World Tamil Blog Aggregator Thendral

Thursday, 2 April 2020

நூல் விமர்சனம்.-ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு

நூல் விமர்சனம்
#reading_marathan_2020_25
RM261
3/25

"ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு'
சராஜீவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை.
ஸ்லெட்டா ஃபிலிப்போவிக்.
தமிழில்
அனிதா பொன்னீலன்.
புலம் வெளியீடு
விலை ₹170
பக்கம் 208.
தனது முதல் மொழிபெயர்ப்பு நூலிலேயே பிரகாசமான எழுத்தாற்றலின் மூலம் இந்நாட்குறிப்பை நமக்கு மிக அருமையாக மொழி பெயர்த்து உள்ளார்.ஒரு குழந்தையின் மனநிலையில் இருந்தால் மட்டுமே இந்நூலின் உணர்வினை நாம் புரிந்து கொள்ள முடியும்.அந்த வகையில் ஸ்லெட்டாவின் நாட்குறிப்பை நாமும் உணரும் வகையில் சிறப்பாக மொழி பெயர்த்து உள்ளார் திருமிகு அனிதா பொன்னீலன்.
ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு,ஆனி ஃபிராங்க் நாட்குறிப்பு பற்றி கேள்வி பட்டு உள்ள நிலையில் சராஜீவோவின் ஆனி ஃபிராங்க் என்று அழைக்கப்படும்" "ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு" படிக்கும் வாய்ப்பு...ஊரடங்கு போது கிடைத்தது.
கொரோனா அச்சத்தில் ஊரடங்கின் நாட்களில் நான் இந்த நூலை வாசித்தது முழுமையாக பதுங்கு குழியில்.... மூன்று மாதங்களுக்கு மேலாக வீட்டை விட்டு நகராத ஸ்லெட்டாவின் மனதை நுண்மையாக  அறிந்து கொள்ள முடிகிறது.

யூகோஸ்லாவியா நாட்டிலிருந்து போஸ்னியாவும்,ஹெர்ஸகோவினாவும் விடுதலை அடைந்ததாக அறிவித்ததும், அங்கு வாழ்ந்து கொண்டிருந்த குரோஷியரும், இஸ்லாமியரும் விடுதலை பெற முயல ,அதை எதிர்த்து செர்பியர்கள் நடத்திய போரினை  ஸ்லெட்டா  தனது நாட்குறிப்பின் மூலம் நமக்கு காட்சிப்படுத்தி குழந்தையின் பார்வையில் போரின் தன்மையை உணர வைத்து மனதை அதிர வைக்கிறாள்.
வசதியான குடும்பத்தில் பிறந்து தந்தை வழக்கறிஞரான மாலிக், வேதியியல் வல்லுநரான அம்மா அலைகா இருவரின் ஒரே செல்ல மகளாக வசதியாக எந்த வித கவலையுமின்றி படிப்பு,இசை,பியானோ வாசித்தல், புத்தகம் வாசித்தல் ,வார இறுதியில்  தாத்தா பாட்டியின் கிராமத்திற்கு சென்று மகிழ்வாய் இயற்கையை நேசிப்பவளாக, மக்கள் மீது தீராத அன்பை பொழிபவளாக ,வானொலி கேட்பவளாக.... ஸ்லெட்டா.
போர் எதற்காக ஏன் என்று கேள்வி கேட்பவளாக பத்து வயது சிறுமியான ஸ்லெட்டா  நம்மை காலத்தின் பின்னே அழைத்து சென்று மனிதர்களின் கோர முகத்தைக் காட்டுகின்றாள்
ஆனி ஃபிராங்க் தனது நாட்குறிப்பிற்கு கிட்டி என பெயர் வைத்ததை அறிந்ததும் தனது நாட்குறிப்பிற்கு "மிம்மி" என பெயர் வைத்து தனது உணர்வுகளை எண்ணங்களை அதனிடம் பதிவு செய்கிறாள் ".மிம்மி" அவளுக்கு சிறந்த தோழியாக அமைதியாக அவளது சோக எண்ணங்களை  நிரப்பப்படுவதற்காக பொறுமையாக காத்திருக்கின்றது.
குழந்தைகள் உயிரற்றவைகளுக்கும் பெயர் வைத்து உயிர்ப்பிக்கும் வல்லமையுடையவர்கள்.

செப்டம்பர் 1991 முதல் அக்டோபர் 1993 வரை எழுதப்பட்ட நாட்குறிப்பு நமக்கு செரஜீவோவில் நடந்த போரின் நிலைமையை கூறி மக்கள் படும் துயரங்களை எடுத்து உரைக்கின்றது.
குழந்தைகளுக்கே உரிய தன்மையுடன் எதற்காக இந்த போர்.?.ஏன்? எப்போது முடியும்? என தனக்குள் கேள்வி கேட்கிறாள்.வீட்டின் அருகேயுள்ள குன்றிலிருந்து வீசப்படும் குண்டுகளுக்கு பயந்து வீட்டின் அடிப்பகுதியில் இருட்டாக இருக்கும் நிலவறையில் அடிக்கடி செல்ல
நேரிடும் போதெல்லாம் எப்போது இந்த போர் முடிந்து நண்பர்களுடன் விளையாட முடியும்.... தாத்தா பாட்டியின் கிராமத்திற்கு செல்ல முடியும் என்று ஏங்குகிறாள்.
"போர் எங்கள் படிப்பிற்கு இடையூறு செய்து,பள்ளிகளை மூட வைத்து, குழந்தைகளை வகுப்பறைகளுக்கு பதிலாக பதுங்கு குழிகளுக்கு அனுப்புகின்றது . போர் வெறியர்களுக்கு அன்பைப் பற்றியோ, எதையாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஆசையோ எதுவும் தெரியாது.எப்படி அழிப்பது, எரிப்பது, ஏதாவது பொருட்களை எடுத்து செல்வது என்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும்."என மிம்மியிடம் பதிவு செய்கிறாள்.
      போரின் விளைவாக படுகொலை, கொன்று குவிப்பு, பயங்கரம், இரத்தம், ஓலங்கள், கண்ணீர், பரிதவிப்பு....இவையே ஸ்லெட்டா அறிகிறாள்.ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் வளமான வாழ்க்கை அழிந்து மின்சாரமின்றி, தண்ணீரின்றி,எரிவாயு இன்றி,உணவின்றி ரொட்டிக்கு ஏங்கும் நிலை ஏற்க முடியாத வேதனையாக உள்ளது. அவளுக்கு பிடித்த பிஸாவிற்காக மூன்று மாதங்களாக குழந்தை ஏங்குவதை எப்படி தாங்கிக் கொள்வது.
மஞ்சள் பறவை சிக்கோவும் ,சிஸி பூனையும் அவளுக்கு ஆறுதலாக இருந்து.   இறந்து விடுகின்றன.
இந்த போர்  அவளிடமிருந்து வருடக்கணக்கான வாழ்க்கையையும்,குழந்தைமையையும்,
முதியவர்களின் அமைதியான முதுமைக் காலத்தையும் திருடிச் சென்றுவிட்டதாக கோபப்படுகிறாள்.
ஒன்றுமறியாத பதினோரு வயது சிறுமி தனது வாழ்வில் விருப்பமின்றி நுழையும் போரின் காரணமாக தான் நேசிக்கும் நாட்டை, உறவுகளை,நண்பர்களை இழந்து தனிமையில் வாடி , அவள் நேசிக்கும் அற்புதமான பிள்ளை பருவத்தை அருவருப்பான போர் கொண்டு செல்வதை எண்ணி கதறுகின்றாள்.
அவளுக்கு போர் வாழ்க்கை பழகிவிடுகிறது.
அவள் எழுதிய நாட்குறிப்பு 1993 ஜுலை 17  நூலாக வெளியிடப்பட்ட விழாவைப் பற்றி மிம்மியிடம்(அந்த நாட்குறிப்பு) கூறுவது சிறப்பு.
அவளது தோழி மஜாவின் முயற்சியில்
செராஜீவோவின் பாதிப்பு மிம்மியால் உலகமெங்கும் அறியவைக்கப்படுகிறது.
மிம்மியை உலகமே நேசிக்கத் துவங்குகிறது.
ஸ்பெயின், பிரான்ஸ்,யு.எஸ்.ஏ., இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து ஸ்லெட்டாவை பேட்டி எடுக்க வருகிறார்கள்.
உலக அளவில் அவளுக்கு பேனா நண்பர்கள் கிடைக்கின்றார்கள்.அவர்களின்  ஆறுதலான கடிதங்கள் போரின் நடுவே அவளுக்கு காலங்கழித்து கிடைத்தாலும் மகிழ்வைத் தருகின்றன.
நண்பர்களை இழந்து வாடும் அவளுக்கு அவர்கள் நல்ல நண்பர்கள் ஆகிறார்கள்.
இந்த அற்ப போர் விளையாட்டின் முடிவில் 15,000 பேர் பலி.அவர்களில் 3000 குழந்தைகள் என்பது ஏற்க முடியாத வன்முறை.50,000 பேர் நிரந்தரமாக வாழத் தகுதியற்றவர்களாகிறார்கள்.
இதற்கு நடுவே வருகின்ற பிறந்தநாள் விருந்துகள் மருந்தாக அமைகின்றன.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் ஆறுதலாக இருக்கின்றன.
குழந்தைகள் எப்போதும் போரை விரும்புவதில்லை.
ஸ்லெட்டாவை பேட்டி காணும் நிருபர் அவள் அருகே குண்டு விழுந்தாலும் கவலைப்படாமல் இயல்பாக இருக்கும் நிலை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
அவள் தன்னைத்தானே தேற்றி தன்னம்பிக்கையுடையவளாக இருக்கின்றாள்.
பெரியவர்களின் பேராசைக்கு குழந்தைகள் எல்லா நாடுகளிலும் பலியாகின்றனர்....
அவர்களுக்கான உலகத்தை எப்போது உருவாக்க போகின்றோம் என்ற எண்ணத்தை விதைக்கிறது மிம்மி.
மு.கீதா
புதுக்கோட்டை.


