World Tamil Blog Aggregator Thendral

Thursday, 29 October 2015

தூங்காத கண்ணென்று...ஒன்று

தூங்காத கண்ணென்று...ஒன்று

கைநிறைய அள்ளிய நீரால்
குளிக்கவைத்து
சோப்பு போட்டு
எரியும் கண்களை உச்சுகொட்டி
துடைத்து நீர்விட்டு அலசி
அழுகாமல் ஆசுவாசப்படுத்தி
துண்டெடுத்து துடைத்து
பவுடர் தடவி
பொட்டு வைத்து
எங்கசிரி என்கிறாள்
சின்னக்கண்ணம்மா
உறங்கவைக்க முயன்றவளிடம்
உதட்டை சுழித்தபடி...

Sunday, 25 October 2015

தமிழா நீ பேசுவது தமிழா?

                  விஜய் டிவி கனெக்சன் ஷோ[25.10.15] இப்போ நடக்குது...குறில் நெடில் இணைப்பு நிகழ்வில் ஒரு பதில் சையா சாயா,ஐயா ஆயா வாம் .

என்ன கொடுமை ஐ என்பது நெடில் என்று தெரியாது நடத்துகிறார்கள்....இதுல வேற ஒரு பெண்மணி தமிழைத்தவறா பேசாதேன்னு சொன்ன்பின்னும் நான் தப்பாதான் பேசுவேன் நீங்க சரியா எடுத்துக்குங்கன்னு நிகழ்ச்சி நடத்தும் ஜெகனின் கூற்று.

குழந்தைகள் ,ஆசிரியர்கள் பள்ளியில் சொல்லி கொடுப்பதை விட டிவி பார்த்து கற்றுக்கொள்வதே அதிகமான நிலையில் இப்படி தமிழைக் குதறி நிகழ்ச்சி பண்ணலன்னு யார் அழுதா....

வன்மையாக கண்டிக்க வேண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து..

முழுசா தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசட்டும் ....எந்த மொழியையாவது முழுசாக குழந்தைகள்  கற்றுக்கொள்ளட்டும்

...தமிழின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாய் தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சியாக வேண்டாம்..

..தமிழ் இவர்களாலே வீழ்கிறது...

Saturday, 24 October 2015

தமிழனின் அதிகாரி யார் இப்போது?

அவருக்கு மாதம் ரூ 3000 சம்பளம்...பள்ளியில் துப்புரவாளர் பணி..ஊதியம் போதாமல்...விடுமுறை நாட்களில் வேறு பணிகளுக்கு சென்று ஊதியம் ஈட்டுகிறார்....அவர் பேசுகையில் குழந்தையை படிக்க வைக்க முடியலம்மா..ஆனா மனைவி குழந்தையை ஆங்கில வழிக்கல்வில தான் அதுவும் பணம் கட்டித்தான் படிக்க வைக்கணும்கிறா...எல்.கே.ஜி.கே ஆயிரக்கணக்கில் கட்ட வேண்டியதாயிருக்கு... என்று புலம்பினார்..வருத்தமாக இருந்தது...ஆங்கிலேயர் போனபின்னும் ஆங்கிலத்திற்கு அடிமையாக இருக்கும் நிலை என்று மாறும்...?

நமக்குதான் ஆங்கிலம் வரல குழந்தையாவது நல்லா படிக்கணும்னு நினைப்பது தவறில்லை...ஆனால் இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் போது பணத்திற்காக வீட்டில் வரும் பிரச்சனைகள்....நினைக்கையில் ..

என் வகுப்பில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களை விட தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களே பாடங்களை எளிதாக புரிந்து கொள்வதை கண்கூடாகப்பார்க்கின்றேன்..இதில் நானும் உள்ளடக்கம் என்பது தான் வருத்தமான ஒன்றாக...தமிழின் அருமை உணராத தலைமுறையால் எதிர்காலத் தலைமுறை தமிழில் படிப்பவர்களை ஏளனமாக பார்க்கும் நிலையை உருவாக்கி விட்டோம்...இருக்குற பிரச்னைகளில் கல்வியும் ஒரு பிரச்சனையா மாறிகிட்டு இருக்கு...எளிய மக்களுக்கு..

Thursday, 22 October 2015

ippadiyum seyyalaamee-இப்படியும் செய்யலாமே

தமிழர் திருமணம்

-நாம் அட்சதைத்தூவ அரிசியைப்பயன்படுத்துவதில்லை....அதனால் நெல்லை தருகின்றோம் நெல் போல் தழைத்து வாழ்க என வாழ்த்துங்கள் என்றார்...தேவாரத்தையும் ஆழ்வார் பாசுரங்களையும் இனிமையாகப்பாடிய படி..மணமக்கள் திருமணம் முடிந்து மேடையில் இருந்து இறங்கி அனைவரையும் நோக்கி வணங்கியபடி வர அவர்களை மனதார வாழ்த்தி நெல்லைத்தூவினர் அனைவரும்..
அம்மி என்பது தாய்க்குச்சமம்..குழவி என்பது குழந்தையாகக்கருதப்படுவதால் தமிழர்கள் அம்மி மிதிப்பதென்பது ஆறாயிரம் வருடங்களுக்கு முன் வந்த ஆரியர்களால் உருவாக்கப்பட்டது....அதனால் நாம் இன்று அம்மியைப்போற்றி வணங்கி மகிழ்கின்றோம்..என்றார்...

செம்புலப்பெயர் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற சங்க இலக்கியப்பாடலைப்பாடி மணமக்களை மாலை மாற்றி கொள்ளச்சொன்ன போது மனம் நெகிழ்ந்து போனது...

தாய்த்தமிழ் பள்ளி வைத்து நடத்திய ,தமிழ் மேலும் தமிழர் மேலும் அக்கறை கொண்ட ,கைவினையும் கலைநயமும் ஒருங்கே கொண்ட,அக்யுபஞ்சர் மருத்தவராக பலகலைகளிலும் திறமையுள்ள அக்கா புவனேஸ்வரியின் அன்பு மகள் பொன்னீஸ்வரிக்கு இன்று திருமணம்...நிறைவாக நடந்தது...என்ன சொல்றாங்கன்னே புரியாமல் திருமணம் செய்வதை விட நமக்கு புரிந்த தாய்மொழியில் வாழ்த்தி திருமணம் செய்வதென்பது மனநிறைவான ஒன்று...
விருந்தில் குட்டிச்சட்டியில் வைத்த தயிர் நம் மண்ணின் மணத்தைக்காட்டியபடி வைக்கப்பட்டது...எதிலும் புதுமை விரும்பும் அக்கா தன் மகளின் திருமணத்திலும் புதுமை செய்து மனத்தில் நிறைந்து விட்டார்..

