World Tamil Blog Aggregator Thendral: June 2015

Tuesday 30 June 2015

kuzhavi 1

மழையாய் வந்தவள்
மனதில் தூவிய விதை
தளிர்க்கிறது ..
நாளும் நாளும்
நினைவுமழையால்

Monday 29 June 2015

பிரம்ம ஞானப்பயிற்சி-19.06.15 முதல் 21.06.15 வரை 3 நாட்கள்








 பிரம்ம ஞானப்பயிற்சி-19.06.15 முதல் 21.06.15 வரை 3 நாட்கள்
-------------------------------------------------------------------------------------------------------
இடம் -ஆழியாறு அறிவுத்திருக்கோயில்

19.06.15 முதல் 21.06.15 வரை 3 நாட்களுக்கு ஆழியாறு அறிவு திருக்கோயிலில்..கிட்டத்தட்ட 400 பேர்களுக்கு பிரம்மஞானப்பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுகையிலிருந்து 18 பேர் கொண்ட குழுவாக 18.06.15 அன்று காலையில் கிளம்பினோம்.எங்களுக்கு துணையாக மஞ்சுளாம்மா வந்தார்கள்...

மாலை 4 மணியளவில் நல்ல மழையின் துணையோடு ஆழியாறை அடைந்தோம்.எல்லோருக்கும் இடம் பொதுவான ஹாலிலும்.அறை விரும்பியவர்களுக்கு அறையும் கொடுத்தார்கள்..எங்கு பார்த்தாலும் பசுமை கண்களை நிறைத்தது.7.30மணிக்கு உணவருந்தியபின் அறிமுக வகுப்பு என்றார்கள்...

உணவு வழங்கும் ஹால் ஒரே நேரத்தில் அனைவரும் சாப்பிடக்கூடிய வசதியுடன்...அருமையாக இருந்தது ...சுடச்சுட இட்லி ,கோதுமை ரவா உப்புமாவுடன்,பால் வழங்கப்பட்டது.

அறிமுக வகுப்பில் அறிவு திருக்கோயிலில் நாம் எப்படி நடக்க வேண்டுமென்று கூறினார்கள்...அவர்கள் கூறிய அத்தனை தவறுகளையும் செய்த போதும் கோபப்படாமல் அவர்கள் சமாளித்தபோது வியக்காமல் இருக்க முடியவில்லை.

மறுநாள் அதிகாலை 5மணிக்கு குளித்துவிட்டு தவத்திற்கு சென்றோம்....எங்கு பார்த்தாலும் அமைதியாய் மக்களின் வரிசை..விடியல் துவங்கும் வேளையில் மலையடிவார தவச்சாலையில் கண் மூடி அமர்ந்திருப்பதே மனதை அமைதி படுத்தியது...அங்கிருந்த தூய்மை ...நம்மை தூய்மை படுத்த முயன்றது.

 7மணிக்கு எளிமையான உடற்பயிற்சி அருளகம் என்ற பெரிய ஹாலில்,சிறு குழந்தை முதல் 60வயதுக்கும் மேற்பட்டோரும் ஆர்வமுடன் செய்தது..அடடா...

8மணிக்கு உணவு முடித்து 10 மணிக்கு வகுப்பு துவங்கியது...மிகச்சரியான திட்டமிடலுடன் பிரபஞ்சத்தைப்பற்றி விளக்கினார்கள்...மதியம் 1மணிக்கு வகுப்பு முடித்து உணவு இடைவேளை அருமையான உணவு..அன்பான பரிமாறல்...மதியம் 3.30மணிக்கு டீ குடித்தபின் வகுப்பு துவங்கி 6 மணிக்கு முடித்தவுடன் 7மணிக்கு துரியாதீத தவம்...

எங்களுடன் மழையும் அடிக்கடி வந்து வகுப்பை எட்டிப்பார்த்தது...இப்படியாக 3 நாள் பயிற்சி 21 அன்று மதியம் 1 மணியுடன் முடிந்தது.இடையில் ஒருநாள் குரங்கு அருவிக்கு சென்று வந்தோம்...

