World Tamil Blog Aggregator Thendral: தலைமுறைகள் நாவல் விமர்சனம்

Thursday 26 March 2020

தலைமுறைகள் நாவல் விமர்சனம்

தலைமுறைகள்-நீல.பத்மநாபன்
காலச்சுவடு வெளியீடு
விலை-395
ஒரு நவீன இதிகாசமென வண்ணநிலவன் கூறும் தமிழின் ஆகச் சிறந்த நாவல் "தலைமுறைகள்".
1966இல் எழுதப்பட்டகுமரி மாவட்ட இரணியல் செட்டியார் சமூகத்தின் பண்பாடுகளை,பழக்க வழக்கங்களை, சடங்கு, சம்பிரதாயங்களை அவர்களின் வட்டார வழக்கிலேயே அறிமுகப் படுத்தும் வரலாற்று ஆவணம்.
திரவியம் என்ற பாத்திரத்தின் பதினைந்து வயது முதல் இருபத்தைந்து வயது வரை நடக்கும் வாழ்வியலை , அவர்களின் சடங்கு சம்பிரதாயங்களை ,அவற்றால் திரவியத்தின் தந்தை
நாகருபிள்ளை படும் பாட்டை திரவியத்தின் பார்வையில் உரைக்கிறது.
சிங்கவினாயக தேவஸ்தானத்து பிள்ளையார் கோயில் நிர்மால்ய பூஜையின் தீபாராதனை மணியோசை சிதறல்களில் துவங்கி அதே மணியோசை சிதறல்களில் முடிவடையும் நாவல் முடிவை நம் கைகளில் தந்து  நகர்கிறது.
பாரம்பரியத்தின் வேராக வாழும் உண்ணாமலை ஆச்சியே சடங்கு சம்பிரதாயங்களைக் காப்பாற்றி  வருகிறாள். அவளின் உறுதியை தனது முற்போக்கான செயலால் அசைத்து பார்க்கும் ஆச்சியின் அருமை பேரன் திரவியம்....
முரடனாக இருந்தாலும் திரவியத்தின் அக்கா நாகுவிற்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்து அவளை மறுமணம் செய்ய விரும்பும் குற்றாலம் எழுத்தாளரின் முற்போக்கு சிந்தனைக்கு படிமமாகிறான்.
தனது குறை வெளியே தெரியாமல் இருக்க   தனது ஆணாதிக்க சிந்தனையால் குற்றாலத்தை கொலை செய்யும் நாகுவின் கணவன் பழமைவாதிகளின் முழு வடிவம்.
தெங்கு பார்த்து கண் விழிக்கும் ஆச்சியின் விழித்தலில் நாவல் நடைபோடத் துவங்குகிறது.
வாதப்பனி என்னும் யானைக்கால் நோயுடன் குடும்பத்தின் ஆணி வேராக நின்று திரவியத்திற்கு அவனது சந்தேகங்களை விளக்கி, வாழ்வின் சடங்கு சம்பிரதாயங்களை கூறி,உறவுகளை பற்றியும் அவர்களது வாழ்க்கையையும் புரிய வைக்கும் ஆச்சி போல  ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப வரலாற்றை சந்ததிகளுக்கு கடத்துபவளாக ஆச்சிகள் வாழ்வதை  உணரலாம்.
சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அச்சப்படும் நாகருபிள்ளை குடும்பம் திராவிடத்தின்

விடா முயற்சியால் கட்டுபாடுகளைத் தகர்த்து நாகுவிற்கு மறுமணம் செய்ய சம்மதிக்கிறது.இதற்காக திரவியத்தின் மெனக்கெடல் நம்மை வியக்க வைக்கிறது.இறுதியில் மீறமுடியாத உண்ணாமலைஆச்சி கவலையிலும் வாதப்பனியின் வேதனையிலும் மறையும் போது அழுத்தப்பட்ட சமூக சம்பிரதாயங்கள் வெற்றி பெறுகிறது.பெண்களின் வேதனையை கொடுமைகளை திரவியம் மற்றும்குற்றாலம் மூலம் மாற்ற எண்ணும் ஆசிரியரின் நோக்கம் நிறைவேறாமல் போவது காலத்தின் துயரம்.
பிறப்பு முதல் றப்பு வரை இரணியல் செட்டியாரின் சடங்குகள், சம்பிரதாயங்கள்,அக்கால விளையாட்டுகள்,மனிதர்களின் வாழ்வியலை , பெண்களுக்கு இழைக்கப்படும்  கொடுமைகளைகண் முன் நிறுத்தும் "தலைமுறைகள் "நவீன இதிகாசமென அழைக்கப்படுவதில் தவறேதும் இல்லை.
மு.கீதா

8 comments :

  1. நல்லதொரு அறிமுகம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ

      Delete
  2. அருமை
    அவசியம் வாங்கிப் படிப்பேன் சகோதரியாரே

    ReplyDelete
  3. மிக்க நன்றி அண்ணா.... அவசியம் படியுங்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...