Thursday, 26 March 2020

தலைமுறைகள் நாவல் விமர்சனம்

தலைமுறைகள்-நீல.பத்மநாபன்
காலச்சுவடு வெளியீடு
விலை-395
ஒரு நவீன இதிகாசமென வண்ணநிலவன் கூறும் தமிழின் ஆகச் சிறந்த நாவல் "தலைமுறைகள்".
1966இல் எழுதப்பட்டகுமரி மாவட்ட இரணியல் செட்டியார் சமூகத்தின் பண்பாடுகளை,பழக்க வழக்கங்களை, சடங்கு, சம்பிரதாயங்களை அவர்களின் வட்டார வழக்கிலேயே அறிமுகப் படுத்தும் வரலாற்று ஆவணம்.
திரவியம் என்ற பாத்திரத்தின் பதினைந்து வயது முதல் இருபத்தைந்து வயது வரை நடக்கும் வாழ்வியலை , அவர்களின் சடங்கு சம்பிரதாயங்களை ,அவற்றால் திரவியத்தின் தந்தை
நாகருபிள்ளை படும் பாட்டை திரவியத்தின் பார்வையில் உரைக்கிறது.
சிங்கவினாயக தேவஸ்தானத்து பிள்ளையார் கோயில் நிர்மால்ய பூஜையின் தீபாராதனை மணியோசை சிதறல்களில் துவங்கி அதே மணியோசை சிதறல்களில் முடிவடையும் நாவல் முடிவை நம் கைகளில் தந்து  நகர்கிறது.
பாரம்பரியத்தின் வேராக வாழும் உண்ணாமலை ஆச்சியே சடங்கு சம்பிரதாயங்களைக் காப்பாற்றி  வருகிறாள். அவளின் உறுதியை தனது முற்போக்கான செயலால் அசைத்து பார்க்கும் ஆச்சியின் அருமை பேரன் திரவியம்....
முரடனாக இருந்தாலும் திரவியத்தின் அக்கா நாகுவிற்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்து அவளை மறுமணம் செய்ய விரும்பும் குற்றாலம் எழுத்தாளரின் முற்போக்கு சிந்தனைக்கு படிமமாகிறான்.
தனது குறை வெளியே தெரியாமல் இருக்க   தனது ஆணாதிக்க சிந்தனையால் குற்றாலத்தை கொலை செய்யும் நாகுவின் கணவன் பழமைவாதிகளின் முழு வடிவம்.
தெங்கு பார்த்து கண் விழிக்கும் ஆச்சியின் விழித்தலில் நாவல் நடைபோடத் துவங்குகிறது.
வாதப்பனி என்னும் யானைக்கால் நோயுடன் குடும்பத்தின் ஆணி வேராக நின்று திரவியத்திற்கு அவனது சந்தேகங்களை விளக்கி, வாழ்வின் சடங்கு சம்பிரதாயங்களை கூறி,உறவுகளை பற்றியும் அவர்களது வாழ்க்கையையும் புரிய வைக்கும் ஆச்சி போல  ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப வரலாற்றை சந்ததிகளுக்கு கடத்துபவளாக ஆச்சிகள் வாழ்வதை  உணரலாம்.
சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அச்சப்படும் நாகருபிள்ளை குடும்பம் திராவிடத்தின்

விடா முயற்சியால் கட்டுபாடுகளைத் தகர்த்து நாகுவிற்கு மறுமணம் செய்ய சம்மதிக்கிறது.இதற்காக திரவியத்தின் மெனக்கெடல் நம்மை வியக்க வைக்கிறது.இறுதியில் மீறமுடியாத உண்ணாமலைஆச்சி கவலையிலும் வாதப்பனியின் வேதனையிலும் மறையும் போது அழுத்தப்பட்ட சமூக சம்பிரதாயங்கள் வெற்றி பெறுகிறது.பெண்களின் வேதனையை கொடுமைகளை திரவியம் மற்றும்குற்றாலம் மூலம் மாற்ற எண்ணும் ஆசிரியரின் நோக்கம் நிறைவேறாமல் போவது காலத்தின் துயரம்.
பிறப்பு முதல் றப்பு வரை இரணியல் செட்டியாரின் சடங்குகள், சம்பிரதாயங்கள்,அக்கால விளையாட்டுகள்,மனிதர்களின் வாழ்வியலை , பெண்களுக்கு இழைக்கப்படும்  கொடுமைகளைகண் முன் நிறுத்தும் "தலைமுறைகள் "நவீன இதிகாசமென அழைக்கப்படுவதில் தவறேதும் இல்லை.
மு.கீதா

Wednesday, 25 March 2020

அப்பத்தாவின் கருக்கருவா-விமர்சனம்

அப்பத்தாவின் கருக்கருவா-
கவிதை நூல்-ஆலங்குடி வெள்ளைச்சாமி.
அனிச்சம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


        தொப்புள் கொடியின் பிசிறுகளோடு கதைக்கும் கருக்கருவா விளைவாய் மனதின் அன்பை அறுத்து கொண்டு அப்பத்தாவின் கம்பீரத்தை நம்மிடம் கதைக்கிறது.மரத்தை அண்ணனாக நினைக்கும் மாரியப்பக்கிழவன் சங்க இலக்கியத்தலைவி புன்னை மரத்தை சகோதரியாக எண்ணும் வரலாற்றின் எச்சம்.கலொடிந்த காகமும் கிழவனும் கொண்ட அன்பு மனிதத்தின் உச்சம்.
வீதியில் தொலைந்தவர்களை தேடி அலையும் கவிதையோடு நாமும்  ஒற்றை கால் காகத்தை தேடி அலைகின்றோம்.பூனைக்குட்டியும் நாயும், பேரன்பின் மிகுதியில் கதை கூறும் குழந்தை என மனிதம் ததும்பி வழியும் அமுதசுரபி.
"குடிசையிலிருந்து
விளிம்பில் தொங்குகிறது
உலகத்தின்
கடைசி மழைத்துளி"
இந்தக் கவிதை குருவியை மட்டுமல்ல நமது மனதிலும் தாகத்தை தணித்து நம்பிக்கை விதைக்கும் கவிதை.
மாடுகள் நடத்தும் மாநாடு கவிதை கிராமத்தின் மண்வாசம் நகரத்தின் கானல் வாழ்வைக்காட்டும் படிமம்.அநியாயத்திற்கு எதிராக ஒலிக்கும் குரலற்றவர்களின் குரலாக கவிதைகள் வாழ்கின்றன. காதலில் ஊஞ்சாலாடும் கவிதைகள் இளமையின் வசந்தத்தை வருடி நம்மை சுவாசிக்க வைக்கின்றன.சமூக அக்கறையும், காதலும் கலந்து சமைத்திருக்கும் கவிதைகள் பழக்கூட்டென இனிமை தரும்.என்பது உறுதி.வாழ்த்துகள் கவிஞர், பாடகர் , பட்டிமன்ற பேச்சாளராகத் திகழும் தோழர் வெள்ளைச்சாமி அவர்களுக்கு...படித்து பாருங்கள் மண்வாசம் தகிக்கும்...