எங்களுடன் வந்த அத்தனை பேரும் மிக மகிழ்வுடன் இப்பயிற்சியி கலந்து கொண்டோம்...வழமையான வாழ்க்கை முறையிலிருந்து வித்தியாசமான இவ்வாழ்க்கை மனதை விட்டு நீங்காமல் நிறைந்திருக்கின்றது...

கடவுளை வெளியே தேடாதே நீயும் நீ காணும் பொருள் யாவும் கடவுளே ...உன்னுள் இருக்கும் கடவுளை அடையாளம் காண உன்னையே நீ ஆராய்ந்து உணர் என்ற கருத்தே என்னை இதற்குள் இணைய வைத்தது...கருத்து வேறுபாடுகள் சில இருந்தாலும்...அதிலுள்ள பல நல்ல கருத்துகள் ஏற்கத்தக்கதே...

எங்கு நோக்கிலும் பசுமை ,சுத்தமான காற்று,சாரல் மழை,தூய்மை,அமைதியுடன் கூடிய ஒழுங்கு...கம்பீரமாக நின்று நம்மை வரவேற்கும் மலையும் அடிவாரமும்....வாழ்வின் இறுதியில் இப்படியான ஒரு இடத்தில் அமைதியாக தங்கி சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வித்திட்டுள்ளது..

இவ்வாய்ப்பை நல்கிய பாலாம்மாவிற்கும் ,புதுகை சுப்ரமண்ய தவமையத்தை நடத்தும் செந்தாமரை அம்மாவிற்கும் மனம் நிறைந்த நன்றி...

அங்கு எழுதிய எனது கவிதை
--------------------------------------------------
இவன் தான் இறையென
கூறியது ஒன்று-இல்லை
அவன் தான் பரம்பொருளென
அடித்து உரைத்தது மற்றொன்று
இவனும் இல்லை அவனுமில்லை
உவனே சிறந்தவனென்றது ஒன்று

மனிதம் வளர்க்க வந்த மதங்கள்
மதத்தின் மதத்தைத் தூண்டி
உயிர்களை அழித்தே மகிழ்கின்றன

நசுங்கிய மனிதம் கண்டு
நலிவுற்றவளை அன்புடன்
அமைதியாய் அரவணைத்து
அனைத்து உன்னிடம்
நீயே அவன் ,இவன் உவனென
என்னை அறிந்து என்னுள் புதைந்த
இறையைக்காண வழிவகுத்தது
அறிவுத்திருக்கோயில்

அன்பே நீ அறிவே நீ
ஆழி நீ ஆறும் நீ
விண்ணும் நீ மண்ணும் நீ
ஒன்றாய் ஆன இறையே நீ
என்றே உரைத்து
அன்புடன் உலகை இணைத்தே
அகிலம் சிறக்க ஆசைப்பட்ட
ஆசான் வேதாத்ரி அவர்களின்
சீரிய எண்ணத்திற்கு தலைவணங்குகின்றேன்...

Sunday 28 June 2015

நினைவுகள்


சிதறிக் கிடக்கும் பொருட்களை
அள்ளி வீசிய சில்லறைகளை
அவிழ்த்து போட்ட ஆடைகளை
கவிழ்ந்து கிடக்கும் பொம்மைகளை
அடுக்கி வைக்க மனமில்லாதபடி
அழகுக்குட்டியின் மழலையை
அள்ளி வீசுகின்றன...அலையலையாய்...