Tuesday, 20 October 2015

kavithaikal thirakkum vanam-கவிதைகள் திறக்கும் வானம் -கவிதை நூல்

கதவுகள் திறக்கும் வானம்-
நந்தலாலா இணைய இதழில் இம்மாதம் வந்துள்ள எனது விமர்சனம்..



இந்தியப்பெண்கவிஞர்களின் கவிதைகள் -தொகுப்பு புதிய மாதவி.
விலை ரூ110/-
காவ்யா பதிப்பகம்.
----------------------------------------
விமர்சனம்

இந்தியப்பெண்ணியம் என்ற கட்டுரைக்காக திரட்டப்பட்ட கவிதைகளின் மொழியாக்கம் .

”பெண் மொழிக்குத் தேசங்கள் இல்லை, மொழிகள் இல்லை,இனங்கள் இல்லை”என்கிறார் புதிய மாதவி.பெண்கள் தங்களுக்குள் உரையாட மொழி ஒரு தடையில்லை என்பதை உணர முடிகின்றது.
“இந்தியாவில் பெண்ணியம் பேசுவதென்பது மிகவும் குழப்பமான ஒன்று.இந்தியப்பெண் பல நேரங்களில் பராசக்தியாக வழிபடப்படுகிறாள்,அதே நேரத்தில் பல சந்தர்ப்பங்களில் அவள் மிக கேவலமான அடிமையாக இழிவு செய்யப்படுகின்றாள்.ஒரு பெண் கவிஞர் என்ற வகையில் நான் அதுவா இதுவா என்கிற ஊஞ்சலாட்டத்தில் சிக்கிக்கொள்கிறேன் என்ற கவிஞர் கமலாதாஸின் கூற்றை எடுத்தாளுகின்றார்.

இந்நூல் 11 மொழிகளில்,19 கவிஞர்கள் எழுதிய 45 கவிதைகளைக்கொண்டுள்ளது.
சிந்தி  -3
தெலுங்கு -1
கன்னடம்-1
உருது-1
இந்தி -2
ஒடியா-3
மராத்தி-2
பஞ்சாபி-3
சந்தாலி-1
மைதிலி-1
சிரியா-1
சில மொழிகளின் பெயர் கூட நாம் அறியாத ஒன்றாக உள்ளது...
இக்கவிதைகளில் உள்ள எல்லா மொழிகளிலும் பெண்களின் மொழி கேட்கப்படாத ஒன்றாக சமையலறையிலும்,துணி அடுக்கும் அலமாரிகளிலும் ,அவள் புழங்கக்கூடிய பொருட்களிலும் ,இடங்களிலும் அலைமோதி தவிப்பதை உணரலாம்.
சிந்தி மொழிக்கவிஞர் -மேனகா சிவ்தஷ்ஷானியின் கவிதை பெண் தன் முகத்தைத்தேடும் நேரத்தை உணர ஆரம்பித்த தருணத்தைக்கூறுகின்றது.
             “அலங்கார மேசையில்
                ஜாடிகள் கவிழ்ந்து கிடக்கின்றன
               துண்டுகளாய் நொறுங்கிப்போய் பல வடிவங்களில்
               இவை எல்லாவற்றையும் 
              எப்படி ஒன்றாக சேர்க்கப்போகிறேன்
             இதன் கீறல்கள் வெளியில் தெரியாமல்”
உடைந்து போன பெண்ணின் மனதிற்கு உவமையாக ஜாடி கூறப்பட்டுள்ளது அருமை.

கொள்ளி வைத்தால் தான் சொர்க்கம் போகலாம்..மின்சார மயானம் வந்துவிட்ட நிலையில் நான் எப்படி சொர்க்கம் போவது என்ற கவலையை இந்திரா பூனா வாலாவின் கவிதை எடுத்துரைக்கின்றது.
            தனக்கென ஒரு வீடு,சொத்து எதுவுமற்ற நிலையில் நிறுவப்படாத கல்லறையில் உயிருடன் புதைக்கப்பட்டுளதாக கூறுகிறார்...பூபதி ஹரானந்தானி.

தெலுங்கு மொழிக்கவிதையான மந்தரப்புஹேமவதியின் கவிதைகளில் காதலிக்கும் போது காதலியின் சொற்களனைத்தும் கவிதையாகவும்,மனைவியான பின் வெற்று உரையாடலாக விருப்பமற்ற சொற்களாக மாறிவிடும் யதார்த்தத்தைச்சுட்டுகின்றது.


மனைவி தயாரித்த உணவை உண்டு கொண்டே அவளை குறைகூறும் கணவனை அடையாளம் காட்டுகின்றது ஒரு கவிதை.

கவிதைகளைப் பற்றிய பொதுவான பார்வையாக 

பெண்களின் அடிமைத்தனம்,வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே  புழுங்கி புழுங்கி மனநோயாளியாக வீட்டிலிருக்கும் பொருட்களுடன் பேசி வாழ்தல்,பழைய புத்தகத்தில் ஏறிய கரையானாய் பெண்களின் வாழ்க்கை..பெண்களின் வேதனைகளையே பெரும்பாலான கவிதைகள் கூறுகின்றன..மொழி வேறுபாடின்றி பெண்களின் சுதந்திரமற்ற நிலையை கவிதைகள் பறை சாற்றுகின்றன...

பெண் “கரடுமுரடான
           கலாச்சார நூலேணியில்
           கஷ்டப்பட்டு தொங்கிக்கொண்டிருக்கிறாள்”
என மராத்திக்கவிஞர் மல்லிக அமர்ஷேக் கூறுகின்றார்.

சில கவிதைகள் சமூகச்சிந்தனையை மையமாக கொண்டிருக்கின்றன...ஆகச்சிறந்த கவிதைகளாக அவற்றை நான் உணர்கின்றேன்...