Thursday, 12 March 2020

பெண் வரலாறு

வரலாற்றில் பெண் கொடுமைகள்
புலவர் கோ .இமயவரம்பன்.
சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் தலைப்பில் ஐந்து கட்டுரைகளும்.
, குழந்தை திருமணம் தொடர்பாக நான்கு கட்டுரைகள் கொண்ட சிறிய நூல்.
கேள்விப்பட்ட கொடுமைகள் தான் என்றாலும் புள்ளிவிவரங்களுடன் படிக்கையில் மனம் கனத்த நிலை.
ஆங்கிலேயர்கள் வந்தது நமக்கு நன்மையோ என்று எண்ண வைக்கும் நிதர்சனம்.
மனிதன் இறந்த பிறகு மறுஉலகிலும் ஏவல் செய்ய பணியாட்கள், வாழ்க்கை நடத்த மனைவிகள், மந்திரிகள் அவனோடு பயன் படுத்திய குதிரைகள் அனைத்தும் எரித்தோ அல்லது புதைத்தோ....
சிறு வயதில் பார்த்த படம் ஒன்று நிழலாடியது 
பிரமிட்டின் உள்ளே இறந்த கணவனுடன் மனைவி அமர்ந்திருந்த காட்சியை ஏற்க முடியாது இன்றும் மனம் பதைக்கின்றது.
150 வருடங்களுக்கு முன் வரை ஏன் 80 களில் சதி கொலை செய்யப்பட்ட ரூப்கன்வரை மறக்க முடியுமா?
தர்ம சாஸ்திரங்கள், ரிக் வேதத்தில் , கருடபுராணத்தில், விஷ்ணு புராணம்,விஷ்னுஸ்மிருதி,காதிக்காண்டம் என அனைத்தும் சதியை போற்றி புகழ்கின்றன.
மணிமேகலை கூறும் கணவன் இறந்த உடன் உயிரை விடும் தலையாய கற்பு,தீப்பாய்ந்து இறக்கும் இடையாய கற்பு,கைம்மை நோன்பு நோற்கும் கடையாய கற்பு வரிகள்.... என்ன சொல்வது.
உடன்கட்டை ஏறும் பெண்ணின் கணவன் குடும்பத்து தந்தை வழியிலும்,தனது தாய் வழியிலும் மூன்று தலைமுறைகளில் அவர்கள் செய்த பாவங்களை எல்லாம் உடன் கட்டை ஏறுதல் மூலம் போக்கி விடலாம் என்று உருவாக்கப்பட்ட நம்பிக்கையை,அப்படியின்றி விதவைகள் உயிரோடு இருந்தால் பழியும் 
பாவமும்சாபக்கேடும் வரும் என்ற நம்பிக்கையை விதைத்தவர்கள் யார்?
உடன்கட்டை ஏற மறுக்கும் பெண்களின் உணர்வுகளை அழிக்க அபின் போன்ற போதைப்பொருட்களைத் தந்து மயக்கத்தில் தள்ளாடும் பெண்ணை சிதையில் கணவனுடன் கட்டிவைத்து எரியும் போது எழுந்து ஓடாமல் தடுக்க இருவர் கட்டையை வைத்து அடித்து அவளது அலறல் கேட்காமல் இருக்க கொட்டு மேளம் அடித்து சதியை நிறைவேற்றும் காட்சியை எழுத கைகள் நடுங்குகின்றன.
புராண இலக்கியங்களில் உடன்கட்டை ஏறும் காட்சிகள் இரண்டாம் கட்டுரை.
மகாபாரத பாண்டு மன்னன் மனைவி மாத்திரி ,பூதப்பாண்டியன் மனைவி கோப்பெரும் பெண்டு,சுந்தரச்சோழனின் மனைவி வானவன் மாதேவி உடன்கட்டை ஏறியதைக் கூறும் திருக்கோயிலூர் கல்வெட்டு.
மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜி கி.பி 1680 இல் இறக்கும் போது இட்ட ஆணையில் பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டேஇறக்க வேண்டும்.தம்முடன் தமது மனைவியர்கள் உடன்கட்டை ஏறுவதை யாரும் தடுக்க கூடாது என்று கூறியதாக குவார்தா என்பவனின் கூற்று.
இப்படி தொடரும் கொடுமைகள்...கி.பி மதுரையை ஆண்ட நாயக்க மன்னன் இறந்த போது 700 மனைவிகள்,திருமலை நாயக்கன் கி.பி 1659 இல் இறந்த போது 200 மனைவிமார்கள் உடன்கட்டை ஏறியதாக பிரோயின்ஸா என்னும் பாதிரியார் கூற்று.
இராமநாத புர மன்னன் கிழவன் சேதுபதி இறந்த போது 47 மனைவிமார்கள், புதுக்கோட்டை அரசி ஆயி அம்மாய் ஆயி தனது கணவர் இராஜ விஜயரெகுநாத  தொண்டைமான் என்னும் மன்னர் இறந்த போது தனது குழந்தைகளை ஆங்கிலேய அதிகாரி கேப்டன் பிளாக் பர்ன்  பொறுப்பில் விடச்சொல்லி உடன்கட்டை ஏறியது,மன்னர்குடும்பம் மட்டுமின்றி புதுக்கோட்டை வைணவ கோமுட்டி பெண்ணுக்கு தான் அபின் கொடுத்து அவள் கணவனை மூன்று சுற்று சுற்றி வருகையில் மயங்கி விழு சிதையில் இழுத்து தள்ளிக் கொன்ற உண்மை எப்படி முடிந்தது.உயிருடன் எரியும் பெண்ணின் கோரக்குரலைக் கேட்க...
சதியை எதிர்த்த இராஜாராம் மோகன் ராயின் அண்ணன் மனைவியை உடன்கட்டை ஏற்றிய கொடுமையே அவரை எதிர்ப்பாளராக்கியது
மராட்டிய பார்ப்பன பெண் கோகிலாவை உடன்கட்டை ஏற அழைத்து செல்லும் போது ஆங்கிலேய இராணுவத்தினர் காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் ஏற்க மறுத்ததால் திருநெல்வேலி ஸ்வாட்ஸ் பாதிரியாரால் ஞானஸ்நானம் 1778 இல் அளிக்கப்பட்டு இராயல் குளோரிந்தாள் என்ற பெயரில் சுவிசேஷ ஊழியம் செய்த யதார்த்தம்.
சதி பற்றிய வெளிநாட்டார் குறிப்புகள், முஸ்லீம் மன்னர்களின் முயற்சி, ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் பாதிரியார்களின் முயற்சியும் வெற்றியும் என்ற தலைப்பில் இரத்த சகதியை நம்மீது தெளித்து சிதறும் இந்தியப் பெண்களின் வரலாறு...
இறுதியில் லார்ட் வில்லியம் பெண்டிங் தனது உறுதியான உத்தரவால் சதி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது.
இதை எதிர்த்து பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகள் என உண்மையை ஆதாரத்துடன் வெளிச்சமிட்டு காட்டுகிறது.

குழந்தை மணம் கொடுமைகள்

"8 வயது பெண்ணை மணம் செய்து கொடுப்பவன் சுவர்க்கலோகத்தையும்,9 வயது பெண்ணை  விவாகம் செய்து கொடுப்பவன் வைகுண்டத்தையும்,10 வயது பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் பிரமலோகத்தையும், அடைகிறான்.அதற்கு மேற்பட்டு விவாகம் செய்து கொடுப்பவன் ரௌரவாதி நரகத்தை அடைகிறான்"
           - பராசுரர்
மனு, மனு ஸ்மிருதி,தேவதா,பிரகஸ்பதி,ஆஸ்வலாயனர்,தர்ம சாஸ்திரம், களவியல் உரையாசிரியர் கூறுகின்றனர்.பார்ப்பன சமூகத்தில் இருந்த இந்த பழக்கம் நாளடைவில் உயர் சாதியினர் பின்பற்ற செய்தனர்.
மகாராஷ்டிரா நானா பர்னவிஸ் 60 வயதுக்கு மேல் இறக்கும் போது அவனது இருமனைவிகள் வயது 14வயது ,9வயது.
இராமகிருஷ்ணர் பரமஹம்சர் மனைவிக்கு திருமணமாகும் போது வயது 5 .
காந்தி-கஸ்தூரி பா வயது 7 ஆக இருக்கும் போது நிச்சயதார்த்தம் 13 வயதில் திருமணம்.
1921 கணக்கெடுப்பின்படி
இந்திய உபகண்டத்தில் நான்கு கோடி பால்ய விதவைகள்.
1 வயதுக்கும் கீழ்-612
1 முதல் 2 வயதுக்குள்-498
4முதல் 5 வயதுக்குள்-6,858
5முதல் 10 வயதில்-85,580
10முதல் 15 வயதில் -2,33,533 விதவைகள்.
குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி புணர்ந்ததால் இறந்த குழந்தைகள் ஏராளம்.
திருவல்லிக்கேணியில் சம்மதிக்காத குழந்தையை தீயிலிட்டு பொசுக்கிய  கொடுமை நடந்துள்ளது.இதை எதிர்த்து 12 வயது தான் பெண்ணின் சம்மத வயது என்ற சட்டமியற்றிய ஆங்கிலேயர்கள் மீது கிறித்தவ மதத்தைத் திணிக்க பார்க்கின்றனர் என்று புரளியை கிளப்பினர்.இந்தியாவெங்கும் வைதீகர்களின் கிளர்ச்சி.அதில் பூனாவில் நடந்த கிளர்ச்சிக்கு தலைமை வகித்தவர் பெரிய தேசியத் தலைவர் என்று புகழப்படும் லோகமான்ய பாலகங்காதர திலக்.
34 ஆண்டுகளுக்கு பின்னர் 13 வயது பெண்ணின் சம்மத வயது.என்று 1925 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது.
மேலை நாட்டு மருத்துவர்கள் குழந்தை தாய்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்த கொடுமைக் கண்டு வருந்தினர்.குழந்தை மணத்தை எதிர்த்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர்.
சங்கராச்சாரியார் 12 வயதுக்கு பிறகு பெண்களுக்கு திருமணம் செய்தால் மதமே கெட்டுப்போகும் என்று வைசிராய்க்கு தந்தி கொடுக்க வைத்துள்ளார்.
பண்டித மாளவியா,கேல்கார் டாக்டர் மூஞ்சே, மோதிலால் நேரு,எம்.கே . ஆச்சாரியார்,கே.வி ரெங்கசாமி அய்யங்கார்,எஸ் . சத்தியமூர்த்தி போன்றவர்கள் குழந்தை மணத்தடைச்சட்டம் வராமல் தடுக்க பல முயற்சிகளை செய்துள்ளனர்.
சம்மத வயது கமிட்டியின் முன் பெண்களுக்கு 10,12 வயதுக்கு முன்பே திருமணம் செய்து விட வேண்டும் இல்லையெனில் பாவம் வந்து சூழும் என்று பராசரர் எழுதி இருக்கிறார்.நாங்கள் பாவத்திற்கு கட்டுப்படுவோமா? உங்கள் சட்டத்திற்கு பயபபடுவோமா? என்று வாதிட்டுள்ளார்.குழந்தை மணத்தடை மசோதாவுக்கு எதிராக சுதேச மித்திரன் மற்றும் இந்து பத்திரிக்கைகள் பாடுபட்டுள்ளன.
இப்படிப்பட்ட நிலையில் இந்து பத்திரிக்கை 10 வயது பெண்ணோ அல்லது 12 வயது பெண்ணோ ஒருவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று விளம்பரம் செய்தது.
சுயமரியாதைக்காரர் ஒருவர் இப்படி செய்யலாமா என்று கேட்டதற்கு"10 அல்லது 12 வயது பெண்ணை இப்போது விவாகம் செய்வதாகக் காணப்படுவது விவாகச் சடங்கல்ல.அது ஒரு நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது.பெண்ணையும் மாப்பிள்ளையையும் கூடச் செய்யும் முதலிரவு தான் விவாகம் என்று எழுதியுள்ளது.
வெறும் நிச்சயமாக இருப்பின் கணவன் இறந்தால் தாலியறுத்து மொட்டை அடித்து மூலையில் உட்கார வைப்பது ஏன் என்ற கேள்விக்கு இந்து பத்திரிக்கை பதில் தரவில்லை.1930 இல் சாரதா சட்டம் நிறைவேற்றப்பட்டது 14 வயது பெண்ணுக்கும் 18 வயது ஆணுக்கும் திருமண வயது ஆக அறிவித்தது.
சட்டம் வரப்போகிறது என்று தெரிந்த பிறகும் நடந்த திருமணங்கள் ஏராளம்.
1921 ஆம் ஆண்டு விதவைகள் எண்ணிக்கையை விட 1931 ஆம் ஆண்டு விதவைகள் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகம்.
இன்றும் குழந்தை திருமணங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்தில் இன்றும் குழந்தை திருமணங்கள் நடப்பதை கண்கூடாக காணலாம்.
இந்திய நாட்டில் தான் ஆறுகளுக்கு, நிலத்திற்கு என எல்லாவற்றிற்கும் பெண் பெயரை வைத்து கொண்டாடி வருகிறோம் என்று பேச்சாளர்கள் பேசும்போது.....
வரலாற்றில் பெண் பட்ட பாடுகள் சொல்லில் அடங்காத உண்மைகள் .
இன்றும் பதினைந்து வயது குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை கையறு நிலையில் கடக்கிறோம் .....
பெரியாரின் பாதையில் மணியம்மையாருக்கு அடுத்த நிலையில் இருந்து தொண்டறம் செய்தவரின் ஆய்வு நூல்.
புத்தகம் "வரலாற்றில் பெண் கொடுமைகள்"
எழுதியவர் : புலவர் கோ.இமயவரம்பன்
பதிப்பு: பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு.
நன்கொடை:₹25






