World Tamil Blog Aggregator Thendral: June 2014

Monday 30 June 2014

28.06.14 சென்னையில் கட்டிடம் சரிவு

பள்ளிக்கூடம் போகல
பாடங்களும் படிக்கல
கட்டி வைத்த கட்டிடமோ
காலம்காலமாய் அசையாமல்
மலை போல நிக்குது...

கஷ்டப்பட்டு காசுகட்டி
பட்டம் வாங்கி
படிச்சவுக கட்டுமுன்னே
சிதையுது என்ன கல்வியோ?
என்ன நேர்மையோ தெரியல!

Saturday 28 June 2014

புரட்சித் தென்றலாக மாற அழைக்கும் விருது

தென்றல் சமூக அறக்கட்டளை
முப்பெரும் விழா
நாள்:27.06.14
இடம்:ஓட்டல் பாம்குரோவ் -சென்னை
காலம் ;மாலை 4 மணி

இனியதான மாலைப்பொழுதில் நீதியரசர் எஸ்.ஜெகதீசன் அவர்களின் பொற்கரத்தால் எனக்கு” புரட்சித் தென்றல்” விருது பெற்றது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும்.மனம் நெகிழ்ந்துள்ளேன்.பரிசு வாங்கியதால் அல்ல நான் பெற்ற விருதை தானே பெற்றது போல் மகிழ்ந்து பாராட்டிய உள்ளங்களை எண்ணி....

என் கவிதைகளுக்கான ஓர் அங்கீகாரமாகவே இவ்விருதைக் கருதுகின்றேன் . நான் புரட்சியாய் செய்ய வேண்டுமென அளிக்கப்பட்டுள்ள பாராட்டாக ஏற்கின்றேன்.இவ்விருதிற்கு தகுதியானவளாக என்னை இனி மாற்றி கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நான்.

இவ்விருதை என் பெற்றோர்களுக்கும் ,என் நலம் விரும்பும் தோழமைகளுக்கும் சமர்ப்பிக்கின்றேன்.
நன்றி


Wednesday 25 June 2014

என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக 27.06.14





வாழ்வில் சந்தித்த வேதனைகளைப் படிகல்லாக மாற்றி உள்ளேன் என்பதனை உணர்கின்றேன்.இதற்காக பல நல்ல உள்ளங்கள் என்னைக் கீழே விழுந்து விடாத படி எழ வைத்துள்ளன.இதற்கு நான் தகுதியானவளாக இனிதான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்கின்றேன்.

கவிஞர் பொன்னையா அவர்கள் கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த போது மிகவும் தயங்கினேன்.உங்களால் முடியும் என்றே என்னை ஊக்கப்படுத்தினார்.நிகழ்வில் கலந்து கொண்ட போது அனைவரும் மிகவும் நன்றாக வாசித்தீர்கள்மா என பாராட்டிய போது கூட என்னை ஊக்குவிக்கும் சொல் மலர்கள் என்றே எண்ணினேன்.

தென்றல் சமூக அறக்கட்டளை சார்பில் விழா எடுக்கிறார்கள் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்ற போதும் அழைப்பதால் போகலாம் என்று நினைத்தேன் ஆனால் நேற்று வந்த அழைப்பிதழை
நம்ப முடியாமல் இன்னும் பார்த்துக் கொண்டுள்ளேன்.
நான் வளர என்னை ஊக்கப்படுத்தும் நிகழ்வாகவே நாளை விழாவை என்ணுகின்றேன்..

குழவி2

ஒருமுடி இழுப்பட்டாலே
ஓவென அலறும் மனம்

இரு கையால்
கொத்தோடு பிடித்து
 மிதிமிதியென மிதித்து
புத்தாடையை நனைத்து
 முகத்தில் உமிழ்ந்து
உண்ணும் உணவை எத்தி
அழவும் கூடாதென
ஆட்டிப்படைக்கிறது
பொக்கைவாய்ப்பூ மலர.
மனதைத் திருடியபடி.....

குழவி

தளர் நடை
தடுமாறியதால்
பிறைச்சிரிப்பு
பிளவுண்டதோ..!

Tuesday 24 June 2014

தமிழ்



தமிழ்
------------

அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாகின்றது.கவலைப்படுவதா?மகிழ்வதா?தமிழும் முழுதாய் அறியாமல்,ஆங்கிலமும் முழுதாய் அறிய முடியாமல்..கற்கும் எதிர்கால சந்ததியின் நிலை.....?!