சந்தாலி மொழிக்கவிஞர் நிர்மலா புடுல்

“இனி ஒரு போது வேண்டாம் என சொல் “சஜோனி கிஷ்கு
என சமூகத்திற்காக பாடுபட்ட பெண்கள் அடைந்த துன்பங்களை கவிதைகளாக வடிக்கின்றார்.


                  ”கூரைகள் ஒழுகினால் ஒழுகிவிட்டு போகட்டும்
                   அதன் மேலேறி மராமத்து செய்யாதே
                   பகர்பூரின் பியாரி கெம்ப்ரொம் போல
                   நீயும் வல்லாங்கு  செய்யப்படுவாய்
                   உன்மனிதர்களால்
                   உன்னை அவர்கள் 
                    விட்டை விட்டு
                    வெளியேற்றி விடுவார்கள்

என்பதன் மூலம் சமூகத்திற்காகப்பாடுபடும் பெண்களைசமூக விரோதியைப்போல பார்ப்பதும்,வல்லாகு செய்வது,சூனியக்காரியாக சித்தரிப்பதும்,நிர்வானப்படுத்துவதும் ஆண்களால் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றதை சாட்டையால் அடித்து கூறுகின்றது..

சிரியா-பெண்கவிஞர் மரமல்மஷ்ரியின் ”குழந்தைகளின் விரல் நுனியில் சாக்பீசுகள்”கவிதை
                
சிரியா புரட்சியைப்பற்றி 

      ”பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின்
     சுவர்களில் எழுதப்பட்டிருந்தது
      விடுதலை என்ற சொல்
      சரித்திரத்தின் சுவர்களில் விடுதலை
      குருதியால் எழுதியது
     அவர்களின்  பெயர்களை”

“சிரியாவின் குழந்தைகள்
சவப்பெட்டியில் மூடப்பட்டுருக்கிறார்கள்
சர்க்கரை மிட்டாய்களைப்போல”

என்ற கவிதை சிரியாவில் நடைபெறும் வன்முறைகளால் குழந்தைகள் அழிக்கப்படுவதை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது...

                           “சிரியாவின் சிறைக்கூடத்தில் 
                          பிறந்த மகன்
                        கற்பழிக்கப்பட்ட தன் தாயிடம் கேட்கிறான்
                        அம்மா” ஒரு கதை சொல்லு”


அவள் கூறும் கதையில் வரும் சன்னலைப்பற்றியும், சன்னலில் உட்காரும் பறவைகளைப்பற்றியும் கேட்க ,

                    ” சுவரில் ஒரு சன்னலையும் குட்டிப்பையனையும் 
                    வரைந்தாள்
                     கட்டிப்பயனுக்கு இரு சிறகுகளுடன்”
சிறையில் வீழ்ந்து மடியும் சிரியா நாட்டு மக்களின் நிலையை உலகிற்கு காட்சிப்படுத்துகின்றார்.

சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் கடந்த பின்னரும் பெண்களின்  சுதந்திரம் பேச்சளவில் தான் உள்ளதென்பதை கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றது...மீறி சமூகத்திற்காக போராடும் பெண்களை உடல் அரசியலால் அவளை வீழ்த்தி வீட்டுக்குள் முடக்கி வைக்க சமூகம் முயல்வதை கூறுகின்றன சில கவிதைகள்...

இந்தியப்பெண்களின் கவிதைகளைத்தொகுத்து ஒரு உலகளாவியப்பார்வையில் பெண் இனத்தின் நிலைமையை உணர்த்திய கவிஞர் புதிய மாதவிக்கு அன்பு நிறைந்த வாழ்த்துகளும் ...,பாராட்டுகளும்...

Monday, 19 October 2015

18.10.15 வீதி கூட்டம்-20

வீதி கலை இலக்கியக்களம் .கூட்டம் 20
-------------------------------------------------------------
18.10.15 அன்று வீதியின் 20 ஆவது கூட்டம் மிகச்சிறப்பாக புதுகை ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரியில் நடந்தது.
கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தலைமையேற்றார்.










மதுரையில் இருந்து வந்து சிறப்பு விருந்தினராக கவிஞர் மா.காளிதாஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்...அவர் தனது உரையில் வீதி கூட்டம் என்பது நாலு பேர் கலந்து கொண்டு சாதாரணமாக நடக்கும் கூட்டமாக நினைத்தேன் ஆனால் இங்கு முறையாக கவிஞர்களை, கட்டுரையாளர்களை,சிறுகதையாசிரியர்களை அவர்களின் படைப்புகள் குறித்த விமர்சனங்களைக்கூறி தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும் களமாக அமைந்துள்ளதை பார்த்து வியக்கிறேன் என்றார்.கவிதை குறித்து பேசுகையில் தனக்கு பிடித்த கவிதைகளைப்பற்றிய ஒப்பீடு செய்து கூறிய விதம் அனைவரையும் கவர்ந்தது..

திருச்சி பாரத மிகுமின் தொழிலக முத்தமிழ்மன்ற நிர்வாகிகள் மற்றும் அதன் பொதுச்செயலாளர்..திருமிகு மணிவண்ணன்  ஆகியோர்  முத்தமிழ்மன்றத்தின் சார்பாக விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



கவிதை வாசித்த கவிஞர் சுகன்யா ஞானசூரி இலங்கை மக்களின் வேதனையைக்குறித்தும்,தமிழ்மொழியின் மேல் கொண்ட அக்கறை கொண்ட கவிதைகளைத்தந்து கூட்டத்தினை  சிறப்பான இடத்திற்கு நகர்த்தினார்..அவரின் கவிதைகள் குறித்து விவாதிக்கப்பட்டது..


சிறுகதை-

 “மீண்டும் அகிலன்”என்ற அடர்த்தியான செறிவான கதையை கவிஞர் மாலதி அவர்கள் வாசிக்க அக்கதையின் உண்மை அனைவர் மனதிலும் தைத்தது..அவரின் முதல்கதை அனைவராலும் நேர்மறையாக விமர்சிக்கப்பட்டது...

கட்டுரை

”இரவின் பாடல் “என்ற இரவு குறித்த கட்டுரையைக் கவிதை நடையில் நடைச்சித்திரமாய் ..காட்சிப்படுத்தி அனைவர் மனதையும்  கவர்ந்த சுரேஷ் மான்யாவை அனைவரும் பாராட்டினர்...இன்னும் அவரது திறமைகள் குடத்திலிட்ட விளக்காக இருப்பதைக்கூறி..குன்றிலிட்ட விளக்காக அவரின் திறமைகள் ஒளிவீச வாழ்த்தினர்...