Tuesday, 22 October 2019

அசுரன்-1

அசுரன்-1

இளங்காலைப் பயணக்
காற்றில் கரைந்திடும்மனம்
கடிதம் எழுதேன்.
என்ன கடிதம்?
எழுத்துகள் தேடினேன்..
கவிதை எழுது வருகிறேன் என்றது.
என்ன கவிதை எழுத?
காதல்...?
கிழிச்ச...
இயற்கை?
அது அழிவின் விளிம்பில்.
தாலாட்டு?
தூங்கும் குழந்தையை எழுப்பவா?
போ...என முகம் திருப்ப சட்டென்று
மேகங்கள் உரசியதோ?
ஆயிரம் பூக்கள் நொடியில் மலர்ந்ததோ?
தேனருவி தழுவிச் செல்கிறதோ?
கொஞ்சும் நாதம் செவியில் உறைந்ததோ?
வென்பனி உருகி ஒடியதோ?
தலைசாய்த்து சிரித்த சிரிப்பில்
கலைந்து கரைந்து
குதித்தாடிய கவிதையை
என்னவென்று சொல்ல!?

Saturday, 12 October 2019

Thursday, 12 September 2019

இணையத் தமிழ் பயிற்சி முகாம்-விண்ணப்பம்

புதுக்கோட்டை இணையத் தமிழ் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
தமிழ் மொழி தன்னை உயர்த்திக் கொண்டு வளரும் நிலையில் நாமும் இணைந்து வளர உதவும் பயிற்சி.
இணையத்தில் மிகச் சிறந்த ஆளுமைகள், வலைப்பதிவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்ள உள்ளனர்.நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டுகிறோம். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfYSZMadm9NOt7THPrvia3CztI5LVHSQqaHTDYu6GEjEPo-_g/viewform?usp=pp_url





Wednesday, 11 September 2019

இணையத் தமிழ் பயிற்சி முகாம் அன்புடன் அழைக்கிறோம்

புதுக்கோட்டை கணினி தமிழ்ச் சங்கம் மற்றும் வீதி கலை இலக்கியக் களம் நடத்தும் இணையத் தமிழ் பயிற்சி முகாம்
நாள் அக்டோபர்12,14
இடம்: புதுக்கோட்டை ஜே.ஜே.கல்லூரி


இணையத் தமிழ் பயிற்சி முகாம்
நன்கொடை அளித்தவர்கள் விவரங்கள்
1)மருத்துவர் திருமிகு இராமதாஸ்-₹2000
2) கவிஞர் நா.முத்துநிலவன் -₹1000
3) கவிஞர் மு.கீதா-₹1000
4) தமிழாசிரியர் பாண்டியன் மனப்பாறை-₹1000
5)கவிஞர் சோலச்சி-₹1000
6) பொறியாளர் திருமிகு சிவ.இளங்கோபுதுக்கோட்டை-₹1000
7) கவிஞர் பாலசுப்ரமணியபாரதி புதுக்கோட்டை-₹1000
8) கவிஞர் கா.மாலதி தலைமை ஆசிரியர்-₹1000
9) விதைக்கலாம் கஸ்தூரி ரங்கன் ஆசிரியர் புதுக்கோட்டை-₹1000
.

இணையத் தமிழ் பயிற்சி முகாம்
கலந்து கொள்ள பெயர் பதிவு செய்தவர்கள்.
70 பேருக்கு மட்டுமே பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதுநன்கொடை ரூ 200 செலுத்திய பிறகே இறுதி பட்டியல் தர இயலும்.
1.திருமிகு சிவகலைஆசிரியர்விராலிமலை,
2.திருமிகு சதீஷ்குமார்திருச்சி,
3.திருமிகு கலைவாணிஅமரடக்கி,
4.திருமிகு நாகநாதன்அமரடக்கி,
5திருமிகு.சீனிவாசன்மணமேல்குடி,
6) கவிஞர் நீரை அத்திப்பூ
7)திருமிகு A.பாலசுப்ரமணி சேவல்பட்டி
8) திருமிகு கிருஷ்ணவேணி தமிழாசிரியர் புதுக்கோட்டை
9) திருமிகு சு.சுமதி தமிழாசிரியர் புதுக்கோட்டை
10) திருமிகு பழ.அசோக்குமார் புதுக்கோட்டை
11) திருமிகு சுதந்திரராசன்
வீதிமுன்னோடி புதுக்கோட்டை
12)திருமிகுசுப.சுந்தரவள்ளி
புதுக்கோட்டை
13) கவிஞர் வீதி சூர்யா புதுக்கோட்டை
14) எழுத்தாளர் சோலையப்பன் புதுக்கோட்டை
15) திருமிகு வெற்றி செல்வன் புதுக்கோட்டை-200
16) மாணவர் கவின் ஈரோடு
17) ஹீலர் ஏ.சித்தார்த்தன் பழனி
18) திருமிகு அப்துல் ஜலீல் புதுக்கோட்டை
19) திருமிகு இரா.உமா ஆசிரியர் மிரட்டுநிலை.
20) திருமிகு கண்ணன் நிருபர் புதுக்கோட்டை
21)செல்வி இயல் புதுக்கோட்டை
22)திருமிகு சந்திரா தலைமைஆசிரியர் ஆலங்குடி
23)திருமிகு சந்திரசேகர் தமிழாசிரியர்
24) திருமிகு வி.எம்.கண்ணன் தமிழாசிரியர் அண்டக்குளம்
25) திருமிகு சேவியர் ஆலங்குடி.
26) திருமிகு காசிலெட்சுமி தமிழாசிரியர் பி.அழகாபுரி
27) முனைவர் ஏ.செல்லபெருமாள் பேராசிரியர் பாண்டிச்சேரி.
28) திருமிகு ப.மகாலெட்சுமி தமிழாசிரியர் அ.பெ.மே.நி.பள்ளி.திண்டுக்கல்
29) திருமிகு வீ. சிவ. அகல்யா மாணவர்அ.பெ.மே.நி.பள்ளி.
திண்டுக்கல்
30) திருமிகு ச.மஞ்சுளா இடைநிலை ஆசிரியர் ஊ.ஒ.துபள்ளி சின்னமுத்தூர்.ஈரோடு.
31) திருமிகு ஸ்டீபன் மைக்கேல் ராஜ் ஆசிரியர் தேவகோட்டை.
32) திருமிகு ரெ.பாரதி மாணவர் சுதர்சன் கல்லூரி.
33) விதைக்கலாம் கஸ்தூரி ரங்கன் புதுக்கோட்டை
34) திருமிகு மைதிலி ஆசிரியர் புதுக்கோட்டை
35) திருமிகு நிறைமதி மாணவர் புதுக்கோட்டை
36) முனைவர் வி.கே.கஸ்தூரிநாதன் குழிபிறை
37) திருமிகு திலகராணிஊ.ஒ.து.ப.தலைமை ஆசிரியர் எரிக்குளம்
38)திருமிகு அ.வெங்கடேசன் மாணவர் அ.க.கல்லூரி . அரியலூர்.
39) கவிஞர் பா.தென்றல் ஆசிரியர் காரைக்குடி
40) திருமிகு பா.சரவணன் கணித பட்டதாரி ஆசிரியர் கல்லூர்
41) திருமிகு சுகந்தி ஆசிரியர் துறையூர்.
42) திருமிகு ஜீ.சுவேதா தலைமை ஆசிரியர் காரைக்குடி.