Sunday 14 June 2015

வீதி கூட்டம்-16

இன்று வீதி கலை இலக்கியக்களத்தின் பதினாறாவது கூட்டம்

புதுகை ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரியில் மிகச்சிறப்பாய் நிகழ்ந்தது.
அமைப்பாளர்கள் சிவாவும்,தூயனும்  கூட்டத்தை தொய்வுறாமல் நடத்தினார்கள்.
அனைவரையும் சுரேஷ்மான்யா வரவேற்றார்.
சகோ சிவா “நாய்களுக்கான பிரத்யேக சலுகை,கொலை செய்யும் கலை என்றகவிதைகளை வாசித்தார்..அருமையாக.
நாகநாதன் ஹைக்கூ கவிதைகள் வாசித்தார்.சகுனம் சரியில்லை பூனை திரும்பியது என்ற கவிதை அருமை.
சகோ தூயன் பிறமொழி இலக்கியங்கள் அறிமுக நிகழ்வில் கன்னட எழுத்தாளர் சித்தலிங்காவை அறிமுகம் செய்தவிதம் நன்று

42,பட்லர் , என்ற ஆங்கில திரைப்படங்கள் குறித்த தனது பார்வையை கூறி சிறப்பித்தார்சகோ கஸ்தூரிரங்கன் ...
கிப்டட் ஹேண்ட்ஸ் என்ற ஆங்கிலத்திரைப்படம் குறித்து குருநாதசுந்தரம் அவர்கள் கூறினார்.
சகோ ஜெயா ,எஸ்.ராவின் இலைகளை வியக்கும் மரம் என்ற தொகுப்பில் உள்ள கட்டுரைகளை குறித்து சிறப்புடன் பகிர்ந்தார்...அவருடன் தூயன்,சூர்யாசுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
சகோ மீனாட்சிசுந்தரம் சிகரெட் குறித்த கவிதை வாசித்தார்.
அய்யா முத்து நிலவன் கூட்டத்தை செம்மை படுத்தும் கருத்துகளை கூறி வழி நடத்தினார்.
கூட்டத்தில் இருந்த அனைவரும் பங்கேற்க வீதி கூட்டம் சிறப்புடன் நடந்தது.

காக்காமுட்டை

தமிழ்சினிமாவின் புதிய பாதையாய் -காக்காமுட்டை திரைப்படம்
-------------------------------------------------------------------------------------------------------------------

தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் பாதையை நோக்கி தமிழ் சினிமா நகரத்துவங்கியுள்ளதை உணர முடிகின்றது.

நாலு பாட்டு ஆறு சண்டை,ஒரு கவர்ச்சி நடனம்..என்ற சூத்திரத்தைப் புறந்தள்ளி யதார்த்தை காட்டுபவையாக,சமூக அக்கறையுள்ளவையாக பரிணமிக்கத் துவங்கியுள்ளது..தமிழ்சினிமா.

 சமீபத்திய படங்களான 36 வயதினிலே,புறம்போக்கு,காக்காமுட்டை என புதிய களங்களைக்கொண்ட தமிழ்சினிமா,  தொலைக்காட்சியை விட்டு மக்களை திரையரங்கிற்கு அழைத்து வரத்துவங்கியுள்ளன...என்பதை அரங்கு நிறைந்த கூட்டமே சான்றாகின்றது.

மக்கள் விருப்பம் எனக்கூறி பணத்தையேகுறிக்கோளாய் எண்ணி வித விதமாய் யோசித்து மன வக்ரங்களை தூண்டி விடும் சினிமாக்களுக்கு மத்தியில் நாம் பார்க்க மறந்த அல்லது மறுத்த மக்களின் வாழ்க்கையை காக்காமுட்டையில் காட்டிய இயக்குனருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

உலகமயமாக்கல் என்ற வணிகச்சூழ்நிலை, வறுமையால் பாதிக்கப்பட்டோரை எப்படி தாக்குகின்றது என்பதை போகிற போக்கில் சொல்வதாய் அமைந்துள்ளது இப்படம்.

குப்பத்தை கண்முன் நிறுத்தி அவர்களின் வாழ்வை உணர வைக்கின்ற முயற்சியில் இயக்குனர் வெற்றி பெறுகின்றார்.

எல்லாமே விளம்பரமாகிவிட்ட வாழ்க்கையில் ஒருவரையொருவர் எப்படி ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதை அழகாக காட்டியுள்ளார்.