நடந்த பொதுத்தேர்வில் தமிழில்தான் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவு. காரணம் அறிய ஆய்வு நடத்தப்படுகிறதாம்...!

பள்ளிகளில் தமிழின் மதிப்பை நாமே குறைத்துவிட்டோம்.கட் ஆஃப் மதிப்பெண்ணில் தமிழையும் சேர்த்தால் மட்டுமே கொஞ்சமாவது மதிப்பு கிடைக்கும் போல.இல்லையெனில் தேர்விற்கு முதல் நாள் கடமைக்கு படித்து ஒதுக்குகின்ற நிலை தான் மேலும் நீடிக்கும்..
கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

இன்னும் சில வருடங்களில் தமிழ் படிக்கும் மாணவர்களே இல்லாத நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தமிழாசிரியர்கள் இதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்...
தமிழின் சிறப்பை உணர்ந்து உணர்வோடு கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அரிதாகிக் கொண்டு வருகின்றது என்பது மறுக்கவியலா ஒன்று...!

தமிழ் தானே இல்லை தமிழ் தான் தாய்மொழி என்ற உணர்வை எப்போது ஊட்டப் போகின்றோம்...?

திணை மயக்கம்

திணை மயக்கம்
---------------------------
நெல்லை ஜெயந்தா அவர்களின் நூல் திணை மயக்கம்...
ஓவ்வொன்றும் மயக்கவே செய்கின்றது.
அறிமுகமே அருமையாய்

“கரும்பலகைகள்
எழுத்தை
எனக்கு
அறிமுகப்படுத்தின!
இந்த
வெண்பலகைகள்
எழுத்தால்
என்னையே
அறிமுகப்படுத்தின”

எனத் துவங்கி

”புதைத்தது
ரோஜா
முளைத்தது
மல்லிகை”

என மென்மையாகவும் சமூக அக்கறையுடனும் சிறந்த ஓர் கவிதை நூலைப்படித்த நிறைவு.கவிதைய படிச்சா  தூங்க விடாம நம்மைச் சுண்டி இழுக்க வேண்டுமென்பார் தோழர் எட்வின் .
சுனாமியாய் சுருட்டிக்கொள்ளும் கவிதைகளும் உண்டென்பதை நெல்லை ஜெயந்தா அவர்களின் கவிதைகளைப்படித்ததும் உணர்ந்தேன் .நல்ல நூலைப் படித்த உணர்வுடன் மகிழ்வாய் அவருக்கு என் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.முடிந்தால் படியுங்கள்..

Saturday 21 June 2014

இப்படி கேள்வி கேட்டால்?

1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?


வேண்டாம்மா போதும்னு தோணுது இப்பவே பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏதும் செய்து அவர்கள் என்னை நினைத்தால் போதும் அந்நாளில்...

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

கற்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு தெரியாதவற்றையெல்லாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் .செருப்பு தைக்கும் தொழிலாளியின் லாவகத்தை ரசிப்பேன்.தற்போதைய ஆசையாய் பறை அடிக்க,கீ போர்டு வாசிக்க பயில வேண்டும்.15 பேர் இருந்தால் பறை கற்று தர ஆள் ரெடி...

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

எதிர் வீட்டு 8 மாதக் குழந்தையின் சேட்டையைக் கண்டு காலையில்...

4. 24மணி  நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

பகல் என்றால் புத்தகத்துடன் தோட்டத்தில், இரவெனில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அல்லது மொட்டைமாடியில் நினைவுகளின் துணையுடன் பால்யங்களை அசைபோட்டுக்கொண்டு .

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

என் வாழ்வில் நிகழ்ந்த தவறுகள் அவர்கள் வாழ்வில் நிகழாமல் நடக்க வேண்டுமென..

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

மனிதநேயமற்று நடக்கும் செயல்களை....

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

.என் நெருங்கிய நண்பர்களிடம்

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

அந்த அளவு என் வளர்ச்சி உள்ளதென எண்ணி மேலும் வளர்வேன்

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

என்ன சொல்வது? வேறு துணை வேண்டும் என வலியுறுத்துவேன் உடனே அல்ல வலி மறைந்த பின்

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

புத்தகம்,பாட்டு,முகநூல்..... 
 