நூல் விமர்சனம்-

கி.ரா.வின் “பெண் கதைகள்”குறித்து கவிஞர் ஸ்டாலின் சரவணன் விமர்சனம் செய்தார்.அந்நூலில்  மூன்று கதைகள் குறித்து கூறுகையில்  ”பேதை “என்ற பேச்சி என்ற பென்ணின் கதை அனைவர் மனதிலும் ஊடுறுவி மனதை கீறிச்சென்றதை உணரமுடிந்தது...மீளாது தவிக்க வைத்தாள் பேச்சி..இரண்டாவது கதையில் கொண்டையா மல்லம்மாவின் கூடலுக்கான தவிப்புகளை அதற்கே உரிய மனநிலையில் கதை ஆசிரியரை விட ஸ்டாலின் கூறி அசத்தினார்...இவருக்குன்னு கிடைச்சிடுது ....காதலைக்கூறாமல் கூறத்தவிக்கும் கதைகள்...

சென்ற வீதிக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்ட கவிஞர் .முத்துச்சாமி அவர்களுக்கு தமிழக அரசு ஐந்து லட்சம் ரூபாய் அளித்து மாதாமாதம் ரூ5000 உதவித்தொகை அளித்திருப்பதைக்கூறி வீதிக்கூட்டம் சிறப்பான பாதையில் செல்வதை அடையாளங்காட்டினார்..அவரை அழைத்து வந்து எங்கட்கு அறிமுகம் செய்த சென்ற மாத வீதி கூட்ட அமைப்பாளர் கவிஞர் செல்வா..

வலைப்பதிவர் விழாவில் நேரலை ஒளிப்பரப்பிற்கு காரணமான  யுகே கார்த்திக் ,முகுந்த்.புனிதா.நீலா,அமிர்தாதமிழ்,அப்துல் ஜலீல் மற்றும் நாகநாதன் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது...

விழாவில் அறிவிப்புகளாக எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்களின் நூல் வெளியீடு 24.10.15 அன்று புதுகை நில அளவையர் சங்கத்தில் நடக்க உள்ளதையும்,வாசிப்பு இயக்கம் குறித்த பயிற்சி 24,25 ஆகிய நாட்களில் நடக்க உள்ளதையும் அறிவித்தார்கள் சுராவும் கவிஞர் நீலாவும்.

இம்மாத விழா ஒருங்கிணைப்பாளர்களான அப்துல் ஜலீல்,அமிர்தா இருவரும் மிகுந்த சிரத்தையுடன் விழாவை நடத்தியது அருமை...எல்லோருமே மறந்து விட்ட அஞ்சலட்டையில் விழாவிற்கு அழைப்பு அனுப்பி நினைவுகளை கடிதக்காலங்களுக்கு அனுப்பியமைக்கு இருவருக்கும் நன்றி...



Saturday, 17 October 2015

இயற்கை செய்த தவறு..

இன்று கடைவீதிக்குச்செல்லும் வழியில் ஒரே கூட்டம் .அனைவரும் ஒதுங்கி நின்றனர்...விவரம் அறியாது கொஞ்சம் முன்னே சென்ற பின் தான் கவனித்தேன்.....ஒரு பணக்கார மூதாட்டி இறந்து விட்டார் போல...அவரை அவ்வளவு கொண்டாட்டமாக வழி அனுப்பி வைக்கின்றார்கள்...இருக்கட்டும் அவர்கள் பிரச்சனை அது ...அதுக்கு வழியெல்லாம் தடை செய்வதென்பது என்ன நியாயம் ..அது மட்டுமல்ல...

நான்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில் நான்கு திசையிலும் அத்தனை பெரிய வெடி வைத்து காதைப்பிளந்தது மட்டுமல்ல...அதற்கு பின் அந்த இடம் முழுக்க குப்பையாக....எங்கும் சிதறி விதியே அலங்கோலமாக....எரிச்சல் வந்தது நமது கொண்டாட்டத்திற்காக பொது இடத்தை நாசம் பண்ணுவதை எப்போது விடுவோம்....

 யார் குப்பை போட்டார்களோ அவர்களே அக்குப்பைகளை அகற்ற வேண்டும் என சட்டம் போட்டால்  என்ன?

இயற்கை செய்த ஒரே தவறு மனிதனைப்படைத்தது தான் போல..

Monday, 12 October 2015

வலைப்பதிவர்2015 விழா -நன்றியுரை

நன்றி நன்றி நன்றி.....

-----------------------------------------------

வலைப்பதிவர் திருவிழா -2015

வலைப்பதிவர் விழா எல்லோரும் எதிர்பார்த்தது போல் மிகச்சிறப்புடன் நடந்து முடிந்துள்ளது..அந்த நிறைவு மனம் முழுக்க நிறைந்து மனதில் ஆழ்ந்த அமைதியை உருவாக்கி உள்ளது...பசியைக்கூட மறக்கச்செய்துள்ளது என்றால் மிகையில்லை...

விழா  சரியாக ஐந்து மணியளவில் நிறைவு பெறவேண்டியதால் இறுதியாக  நான் அனைவருக்கும் தனித்தனியே குறிப்பிட்டு தயாரித்த நன்றியுரையை [5 பக்கம் எழுதுனேன்...எஸ்.ரா பேச்சைக்கூட கேக்காம]வாசிக்க நேரமில்லாத காரணத்தால் விரிவாக பேச சொன்ன நிலவன் அண்ணாவே இரண்டு வரியில் கூறுங்கள்  கேட்டுக்கொண்ட காரணத்தால் மிகச்சுருக்கமாக கூறினேன்.

அவ்வுரையை இங்கு பகிர்ந்து கொண்டு எங்களது நன்றிதனை அனைத்து வலைப்பதிவர்களுக்கும் சமர்பிக்கின்றேன்.

                   *  இனிக்கின்ற செந்தமிழே
                   
                     இனியவளே இணையத்தால்
                     இத்துணை உறவுகளை
                     எமக்கீந்தவளே உனக்கு என்
                     இதயம் நிறைந்த நன்றி..

Saturday, 10 October 2015

நேரடி ஒளிபரப்பு  வலைப் பதிவர் திருவிழா 2015

 

Thursday, 8 October 2015

வலைப்பதிவர் திருவிழாவில் புத்தகங்களின் அணிவகுப்பு

வலைப்பதிவர் புத்தகக்காட்சியும் விற்பனையும்..