அரிசி இல்லாத ரேசனில் டிவி எளிதாக கிடைப்பது என்பது சாட்டையடி.
இப்படி இவர்கள் அறியாமையோடு இருப்பதையே விரும்புகின்றது...மேல்தட்டு வர்க்கம்.

முட்டைவாங்கமுடியாத போது காக்காமுட்டை குடித்தாலென்ன என்ற கேள்வி யோசிக்கவைக்கின்றது.இருக்கின்ற மூன்று முட்டைகளில் காக்காவிற்கு ஒரு முட்டை என்பது அவர்களின் உயிர்களை நேசிக்கும் பண்பைக்காட்டுவதாய்...உள்ளது.சுயநலத்திற்காக நாம் மரங்களை வெட்டும் போது அங்கு வாழும் பறவைகளின் நிலையை குழந்தைகள் மூலம் யோசிக்க வைக்கின்றார்.

அந்த சிறுவர்கள் நடிக்கவில்லை யதர்த்தமாய் வாழ்ந்துள்ளார்கள் படத்தில்......அருமையான நடிப்பு...

அப்பா சிறையில் இருக்க குடும்ப வருமானத்திற்காக குழந்தைகள் பணி புரிவது...தொடர்கதையான ஒன்றாகின்றது...

பணக்காரச்சிறுவனின் நாயின் விலை ரூ 25000 என்பதை அறிந்து சட்டை வாங்க தனது நாட்டு நாய்க்கு விலை ரூ25000 எனக்கூறுவது அவர்களின் அறியாமையைக்காட்டுவதுடன்.நம்நாட்டில் உள்ள  எதற்கும் மதிப்பில்லை என்பதைக்கூறாமல் கூறுகின்றது.நம் தாய்மொழியையெ மதிக்காத மக்களுக்கு இது புரிந்தால் சரி.

ஏழ்மையிலும் அவர்களின் தன்னம்பிக்கை,நேர்மை,உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பாராட்டுதற்குரியதாய்...

அப்பா வேண்டாம் பீட்சா வேணும் என்பது இக்காலக்குழந்தைகள் உறவுகளை புறந்தள்ளுவது...வெளிநாட்டு மோகம் அதிகரிக்க அதிகரிக்க நம்நாட்டில் முதியோர் இல்லங்கள் அதிகமாவதைத் தடுக்க இயலாது...என்பதை சுட்டுவதாய்...

ஏழைக்குழந்தைகளின் மனநிலையை அப்பட்டமாகக்காட்டி அவர்கள் நகரத்தோடு ஒட்டி வாழ முடியாமல் தவிக்கும் நிலையை படமாக்கியிருப்பது மனதில் வலியை ஏற்படுத்துகின்றது.

சிறுவர்களின் அவமானம் தொலைக்காட்சிகளுக்கு அவலாகவும்.அதைத்தடுக்க நிறுவன உரிமையாளர் எடுக்கும் முயற்சிகள், தனது வியாபாரத்திற்கு எந்த பங்கமும் வரக்கூடாதென்பதில் உள்ள அக்கறை...

இறுதியில் பீட்சாவை விட பாட்டிசுட்ட தோசையே பிடித்துள்ளதாக முடித்திருப்பது...இனியாவது நாம் ஆரோக்கியமான நம் நாட்டுப்பொருள்களையே விரும்ப வேண்டும் என்பதாய் அமைந்துள்ளது.காக்கா முட்டை திரைப்படம்...

நடிகர் தனுஷ் தான் நடித்த படங்களை விட இந்தப்படத்தை தயாரிக்க துணிந்ததன் மூலம் வெற்றிபெறுகின்றார்.வாழ்த்துகள் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் குழுவினருக்கும்.


Thursday 11 June 2015

marumo...?மாறுமோ?