பூங்கொடி

பூங்கொடி
------------------
சின்னக்கொடி நான்
சீராக வளரும் முன்னே
சீரழிச்ச கொடுமைய..
பார்த்துகிட்டு இருக்குமோ
தமிழினம்..

தூ..தூ...நீங்களும் உங்க
பண்பாடும்..

இலங்கையிலதானேன்னு
கண்டுக்காம விட்டீங்க..

சென்றாயன் பாளையம்னு
வேடிக்கை பார்க்குறீங்களே

பிள்ளையும் இழந்து
ஊர்கொடுமையும் தாங்குற
அப்பாவ தனியா போராட
விடுறீங்களே

 சீச்சீ நீங்கள்லாம்
மனுசங்கத்தானா

கொடுமைய கேட்காத பாவிகளே
உங்க வீட்லயும்
பெண்பிள்ளைக்கு வாராதோ
என் நிலைமை...

குடிசை ஓட்டையில்
நிலவைப்பார்க்க
தங்கையோட போட்டியிட்டு

கிழிந்த போர்வைக்குள்ள
அண்ணணோட தங்கையும்
சேர்ந்து தூங்கிய என்னை

கதவு இல்லாக் குடிசையில
காலன் போல வந்து
காமவெறி பிடித்த கும்பலொன்று

கதற கதற தூக்கிப் போய்
இருவர் கை பிடிக்க
இருவர் கால் பிடிக்க
அரக்கன் போல மேல் விழுந்தொருவன்
வளராதநெஞ்சுல
வாய வைத்துக் கடித்தான்
வலியோட கத்துனேனே
கொடூரன் விட்டானில்லையே

காலிடுக்கில்
ரத்தம் வர ரத்தம் வர
மாறி மாறி
ராட்சன்களாய் குதறி வச்சானுங்களே

அழக்கூடத்திராணியின்றி
மயங்கிவிழுந்தவளை
மிருகம் போல கடிச்சு
தூக்குல தொங்கவிட்டானுங்க...

இதுதான் தமிழன் பண்பாடா
சிறுகுழந்தை வாழத்தகுதியில்லா
தமிழ்நாட்டி பெருமையைப்
பேசாதீர் வாய் திறந்தினி...

ஊர்கூடித் துரத்திட
என் தந்தை பயந்தோட
துணைவந்தீரோ
தமிழர்களே
ஈழத்தேசமோ இது..?

அரக்கர் கூட்டமோ
அங்குமிங்கும் அலைகின்றது
அடுத்த சிறுமியைத் தேடி
காவலர்களுக்கும் பெண் குழந்தையுண்டு
காசு வாங்கி காமுகர்களை
சுதந்திரமாய்அலையவிடும்
 துரோகிகளைக் கொண்ட

தமிழ்நாடு தீக்கிரையாகி
அழிந்து போகட்டும்
மதுரை போல...
எரிந்து மடியட்டும்
இலங்கை போல..

 சேலம் அருகே சென்றாயன் பாளையத்தில் கதவு
இல்லாக் குடிசையில்தூங்கிக் கொண்டிருந்த சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்முறை செய்து தூக்கில்
தொங்கவிட்டுள்ளனர்.காமவெறிப் பிடித்த மிருகங்கள்.

Friday 20 June 2014

பசி

பசி ஆணுக்கானது...

நரன்

நஞ்சையிட்டு
நஞ்சையை
நஞ்சாக்கி
நஞ்சையளித்த
நஞ்சையுண்டு
நஞ்சாகும்
நரன்

Thursday 19 June 2014

சொல்



வானில் மிதந்திட

பூமியில் புதைந்திட

ஒரே ஒருசொல்
போதும்...

அணிச்சமலரணைய
வாழ்வில்


Tuesday 17 June 2014

இரை

தோட்டத்தில் நீர்
வார்ப்பவளை
கடைக்கண் பார்வையால்
விரட்டுகிறது
தாய்க்குருவி இரை சுமந்த
அலகுடன்


வாழையிலை

கண்கள் நிறைக்கும்
இளந்தளிர் பச்சை
செயற்கை வாழையிலை
அறுசுவை உணவுகள் தாங்கி...

அடுத்தது காட்டும் பளிங்காய்
நெகிழிக்குவளை நீர் சுமந்து...