இணையத்தமிழ் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள பதிவு செய்தவர்கள்‌ கீழ்க்கண்ட விவரங்களை

https://valarumkavithai.blogspot.com/2019/09/blog-post_5.html?m=0 என்ற வலைத்தளத்திலும்,

mgeetha122@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 9443193293, அல்லது 9659247363 என்ற புலன எண்களுக்கு  அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறோம்
1)பெயர்:
  ஆண்/பெண்:
2) வயது:
3) முகவரி:
அலைபேசி:/
புலன எண்:
4)கல்வி
5)இணையத்தில் முன்அனுபவம், மின்னஞ்சல் முகவரி:
6)தேவை: அடிப்படை/சிறப்பு பயிற்சி எனில் பெற விரும்பும்
பயிற்சி விவரங்கள்.:
7)தங்கும் வசதி -
தேவை/இல்லை:
8)நன்கொடை ₹ 200 /மாணவர்100 நேரில்/ வங்கியில் செலுத்திய விவரம்.
இறுதி படிவம் தயாரிக்க உள்ளதால் கலந்து கொள்வதை உறுதி அளிக்க வேண்டுகிறோம்.உணவு வசதி 
மேலும் விவரங்களுக்கு

https://valarumkavithai.blogspot.com/2019/09/blog-post_5.html?m=0



Monday, 15 October 2018

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018


புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018
இரண்டு வருடங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் தலைமையில் புத்தகத் திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்தியது.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 முதல் டிசம்பர் 3 தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.சென்ற ஆண்டு
பத்து லட்சம் பட்ஜெட்டில் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று புத்தகங்கள் வாங்கும் வகையில் உண்டியல்கள் வழங்கி கிராமப் புற மாணவர்களும் புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தனர்.
சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
ஆகச் சிறந்த பேச்சாளர்கள் சிறந்த சொற்பொழிவாற்றினார்கள்.
இந்த வருடமும் அதிக மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறும் வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட இந்த அறிவுத்திருவிழாவிற்கு  அளிக்கும் முக்கியத்துவமே சமுதாயத்தை அறிவின் பாதையில் பயணிக்க செய்யும்.
புதுக்கோட்டை கணினி தமிழ்ச் சங்கம் மற்றும் வீதி கலை இலக்கியக் களம் சார்பில் ரூபாய் 50,000 தருவதாக உறுதி அளித்து உள்ளோம்.
ஊர்கூடித் தேரிழுக்க விரும்பும் இவ்விழாவில் உங்கள் கரங்களும் இணைய வேண்டுகிறோம்.
முதல் கரமாக தோழி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள்₹1000 நிதி அளித்து இணைந்துள்ளார்கள்....
சமுதாய மேம்பாடே நமது வருங்கால சந்ததிகளுக்கு நாம் அளிக்க வேண்டிய கடமை.
உதவும் கரங்கள் இணைந்திட
கவிஞர் முத்துநிலவன்-9443193293 மு.கீதா 9659247363.


Monday, 1 October 2018

பரியேறும் பெருமாள் -திரைவிமர்சனம்

பரியேறும் பெருமாள் .
விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலைக் கூறும் துன்பியல் கவிதை .
கறுப்பி ரயிலின் முன் அடிபட்டு சிதறும் காட்சியில் துவங்கும் படம் நமது ஆதிக்க மனதையும் அடித்து நொறுக்கி கலங்க வைக்கிறது என்றால் மிகையில்லை .ஏன் சிகப்பி தண்டவாளத்தில் கட்டிவைக்கப்பட்டாள்என்பதை குறியீடாக துவங்கி இறுதியில் இரட்டைக்குவளைகளில் குறியீடாக முடிக்கும் இயக்குனர் படத்தில் வாழ்ந்திருக்கிறார் .

தமிழ்வழிக் கல்வியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தைக் கண்டு பயப்படும் நிலையும் ,ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்கள் தமிழைக் கண்டு பயப்படும் நிலை மிக யதார்த்தம் .

மாணவர்களுக்குள் சாதீயத்தை புகுத்துபவர்கள் வெறி பிடித்த மிருகத்தை விடக் கொடுமையானவர்கள் .
மூத்திரத்தைக் குடின்னு சாதாரணமாக திட்டுவதைக் கேட்டதுண்டு ஆனால் அதை அனுபவிக்கும் கொடுமையை உணர வைத்துள்ளார் கதிர் மிக அற்புதமான நடிப்பால் .

எல்லோரையும் இயல்பாகக் காட்டும் இயக்குனர் கதாநாயகியாக வருபவர் சிகப்பாக இருக்க வேண்டும் என்ற மனநிலையை என்ன சொல்வது .தாழ்ந்தவர்களை விட தாழ்ந்து இருக்கும் பெண்கள் குறித்த பார்வை மாறுவது எப்போது ?
கருப்பு அழகு என்று திரைப்படங்கள் உண்மையைக் காட்டுவது எப்போது ?

தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஆதிக்கவாதிகளின் மனதில் படிந்திருக்கும் மனநிலையை ,அதை உடைத்தெறியத் துடிக்கும்விளிம்பு நிலை மக்களின் மனதை காட்சிப்படுத்தியவிதம் அருமை .
மனதில் குடியேறிய பரியன் வாழ்வில் உயரட்டும் .

சீழ் பிடித்த சாதீயத்தை அறுவைச்சிகிச்சை செய்து அகற்ற வில்லை என்றால் தமிழர்கள் தன்மானத்தோடு வாழ்வது என்பது சிக்கலே .

மனிதநேயமின்றி ,மனிதர்களை அடக்கி ஒடுக்கி மிதிக்கின்ற மனிதர்கள் வாழும் நாடு பண்பாட்டில் எப்படி சிறந்ததாகும் ....?

சாதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தயாரிப்பாளர் திருமிகு இரஞ்சித் மற்றும் இயக்குனர் மாறி செல்வராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்

Monday, 10 September 2018

வளரிளம் பெண்கள்


புதுக்கோட்டை ரோட்டரி சங்கக் கூட்டம்.
இன்று மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தனர்."வளரிளம் பெண்களும் ஊடகங்களும்'என்ற தலைப்பு.என் நோக்கத்தை காட்டிய தலைப்பில் பேசினேன்.
அனைவர் மனதிலும் வருங்காலச்சந்ததிகளை வழி நடத்த வேண்டும் என்று மனதார நினைத்ததால் தங்கள் ஆதங்கத்தை கூறினர். புதுக்கோட்டை மாவட்டம் ரோட்டரி சங்கத்தின் வருங்கால கவர்னர் பெருமைக்குரிய திருமிகு சொக்கலிங்கம் அவர்கள் ரோட்டரி சங்கத்தின் மூலமாக நிச்சயமாக செய்வோம் என்று உறுதி அளித்து உள்ளார்கள்.
பாடத்திட்டக்குழு பேராசிரியர் சங்கீதா அவர்களிடமும் பேசிய போது நிச்சயமாக செய்வோம் என்று உறுதி அளித்து உள்ளார்கள்.
இது மிகப்பெரிய சவால்.அனைவரும் இணைந்து வளரிளம் குழந்தைகளுக்கு வழி காட்ட வேண்டிய கடமை உள்ளது.
இணையும் கரங்கள் என்ற முகநூல் குழுவை உருவாக்கியதன் நோக்கத்தை செயல் படுத்தும் காலம் வந்துவிட்டது.
இணைவோம் ..செயல்பட..
இவ்வாய்ப்பை அளித்த புதுகை செல்வா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.
#pc புதுகை செல்வா


Tuesday, 31 July 2018

20.7.88ஆசிரிய வாழ்வில் 30ஆண்டுகள்

முப்பது ஆண்டுகள்பணி நிறைவு சூலை 2018 உடன்.
 20.7.1988.ஆசிரியப்பணியில் பணி ஏற்ற முதல் நாள்.
இன்று தான் பணியேற்றதுபோல நினைவு.முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன.

19 வயதில் ஆசிரியராக அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவளூரில் பணி ஏற்ற போது  ...இருந்த ஆர்வம் இன்னும் குறையவில்லை.

