World Tamil Blog Aggregator Thendral: ஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18

Wednesday 9 May 2018

ஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18

ஆறாவது தமிழ் பாடநூல்....2017-2018
பாடத்திட்டக்குழுப்பணி நவம்பர் 2017 சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துவங்கியது.
குழந்தைகளுக்காக நம்மால் முடிந்த அளவு முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை பிடிவாதமாக கொண்ட மதிப்பிற்குரிய செயலர் திருமிகு உதயச்சந்திரன் அவர்களின் கீழ் பணிபுரிந்த அற்புதமான காலங்கள்..... அவரின் எண்ணத்தை செயலாக்கம் செய்பவர்களாக இயக்குனர்கள்,இணை இயக்குனர்கள் , மற்றும் துணை இயக்குனர்கள்...
வருங்கால சந்ததியினருக்கான அறிவு விதை உலகின் மிகச் சிறந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஊன்றப்பட்டது...
தமிழ் நாட்டில் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்களின் குழுவில் நானும்....
வாழ்வில் முதன் முதலாக பள்ளி கல்வி துறை வளாகத்தில் நுழைந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று.மேலாய்வாளராக முனைவர் மணமலர்ச்செல்வி,
ஆசிரியர்கள் செல்வி,இராஜலெக்ஷ்மி,விமலா ,  ஜானகி, பேச்சாளர் தமிழ் திருமால், கவிஞர் சிவ.முரளி, ஜீவானந்தம்,ஆன்டனி,அன்புச் செல்வி  கலைவாணி,சக்திவடிவு,சாந்தசுந்தரி, தலைமைஆசிரியர்கள் ஜோதி லெக்ஷ்மி,ரமாதேவி மெய்யப்பன் ஆகியோருடன் நானும்..... குழந்தையின் மொழியில் இருப்பதற்காக எழுத்துகளை செதுக்கப்பட்ட காலங்கள்....ஒரு எழுத்து கூட பிரச்சினைக்குரியதாக அமைந்து விடக் கூடாது என்பதில் கூர்ந்த கவனம் எங்களை வழி நடத்தியவர்களிடம் இருந்தது.
வீடு ,வாசல், குடும்பம், குழந்தைகள் என அனைத்தையும் மறந்து....ஒரே சிந்தனையுடன் எல்லோரும் இரவு பகல் பாராது எழுதிக்குவித்ததை இரவு முழுதும் படித்து சீரமைத்து மறுநாள் எங்களை வழிநடத்திய தலைமை....
கல்வியாளர்களின்... எழுத்தாளர்களின்.. முற்போக்கு சிந்தனையாளர்களின் கருத்துகளை கேட்டு வடிவமைக்கப்பட்ட பொருண்மைகளுக்கு தொடக்கக் கல்வி முடித்து ஆறாம் வகுப்பு வரும் குழந்தைகளின் மனநிலையை மனதில் வைத்து..... எழுதப்பட்ட நூல்....தமிழ் மொழி மட்டும் அல்ல அறிவியல்....சமூகம் சார்ந்த ஒன்று...என்ற எண்ணத்தை உருவாக்கும் படி.....
வினாக்கள் குழந்தைகள் புரிந்து கொண்டு எழுதும் வகையில் அமைய வேண்டும்...புத்தகத்தை பார்த்த உடன் மாணவர்கள் நேசிக்கும் படி இருக்க வேண்டும்.அவர்களைச் சிதைத்து விடக் கூடாது....என்ற உறுதியான கொள்கை கொண்ட சீரிய தலைமையின் கீழ் உருவாக்கிய அனுபவம் என் வாழ்வில் படிமமாக...
என் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் என்னுடன் பணிபுரியும் சக ஆசிரியர்கள் என் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் சிறப்பாக பாடப்புத்தகப் பணியைச் செய்யுங்கள் என்று கொடுத்த ஊக்கமும் நம்பிக்கையுமே என்னால் மனநிறைவோடு இப்பணியைச் செய்யக் காரணமாக அமைந்தது.
அனுபவங்களே ஆசான் என்பதை உணர வைத்த காலங்கள்....
குழந்தைகளுக்கானத் தேடலில் ஏற்பட்ட பற்றாக்குறை.....
குழந்தைகளுக்கான உலகை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது.
பாடப்புத்தகம் மட்டுமே கல்வி அல்ல என்ற எனது எண்ணத்தை மேலும் உறுதி படுத்தியது...
பேராசிரியர் ச.மாடசாமி அய்யாவின் அன்பை,
கவிஞர் அறிவுமதி அவர்களின் நட்பை . ஏராளமான தோழமைகளைப் பரிசாக தந்த காலங்கள் இது . ஆனந்த விகடன் தடம்'இலக்கியமேமாத இதழில்  என்னை அங்கீகரித்த நாட்கள் இவை....
முழுமையான சிறப்பான நூல் என்பதாக இருக்கிறதா என உறுதியாக கூற முடியாது என்றாலும் குழந்தைகளுக்காக தரமாக அமைந்த நூல்....குறைகள் இருக்கலாம்.... எங்கள் குழந்தையல்லவா..... எங்களுக்கு பெருமிதமே..... வாழ்வின் பொருளை..... வாழ்க்கை நமக்காக அல்ல எல்லோருக்குமான ஒன்று என்ற விரி வானத்தை தொட முயலும் முயற்சி....என்பது இனிமையான ஆசை தானே....
என்னுடன் பணிபுரிந்த அத்தனை தோழமைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி..... உங்கள் கரங்களில் தவழும் எங்கள் குழந்தை .....நம் குழந்தைகளின் மனதோடு விளையாடட்டும்.....


7 comments :

  1. தங்களின் சிறந்த பணிக்கு வாழ்த்துகள்....

    ReplyDelete
  2. பெருமை மிக்க பணி...வாழ்த்துகள்

    ReplyDelete
  3. ஆறாம் வகுப்பு தமிழ் பாடநூல் தயாரிப்புப் பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட தங்களுக்கும் குழுவினருக்கும் மனமுவந்த பாராட்டு. தங்கள் பதிவு நம்பிக்கை தருகிறது.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் சகோதரியாரே

    ReplyDelete
  5. வாழ்த்துகள் மா. எதையும் ஈடுபாட்டோடு செய்யும் உங்களின் அர்ப்பணிப்பு உணர்வுதான் உங்களை அங்குக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. இன்னும் சிறந்த பணிகளைச் செய்ய இந்த அனுபவம் உங்களுக்கு உதவும். உங்கள் அர்ப்பணிப்பு தமிழ்க்குழந்தைகளுக்கும் உதவட்டும்.

    ReplyDelete
  6. எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  7. நல்ல பணி. வாழ்த்துகள்!!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...