2015 சென்னை புத்தகக்கண்காட்சியில் வலைப்பதிவர்கள்


மகா.சுந்தர், சென்னை மூத்த பதிவர் யா.செல்லப்பா, வானம்பாடிக் கவிஞர் மீரா அவர்களின் மகனும் இப்போதைய அன்னம்-அகரம் பதிப்பக உரிமையாளருமான கதிர்மீரா அவர்கள், நா.முத்துநிலவன், புதுக்கோட்டை மு.கீதா, தில்லையகத்து கீதா, புதுகை வெற்றிவேலன் ஆகியோர்



வலைப்பதிவர் விழாவில் புத்தகக்காட்சியும் விற்பனையும் .வலைப்பதிவர்கள் மட்டும் தங்களின் புத்தகங்களை விழாவில் விற்பனை செய்ய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்...

விழாவிற்கு வருகின்ற வலைப்பதிவர்கள் தங்களது நூல்களை விற்பனைக்கு எடுத்து வரலாம்...இன்னும் இரண்டு நாள்களே உள்ளன....தயாராகிவிட்டீர்கள் தானே...

 திருமிகு விசு ஆசம் மற்றும் கவிஞர் கோபி சரபோஜி மற்றும் பலரின் நூல்களைக்காண ஆவலுடன் காத்திருக்கின்றோம் ...

Wednesday, 7 October 2015

ஒரு நாளைக்கு 48 மணி நேரம் ஆக்க முடியுமா? 11.10.15. அன்று மட்டும்..




விழா நிகழ்ச்சிகள் ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளன...மகிழ்வோடு ஓடி ஓடி அனைவரும் பணிகளைச்செய்கின்றோம்....

ஏற்பாடுகள் அனைத்தும் திருப்தியான நிலையில்...

அன்றைய நிகழ்வை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தினேன்...

இதுவரை நடந்த நிகழ்வுகள் அனைத்தும்,,,பதிவர்களின் அறிமுகம் என்ற அளவிலேயே...நடந்தது. சிறப்பு பேச்சாளர் ஒருவர் பேசியதோடு நிறைவு பெற்றுள்ளன...

இம்முறை விழாநிகழ்ச்சிகள் வரிசையாக அணிவகுத்து காத்திருக்கின்றன...

*துவக்க நிகழ்ச்சி,

*ஓவியக்கண்காட்சி திறப்பு

*அறிமுகம் ,

*போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு,

*போட்டிக்கு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு,

*விருது கொடுக்கும் தமிழ் இணையக்கல்விக்கழகத்தைச் சார்ந்தஉதவி 
இயக்குநர் திருமிகு .தமிழ்ப்பரிதி அவர்களின் வாழ்த்துரை,

*விக்கி மீடியாவைச்சார்ந்த திருமிகு இரவிசங்கர் அவர்களின் வாழ்த்துரை

*புதுகை கணினிச்சங்கத்தை தோற்றுவித்த முனைவர் அருள்முருகன் அய்யாவின் வாழ்த்துரை...

*கரந்தை அண்ணாவின் புத்தக வெளியீடு

*சகோதரர் ரூபனின் புத்தக வெளியீடு

*சிறப்பு விருந்தினர்களை கௌரவிக்கும் நிகழ்வு

*சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் எஸ்.ராமக்கிருஷ்ணன் அவர்களின் சிறப்புரை

*விழாமுடிவு..

*இதற்கு நடுவில் உணவு இடைவேளை...

காலம் போதுமா....232 பதிவர்கள் வருகைப்பதிவு செய்துள்ளார்கள்.இதனை பேரும் அறிமுகம் ஆக ஒரு நிமிடம் என வைத்தாலே 4 மணி நேரம் தேவை.பதிவு செய்யாதவர்களும் வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது...

பதிவின் போது நேரும் இடர்பாடுகள் ஒரே நேரத்தில் அனைவரும் பதிவு செய்யும் போது நிகழும் சிக்கல்..

உங்களின் முழு ஒத்துழைப்பும் காலச்சிக்கனமும் இருந்தால் மட்டுமே விழா எதிர்பார்த்த வெற்றியைத்தழுவும் என்பது மறுக்க வியலா உண்மை..

அனைவரின் எதிர்ப்பார்ப்பு... வலைப்பதிவர் சங்கத்தை இவ்விழா உருவாக்குமா என்பது ......?

ஆவலுடன் நானும்..


Friday, 2 October 2015

வேலை வேலை வேலை...

யு.கே நெட்வொர்க் அலுவலகத்தில் காலையில் பத்திரிக்கைகளை உரையிலிட்டு முகவரி ஒட்டும் பணியில் ஒரு குழு ஈடுபட....



அடுத்த குழுவில் இரண்டு நாட்கள் பள்ளி சுற்றுலா சென்று விட்டு அப்போதுதான் வந்தசுற்றுலா  ஸ்ரீமலை தனது  கையேட்டுப்பணியில் வைகறையுடன் சேர்ந்து ஈடுபட..


யு ,கே,கார்த்திக் தலைமையிலான குழு விழா நிகழ்வை நேரலையாக காட்டும் முயற்சியில் ஈடுபட...அடடா...திருமணவிழா போல அனைவரும் ஒன்றிணைந்து செயல் பட்ட காட்சி அம்மம்மா...இப்படி ஒரு மகிழ்வு கிடைக்க என்ன செய்தோம்...வலைத்தளம் திறந்த  ஒன்று தான்...

காலையில் அமெரிக்காவில் இருந்து மதுரையைச்சேர்ந்த விஜய் விழா குறித்து பேசும் பொழுது...தமிழ் பிளாக் சங்கமம் என ஒரு ஆப் வைத்துள்ளதாகவும்...அது தொடர்பான விளம்பரம் கொடுக்க பேசியவரை முதலில் வலைத்தளம் ஆரம்பியுங்கள்னு சொல்லி..ஆரம்பிக்க வச்சுட்டோம்ல...