வண்ணச்சித்திரங்கள் தாங்கிய
பிளாஸ்டிக் வட்டிகளில்
பால்பணியாரமும்
 பனிக்குழைவும்.....

குவிந்து கிடந்தன
உண்ணவும்...!
உண்ணப்பட்டும்...!

சுகாதாரத்துறை அதிகாரியின்
இல்லத்திருமணத்தில்...!

Friday 13 June 2014

கற்றல்

அனைத்தும் கற்று தருகின்றோம் குழந்தைகளுக்கு.வாழ்க்கையைத் தவிர.....

பவித்ரா



சென்ற ஆண்டு ஹதீஜா போலவே இந்த ஆண்டு பவித்ரா கொஞ்சம் முரட்டுத்தனமும் .அறிவும் உள்ள குழந்தை.நார்மல் சைல்ட் அல்ல.சட்டென்று அடித்து விடுவாள் மற்ற மாணவிகளை.முகத்தில் அடித்தாற் போல் பட்பட்டென்று பேசுகின்றாள் எதை செய்ய சொன்னாலும் முடியாது போவென்றே கூறுகின்றாள்.நல்லவேளை என்னை பிடித்து விட்டது அவளுக்கு.சாக்லேட்டும் ,பாராட்டும் தான் இப்போதும் கை கொடுக்கின்றது.என் அருகிலேயே அமரவைத்துள்ளேன். எழுத தெரிகின்றது.கொஞ்சம் படிக்கின்றாள்.
நேற்று மதியம் கை கழுவும் இடத்தில் கல்லால் குழந்தைகளை அடித்துக் கொண்டிருந்தாள்.பத்தாம் வகுப்பு ,பன்னிரெண்டாம் வகுப்பு குழந்தைகள் கூட அவளைச் சீண்டி மகிழ்கின்றன. வருத்தமாயிருந்தது.இப்பதான் அவளை பள்ளியை விரும்பும் படி ஆக்கியுள்ள நேரத்தில் இப்படி....
சீண்டிய குழந்தைகளிடம் அவளின் நிலையைக் கூறி முடிந்தால் அவளுக்கு சாக்லேட் கொடுத்து அன்பாயிருங்களென அறிவுறுத்தி விட்டு பவித்ராவிடம் வந்து அந்த அக்காவை கண்டிச்சிட்டேன்மா இனி உன்ன வம்பிழுக்க மாட்டாங்க ....ஏதும் பிரச்சனை என்றால் என்னிடம் தான் கூறனும் கல்லால் அடிக்க கூடாதென்றேன்.. சிரிப்புடன் தலையாட்டினாள்....
இந்த குழந்தையையும் மென்மையாக்கி பிற குழந்தைகளுடன் இயல்பாய் பழக்க வைக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் நான்...

Wednesday 11 June 2014

மாறிய உலகம்

பதின் வயதில் பாவாடைக்கட்டி
பறக்கும் ஆசையும்,
பருவத்தில் தாவணி புடவையில்
காளையரை  கவரும் ஆசையும்,
மனம் படபடக்க காதலன்
முத்தமிட உடலெங்கும்
மின்சாரம் பாயும் ஆசையும்,
உடல்வளைத்து அழகு திமிர
ஒய்யாரமாய் நடந்து
கணவனை அன்பில் வீழ்த்தும் ஆசையும்,
வந்தது கண்டு அருவெறுத்து விரட்டிய
உறவுகளிடம்   அடையாளம் அறுத்து
பெண்ணாய் மாறிய மகிழ்வை
பகிர்ந்து கொள்ளும் ஆசையும்
 தாங்கி உலவுகின்றோம்
எங்கள் உலகில்....!


Tuesday 10 June 2014

தங்கமகள்

கண் விழித்து கற்று
வகைவகையாய் வரைந்து
கட்டிடப் பொறியியலில்
களிப்புடனே கோல்டு மெடல்
பெற்ற மனைவியை.......!

வட்டவட்டமாய் ஆடைதனை
கண்ட இடத்தில் கழட்டி வீசும் கணவன்

வட்டமாய் தோசையில்லையென்றும்
அம்மாவின் குழம்பைப் போல் வாராதென்றும்
தன் குடும்பத்துடன் நக்கலடிக்கின்றான்
அப்பாவின் பிரதிபலிப்பாய்..... !

எதிரிலிருப்பவளை
 எரிமலைக் குழம்பாய்
ஆக்குவதை உணராமல்...!


