World Tamil Blog Aggregator Thendral: முல்லை திரிந்த பாலையாய்.....

Tuesday 18 February 2014

முல்லை திரிந்த பாலையாய்.....


வைகறையில் துயிலெழுப்பும்
குயிலின் கூவலொவொன்று....

கதிரவனின் வரவைக்கூறும்
கரகரக்கும் புள்ளொன்று...

கீச்சு கீச்சென்று நடுநடுவே
இசை ஒத்தூதும் சிட்டுக்குருவிகள்...

உறுமிக்கொண்டே குட்டிகளோடு
விரைந்தோடும் தாய்பன்றியால்
தாவிப்பறக்கும் சேவல்
தன்மீது படர்ந்திடுமோ
பயத்தில் குஞ்சுகள் தடுக்க
கால்கள் தள்ளாடும்
கோழி ஒன்று....

கழுத்தில் கட்டிய
கயிறு தொடர
துள்ளி ஓடும் கன்றுகுட்டியின் அருகே
சரசரவென ஊறும் சர்ப்பத்தை
அலட்சியப்படுத்தி செந்நிறக்கால்களும்
வெண்பொதி உடலுமாய்
தலைதூக்கி நடக்கும்
கொக்கொன்று....

நகரத்தின் நடுவே
நிழல் தரும் கருவேலங்காடு
கதிரவனையும் நுழைய விடாமல்
இயற்கையின் மிச்சமாய்.....

காற்றின் நீர்ப்பசையை உறிஞ்சிடும்
நிலத்தின் நீர்வளத்தை துடைத்தழிக்கும்
இயற்கையை சீரழிக்குமென்றே
வைது கொண்டேயிருந்தேன்
பார்க்கும் காலமெல்லாம்...

சட்டென்று ஓருநாளில்
திருமண சமையலுக்காய்
திருமரணம் அடைந்த
கருவேலங்காட்டின் இழப்பாய்....
புட்களின் இசை..
பறக்கும் ஓசை...
மிச்சமாய் எச்சமாய்
விழுந்து கிடந்த கூடுகள்
மருத நில விலங்களின் ஓட்டங்கள்..
முகத்திலறையும் பகலவனின் கீற்றுகளை
பார்த்த கணத்தில்
வெறுமையானது மனம்
முல்லை திரிந்த பாலையாய்.....


8 comments :

  1. முல்லை திரிந்த பாலையாய்..உணர்வு புரிகிறது.
    அருமைங்க கீதா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிம்மா

      Delete
  2. வணக்கம்
    சகோதரி...

    ஒவ்வொரு வரிகளும் மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உடனுக்குடன் உங்களது டிடி சாரின் வாழ்த்துக்கள் .மனம் நிறைந்த நன்றி சார்

      Delete
  3. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ஐவகை நிலங்களை அடக்கி அசத்தலான கவிதை!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...