World Tamil Blog Aggregator Thendral: May 2018

Wednesday 30 May 2018

பணி நிறைவு விழா

அரசுப் பள்ளிக்கு உதவிடும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி
 தாளாளர்.... கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்... மற்றும் திருமிகு அஞ்சலி தேவி அவர்கள்.

இன்று புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரலாற்று பட்டதாரி ஆசிரியர் திருமிகு அஞ்சலி தேவி தங்கம் மூர்த்தி அவர்களின் பணிநிறைவிற்காக சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நன்கொடையாக ரூபாய் 1,50,000மற்றும்‌ கணினி..... ஆசிரியரின் 58 வயதை நினைவூட்டும் வகையில் பள்ளி நூலகத்திற்கு 58 நூல்கள் வழங்கி மகிழ்ந்தனர்...
இவ்விழா புதுக்கோட்டை எம்.ஏ . கிராண்ட் உணவு விடுதியில் நடந்தது.
விழாவில் புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்....
ஆசிரியர்கள் உறவினர்கள் புதுக்கோட்டை மகாராணிரோட்டரிமற்றும் பேலஸ்சிட்டி ரோட்டரி நண்பர்கள் வாழ்த்துரை வழங்கி மகிழ்ந்தனர்.

எனது வாழ்த்து கவிதை

திருமிகு அஞ்சலி தேவி தங்கம் மூர்த்தி
தஞ்சமடைந்தோரின் சரணாலயம்
எஞ்சாது உதவிடும்
கஞ்சமில்லாப் பெருமனம்
பெண்மையில் ஒளிர்ந்திடும்
பேராழியும்,போராளியுமானவர்.
கம்பீரம் பணியும் இவரின்
கலக்கமில்லா கலங்காததிடம் கண்டு.
தன்னம்பிக்கையின் மறுவடிவம்
தளரா மனதுடன் போராடித்
தன்னுயிர் மகளை
காலனிடமிருந்து மீட்ட
நவீன சாவித்திரி.
பெருமலையில் பிறக்கும் பேரருவியென
இறுக்கமாகத் தோன்றும்
இவரின் மனதில்
பெருகும் பேரன்பு
திக்குமுக்காட வைக்கும் அனைவரையும்.
உலகம் போற்றும் கவிஞராக
உன்னதமான கல்வியாளராக
புதுக்கோட்டையின் புகழுக்கோர்
அணியாரமாக
பார் போற்றும் மனிதராக
கவிஞர் தங்கம் மூர்த்தி திகழ
தன் கவித்திறமையை மறைத்து
அஸ்திவாரமாகத் திகழ்பவர்.
இரு கண்களாய் குழந்தைகள்
இதயமாக கணவர்.
வாழ்க்கைப் போராட்டத்தில்
வாடிவிடாமல் போராடி
வெற்றி பெற்ற போராளி.
பெருங்களூரில் ஆசிரியப் பணியைப்
பெருநதியாய்த் துவங்கி
செட்டிவிடுதியில் செழித்து
அன்னவாசலில் ஆர்ப்பரித்து
இராஜகோபாலபுரத்தில்
இராஜநடை பயின்று
சந்தைப்பேட்டையில் நல்ஆசிரிய
ஆழியானவர்.
இவரால் சந்தைப்பேட்டை பள்ளியின்
இன்னல்கள் கரைந்தன.
மகாராணி ரோட்டரி சங்கத்தின் மூலம்
மின் மோட்டார், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், மின் விசிறி, தையல் இயந்திரம் மட்டுமல்ல...
புதைந்து கிடந்த
புரவலர் திட்டம்
புத்துயிர் பெற்றது இவரால்...
ஒரு நாள் பள்ளியின் மின் மோட்டார்
ஓய்ந்து போன கணத்தில்
நீரின்றி தவித்த மாணவிகளின்
துயர்களைந்த ஆதர்ச தம்பதியர்
கவிஞர் தங்கம் மூர்த்தி . திருமிகு அஞ்சலி தேவி.
பள்ளிக்கு பீரோ...
பத்தாம் வகுப்பு மாணவிகள்
பொதுத்தேர்வில் வரலாற்று
பாடத்தில் நூறு மதிப்பெண் பெற்றால்
ஆயிரம் ரூபாய்....
என் வாரி வழங்கும் கரங்களுக்குச்
சொந்தக்காரர்...
தங்கமனம் படைத்த
திருமிகு அஞ்சலி தேவி அவர்கள்..

