திருந்தது..

.மொட்டைமாடியில்....மழைக்காற்று வருட தென்னங்கீற்றின் சலசலப்பில் கூட்டத்தின் பாடல் நேரம்....

கவிஞர் முத்துநிலவன்  மதுரை மீனாட்சிக்கு கல்யாணம் மற்றும் அச்சமும் நாணமும் என்ற முற்போக்கு சிந்தனையுள்ள பாடல்களைப்பாட,

கவிஞர் நீலா பச்சை மரகத பட்டுமற்றும் மயிலும் குயிலும் என்ற பாடல்களைப்பாடி தனது இனியக்குரலால் அனைவர் மனதையும் சுண்டியிழுக்க,

தமிழாசிரியர் சண்முகம் அவர்கள் கண்ணுக்கு குளமேது என்ற கர்ணன் பட பாடலைப்பாட,

சிறந்த படிப்பாளியாகிய சுதந்திரராஜன் சிந்துநதியின் மிசை நிலவினிலே என்ற பாரதியின் பாடலைப்பாட ,

கவிஞர் நாகநாதன் சங்கீதஜாதிமுல்லையைப்பாட,

கவிஞர் சோலச்சியின் கிராமத்து பாடலும்,கவிஞர் மகா.சுந்தர் அமுதே தமிழே என்ற பாடலும்...

முதல்முறையாக  சீவிசிங்காரிச்சு என்ற சிறுவயது குழந்தைத்திருமணம் பற்றிய பாடலை கவிஞர் கீதா பாட, முழுநிலா முற்றம் கலைக்கட்டியது...

சிறிது வயிற்றுக்கும் என்ற வகையில் பப்பாளிப்பழம்,கொய்யாப்பழம்,மாம்பழம் தட்டில் தவழ்ந்து வந்தன...தேநீருடன்...மருமகள் இலட்சியாவின் அன்பு நிறைந்த கைகளில்

கவிதை நேரம்

தமிழ் ஓவியா” லாவண்யாவின் கூந்தல்” என்ற கவிதையில் கருநிற அருவி என வர்ணித்தாள்...

எம்ஃபில் மாணவர் நாகநாதன்” அந்திமாலைப்பொழுதில் /திரும்பத்திரும்ப கண்ணடித்தது/தெருவிளக்கு”என்ற கவிதையுடன்.மேலும் பலகவிதைகளையும் தந்தார்.

கவிஞர் ஈழபாரதி" நிலா" பற்றியக்கவிதையைப்படித்தார்.

கவிஞர் கீதா" இயற்கை "பற்றிய கவிதையை வாசித்தார்.

கவிஞர் வைகறை படித்ததில் பிடித்த கவிதை என கூறியதில் ஒன்று
”ஏதேனுமொரு மின்னலின்/கிளைகளைப்பிடித்துக்கொண்டு/கீழிறங்கி விடுகிறது/மழை என்ற கவிதையை ச .மணி எழுதிய ”வெயிலில் நனைந்த மழை” என்ற நூலில் இருந்து கூறினார்.

மழைப்பற்றி கவிதை படிக்கையில் மழையும் வந்து ரசித்தது.
இந்நூலை கவிஞர் முத்துநிலவன்  அறிமுகம் செய்ய தமிழாசிரியர் சண்முகம் பெற்றுக்கொண்டார்.
கவிஞர் வைகறை எழுதிய
”சிலேட்டில் விழுந்த முட்டை “கவிதை அருமை.

கவிஞர் மல்லிகாவின் “ஆணாதிக்கம் கவிதை சிறப்பு,

சோலச்சியின் கவிதை குடும்பத்தகராறில் குழந்தையின் வலியைக்கூறியது,தனது” முதல்பரிசு “என்ற சிறுகதை நூல் வெளியீட்டு விழா பத்திரிக்கையை சோலச்சி வழங்கி அனைவரையும் விழாவிற்கு அழைத்தார்
தங்கை மைதிலி  சுடச்சுட எழுதிய கவிதையில்”நதி நடுங்கியது “என்ற சொல்லாடல் அனைவராலும் பேசப்பட்டது.

மீனாட்சிசுந்தரம் அவர்களின் மணவுறவு,தலைக்கவசம்,

பொறியியல் மாணவர் இராமதாஸ் எழுதி வாசித்த”உழவனின் வேதனைப்பற்றிய கவிதையும்,

ஆசிரியர் அமிர்தாவின் ”இயற்கை பேச”என்ற கவிதையும்

கவிஞர்ரேவதியின் “வான்நிலா எட்டிப்பார்த்து”என்ற கவிதையும் கவிதை நேரத்தை சிறப்பித்தன.

ஆணாதிக்கம் பற்றிய கவிதையுடன் ,மழைநேரத்தில் சுடச்சுட மசாலாபோண்டா தந்து பசியை போக்கினார் சகோ மல்லிகா.

மருமகள் இலட்சியா அனைவருக்கும் அழகாய் அன்புடன் பரிமாறினார்.

சகோதரர் கஸ்தூரி ரங்கன் தங்கை மைதிலியுடன் வந்தபோது அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆங்கிலத்தில் அனைவரும் வாழ்த்த ,அவரோ தமிழில் இன்னும் கண்டுபிடிக்கல வாழ்த்துபாடல் என கவலைப்பட உடனே முத்துநிலவன் அய்யா தமிழில் பிறந்தநாள் வாழ்த்து பாடி சகோவின் மனக்குறையை  நீக்கினார்....”வெயிலில் நனைந்தமழை “முழுநிலா முற்றத்தின் பரிசாக தங்கை மைதிலியால் சகோ கஸ்தூரிரங்கனுக்கு வழங்கப்பட்டது..
சுதந்திரராஜன் அவர்கள் தான் படித்த “காலம் தோறும் பிராம்மணீயம்”,”அசுரா”,”சரயு “ஆகிய நூல்களைப்பற்றிய கூறியது மிகச்சிறப்பாய் அமைந்தது,
மீனாட்சி,சோலச்சி,கீதா ஆகியோர் தங்களது அனுபவங்களைப்பற்றிக்கூற முழுநிலா முற்றம் குடும்ப சந்திப்பாக இனிதாய் முடிந்தது.நிகழ்ச்சியைக்கண்டு மகிழ்ந்த நிலா சிரித்துக்கொண்டே மறைந்தது கருமுகிலின் பின்....
                 

4 comments :

  1. சிறப்பான நிலா முற்றம்..இதனால் தான் இங்கு வந்த நிலா அப்படி மகிழ்வாய் ஒளிர்ந்ததா? :)

    ReplyDelete
  2. ஆகா...! இனிய பாடல்களுடன்... தொடரட்டும்... அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. இனியதோர் அனுபவம். தொடரட்டும்....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...