நேற்றே வருகைப்பதிவு முடிஞ்சிடுச்சு என்றாலும் இன்றும் 7 பதிவர்கள் மாலை 8 மணி வரை பதிய ,பாவம் டிடி சார் அவர்களின் பணிகளுக்கு இடையே எங்களுக்காக உதவி செய்து வருவதற்கு என்ன கைம்மாறு செய்யப்போகின்றோம்...எங்களில் ஒருவராய் அவரை இணைத்துக்கொண்டதைத்தவிர ,,,


கியூ ஆர் கோட் கையேட்டில் போடலாம்னு ஐடியா கொடுத்த கோபிநாத்...இணையத்தளம் தொடர்பான ஷார்ட் கட் கீ புக் எடுத்து வந்து அதன் சிறப்பைக்கூறினார்..அனைவருக்கும் பயனாக இருக்கும் அந்நூல்...விழாவில் கிடைக்கும் விற்பனைக்கு...

மாலையில் மொத்த விலைக்கடையில் நானும் ஜெயாவும் கைப்பை விலை விசாரிக்க 300கைப்பைகளின்  விலை ரூ 45000 என்றார் கடைகாரர்...போட்ட பட்ஜெட்டில் பாதி மட்டும் வசூலான நிலையில் கையேடும், கைப்பையுமே ஒரு தொகையை எடுத்துக்கொள்ளும் போல.....

இருந்தாலும் முடிந்தவரை முயற்சிப்போம்னு நிலவன் அண்ணா கூறி கையேட்டு பணியில் மூழ்கியுள்ளார்...

பதிவர் பழனி.கந்தசாமி அய்யா மற்றும் துளசிதரன் ,கீதா ஆகியோருக்கு அறை முன்பதிவு பண்ணியாச்சு அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ..அவர்கள் செலவில்...

நாளை அழைப்பிதழ் அனுப்பும் பணி,துவங்க உள்ளது...தொடர்வோம்..

அழைக்கின்றோம்...ஆவலுடனே

                            வாழ்க்கையில் எதை சேர்த்தோம் என்பது பெரிதல்ல எத்தனை மனிதர்களை தெரிந்து கொண்டோம்....இனிமையான நட்புகளை கடைசி வரைக்காப்பாற்றி நாம் இல்லாத போழ்தும் நினைவில் வாழ்வதே வாழ்க்கை...


...வீட்டுக்குள் தான் இருக்கின்றோம் என்பது மறைந்து பூமிக்கு மேலே பறப்பதாய்....ஒரு பறவையாய் அனைத்தையும் பார்த்து ரசிக்கின்றோம்..தனிமை என்ற வார்த்தை மறைந்து உறவுகள் பெருகிட வாழ்கின்றோம்....

                 உலகமனைத்தும் நம் உறவுகள் தமிழால் இணைந்துள்ளதை மகிழ்வோடு காண்கின்றோம்...நாம் மனிதர்கள்,தமிழர்கள் என்ற ஒரே உணர்வே நம்மை இணைத்துள்ளது என்பதை மறுக்கவியலாது...

வாருங்கள் அனைவரும் குறையின்றி உங்களை கவனிக்க காத்திருக்கின்றோம்...நம் விழா....மொழி ஒன்றே நமது பாலம்...வென்ற தமிழ் மேலும் வெல்லட்டும் ..கணினி யுகத்தில்...
 வாழும்   வரை பல இடங்களையும்,நல்ல மனங்களையும் வலையில் வீழ்த்தி மனதிற்குள்  மகிழ்வோடு சுமப்போம்...




Wednesday, 30 September 2015

அழிவாளோ அருணிமா?

 வகை-4

 "..அருணிமா..." எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்" 



ஓடும் ரயிலில்

எட்டியே உதைத்தனர் விஷமிகளே

எகிறியே வீழ்ந்தேன். காலை

நசுக்கிச்சென்றது அடுத்து வந்தது..
நனைத்துச்சென்றது மனிதக்கழிவால்
நள்ளிரவில் குருதி ஆற்றில் நனைத்தே

வைகறையில் ஒதுங்க வந்தவன்
பதறி அலறி மருத்துவரிடம் சேர்க்க
தயங்கிநின்றவரிடம் துணிந்துரைத்தேன்

அறுத்தெறியுங்கள் என் காலை
கைப்பந்து கால்பந்து உதைத்து உதைத்து
கனவை அடையும் நேரம் இழந்தேன்...

நொறுங்கி வீழ்ந்தவளை
வரலாறு படைக்கவே பிறந்தாய்
வா..இமயம் தொட ..என்றே அழைக்க..

உயிருள்ள காலுடன் உயிரற்றதும் இணைய
தத்தி தத்தி நடந்தே தொட்டேன்...

இன்னும் ஏழு மலைகள் தொட்டே
ஓய்வேன் என்றே நினைத்தாரோ
ஓயேன் என்றே ஏறுகின்றேன்..


உலகமனைத்தும் ஒன்றாயின
மனங்கள் ஒன்றாவதெப்போது...
பெண்ணை அழித்தே வாழ்வீரோ
பண்பாடு அறிவீர் தோழர்களே..





Tuesday, 29 September 2015

வலைப்பதிவர் சந்திப்புக்கு டிக்கெட் பதிவு பண்ணிட்டீங்கத்தானே?


இங்க பார்றா..


சிவாஜியின் திறமையும்....நடிப்பும் யாருடனும் ஒப்பிடமுடியாத ஒன்றுல.

மாபெரும் அந்தமேதைக்கு பிரெஞ்ச் அரசாங்கம் அந்நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது நம்ம நடிகர்திலகம் சிவாஜிக்கு கொடுத்த போது உலகே வியந்தது.


பாரதரத்னா விருது கொடுக்கலன்னு எல்லோரும், சிவாஜிக்கு இந்தியா  மதிப்பு கொடுக்கலன்னு  வருத்தப்பட்டார்களாம்....அதற்கு ஒருவர் ,நடிகர் திலகம் சிவாஜியே ஒரு பல்கலைக்கழகம்...அவருக்கு ஏன் விருது...?

பல்கலைக்கழகம் தான் மற்றவர்களுக்கு விருது கொடுக்க வேண்டுமே தவிர ..பல்கலைக்கழகத்திற்கு யாரும் விருது கொடுக்க முடியாது....

இது எதுக்குன்னா...தினம் தினம் பதிவர் பணி கூட்டம்,வீதி கூட்டம் ,முழுநிலா முற்றம் என்ற ஓட்டத்தில் .