இரண்டு பேரூந்துகள் ஏறி புதுப்பாளையத்தில் இறங்கி அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும்.பெட்டிக்கடை கூட இல்லாத நிலையில்...... மாணவர்களுக்கு தேவையான ஸ்டேஷனரி,கிராம மக்களுக்கு தேவையான மாத்திரைகள் அரியலூரிலிருந்து  வாங்கிச் செல்வது வழக்கம்.இன்று வரை மாத்திரை குழந்தைகளுக்காக பையில் ....பள்ளிக்கு முன் பன்றியை நெருப்பில் வாட்டிக் கொண்டு இருந்தனர்.ஈசல் வறுத்து உண்பார்கள்.நகரிலேயே வாழ்ந்த எனக்கு ஒவ்வொன்றும் வியப்பாக இருந்தது.
வெள்ளந்தியான மக்களும் மாணவர்களும் அன்பான தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்.... இன்று வரை தொடரும் உறவுகள்.
1989சூன் மாதம் பளிங்காநத்தம் என்ற பள்ளிக்கு மாறுதலில் சென்றேன்.அங்கும் பேரூந்து வசதி இல்லை.3கிமீ நடந்து போக வேண்டும்.மாதந்தோறும் நடக்கும் கூட்டத்திற்கு 5கி.மீ நடந்து போக வேண்டும்.மழைக்காலங்களில் காட்டாற்றில் வெள்ளம் வருகையில் ஒருவர் பின் ஒருவராக கைப்பிடித்து ஆடைநனைந்து பள்ளிக்குச் சென்றதும்.முதன்முதலில் டி வி எஸ் 50 யில் பள்ளிக்கு சென்றதும் மறக்க முடியாத அனுபவம்..

அடுத்து மேலப்பழுவூரில் பணி மாறுதலில் சென்றேன்.அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியத்தில் பெரிய பள்ளி.23 பேருடன் பணி.... அங்கு பணியாற்றிய 10 வருடங்களில் அப்பள்ளி மிகச் சிறந்த பள்ளியாக .... ஆசிரியர்களின் ஒற்றுமைக்கு எடுத்து காட்டாக விளங்கியது.

அங்கு என்னிடம் படித்த மாணவர்கள் நல்ல பணியில்... நேர்மையாக பணிபுரிந்து வருகின்றனர்.அவர்களால் முடிந்த அளவு சமுக சேவை செய்கின்றனர்....என்னுடன் இன்றும் தொடர்பில் உள்ளனர்.

அப்பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட போது நானும் சில ஆசிரியர்களும் உயர்நிலை பள்ளிக்கு உட்படுத்தப் பட்டோம்.

அரியலூரைச் சுற்றியுள்ள சிமெண்ட் ஆலைகள் என்னுடலை பாதிக்க வேறு ஊருக்கு பணிமாறுதல் பெற வேண்டிய நிலை . கிடைத்த தலைமை ஆசிரியர் பணியையும் உடல் நிலை காரணமாக மறுக்க வேண்டிய நிலை.

வாழ்க்கை சூறாவளியாக சுழற்றி அடித்தது.புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையூர் அ.உ.நி.பள்ளிக்கு 2002 ஆம் ஆண்டில் வந்தேன்.

தங்கை குடும்பம் மற்றும் நல்ல தோழமைகள் அமைந்ததால் பிற மாவட்டத்திற்கு வந்த உணர்வு இல்லை.





2005 ஆம் ஆண்டில் இப்போது பணி புரியும் அ.ம.மே.நி.பள்ளிக்கு நானும்எனது இனிய தோழி கிருஷ்ண வேணியும் மாறுதலில் வந்தோம்.வாழ்க்கை நல்ல நண்பர்களை அறிமுகம் செய்து எத்தனையோ பிரச்சினைகளிலும் நிமிர்ந்து நிற்க வைத்துள்ளது.

ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்கள்.. வாழ்க்கை அதிசயமானது மரணம் தொடும் பிரச்சினைகளைக் கொடுக்கின்றது.....

சிலநேரம் விண் தொடும் மகிழ்வைத் தருகின்றது.எது வந்த போதும் சமமாய் ஏற்கும் பக்குவத்தை உருவாக்குகிறது.

எள்ளல் செய்வோரை அலட்சியப்படுத்தி குறிக்கோளை நோக்கி நடக்க வைக்கின்றது.





முப்பது ஆண்டுகள் முடிவில் ஒரு கவிஞராக ,எழுத்தாளராக,சமூக அக்கறை நிறைந்த ஆசிரியராக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

  புதுக்கோட்டை கவிராசன் அறக்கட்டளை 2015 ஆம் ஆண்டு

புதுக்கோட்டை ஆனந்தஜோதி இதழ் கவிக்குயில் விருது,

சென்னை தென்றல் சமூக அறக்கட்டளைகளை மூலம் புரட்சி தென்றல் விருது.

,எனது முதல் கவிதை நூலான "விழி தூவிய விதைகள்" நூலுக்கு வளரி சிற்றிதழ் வழங்கிய கவிப்பேராசான் மீரா 2015 ஆண்டுக்கான விருது..,

2018 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தின் சார்பில் வழங்கிய சிறந்த நல்லாசிரியர் விருது.....

என் எனது உழைப்பிற்கும் ...இனியும் உழைக்கவும் ஊக்குவிக்கும் காரணிகளாய்அமைந்துள்ளன.

அன்பான கண்டிப்பான  அம்மாவாகவே ஆசிரியப் பணியை முப்பது வருடங்கள் முடித்தாயிற்று.

எனைப் போலவே என் தோழிகள் கிருஷ்ண வேணி மற்றும் சுமதியும் முப்பது வருடங்கள் முடித்த மகிழ்வை பள்ளியில் கொண்டாடினோம் ...

எங்களுடன் பணிபுரிந்த ஆசிரியர் திருமிகு அஞ்சலி தேவி அவர்கள் எங்கள் மகிழ்வில் பங்கு பெற்று வாழ்த்தியதை மறக்க முடியாது.அனைத்து ஆசிரியர்களும் பரிசுகள் வழங்கி அன்பால் திணற அடித்தனர்.

மனிதர்களை சேர்த்து வைத்த மகிழ்வில் ஆசிரியப் பணியைத் தொடர்கின்றேன்.

வீதி கலை இலக்கியக் கள ஒருங்கிணைப்பாளராக... இலக்கிய வாழ்விலும்...
முப்பது ஆண்டு காலப்பணியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் விரும்பும் அம்மாவாகவும் மாறியுள்ளேன் ...என்பதே...மனநிறைவான ஒன்று.

நான் பிறந்த அரியலூர் என்னை நல்ல ஆசிரியராக உருவாக்கியது.

நான் வாழ்கின்ற புதுக்கோட்டை என்னை நல்ல கவிஞராக செதுக்குகின்றது.



தற்போது பாடநூல் தயாரிப்பு பணியில் இருப்பது என்ஆசிரியப்பணியின் உச்சம் எனலாம்.

மனநிறைவாக முப்பது ஆண்டுகள் முடித்து இருந்தாலும் நான் செல்ல வேண்டிய பாதையின் தூரம் அதிகம்.....

வாழ்வதற்கான பொருளை உண்டாக்கி தடம் பதித்து மறைய வேண்டும்..
காலம் தான் வாய்ப்பு அளிக்க வேண்டும்....

Wednesday, 30 May 2018

பணி நிறைவு விழா

அரசுப் பள்ளிக்கு உதவிடும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி
 தாளாளர்.... கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்... மற்றும் திருமிகு அஞ்சலி தேவி அவர்கள்.

இன்று புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரலாற்று பட்டதாரி ஆசிரியர் திருமிகு அஞ்சலி தேவி தங்கம் மூர்த்தி அவர்களின் பணிநிறைவிற்காக சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நன்கொடையாக ரூபாய் 1,50,000மற்றும்‌ கணினி..... ஆசிரியரின் 58 வயதை நினைவூட்டும் வகையில் பள்ளி நூலகத்திற்கு 58 நூல்கள் வழங்கி மகிழ்ந்தனர்...
இவ்விழா புதுக்கோட்டை எம்.ஏ . கிராண்ட் உணவு விடுதியில் நடந்தது.
விழாவில் புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்....
ஆசிரியர்கள் உறவினர்கள் புதுக்கோட்டை மகாராணிரோட்டரிமற்றும் பேலஸ்சிட்டி ரோட்டரி நண்பர்கள் வாழ்த்துரை வழங்கி மகிழ்ந்தனர்.

