World Tamil Blog Aggregator Thendral: October 2020

Sunday 25 October 2020

வீதி கலை இலக்கியக் களம் 77

வீதி கூட்டத்திற்கு எழுத்தாளர் கி.ரா அவர்கள் வருகை

வீதி கலை இலக்கியக் களம் 77
இதுவரை நடந்த வீதி கூட்டங்களில் ஆகச் சிறந்த கூட்டமாக இன்றைய வீதி அமைந்தது.
மகிழ்வில் மனம் கூத்தாடுவதை உணர்கிறோம் ஏனெனில் எதிர்பாராத ஆச்சரியமாக எழுத்தாளர் கி.ரா அவர்கள் இன்று வீதி நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .மாபெரும் எழுத்தாளரை வீதி வணங்கி மகிழ்ந்தது.நம்ப முடியாத உண்மை.எத்தனை எளிமையாக நூற்றாண்டை நெருங்கும் அவரின் எளிமை உன்னதமானது.
கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.
எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கி.ராவின் கதைகள் குறித்தும்,அவருடனான நட்பு குறித்தும்,கரிசல் இலக்கிய வகைமையின் சிறப்பு குறித்தும் கை தேர்ந்த கதை சொல்லியாக கூட்டத்தை தன் வசப்படுத்தினார்.
வீதி உறுப்பினர்களான இரா.ஜெயா சுற்றுப்புற சூழல் கதையும்,மலையப்பன் கோபல்ல கிராமம் நாவலும், கிரேஸ் பிரதிபா அட்லாண்டா சொந்த சீப்பு கதையும், சுபஸ்ரீ முரளீதரன் சென்னை கதவு கதையும்,கமலம்எறும்பு கதையும், காரைக்குடி கிருஷ்ணாவேலைவேலையே வாழ்க்கை கதையும், சகோதரர் பாண்டியன்எழுத மறந்தகதையும்,கீதா பேதை கதையும், குறித்து மிகச் சிறப்பாக விமர்சனம் செய்தனர். சகோதரர் கஸ்தூரி ரங்கன் கூட்டத்திற்கு தலைமை பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்தி குருபூஜை கதையும் குறித்து மிகச் சிறந்த விமர்சனங்களைக் கூறிய விதம் அருமை.
கீதா வரவேற்புரை கூற,சோலச்சி நன்றியுரை கூற கூட்டம் நான்கு மணி நேரத்திற்கு மேல் வீதி நடைபெற்றது.
வீதி கூட்டத்திற்கு எழுத்தாளர் கி.ரா வை வரவழைத்த தோழர் நாறும்பூநாதன் அவர்களை வீதி வணங்கி மகிழ்கிறது.மிக்க நன்றி தோழர்.
இன்றைய பொழுது கி.ராவின் நினைவுகளோடு இனிமையாக கழிந்தது...
விரைவில் வீதி உறுப்பினர்கள் கி.ராவை சந்திக்க அனுமதி அளித்துள்ளார்.. மிக்க நன்றி அனைவருக்கும்.

Friday 23 October 2020

உலகப் பெண்கவிஞர் யார் ? எவர்? தொடர் 1

உலகப் பெண் கவிஞர் -யார் எவர் ?

கவிஞர் மாயா ஏஞ்சலோ.



அமெரிக்கப் பெண் எழுத்தாளர் .கவிஞர் ,சமூகச் செயற்பாட்டாளர் ,நடிகை,பாடகி,பத்திரிக்கையாளர்,திரைப்படைப்பாளர் என பன்முகமாய் இயங்கியவர்.கறுப்பெழுத்தின் முன்னோடிமார்ட்டின் லூதர் ,மால்கம் எக்ஸ் ஆகியோருடன் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர் .இனவெறிக்கு எதிராகப் போராடியவர் ஆறு மொழிகளுக்கு மேல் எழுதவும் பேசவும் தெரிந்தவர் .எகிப்து கானா நாட்டுப்பத்திரிக்கைகளின் ஆசிரியராகப் பணிபுரிந்த கவிஞர் மாயா ஏஞ்சலோ அவர்கள் ....