போட்டில எப்படியாவது கலந்துக்கனும்னு ...புத்தகங்கள் புடை சூழ எழுத

அமர்ந்த போது நிலவன் அண்ணாவின் அழைப்பு.
..என்ன கீதா
பண்றீங்க?....கட்டுரை எழுதலாம்னு உட்கார்ந்தேன் அண்ணா...

அப்படியா அத அப்றம் பாக்கலாம்.ஒரு சின்ன வேலை[இரவு விடிய விடிய செய்தேன் ] இருக்கு...அத முடிக்கனும் வாங்க என்றதும் எல்லாத்தையும் ஓரங்கட்டிட்டு...போனா ...

கையேட்டுல கொஞ்சம் மாற்றம் இருக்கு ..மூணு பேரும் சேர்ந்து செஞ்சா முடிஞ்சிடும்னு...பதிவர்களின் பட்டியலை எனக்கு,வைகறைக்கு,அண்ணாக்கு என  மூணு பேருக்கும் பிரிச்சு  கொடுத்து எழுதிட்டு வாங்கன்னு சிரிச்சுக்கிட்டே..சொன்னாங்க...

போங்க அண்ணா நான் கட்டுரையே எழுதல இன்னும்னு சொன்னதுக்குதான் மேலே சொன்ன பல்கலைக்கழகம் ......பேச்சு....

நீங்க விருது கொடுக்குற இடத்துல இருக்கீங்க ..உங்களுக்கு எதுக்கு விருதுன்னு ,முதல்ல இத பாருங்கன்னு ...கொடுத்துட்டாங்க...

என்னடா சாக்கு கிடைக்கும்னு நானும் இருந்தேன்ல...பின்ன இப்படி போட்டிக்கு வந்த கட்டுரையெல்லாம் என்னை இந்த மிரட்டு மிரட்டுனா என்ன பண்றது....?

எப்படா ஜகா வாங்கலாம்னு இருக்கும் போது அண்ணாவும் இப்படி சொல்லிட்டாங்களா...அவ்ளோதான்...என் கூட ஜெயாவும் சேந்தாச்சு..

ஆத்தாடி அண்ணா சிரிச்சுகிட்டே, பாராட்டிக்கிட்டே வேலைப்பளு தெரியாதபடி செய்ய வச்சுடுறாங்க...வைகறை பாவம் இன்னும் அந்தப்பணியில தான்.அண்ணா அழைப்பிதழ்,கேடயம்னு அந்தப்பணியில் இருப்பதால் அண்ணாவின் பங்கையும் அவரே பார்க்கின்றார்...





சுற்றுலா போயிருக்குற ஸ்ரீமலை வந்ததும் கையேட்டுப்பணி முடிஞ்சிடும்ல..

                                         ஷீல்டு மாடல் வந்தாச்சு,அழைப்பிதழ் மாதிரி வந்தாச்சு...வேளை கிடுகிடுன்னு ஆரம்பிச்சாச்சு....கையேட்டுப் பணி தொடருது...

எதிர் நோக்கிய செலவில் பாதி நன்கொடை வந்துருக்கு..மீதியும் வந்துடும்...

விழா நடக்கும் இடம் குறித்த வரைபடம் தயாரிப்பில் இருக்கு..விரைவில் அதுவும்..

பிறகென்ன ஆமா டிக்கெட் பதிவு பண்ணிட்டீங்கத்தானே..



Sunday, 27 September 2015

முழுநிலா முற்றம் -9

இன்று 27.9.15 முழுநிலா முற்றம் கூட்டம் 9 புதுகையில் உள்ள நண்பா அறக்கட்டளையில் நடந்தது.

பாடலாசிரியர் பி.கே .முத்துசாமி அவர்களைப்பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.
கவிதை

கவிஞர் நாகநாதன்-
பாஸ்புக்,காதல்,காணாமல் போய்விட்டேன் என்ற தலைப்புகளில் கவிதை வாசித்தார்...

ஆசிரியர் மலையப்பன் காதல்,ஆசிரியரிடம் பாராட்டு என்ற கவிதைகளை வாசித்தார்.

கவிஞர் செல்வா சின்னவள் பற்றிய கவிதை வாசித்தார்.

ஹைக்கூ-கவிஞர் வைகறை அம்மாவைப்பற்றி வாசித்தார்


பாடல்

கவிஞர் நீலா எஸ்.எஸ்.ஏ.திட்டத்திற்காகப்பாடப்பட்ட பாடலைப்பாடி நிலாமுற்றத்தை இனிமையாக்கினார்..அதுவரை மேகத்திற்குள் மறைந்து நின்ற நிலா மெல்ல எட்டிப்பார்த்து சிரித்தது..


நூல் விமர்சனம்-உணர்வும் உருவமும்-திருநங்கை ரேவதி

கவிஞர் கீதா திருநங்கை ரேவதி எழுதிய நூலை விமர்சனம் செய்தார்.திருநங்கைகலைப்பற்றி சமுதாயம் கொண்டுள்ள பொதுப்புத்தியை மாற்றி அவர்களையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

நிலா முற்றத்தை மேலும் எப்படி செழுமை படுத்தலாம் என விவாதிக்கப்பட்டது.

அடுத்த கூட்டம் குழந்தைகள் பங்கு பெறும் நிகழ்வாக கவிஞர் ரேவதியின் வீட்டில் நடத்த திட்டமிடப்பட்டது...












veethi meet-19 வீதி கூட்டம்-19

வீதி கலை இலக்கியக்களம்-கூட்டம் 19
நாள்:27.9.15
இடம் :புதுகை

இன்று வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் 19 வழக்கம் போல் ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரியில் நடந்தது.

கூட்டம் துவங்கும் முன் தங்களது அனுபவங்களைக்கூறும் நிகழ்வில்

ஸ்ரீமலையப்பன் தங்களது விதைக்கலாம் அமைப்பைப்பற்றியும்,வலைப்பதிவர் கையேடு தயாரிப்புக்குறித்தும் ,,

சுகன்யா ஞானசூரி வீதிக்கூட்டம் பற்றியும்,

கீதா வலைப்பதிவர் விழாப்பணிகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்கள்.

மண்ணுக்கு மரம் பாரமா?
மரத்துக்கு கொடி பாரமா?
பாடலை எழுதிய 97 வயது மூத்த பாடலாசிரியர் நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டிக்கிராமத்திலிருந்து வர விழா துவங்கியது..