இன்று பள்ளிக்கு கணினியும்
புரவலர் திட்டத்தில் ரூபாய் 1,50,000இலட்சம்...
இனி வருடந்தோறும் பொதுத்தேர்வில்
முதல் மற்றும் இரண்டாம்மதிப்பெண்கள் பெறும் மாணவிகளுக்கு பரிசுத்தொகை ரூபாய் 5000 மற்றும் ரூபாய் 3000 இப்பணத்தின் மூலம் கிடைக்கும் வட்டியில் இருந்து
வழங்கவேண்டி நன்கொடை
வழங்கிய நல்ல உள்ளங்களை
எப்படி வாழ்த்துவது..
அரசுப் பள்ளி வாழ
அள்ளி வழங்கும்
தனியார் பள்ளி தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் மற்றும் திருமிகு அஞ்சலி தேவி தங்கம் மூர்த்தி...
கண்கள் கலங்குகிறது....
இவர்களைப் போன்ற தாங்கும்
இதயங்களால் ஏழை மாணவர்கள்
கற்கும் அரசுப் பள்ளி தழைக்கின்றது....

பணி நிறைவில் நிறைவாக
பள்ளிக்கு உதவிய
ஆசிரியர் அஞ்சலி தேவி மற்றும் கவிஞர்தங்கம் மூர்த்தி
ஆகியோருக்கு
மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்....








..

Wednesday 9 May 2018

ஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18

ஆறாவது தமிழ் பாடநூல்....2017-2018
பாடத்திட்டக்குழுப்பணி நவம்பர் 2017 சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துவங்கியது.
குழந்தைகளுக்காக நம்மால் முடிந்த அளவு முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை பிடிவாதமாக கொண்ட மதிப்பிற்குரிய செயலர் திருமிகு உதயச்சந்திரன் அவர்களின் கீழ் பணிபுரிந்த அற்புதமான காலங்கள்..... அவரின் எண்ணத்தை செயலாக்கம் செய்பவர்களாக இயக்குனர்கள்,இணை இயக்குனர்கள் , மற்றும் துணை இயக்குனர்கள்...
வருங்கால சந்ததியினருக்கான அறிவு விதை உலகின் மிகச் சிறந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஊன்றப்பட்டது...
தமிழ் நாட்டில் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்களின் குழுவில் நானும்....
வாழ்வில் முதன் முதலாக பள்ளி கல்வி துறை வளாகத்தில் நுழைந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று.மேலாய்வாளராக முனைவர் மணமலர்ச்செல்வி,
ஆசிரியர்கள் செல்வி,இராஜலெக்ஷ்மி,விமலா ,  ஜானகி, பேச்சாளர் தமிழ் திருமால், கவிஞர் சிவ.முரளி, ஜீவானந்தம்,ஆன்டனி,அன்புச் செல்வி  கலைவாணி,சக்திவடிவு,சாந்தசுந்தரி, தலைமைஆசிரியர்கள் ஜோதி லெக்ஷ்மி,ரமாதேவி மெய்யப்பன் ஆகியோருடன் நானும்..... குழந்தையின் மொழியில் இருப்பதற்காக எழுத்துகளை செதுக்கப்பட்ட காலங்கள்....ஒரு எழுத்து கூட பிரச்சினைக்குரியதாக அமைந்து விடக் கூடாது என்பதில் கூர்ந்த கவனம் எங்களை வழி நடத்தியவர்களிடம் இருந்தது.
வீடு ,வாசல், குடும்பம், குழந்தைகள் என அனைத்தையும் மறந்து....ஒரே சிந்தனையுடன் எல்லோரும் இரவு பகல் பாராது எழுதிக்குவித்ததை இரவு முழுதும் படித்து சீரமைத்து மறுநாள் எங்களை வழிநடத்திய தலைமை....
கல்வியாளர்களின்... எழுத்தாளர்களின்.. முற்போக்கு சிந்தனையாளர்களின் கருத்துகளை கேட்டு வடிவமைக்கப்பட்ட பொருண்மைகளுக்கு தொடக்கக் கல்வி முடித்து ஆறாம் வகுப்பு வரும் குழந்தைகளின் மனநிலையை மனதில் வைத்து..... எழுதப்பட்ட நூல்....தமிழ் மொழி மட்டும் அல்ல அறிவியல்....சமூகம் சார்ந்த ஒன்று...என்ற எண்ணத்தை உருவாக்கும் படி.....
வினாக்கள் குழந்தைகள் புரிந்து கொண்டு எழுதும் வகையில் அமைய வேண்டும்...புத்தகத்தை பார்த்த உடன் மாணவர்கள் நேசிக்கும் படி இருக்க வேண்டும்.அவர்களைச் சிதைத்து விடக் கூடாது....என்ற உறுதியான கொள்கை கொண்ட சீரிய தலைமையின் கீழ் உருவாக்கிய அனுபவம் என் வாழ்வில் படிமமாக...
என் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் என்னுடன் பணிபுரியும் சக ஆசிரியர்கள் என் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் சிறப்பாக பாடப்புத்தகப் பணியைச் செய்யுங்கள் என்று கொடுத்த ஊக்கமும் நம்பிக்கையுமே என்னால் மனநிறைவோடு இப்பணியைச் செய்யக் காரணமாக அமைந்தது.
அனுபவங்களே ஆசான் என்பதை உணர வைத்த காலங்கள்....
குழந்தைகளுக்கானத் தேடலில் ஏற்பட்ட பற்றாக்குறை.....
குழந்தைகளுக்கான உலகை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது.
பாடப்புத்தகம் மட்டுமே கல்வி அல்ல என்ற எனது எண்ணத்தை மேலும் உறுதி படுத்தியது...
பேராசிரியர் ச.மாடசாமி அய்யாவின் அன்பை,
கவிஞர் அறிவுமதி அவர்களின் நட்பை . ஏராளமான தோழமைகளைப் பரிசாக தந்த காலங்கள் இது . ஆனந்த விகடன் தடம்'இலக்கியமேமாத இதழில்  என்னை அங்கீகரித்த நாட்கள் இவை....
முழுமையான சிறப்பான நூல் என்பதாக இருக்கிறதா என உறுதியாக கூற முடியாது என்றாலும் குழந்தைகளுக்காக தரமாக அமைந்த நூல்....குறைகள் இருக்கலாம்.... எங்கள் குழந்தையல்லவா..... எங்களுக்கு பெருமிதமே..... வாழ்வின் பொருளை..... வாழ்க்கை நமக்காக அல்ல எல்லோருக்குமான ஒன்று என்ற விரி வானத்தை தொட முயலும் முயற்சி....என்பது இனிமையான ஆசை தானே....
என்னுடன் பணிபுரிந்த அத்தனை தோழமைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி..... உங்கள் கரங்களில் தவழும் எங்கள் குழந்தை .....நம் குழந்தைகளின் மனதோடு விளையாடட்டும்.....


