World Tamil Blog Aggregator Thendral: விடியாத காலைப்பொழுது

Wednesday 9 October 2013

விடியாத காலைப்பொழுது

காலையில் இனிமையாக
கூவி எனை எழுப்பும்
கருப்புக்குருவிகள்
வீட்டின் முன் அறையில்
வீரமாய் சன்னலில்
வீற்றிருக்கும் இடுப்பளவு
கருப்பு குதிரை பொம்மையில்
கலக்கமின்றி முட்டையிட்டு
குஞ்சு பொரித்து மகிழ்வாய்
குஞ்சுகளுடன் பறந்து சென்றன
இருமுறை குஞ்சு பொரித்து
இனிய சந்ததி வளர்த்து
மகிழ்வுடனே சென்றன.

வெறுமை தாக்க
காத்திருந்த என்னை நாடி
மீண்டும் சிறிய அலகில்
கூடமைத்து முட்டையிட்டு
காத்தனவே !
எப்போது போவேனென
எதிர்பார்த்து வாசலில்
எட்டி எட்டி காத்திருக்கும்
வம்படியாய் அதை நோக்கி
வாயேன் உள்ளே
என்றாலும் போ போ
என்றே எதிர்நோக்கும்!


ஓர் அதிகாலையில்
முத்தாய் மூன்று குஞ்சுகள்
சுறுசுறுப்பாய் பறந்து பறந்து
இரை தேடி ஊட்டி
வளர்த்தன!

நேற்றிரவு வீடு திரும்பிய
நேரம் நிசப்தம் எனைத்தாக்க
புரியாமல் உள்ளே நுழைய..

கதறிய குருவிகளின் ஓலம்
கேட்டு மனம் கலங்கி
வெளியே வந்தால்
என்செய்வேன்! என்செய்வேன்!

பொல்லாத பூனை தன்


பசியாற்ற கண் திறவா குஞ்சுகளை
புசித்து விட்ட கொடுமைதனை...

பாதுகாப்பேனென எனை நம்பி
பார்ப்புகளை பொரித்து
பத்திரமாய் போய்வாவென
எனை வழியனுப்பிக்காத்திருக்கும்
குருவிகளுக்கு எப்படி ஆறுதல் கூற?

 பூனையின் பசியை நோக்கவோ..
கதறும் தாய்க்குருவியை காணவோ..
இயலாத
கையறு நிலையில் மனம்
கலங்கித் தவிக்கின்றேன்...

காப்பாற்றவில்லையே நீயென
கதறும் குரலைக்

கேட்க முடியாமல் என்
காலைப்பொழுதுகள்
விடிகின்றன!....

2 comments :

  1. நெஞ்சம் கணக்கவேச் செய்கிறது. அந்த பொல்லாத பூனை எமனாக மாறிய சோகம் வடுகளை ஏற்படுத்தி விட்டதே. சோகத்தையும் கவிதையாக்கிய விதம் சிறப்பு சகோதரி.

    ReplyDelete
  2. நன்றி சார்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...