Sunday 8 June 2014

தீண்டல்

சில்வண்டின் ரீங்காரமாய்
நினைவலைகள் சுவீகாரமெடுத்த
தருணங்களில்....
பூவின் மென்மையை
உணர்ந்த தீண்டலில்
கூடலில் பருகிய தேனின்
சுவையில் மயங்கிய வண்டின்
தீண்டலில் சிலிர்த்த பூவின்
தலைகோதி முத்தமிட்ட
அலைகளின் சுவடுகளாய்
இதழோரச் சிரிப்பு......





5] என் வண்ணத்தூறலில் ஐந்து


--------------------------------------------------------
காளையவன் கைபிடியில்
துவண்டு சரிந்து
தோளில் மாலையாகி
படர்ந்து பறக்கும் தருணம்
பட்டென்று நீர் தெளித்து
போதும் எழுந்திரென்றாள்
முதிர்கன்னியை...
வாழ்ந்து முடித்த தாய்....

கனவு வாழ்க்கை
 கானல் நீராய்
கண்ணில் முத்துக்களாய்
கடத்துகின்றாள் காலத்தை
கன்னிமகள்...

தனிநாடு விரும்பும்
ஈழப்பெண்ணாய்..

Friday 6 June 2014

இயற்கை



வெயிலில் விளையாடி
வியர்வையில் அழுக்கான
புதுகை குழந்தையை
மரநார் கொண்டு
தேய்த்து குளிப்பாட்டி
வெளுத்துவிட்டாள்
இயற்கை ....

கார் மேகம்



1]குவலயம் விரித்தது
 குடையை,
 நனைந்திட..
---------------------------------------------


2]வான் மகள்
விரித்த கூந்தளின்
மணம் மண்ணில்....

தாயின் மணமாய்,,,

Thursday 5 June 2014

சேர்க்கை

மேட்டூர் அணைச்
சேரும் காவிரியாய்
அரசுப்பள்ளியில் மாணவர்
சேர்க்கை.....

Tuesday 3 June 2014

வாழ்த்துப்பா

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உலக சாதனைக்கவியரங்கத்தில் பணியாற்றிய புலவர் இராம.வேதநாயகம் அவர்களுக்கு எனது
” விழி தூவிய விதைகள்”
 நூலை நினைவாகத் தந்தேன் .

அந்நூல் படித்து அவர் எனக்கு எழுதி அனுப்பிய வாழ்த்துப்பா..

எண்சீர்

சமூகத்தின்           பார்வையினைக்
                               கொண்ட கீதா
                               சந்தனமாய் மணக்க ,கவி
                                மேலும்      தாதா  !

 இமயத்தின்          உச்சிவரை
                               புகழே செல்லும்
                               இன்கவிதை பென்ணுரிமை
                               பேசி வெல்லும் !

கமழ்கின்ற            தமிழன்னை
                               மடியில் நீயும்
                               கண்ணாகத் தவழ்ந்திடுவாய்
                               என்றும் சேயாய் !

சமைத்திட்ட         “விழிதூவி
                                யவிதை”     நூலே
                                சரித்திரத்தைப் படைத்திடும் உம்
                                ஆற்ற     லாலே !

பெண்ணிற்கு         விடுதலையே
                               கிடைக்க வேண்டிப்
                               பூரிப்பாய் பலகவிகள்
                                யாத்தே  உள்ளாய் !

மண்ணிற்கே          உம்போலக்
                                கவிஞர் தேவை
                                மாதர்நலன் காப்பதற்கு
                                மாதர்  தேவை !

உன்னாலும்            முடியுமென
                                அறிந்தேன் யானும்
                                  உள்ளன்பில் கவிதைமட்டும்
                                  இருக்கக் கண்டேன் !

பன்னாளும்           வாழியவே
                               கவியே கீதா
                              பல்லாண்டு பல்லாண்டு
                              தமிழாய் வாழி !
                         
மறக்காமல் நூலைப்படித்து எனை ஊக்கப்படுத்தி,வாழ்த்திய
 ”வெண்பா வேந்தர்”
புலவர் இராம.வேதநாயகம்,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.எட்.,அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்

Monday 2 June 2014

ஆலங்கட்டி

வியர்வை
முகர்ந்து சுமை தாளாத
முகிலின் பிரசவமாய்
ஆலங்கட்டி