எனது வாழ்த்து கவிதை

திருமிகு அஞ்சலி தேவி தங்கம் மூர்த்தி
தஞ்சமடைந்தோரின் சரணாலயம்
எஞ்சாது உதவிடும்
கஞ்சமில்லாப் பெருமனம்
பெண்மையில் ஒளிர்ந்திடும்
பேராழியும்,போராளியுமானவர்.
கம்பீரம் பணியும் இவரின்
கலக்கமில்லா கலங்காததிடம் கண்டு.
தன்னம்பிக்கையின் மறுவடிவம்
தளரா மனதுடன் போராடித்
தன்னுயிர் மகளை
காலனிடமிருந்து மீட்ட
நவீன சாவித்திரி.
பெருமலையில் பிறக்கும் பேரருவியென
இறுக்கமாகத் தோன்றும்
இவரின் மனதில்
பெருகும் பேரன்பு
திக்குமுக்காட வைக்கும் அனைவரையும்.
உலகம் போற்றும் கவிஞராக
உன்னதமான கல்வியாளராக
புதுக்கோட்டையின் புகழுக்கோர்
அணியாரமாக
பார் போற்றும் மனிதராக
கவிஞர் தங்கம் மூர்த்தி திகழ
தன் கவித்திறமையை மறைத்து
அஸ்திவாரமாகத் திகழ்பவர்.
இரு கண்களாய் குழந்தைகள்
இதயமாக கணவர்.
வாழ்க்கைப் போராட்டத்தில்
வாடிவிடாமல் போராடி
வெற்றி பெற்ற போராளி.
பெருங்களூரில் ஆசிரியப் பணியைப்
பெருநதியாய்த் துவங்கி
செட்டிவிடுதியில் செழித்து
அன்னவாசலில் ஆர்ப்பரித்து
இராஜகோபாலபுரத்தில்
இராஜநடை பயின்று
சந்தைப்பேட்டையில் நல்ஆசிரிய
ஆழியானவர்.
இவரால் சந்தைப்பேட்டை பள்ளியின்
இன்னல்கள் கரைந்தன.
மகாராணி ரோட்டரி சங்கத்தின் மூலம்
மின் மோட்டார், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், மின் விசிறி, தையல் இயந்திரம் மட்டுமல்ல...
புதைந்து கிடந்த
புரவலர் திட்டம்
புத்துயிர் பெற்றது இவரால்...
ஒரு நாள் பள்ளியின் மின் மோட்டார்
ஓய்ந்து போன கணத்தில்
நீரின்றி தவித்த மாணவிகளின்
துயர்களைந்த ஆதர்ச தம்பதியர்
கவிஞர் தங்கம் மூர்த்தி . திருமிகு அஞ்சலி தேவி.
பள்ளிக்கு பீரோ...
பத்தாம் வகுப்பு மாணவிகள்
பொதுத்தேர்வில் வரலாற்று
பாடத்தில் நூறு மதிப்பெண் பெற்றால்
ஆயிரம் ரூபாய்....
என் வாரி வழங்கும் கரங்களுக்குச்
சொந்தக்காரர்...
தங்கமனம் படைத்த
திருமிகு அஞ்சலி தேவி அவர்கள்..

இன்று பள்ளிக்கு கணினியும்
புரவலர் திட்டத்தில் ரூபாய் 1,50,000இலட்சம்...
இனி வருடந்தோறும் பொதுத்தேர்வில்
முதல் மற்றும் இரண்டாம்மதிப்பெண்கள் பெறும் மாணவிகளுக்கு பரிசுத்தொகை ரூபாய் 5000 மற்றும் ரூபாய் 3000 இப்பணத்தின் மூலம் கிடைக்கும் வட்டியில் இருந்து
வழங்கவேண்டி நன்கொடை
வழங்கிய நல்ல உள்ளங்களை
எப்படி வாழ்த்துவது..
அரசுப் பள்ளி வாழ
அள்ளி வழங்கும்
தனியார் பள்ளி தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் மற்றும் திருமிகு அஞ்சலி தேவி தங்கம் மூர்த்தி...
கண்கள் கலங்குகிறது....
இவர்களைப் போன்ற தாங்கும்
இதயங்களால் ஏழை மாணவர்கள்
கற்கும் அரசுப் பள்ளி தழைக்கின்றது....

பணி நிறைவில் நிறைவாக
பள்ளிக்கு உதவிய
ஆசிரியர் அஞ்சலி தேவி மற்றும் கவிஞர்தங்கம் மூர்த்தி
ஆகியோருக்கு
மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்....








..

Wednesday, 9 May 2018

ஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18

ஆறாவது தமிழ் பாடநூல்....2017-2018
பாடத்திட்டக்குழுப்பணி நவம்பர் 2017 சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துவங்கியது.
குழந்தைகளுக்காக நம்மால் முடிந்த அளவு முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை பிடிவாதமாக கொண்ட மதிப்பிற்குரிய செயலர் திருமிகு உதயச்சந்திரன் அவர்களின் கீழ் பணிபுரிந்த அற்புதமான காலங்கள்..... அவரின் எண்ணத்தை செயலாக்கம் செய்பவர்களாக இயக்குனர்கள்,இணை இயக்குனர்கள் , மற்றும் துணை இயக்குனர்கள்...
வருங்கால சந்ததியினருக்கான அறிவு விதை உலகின் மிகச் சிறந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஊன்றப்பட்டது...
தமிழ் நாட்டில் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்களின் குழுவில் நானும்....
வாழ்வில் முதன் முதலாக பள்ளி கல்வி துறை வளாகத்தில் நுழைந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று.மேலாய்வாளராக முனைவர் மணமலர்ச்செல்வி,
ஆசிரியர்கள் செல்வி,இராஜலெக்ஷ்மி,விமலா ,  ஜானகி, பேச்சாளர் தமிழ் திருமால், கவிஞர் சிவ.முரளி, ஜீவானந்தம்,ஆன்டனி,அன்புச் செல்வி  கலைவாணி,சக்திவடிவு,சாந்தசுந்தரி, தலைமைஆசிரியர்கள் ஜோதி லெக்ஷ்மி,ரமாதேவி மெய்யப்பன் ஆகியோருடன் நானும்..... குழந்தையின் மொழியில் இருப்பதற்காக எழுத்துகளை செதுக்கப்பட்ட காலங்கள்....ஒரு எழுத்து கூட பிரச்சினைக்குரியதாக அமைந்து விடக் கூடாது என்பதில் கூர்ந்த கவனம் எங்களை வழி நடத்தியவர்களிடம் இருந்தது.
வீடு ,வாசல், குடும்பம், குழந்தைகள் என அனைத்தையும் மறந்து....ஒரே சிந்தனையுடன் எல்லோரும் இரவு பகல் பாராது எழுதிக்குவித்ததை இரவு முழுதும் படித்து சீரமைத்து மறுநாள் எங்களை வழிநடத்திய தலைமை....
கல்வியாளர்களின்... எழுத்தாளர்களின்.. முற்போக்கு சிந்தனையாளர்களின் கருத்துகளை கேட்டு வடிவமைக்கப்பட்ட பொருண்மைகளுக்கு தொடக்கக் கல்வி முடித்து ஆறாம் வகுப்பு வரும் குழந்தைகளின் மனநிலையை மனதில் வைத்து..... எழுதப்பட்ட நூல்....தமிழ் மொழி மட்டும் அல்ல அறிவியல்....சமூகம் சார்ந்த ஒன்று...என்ற எண்ணத்தை உருவாக்கும் படி.....
வினாக்கள் குழந்தைகள் புரிந்து கொண்டு எழுதும் வகையில் அமைய வேண்டும்...புத்தகத்தை பார்த்த உடன் மாணவர்கள் நேசிக்கும் படி இருக்க வேண்டும்.அவர்களைச் சிதைத்து விடக் கூடாது....என்ற உறுதியான கொள்கை கொண்ட சீரிய தலைமையின் கீழ் உருவாக்கிய அனுபவம் என் வாழ்வில் படிமமாக...
என் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் என்னுடன் பணிபுரியும் சக ஆசிரியர்கள் என் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் சிறப்பாக பாடப்புத்தகப் பணியைச் செய்யுங்கள் என்று கொடுத்த ஊக்கமும் நம்பிக்கையுமே என்னால் மனநிறைவோடு இப்பணியைச் செய்யக் காரணமாக அமைந்தது.
அனுபவங்களே ஆசான் என்பதை உணர வைத்த காலங்கள்....
குழந்தைகளுக்கானத் தேடலில் ஏற்பட்ட பற்றாக்குறை.....
குழந்தைகளுக்கான உலகை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது.
பாடப்புத்தகம் மட்டுமே கல்வி அல்ல என்ற எனது எண்ணத்தை மேலும் உறுதி படுத்தியது...
பேராசிரியர் ச.மாடசாமி அய்யாவின் அன்பை,
கவிஞர் அறிவுமதி அவர்களின் நட்பை . ஏராளமான தோழமைகளைப் பரிசாக தந்த காலங்கள் இது . ஆனந்த விகடன் தடம்'இலக்கியமேமாத இதழில்  என்னை அங்கீகரித்த நாட்கள் இவை....
முழுமையான சிறப்பான நூல் என்பதாக இருக்கிறதா என உறுதியாக கூற முடியாது என்றாலும் குழந்தைகளுக்காக தரமாக அமைந்த நூல்....குறைகள் இருக்கலாம்.... எங்கள் குழந்தையல்லவா..... எங்களுக்கு பெருமிதமே..... வாழ்வின் பொருளை..... வாழ்க்கை நமக்காக அல்ல எல்லோருக்குமான ஒன்று என்ற விரி வானத்தை தொட முயலும் முயற்சி....என்பது இனிமையான ஆசை தானே....
என்னுடன் பணிபுரிந்த அத்தனை தோழமைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி..... உங்கள் கரங்களில் தவழும் எங்கள் குழந்தை .....நம் குழந்தைகளின் மனதோடு விளையாடட்டும்.....


Wednesday, 2 May 2018

தடம் இலக்கிய இதழில் இம்மாதம் மே 2018


நம்ப முடியல
மே மாத தடம்'இலக்கிய இதழில்...
சிறுவயதில் இருந்து என்னைத் தொடர்ந்து வரும் தோழன்....
அவனுடன் பழகும் ஒவ்வொரு நிமிடமும் என்னைப் புத்துயிர் கொள்ள வைக்க அவனால் மட்டுமே முடியும்....
என்னை ஓவியராக்கி அழகு பார்ப்பான்...
இலக்கியச் சுவையை குருதியில் உறைய வைத்தவன்...
காலம் கடந்தும் இளமையைத் தக்க வைத்து கொள்ளும் தந்திரக்காரன்
அவனது இலக்கிய இதழில் இடம் பெறுவது என்பது நம்ப முடியாத ஒன்று... ஆனந்த விகடனின்
தடங்களைப் பதிவு செய்யும்" தடம்"இலக்கிய இதழில்
என்னையும் அங்கீகரித்து உற்சாகப்படுத்திய ஆனந்த விகடனுக்கு மனம் நிறைந்த நன்றி...
இன்றைய காலை கவிஞர் சுரேஷ் மான்யா அவர்களின் வாழ்த்துடன் புலர்ந்தது.
என் தமிழ் என்னை கைகோர்த்து
இலக்கிய உலகின் முதல் படியில் அடியெடுத்து வைக்கச்செய்துள்ளது...
அறிமுகம் செய்த நல்ல உள்ளங்களுக்கு மனம் நிறைந்த  நன்றி...