அவரது கவிதைகள் அறச் சீற்றம் நிறைந்த சொற்களால் நிறைந்தவை, அவரது வாழ்வின் துயரத்தை காட்டும் கண்ணாடி. தனது ஏழு வயதில் தாயின் நண்பரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானபோது குடும்பத்தின் அன்பின் வலியில் அழுகுரலோடு தன்னை புதைத்துக்கொண்டாள். தனது குரல் அந்த மனிதனை நான்கே நாட்களில் கொன்றுவிட்டது என்பதை ஏற்க முடியாது ஆறு ஆண்டுகள் மௌனச் சிறையில் மூழ்கினாள். ஆறு ஆண்டுகால வாசிப்பு அவருக்கு மனித குலத்தின் உயிர் நாடியை உணர்த்தியது. பதினான்கு வயதில் அநீதிக்கு எதிராக, சொற்களை கொண்டே போர் தொடுக்க முடியும் என்பதை புரியவைத்தது.

 "I know why the caged bird sing (1969)". என்ற சுயசரிதை நூலை அடுத்து ஒன்பது நூல்களில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார்.

·         Life doesn't frighten me (1993).

·         My Painted House, My friendly chicken and me (1994).

·         Kofi  and his magic (1996).

·         ஆகிய நூல்களை குழந்தைகளுக்காக எழுதியுள்ளார்.அவரது முதல் சுயசரிதை நூல் வன்கொடுமைக்கு ஆளான கறுப்பின பெண்ணின் வழியைக் கூறிய போது உலகே அவரைத் தாக்கியது .நான் வன்முறையையும் ,அடக்குமுறையையும் வன்கொடுமைகளையும் இலக்கியத்தால் எதிர்கொள்ளத்துணிந்தார் .

          அவரது குரல் ஒடுக்கப்படுபவர்களுக்கான குரல் ,குறுகிய கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டாலும் கீழ் வானத்தில் எனது சிறகுகள் மிதக்கப் போவதில்லை என்பதை அறிந்தாலும் ,நான் எனது அலகைத்திறந்து பாட முயற்சிக்கிறேன் .கூண்டுப் பறவைதான் என்றாலும் தான் பாட மறப்பதில்லை என்றவரின் கவிதை கடத்தும் சோகம் படிப்பவர்கள் மனதில் உறைந்து நிற்கும் .

                      இன்றைய நவீன உலகில் பெண் உடல் மாற்றப்பட்டுள்ளதை ,பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தனது சொற்களால் நெய்து ஆயுதமாக்கினார் .

       'உங்கள் கடுப்பான ,திரிக்கப்பட்ட பொய்களால்

        வரலாற்றில் என்னை வரைந்திருக்கலாம்,

        பாழ்கதியில் என்னை நீங்கள் மிதித்து

        துவைத்திருக்கலாம் ,அப்படி இருந்தாலும்

        தூசிப்புழுதியாக ,நான் உதித்தேழுவேன்'

என்று காலத்தால் அழியாத . விளங்குகின்றார் .

அவரது கவிதை வரிகள் ...

'கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்

சுதந்திரப்பறவை காற்று மீதேறித் தாவிப் பாயும்

விசை தீரும்வரை சமநிலை கொண்டு மிதக்கும்

ஆரஞ்சு வண்ண சூரியக் கதிர்களில்

தன் சிறகுகளை நனைக்கும் .

வானத்தை உரிமை கொள்ளும் தைரியம் பெறும்.

ஆனால் கூண்டுப்பறவை தன்

குறுகிய கூட்டுக்குள் அலைகிறது ......

என தொடரும் கவிதை அவரது வலியை காற்றில் எழுதி மனதில் உறைந்து நிற்கும் ..

அவரது நூல்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று ..

நன்றி .


உலகப் பெண் கவிஞர் யார் ? எவர்? தொடர் 2

உலகப் பெண் கவிஞர் யார்?எவர்?

கென்யா கவிஞர் வார்சன் ஷைர்.



அனைவருக்கும் வணக்கம் உலகில் புகழ் பெற்ற கவிஞர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த மாதம் மிக இளமையான பெண்கவிஞரான வார்சன் ஷைர்.சோமாலியப் பெற்றோருக்கு கென்யாவில் 1988 இல் பிறந்தவர்.பிறகு இங்கிலாந்திற்கு இடம் பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து பிரிட்டனைத் தாயகமாக கொண்டு வாழ்கிறார் ...ஏனோ பிரிட்டனை தனது சொந்த நாடாக எண்ணமுடியவில்லை. தாய் நாட்டிற்கு செல்லும் ஆசை கனவாகவே இருந்தாலும் அவர் தனது சோமாலிய ஆப்பிரிக்க மக்களின் வாழ்வியலை ,பண்பாட்டை ,அவர்களின் வலியை,அகதி வாழ்வின் துயரத்தை ,குறிப்பாக அகதிப்பெண்களின் தாங்கவியலா துன்பங்களைத் தந்து எழுத்தால் உலகெங்கும் உணரச் செய்தார் .