தலைமை:பாவலர் பொன் .கருப்பையா அவர்கள்

வரவேற்புரை
செல்வா அவர்கள் வரவேற்புரையே தற்கால நிகழ்வுகள் நிறைந்த கவிதையாகக்கூறி வரவேற்றார்...

”வீதிக்கு வந்து விட்டோம்
வேறு வழியே இல்லை
எரிந்தே கிடந்தாலும்
இழுத்துச் செல்ல வேண்டும் தேரை”

வீதியின் குரல்கள் ஒலித்துக்கொண்டே உள்ளன”என்றார்.

கவிதை -மாலதி

அப்துல் கலாம் பற்றியும் மாணவர்கள் குறித்தும்சிறப்பான கவிதைகளை வாசித்தார்
 
“சினங்கொள்ளச்செய்யும் சேட்டைகள்
நமைச் சீண்டிப்பார்க்கும் சிற்றுளிகள்”

என்ற வரிகள் அனைவராலும் பேசப்பட்டன...

கட்டுரை -”மீண்டும் விதைக்கலாம் தமிழ்”-அப்து ஜலீல்

கனிம வளங்கள் வற்றுவதைப்போல தாய் மொழியான தமிழும் வற்றிக்கொண்டு வருகிறது.மீண்டும் விதைக்க நான் தானே முயலவேண்டும் ,,..என தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் தமிழர்களின் தாய் மொழி குறித்த அக்கறையின்மை,தன் பாரம்பரியத்திற்கு மீண்டும் நாம் வரவேண்டும் என்ற அக்கறையான கட்டுரையை அருமையாக வாசித்தார்.

நூல் விமர்சனம்.கீதா

கதவுகள் திறக்கும் வானம்- கவிதை நூல்

இந்தியப்பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு -புதியமாதவி...காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் .
விலை ரூ 110

11 மொழியில் 19 கவிஞர்கள் எழுதியுள்ள 45 கவிதைகளை உள்ளடக்கியது.

மும்பையில் வாழும் கவிஞரான புதிய மாதவி தனது முன்னுரையில்

” பெண் மொழிக்கு தேசங்கள்,மொழிகள்,இனங்கள் இல்லை”எனக்கூறி இந்தியப்பெண்ணியம் என்ற கட்டுரைக்காக தேர்வு செய்யப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இந்நூல் என்கிறார்.

எந்த மொழியாக இருந்தாலும் பெண்ணின் உணர்வுகள் தங்களது மனக்குமறலை,தனக்கென ஒரு வீடில்லாத ,காலமில்லாத நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன..பெண் நிலை எந்த நாட்டிலும் ஒரே மாதிரியாக உள்ளதை உணர முடிகின்றது.சமூக அக்கறையுள்ள இருகவிதைகள் மனதை ஆக்ரமித்துக்கொண்டது...சமூகச்சிந்தனை உள்ள பெண்ணுக்கு நேரும் வன்முறைகளை ஒரு கவிதை விளக்குகின்றது.ஒரு கவிதை சிரியா நாட்டில் குழந்தைகள் கூடச்சிறைச்சாலையில் இருப்பதையும் அந்நாட்டு மக்களின் நிலையையும் எடுத்துக்காட்டுகிறது என்றார்..

சிறுகதை-அண்டனூர் சுரா.

இலங்கை வாழும் ஒரு குடும்பம் அகதியாக ஆஸ்திரேலியாவை நோக்கி கள்ளத்தோணியில் பயணம் செய்வதைக்காட்சிகளாக்கினார்.இலங்கை மொழிநடையில் எழுதி,அவரே பாத்திரமாக மாறி வாசித்த விதம் அனைவர் மனதிலும் கதையின் வலியை உண்டாக்கியது.







சிறப்பு அழைப்பாளர் அறிமுகம் -மீரா .செல்வா

பாடலாசிரியர்,நாடக ஆசிரியர்,வசனகர்த்தா என பன்முகப்பரிமாண பி.கே.முத்துச்சாமி அவர்களை அறிமுகம் செய்தார்.

நேர்காணல்.

பாடலாசிரியர் முத்துச்சாமி அவர்கள் நேர்கானலில் பாடல் எழுதப்பட்ட சூழ்நிலைகள்,தமிழக முதலமைச்சர்களுடன் திரைத்துறையில் ஈடுப்பட்ட விதம்,தனது கதையை பிறர் திருடி ஏமாற்றிய கோபம்,காலத்தால் அழியாத பாடல்களை தனது நடுங்கும் குரலால் பாடிக்காட்டினார்...

9 நாடகங்கள்,30,000 வெண்பாக்கள் இயற்றிய வெண்பா வேந்தர் என பட்டம் பெற்றவர்..முன்னால் முதலமைச்சர் காமராசர் இவரைத்தேடி வீட்டுக்கு வந்து சென்றதாக கூறினார்.

”மண்ணுக்கு மரம் பாரமா?”

”மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்
மாட்டு வண்டியில..”

”சின்னச்சின்ன நட நடந்து
செம்பவள வாய்திறந்து”

போன்ற புகழ் பெற்ற பாடலைப்பாடியுள்ளார்.


வறுமை சூழ்ந்து வாழ்கின்ற மாபெரும் பாடலாசிரியர் பி.கே .முத்துச்சாமி பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.
நலிந்த அக்கலைஞருக்கு வீதிக்கூட்டம் சார்பாக ரூ 5000/-வழங்கப்பட்டது..
.தமிழகம் மறந்த மாபெரும் கலைஞரை வீதி அனைவருக்கும் அறிமுகப்படுத்தியது.இம்முயற்சியை செய்த விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீரா.செல்வா & செல்வா ஆகியோருக்கு வீதி அமைப்பு மனம் நிறைந்த வாழ்த்துகளை கூறியது...

அவரைப்பற்றிய ஆவணப்படம் தயாரித்த இளைஞருக்கு கௌரவம் செய்யப்பட்டது.


வீதியில் சிறப்பு விருந்தினராக திருச்சியைச்சேர்ந்த வி.சி.வில்வம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நன்றியுரை :மீரா.செல்வா

எதிலும் புதுமையாகச் செய்து பாரட்டுக்கள் பெறும் செல்வா & செல்வா கூட்டணி இன்றும் வீதிக்கூட்டத்தை சிறப்பாக நடத்தியதை அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.