Wednesday, 25 April 2018

வீதி 50 பொன் விழா அழைப்பிதழ்

வீதி கலை இலக்கியக் களம் பொன்விழா. ட

அன்புடன் அழைக்கிறோம்.
இடம்: வருவாய்த்துறை அலுவலர் சங்கக்கட்டிடம்.புதுக்கோட்டை.
நாள் 29.4.18ஞாயிறு காலை 9.30 மணி..
50 பேர் உடல் தானம்
வீதி உறுப்பினர்களின் கவிதை ஓவியக் கண்காட்சி.
"வீதி 50 "புகைப்படக்காட்சி.
சமூகத்தோடு இணைந்து பயணிக்க , இலக்கியம் சுவைக்க "வீதி"உங்களை அன்புடன் வரவேற்கிறது..

Saturday, 14 April 2018

veethi 47

வீதி கலை இலக்கியக்களம் -௪௭ (47)

இம்மாத வீதிக்கூட்டம் மிகச் சிறப்பாக இளைஞர்கள் சூழ ௨௧.௧.௧௮ (21.1.18) ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது .

வரவேற்புரை:இம்மாத கூட்ட அமைப்பாளரான கல்வியாளர் சுதந்திரராஜன் அவர்கள் வீதியின் சிறப்பைக் கூறி அனைவரையும் வரவேற்ற விதம் சிறப்பு .

அஞ்சலி :மறைந்த எழுத்தாளர் ஞானி ,கவனகன் ஆகியோருக்கு வீதியின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது .

கவிதை:

ஆசிரியர் சுந்தரவள்ளி தூக்கத்தை தொலைக்கச் செய்யும் புத்தகமே நல்ல புத்தகம் என்று கூறி அவருக்குப் பிடித்த கவிதைகள் சிலவற்றைக் கூறினார் .

காரைக்குடியில் இருந்து வீதியில் கலந்து கொண்ட கவிஞரும் முகநூல் நண்பரும் ,ஆசிரியருமான கிருஷ்ணவேணி அவர்கள் வீதியின் சிறப்புகளைக்கூறி "அச்சம் தவிர் "என்ற தலைப்பில் மிக அருமையான கவிதையை வழங்கினார் .

அறிமுக மாணவக் கவிஞர் அம்பி .பாலச்சந்திரன்தனது முதல் கவிதையான பல் தொடை வெண்பாக்கவிதையை "எண்ணங்கள் "என்ற தலைப்பில் வழங்கிய போது அனைவரும் மகிழ்ந்து பாராட்டினர் .வீதிக்கு கிடைத்துள்ள மற்றுமொரு தமிழ்ப்புதையல் அவர் .

பேராசிரியர் பாண்டியராஜன் அவர்கள் தனது ஹைக்கூ கவிதைகளால் வீதிக்கு கலகலப்பு ஊட்டினார் .
கவிஞர் மலையப்பன் "இடைவிடாத "எனத்துவங்கும் கவிதையை வழங்கி வீதிக்கு மெருகூட்டினார் .

சிறுகதை :

எங்கள் பள்ளியில் படிக்கும் எனது ஏழாம் வகுப்பு மாணவி விவேதா "செய்யும் தொழிலே தெய்வம் "என்ற தலைப்பில்
" பணம் சேர்ந்த பின் தொழிலைக்கவனிக்காத வியாபாரியைத்தேடும் மக்களுக்காக மீண்டும் அவன் வியாபாரம் செய்ய வருகிறான் "என்ற கருத்து மிக்க கதையைக் கூறிய விதம் அனைவரையும் கவர்ந்தது .

தலைமை :தலைவராகஅரசுப்பள்ளிகளுக்காக,அரசுப்பள்ளி மாணவர்களுக்காக குரல் கொடுக்கின்ற ,சமூகச்செயற்பாட்டாளர் ,புதுகையின் ஒளிப்பதிவாளர்களுள் குறிப்பிடத்தக்கவரான புதுகை செல்வா அவர்கள் தலைமை ஏற்று மிகச்சிறப்பாக வழி நடத்தினார்கள் .கவிஞர் வைகறை அமைப்பாளராக இருக்கையில் தலைமை ஏற்ற வீதியின் நினைவுகளைப்பகிர்ந்து ,தற்போது ரோஸ்லின் அவர்கள் அமைப்பாளராக இருக்கும் வீதியில் தலைமைப்பொறுப்பை ஏற்பது குறித்து நெகிழ்வின் உரையாகத்துவங்கினார்கள் .சமூகசீர்கேடுகளைக் கலைஞர்களால் மட்டுமே சுட்டிக்காட்டி திருத்த முடியும் என்றும்,ஜல்லிக்கட்டுத்துவங்கி இன்று வரை மாணவர்களின் போராட்டம் தொடரும் வகையில் சமூகம் நிலை சீர்கெட்டு கிடக்கும் நிலை உள்ளது .இலக்கியம் அதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. என்று சமூகம் சார்ந்த அவரது பேச்சு வீதிக்கு வலு கூட்டியது .

கட்டுரை :சகோதரி ரோஸ்லின் "மெரீனா இளைஞர் எழுச்சி "என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டுப்போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் திரண்ட மாணாவர்களின் எழுச்சி ,இளைய சமுதாயத்திற்கான அறைகூவல் ....தீக்கங்கு போல அது சுடர் விட்டுக்கொண்டே இருக்கும் என்ற கருத்தில் கம்பீரமானக் குரலில் படைத்த விதம் மிக அருமை .அது குறித்த வீதி உறுப்பினர்களின் உணர்வான விமர்சனம் மிகச் சிறப்பு .

நூல் விமர்சனம்

கவிஞர் இரவி உதயன் அவர்களின் நூலை கவிஞர் அமிர்தாதமிழ் மிக எளிமையாக கவிதைகளை உணர்ந்து ஆழ்ந்து செய்த விமர்சனம் பாராட்டுதற்குரியது . .கவிஞர் செல்வா தனக்கே உரிய பாணியில்"பழகிக்கிடந்த நதி " என்ற நூலை கவிதையில் விமர்சனம் செய்தமுறை சிறப்பு .

கவிஞர் சாமி.கிருஷ் அவர்களின் "துருவேரியத்தூரிகைகள் "என்ற நூலை
"விதைக்கலாம்" மலையப்பன் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல அதன் சாரத்தை அட்டகாசமாக கூறிய போது நூலின் பெருமையை அனைவரும் உணர்ந்தனர் .சில முத்துக்களில் ஒன்று

"ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தைக் காட்டலாம்
நாங்கள்
அடி வயிற்றில் அல்லவா
அடிக்கப்படுகிறோம் "

அதை மனம் நெகிழ்ந்து நூலாசிரியர் சாமி கிருஷ் ஏற்றுக்கொண்டார் .

"காலத்தின் குரல் பெரியார் "

என்ற பேராசிரியர் தமிழரசன் அவர்களின் நூலை வீதியின் பெருமைக்குரிய குழந்தையான எழில் ஓவியா தனக்கே உரிய பாணியில் வியந்து பாராட்டி செய்த விமர்சனம் போற்றுதலுக்குரியது .பெரியாரை பெரியவர்களே உணராத காலத்தில் ,குழந்தைகள் உணர்வது என்பது ஆச்சர்யமான ஒன்று தானே ...

சிறப்புரை :வீதியின் வேராகவிளங்கும் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் வீதியின் ஐம்பதாவது கூட்டம் குறித்த ஆலோசனையை வழங்கினார் .கதையை கூறிய சிறுமிக்கு கவிஞர் சாமிக்கிருஷின் நூலை வாங்கி ,வழங்கி பாராட்டினார் .

டீ குடிப்பது என்பது
டீ குடிப்பது மட்டுமல்ல ...
அது போல ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஜல்லிக்காட்டுக்கானது மட்டுமல்ல .கொக்கோகோலா பாட்டிலைத் தலைகீழாகக்கொட்டி தனது எதிர்ப்பை காட்டிய மாணவர்களின் உணர்வின் வீச்சு .உடையில் இல்லை பண்பாடென்பது இரவிலும் பெண்களை மரியாதையாக பாதுகாப்பாக நடத்தி உலகிற்கே வழிகாட்டிய முன்மாதிரியான போராட்டம் .அது அக்னி என்றும் அணையாது என்று மிகச்சிறப்பனதொரு உரையை வழங்கினார் .

நன்றியுரை :அமைப்பாளர் ரோஸ்லின் நன்றியுரை வழங்கினார் .

வீதியை திட்டமிட்டு மிகச்சிறப்பாக வழங்கிய அமைப்பாளர்கள் இருவரையும் வீதி பாராட்டி மகிழ்கின்றது ..