இளம் வயதினராக இருந்தாலும் அவரது எழுத்தின் வன்மை ஆப்பிரிக்க மக்களின் துயரத்தை ,வேதனையை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.தனது பூர்விக நாட்டு மக்களைப் பார்க்கும் பொழுது எல்லாம் தனது மக்களின் பழங்கதைகளை கேட்டு அறிந்து எழுத்தில் பதிவு செய்கிறார்.எல்லா அகதிகளின்  துயரங்களை தனது துயரங்களாக எண்ணி பதிவு செய்கிறார்

.”ஒன்று, நான் எந்த நபரைப் பற்றி எழுதுகிறேனோஅவரைப்பற்றி எனக்கு  தெரியும் அல்லது நான் எழுதும் ஒவ்வொரு நபரும் நான் தான் .அவர்களின் ஆழ் மன அமைப்பை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியும்என்கிறார் வார்சன் ஷைர்.

தனது கவிதைகளுக்காக இளம் வயதிலேயே பல பரிசுகளையும், அவருக்கான அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார்.2013 இல் ப்ரூனெல் பல்கலைக்கழகம் உருவாக்கிய ஆப்பிரிக்கக்கவிதைப் பரிசை அவருக்கு வழங்கியது.2014இல் லண்டனின் இளம் அரசவைக் கவிஞராக ஷைர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பிரபல பாப் பாடகி பியான்ஸே நோல்ஸ் 2019இல் வெளியிட்ட ’லெமனேடு’ஆல்பத்தில் வார்சன் ஷைரின் கவிதை வரிகள் இடம்பெற்றன.

எவ்வளவு புகழ் கிடைத்தாலும் அவரது எளிமையை உலகம் பாராட்டியது. .அகதிகளின் குரலாகவே அவரின் கவிதைகள் முழங்கின.

குறிப்பிடத்தக்க கவிதையாக

“வீடென்பது சுறாமீனின் வாயாக இருந்தாலொழிய

யாருமே தங்கள் வீட்டை விட்டு

வெளியேறுவதில்லை”

என்ற வரிகள் அகதி வாழ்வின் அடையாள வாசகங்களாக உள்ளன.

2011 இல் அவர் எழுதிய  நூலின் பெயரே அவரின் காட்சியாய்”குழந்தைப்பெற்றுக்கொள்ள என் தாய்க்கு கற்றுக்கொடுத்தல்”என்ற சிறிய தொகுப்பை வெளியிட்டுள்ளார்.அவரது கவிதைகள் அனைத்தும் கட்டப்படாத பூக்களென மணம் வீசி வலம் வருகின்றன.ஒரு தொகுப்பைக்கூட போடாத ஒரு கவிஞர் உலகப் புகழ் பெற்றுள்ளார் என்றால் அது வார்சன் ஷைர் மட்டுமே.ஏனெனில் அவரது கவிதைகள் நேர்மையைச் சுமந்து தவறு செய்தவர்களைச் சுட்டெரித்தது.உண்மையின் சுடரேந்தி துயரத்தின் வலியைக்காட்டியது..

தனிமைக்குறித்து”என் தனிமை மிகவும் நன்றாக இருக்கிறது. நீ என் தனிமையைவிட  நீ இனிமையாக இருந்தால் நான் உனக்கு மட்டுமே வேண்டும் .”என்றார்.

மிக நீண்ட கவிதைகளில் ஒன்றாக

அசிங்கம்

உன் மகள் அசிங்கம்

அவள் இழப்பை அணுக்கமாக அறிவாள்,

முழு நகரங்களை வயிற்றில் சுமக்கிறாள்.

குழந்தையில் உறவினர்கள் அவளைத் தூக்கமாட்டார்கள்

அவள் உடைந்த மரம்கடல் நீர்

அவள் போரை நினைவுபடுத்துவதாக அவர்கள்

சொன்னார்கள்.

அவளது பதினைந்தாவது பிறந்த நாளில் அவளுக்குச்

சொல்லிக்கொடுத்தாய்

அவள் முடியை எப்படி கயிறு போலக் கட்டிக்கொண்டு

சாம்பிராணி புகைக்காட்டி வாட்டுவதென.

அவளை பன்னீர் கொண்டு வாய்க்கொப்பளிக்க

வைத்தாய்

அவள் இருமியபோது சொன்னாய்

உன்னைப் போன்ற மகாந்தொ

தனிமையாகவோ வெறுமையாகவோ வாசம் வீசக்

கூடாது.