முகம் பார்க்காமால்
எங்கோ பார்க்கிறார்கள்
எப்போது பார்ப்பார்கள்
என்ற ஏக்கத்தை தூண்டியபடி

காரியம் இன்றி வருவார்களா
காத்திருக்கட்டும் கர்வத்துடன்
அதிக வேலை உள்ளது போல்
அலட்டிக்கொள்கின்றார்கள்

தப்பித்தவறி பார்த்திடும்
ஒரு நொடியிலும் அலட்சியத்தின்
மொத்தத்தை காட்டி

மனதில் எழும்பும் ஆதங்கம்
ஆங்காரமாய் மாறி
காறித்துப்ப முடியாது
கால்மாற்றி நிற்க

நமக்காக பணி செய்யவே
நாதாறிகளுக்கு பணி தந்துள்ளதை
 மறந்த அரசு அலுவலர்கள்....
மறைவிடமே நோக்கமாய்..

Tuesday 9 June 2015

ஹைக்கூ

பகல் துரத்த
பதுங்கியது காலடியில்
நிழல்

Thursday 4 June 2015

இந்துவா நான்?


மரவட்டையென நெளிந்து
மிரட்டிச்செல்லுமதிலிருந்து
வீழும் மலத்தை
வரண்டிச்சுமந்து பிழைத்தே
வாய்ச்சோறு உண்ணுபவன்

வீழ்ந்திடும்என்னினம்
வீரியமுடன் எழவே
கடவுளுக்கு அருகில்
கண்ணியமுடன் எனை
சமத்துவமாய் நடத்துவீரோ
சூத்திரெனென்றே இகழாமல் இருப்பீரோ
மதம் மாறிய உறவுகளை
மீட்டே தருவீரோ

நமக்குள்ளே எனை அடிமையாக்கி
இந்து என்றால் என்னா....ம....
இந்துவா இருக்கனும்......

Tuesday 2 June 2015

முழுநிலா முற்றம் -5 ஆவது கூட்டம்

இன்று முழுநிலா முற்றம்-5 ஆவது கூட்டம்

புதுகையில் உள்ள ஏ.எல்.ஏ.மழலையர் பள்ளியில் சிறப்புடன் நடந்தது.

பௌர்ணமி நிலா மேகக்கூட்டங்களுக்கிடையே மறைந்து விளையாட...மேகம் தரை தொட்டு மகிழ்ந்தது...

நாகநாதன் தனது தேடுகிறோம் என்ற கவிதையை வாசிக்க,

 அமிர்தா தமிழ் அவரளின் புதல்வி எழிலோவியா நிலாவைப்பற்றி குட்டிக்கவிதை வாசித்ததுடன்,சுப உதயக்குமார் எழுதிய” பச்சைத்தமிழ் மனது” என்ற நூலை பற்றி விமர்சனம் செய்த விதம் அருமை...

பள்ளியின் முதல்வர் அண்ணாத்துறை அவர்கள் படித்ததில் பிடித்தது என கவிஞர் நா.காமராசு  வின்  அம்மாவாசை பற்றிய கவிதை,கண்ணதாசனின் ”மாங்கனி” என்ற கவிதை நூல் பற்றியும் துவக்க காலத்தில் தான் எழுதிய வாசித்த கவிதைகளையும் கூறினார்.

கவிஞர் மகா.சுந்தர் இறையன்பு அவர்களின் நூலில்,பூனைக்கு யார் மணியைக்கட்டுவது என்ற கதை ,
கோன் ஐஸ் உருவான வரலாறு
முன்னாள் பிரதமர் மாண்புமிகு நேரு அவர்கள் தனது நேரத்தை திருடிய விதம் பற்றியும் கூறி,
கவிஞர்களை விட உழவனின் கூற்றான அடர்ந்த வனத்தை
  “ஈ புகுந்தால் சிறகொடியும்”ன்ற கூற்றின் சிறப்புக்குறித்தும்

 அமைதியான கடல் ஆற்றலுள்ள மாலுமியை உருவாக்கும் என்ற ஆட்டோவில் எழுதப்பட்ட சிந்தனையை பகிர்ந்ததுடன் ..முடிவில் ஆனந்தயாழை மீட்டுகிறாய் என்ற தேசிய விருது பெற்ற  பாடலைப்பாடி கூட்டத்திற்கு மெருகூட்டினார்.

தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட கவிஞர் வைகறை கூட்டத்தை மேலும் செம்மையாக்கும் கருத்துகளை கூறியதுடன்.ஒரு நாளில் 24 நான்கு மணி நேரத்தை அதிகரிக்கும் யுக்தியை கூறினார் .

சிங்கப்பூரில் பணி புரியும் முகநூல் நண்பர் யாழிசை மணிவண்ணன் அவர்களின் கவிதைகளில்
         ” சுருங்கிய பின்
         சுமையாய் தெரிகிறது
        குடை”
என்ற கவிதை வாழ்வின் யதார்த்தத்தைச்சுட்டுவதாய் அமைந்தது.

கவிஞர் நீலாவின் பயண அனுபவம் எங்களையும் அவர்களுடன் பயணிக்க வைத்தது...இறுதியில் நிலாவைப்பற்றி பாடலை பாடி கூட்டத்தை இனிமையாக்கினார்...ஆலங்குடியிலிருந்து இதற்காகவே வந்த அவரின் பண்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயா  அருண் மழலையர் பள்ளியில் தான் பார்த்து வியந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்..

நான் நிலா பற்றிய கவிதைகள் வாசித்து,மதுரையில் பார்த்த பொன்னியின் செல்வன் நாடகத்தைக்குறித்தும் பேசினேன்.

நிகழ்வின் சிறப்பாக கவிஞர் ரேவதி தனது தனி நடிப்புத்திறன் மூலம் நாடகம் நடித்து அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்தார்.  திருமிகு.வேலு.விஜயபாரதி,தினேஷ்குமார்,மணிவண்ணன்,லாவண்யா,சகோதரி ரோஸ்லின்,ஜெய் குட்டி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முழுநிலா முற்றத்திற்கு இடத்துடன் ,பால்கேக்,பப்ஸ்,டீயும் தந்து வயிற்றுக்கும் உணவளித்து மகிழ்ந்தார் பள்ளியின் தாளாளர்.திருமிகு .அண்ணாத்துரை. தோழி ஜெயா கோதுமைப்பால் அளித்து கூட்டத்தை நிறைவு செய்தார்...

மழையும் கலந்து கொண்டு முழு நிலா முற்றத்தின் ஐந்தாவது கூட்டத்தை சிறப்பித்தது.

கற்றுக்கொள்ள வேண்டும் இவரிடம்

அதிகாரம் நிறைந்த அதிகாரியிடம் இத்தனை வருடங்களில் பயந்து தான் பழகியுள்ளோம்...இனியும் அப்படித்தான் ...ஆனால்

சக ஆசிரியர் போல் அனைவரையும் மதிப்புடன் நடத்தி....
குறைகளைக்கூறி தண்டிக்காமல் நிறைவாகச்செய்யும் ஆர்வத்தை தூண்டியதுடன் ,
எந்தக்காலத்திலும் நிதானம் தவறாமல்...பணியைச் சிறப்புடன் செய்ததுடன் தான் பணி செய்த மாவட்டத்திற்கு சிறப்பு சேர்த்து...
.இவரைபோல் இனி ஒருவர் வருவாரா...என அனைவரையும் நினைக்க வைத்த பெருமைக்கும் மரியாதைக்கும் உள்ள
 புதுக்கோட்டை மாவட்ட முதண்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் கோயம்புத்தூருக்கு மாற்றம் என்ற செய்தி அதிர்ச்சியைத்தருகிறது...
தமிழை நேசித்ததால்....புதுகையில் கணினியில் தமிழ் வளர பயிற்சி அளித்து,இலக்கியக்கூட்டங்களை வழிநடத்தி,புதுகை மாவட்ட பாறை ஓவியங்களை ஆராய்ந்து அதன் பெருமையை வெளிக்கொணர்ந்து....ஓய்வில்லா பணிகளால் வியக்க வைத்த மனித நேய மாண்பாளர்.....தனக்கென புகழ் தேடிக்கொள்வதை விரும்பாத மாமனிதர்..