Wednesday 2 May 2018

தடம் இலக்கிய இதழில் இம்மாதம் மே 2018


நம்ப முடியல
மே மாத தடம்'இலக்கிய இதழில்...
சிறுவயதில் இருந்து என்னைத் தொடர்ந்து வரும் தோழன்....
அவனுடன் பழகும் ஒவ்வொரு நிமிடமும் என்னைப் புத்துயிர் கொள்ள வைக்க அவனால் மட்டுமே முடியும்....
என்னை ஓவியராக்கி அழகு பார்ப்பான்...
இலக்கியச் சுவையை குருதியில் உறைய வைத்தவன்...
காலம் கடந்தும் இளமையைத் தக்க வைத்து கொள்ளும் தந்திரக்காரன்
அவனது இலக்கிய இதழில் இடம் பெறுவது என்பது நம்ப முடியாத ஒன்று... ஆனந்த விகடனின்
தடங்களைப் பதிவு செய்யும்" தடம்"இலக்கிய இதழில்
என்னையும் அங்கீகரித்து உற்சாகப்படுத்திய ஆனந்த விகடனுக்கு மனம் நிறைந்த நன்றி...
இன்றைய காலை கவிஞர் சுரேஷ் மான்யா அவர்களின் வாழ்த்துடன் புலர்ந்தது.
என் தமிழ் என்னை கைகோர்த்து
இலக்கிய உலகின் முதல் படியில் அடியெடுத்து வைக்கச்செய்துள்ளது...
அறிமுகம் செய்த நல்ல உள்ளங்களுக்கு மனம் நிறைந்த  நன்றி...