நீ அவள் தாய்

ஏன் அவளை எச்சரிக்கவில்லை

அரிக்கப்படும் படகென அவளை அணைத்தபடி

அவள் கண்டங்களால் போர்த்தப்பட்டிருந்தால்

அவளது பற்கள் சிறு காலனிகளென்றால்

அவள் வயிற் ஒரு தீவென்றால்

அவள் தொடைகள் எல்லைகளென்றால்

ஆண்கள் அவளை நேசிக்கப்பொவதில்லையெனச்

சொல்லவில்லை.

எந்த ஆணுக்கு

உலகம் எரிவதைப் பார்க்க வேண்டும்

தன் படுக்கையறையில் படுத்தபடி ?

உன் மகளின் முகம் ஒரு சிறிய கலகம்

அவள் கைகள் உள் நாட்டுப்போர்

ஒவ்வொரு காதுக்குப்பின்னும்

ஒரு அகதிமுகாம்

அசிங்கமான விசயங்கள் இறைந்து கிடக்கும் உடல்

ஆனாள் கடவுளே,

அவ்வளவு அழகாக அணிகிறாள் அல்லவா

இந்த உலகை?

கவிஞர் வார்சன் ஷைர்.மேலும் அவரைப்பற்றி அறிந்து போற்ற வேண்டுகிறேன்.

நன்றி

மு.கீதா

 

 

  


Thursday 1 October 2020

மனிதம்

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
தோழி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் பொறியியல் அறிஞர் சங்க இலக்கியம் பாடும் கவிஞர் இவர்... இவருக்கு உற்ற இணையராக சகோதரர் திருமிகு வினோத்.
கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாலும் இன்னும் இன்னும் என ஓடும் சமூகத்தில் இவர்கள் வித்தியாசமானவர்கள்..
தங்களின் ஊதியத்தில்‌ ஒரு பகுதியை எளிய மாணவர்களின் கல்விக்காக செலவிடும் நல்ல உள்ளங்கள்..
புதுக்கோட்டை மகளாய் எங்கள் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் தோழி இருப்பது வாழ்வின் வரம்.
கல்விக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து 5 கல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணத்தை தருவதாக பொறுப்பேற்று ரூ 50,000 அனுப்பி உள்ளார்.
திகைப்பில் மனம் நெகிழ்கிறது.இவரது மகன் படிக்கும் பள்ளியில் கல்வியில் ஒரு பகுதியாக சர்வீஸ் செய்து சான்று காட்ட வேண்டும் .
தங்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கி எப்படி சேவை செய்து பணம் திரட்டி இந்திய மாணவர்களின் கல்வி உதவுவது என்று திட்டமிட்டு உள்ளார்.எப்படி பணம் கிடைக்கும் என்று கேட்டேன்... அங்கு வீட்டு வேலைகளில் பிள்ளைகள் உதவி செய்தால் பணம் தர வேண்டுமாம்.இங்கு பணம் தரேன்னாலும் செய்ய மாட்டார்கள் தானே.மேலும் அருகில் உள்ள வீடுகளில் அவர்களுக்கு உதவிகள் செய்து பணம் திரட்டலாமாம் என்று கூறியதாக தோழி கூறிய போது கண்களில் நீர் நிறைந்தது.
எடுத்துக்காட்டாக வாழும் பெற்றோர்களின் பிள்ளைகள் வேறு எப்படி இருப்பார்கள்..
எங்கள் பள்ளியில் படித்து தற்போது கல்லூரியில் படிக்கும் இருமாணவிகளுக்கு தலா ரூ 5000 என ரூ 10000  நேற்று பள்ளி தலைமையாசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.. தலைமைஆசிரியர் உள்பட அனைவரும் மகிழ்ந்து பாராட்டிய போது நல்ல தோழமைகளை உறவாகப் பெற்ற நிறைவு.
ஆசிரியர் Antony Pudugai  அவர்கள் மூலமாக‌ வல்லத்திராக்கோட்டையில் படிக்கும் 4 மாணவர்களுக்கு ரூ40,000 கல்விக்கட்டணமாக தர உள்ளோம்.
பணம் எவ்வளவு வரலாம் ஆனால் மனம் ஒரு சிலருக்கே வாய்க்கும்‌...
இதற்கு முன்பும் நிறைய பள்ளிகளுக்கு நண்பர்களுடன் இணைந்து உதவிகள் செய்து உள்ளார்கள்.அவர்களுக்கு‌ நன்றி கூறப்போவதில்லை வாழ்வில் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.. அவர்கள் உயர்ந்தால் மேலும் பல மாணவர்கள் வாழ்வில் கல்வி ஒளியேற்றுவார்கள்.