எவரையும் குறை சொல்லாத அதிகாரியை நாங்கள் இழக்கிறோம்....
அரசுப்பள்ளியின் நலனுக்காகவே போராடும் தன்னலமில்லா  மனிதரை புதுக்கோட்டை இழக்கிறது...இம்மாவட்டத்தில் இருக்கும் வரை இம்மாவட்டத்திற்குரியவராக பணிபுரிந்து வருகின்றேன் என்று அவர் கூறிய வார்த்தை குறிப்பிடத்தகுந்தது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாக்கினை வாழ்க்கையில் கடைபிடிப்பவர்......
இப்படியும் அதிகாரிகள் இருப்பார்கள் என வாழ்ந்து காட்டியவர்....புதுக்கோட்டை ஆசிரியர்கள் மனதில் மதிப்போடும் மரியாதையோடும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
எங்கிருந்தாலும் தமிழ் வாழும் அவரால்.....
வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை
வணக்கமும் நன்றியும் அய்யா...

Monday 1 June 2015

இன்று என் வகுப்பில் எத்தனை பூக்கள் பூக்க போகின்றதோ....

இன்று என் வகுப்பில் எத்தனை பூக்கள் பூக்க போகின்றதோ....

முன்பெல்லாம் வகுப்பில் 10 குழந்தைகள் நன்கு படிப்பவர்களாகவும்,20 குழந்தைகள் சுமாராக படிப்பவர்களாகவும் 10 குழந்தைகள் எழுத்தே தெரியாதவர்களாகவும் 6 ஆம் வகுப்பில் சேர்வார்கள் ..ஆனால் இப்பொழுது படிக்கின்ற குழந்தைகள் எல்லாம் தனியார் ஆங்கிலப்பள்ளியிலும்,சுமாராக படிப்பவர்கள் அரசுப்பள்ளியில் உள்ள ஆங்கில வழியிலும்,மிகவும் வறுமை சூழப்பட்ட ,பெற்றோர் இல்லாத,பாதிக்கப்பட்ட குழந்தைகளே தமிழ்வழியில் சேர்கின்றனர்....

5 ஆம் வகுப்பு வரை வார்த்தைகள் படித்தால் போதும் என்ற நிலையில்,தரையில் ஆசிரியர்கள் சூழ அமர்ந்து படித்த நினைவில் வரும் குழந்தைகளை பெஞ்சில் உட்கார வைப்பதற்கே ஒரு வாரம் ஆகும் ...ம் என்றால் உடனே என்னை சூழ்ந்து கொண்டு விடுவார்கள்...கடந்த இரண்டு வருடங்களாக எழுத்தே தெரியாத குழந்தைகள் அதிகம் வகுப்பிற்கு வருகின்றனர்...அவர்களை என் வழிக்கு இழுத்து மெல்ல படிக்கவும் எழுதவும் வைக்கும் முயற்சியில் துவக்கத்தில் கொஞ்சம் கடினமாயிருந்தாலும் இரண்டாம் பருவத்தில் தயாராகி விடுவார்கள்...
அச்சத்துடன் அம்மாவின் பின்னால் ஒடுங்கிக்கொண்டு,ஓவென அழுது கொண்டு வரும் குழந்தைகள்....வருட முடிவில் நீகளும் எங்க கூட வாங்கன்னு புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்....

இன்று என் வகுப்பில் எத்தனை பூக்கள் பூக்கப்போகின்றன என்பது தெரியாமல் ஆவலுடன் செல்கின்றேன்...குழந்தைகளை பார்ப்பதே மகிழ்வு தானே.