World Tamil Blog Aggregator Thendral

Wednesday, 6 October 2021

முதல் கார் பயணம்

இன்றென் வாழ்வில் மறக்க முடியாத நாள்...7.10.21

தனியாக காரில் நான் காரைக்குடிக்கு  நேற்று மாலை சென்று காலையில் திரும்பி வீட்டை அடைந்த போது எனது சிறகுகள் படபடத்தன...

நானா! நானே நானா! காரை ஓட்டி வந்தது.நம்ப முடியாமல் மகள் நிலா, சித்தி, தம்பி அதிர்ச்சியில் உறைய... நானும் நம்ப முடியாது உறைந்து நின்றேன்..

ஊருக்குள் ஓட்டி பழக முடிவு செய்து காரை எடுத்து பிறகு ஏன் காரைக்குடி செல்லக்கூடாதென்று மாலை 5.30 மணிக்கு கிளம்பினேன்...

எதிரில் வந்த வாகன ஓட்டிகள் நான் புதிதாக காரை ஓட்டுகிறேன் என அறிந்து எனக்கிசைவாக ஓட்டினர்..அன்பு சூழ் ஓட்டுநர்களால் நான் சென்று வர சாத்தியமானது..

மாமா சைக்கிள் பழகக்கற்றுக்கொடுத்த போது விழுந்து எழுந்து பிறகு சைக்கிளில் பறக்க துவங்கிய போது முளைத்த சிறகு பிறகு முதன்முறையாக இருசக்கர வாகனத்தை ஓட்ட  கற்கத்துவங்கிய போது வளரத்துவங்கியது...
பத்தாம் வகுப்பில் வண்டி ஓட்ட அனுமதித்த அம்மா இன்று எனைப் பார்த்தால் உச்சி முகர்ந்து இருப்பார்கள்.

மழையூரில் எனது தலைமை ஆசிரியராகப் பணி புரிந்த சரஸ்வதி குமாரி அவர்கள் கார் பயிற்சி எடுத்து லைசன்ஸ் வாங்க அடித்தளமிட்டார்.. அதற்கு பிறகு சிலமுறை ஓட்டி இருந்தாலும் சொந்தக்காரில் ஓட்டுவதே குறிக்கோளாக இருந்தது.

ஒரு மாத காலமாக லக்கி ஸ்டார் டிரைவிங் கிளாஸ் சகோதரர் பிரசாத் அத்தனை பொறுமையாக காரை ஓட்ட பயிற்சி அளித்து வருகிறார் அவருக்கு முதல் நன்றி...

தம்பி சாக்ரடீஸ் காரை ஓட்ட முடியும் என்ற தன்னம்பிக்கை அளித்து பயிற்சி அளித்தது எனது அச்சத்தை நீக்கியது.

இதோ இன்றென் சிறகுகள் விரியத் துவங்கி விட்டது.... மனதில் சிறிது அச்சமும் நிறைய தன்னம்பிக்கையும் சுமந்து காரை ஓட்டி வந்தது த்ரில்லர் படம் பார்ப்பது போல....

வீட்டில் நிறுத்தி எனக்கு நானே கை கொடுத்து கொண்டேன்..

நான் வந்துவிட்டனா என உறுதி செய்து மகிழ்ந்த தோழி வேணி  என எனது வளர்ச்சியில் பேரன்பு கொண்ட உறவுகள் தோழமைகள் சூழ வாழ்தல் வரம்...

Thursday, 16 September 2021

பயணம்

பயணம் தொடர்கிறது
பேரூந்தில் இறங்கும் பயணிகள்
தொடர் வண்டியில் பிரியும் பயணிகளென
 பயணிகளுடனான வாழ்வில்
எனது இறக்கத்திற்கான
காத்திருப்பில் .
எனக்கான இடமளித்து
இதயமளித்த உள்ளங்களை அசைபோடுகிறேன்...
என்னுடன் பயணிப்பவர்களின்
எண்ண அலைகளால் பயணம்
நிர்ணயிக்கப்படுகிறது..
ஆற்றுநீரில் தவழும் சருகாய்
அமைதியான பயணத்தில்
முழுமையை நோக்கி நகர்கிறேன்..
பிறை நிலவு பூரணமாவதைப்போல..


மு.கீதா

Friday, 20 August 2021

அசுரனின் தூரிகை

அசுரனின் தூரிகை

வரிசையாக நிற்கின்றன
விலங்குகளின் அணிவகுப்பில்
நிறைகிறது சூழல்..
ஒவ்வொன்றாய் வரச்சொல்லி
வரையும் அசுரனின் கைகளில்
கோடுகளாய் குறிப்பேட்டில்
ஒளிந்து கொள்கின்றன.
சிங்கம் அருகில் ஆடு
கம்பீரமாய் சிரித்துக்கொண்டே
யானை மீது ஒட்டகம் அமர்ந்து
இன்னும் உயரமாகிறது..
முயலுடன் கை கோர்க்கும் 
டைனோசரின் நீண்ட கைகளில்
வழிகிறது பேரன்பு..
சட்டென்று அம்மம்மாவும்
சடுதியில் கோட்டிற்குள் மறைகிறார்...
அம்மா அப்பா ஆயா வட்டத்திற்குள் மறைய....மீனாக்கா புள்ளியாகிறாள்....
அசுரனது ஓவியங்களில் உயிர்க்கும் 
அவர்களைக் காண முடிந்தால்
நீங்கள் பாக்கியவான்கள்...
கீதா

Wednesday, 21 July 2021

இனியச்சொல்

மேட்டிமைத்தனம் நிறைந்த இடத்தில்
முகங்களில் கவலைசூழபரபரவென
மக்களின் சலனம்...
அச்சமற்ற முகங்களின் பின்னே,
அதிகாரமும் பணமும் மறைந்திருக்க
பொருத்தமில்லா ஆடையுடன் தயங்கி தயங்கி,
நுழையும் காலத்தின் வடுதாங்கிய
மூத்த மகளின் கைகளில் நடுக்கம்..
மூச்சுக்காற்றிற்காக தவிக்கும் முதியவனின் உயிர்ப்பிற்காக வாழ்க்கையோடு போராட்டம்..
அவளைப் புறந்தள்ளும் கைகளில் 
மரணத்தின் வாசனை..
அக்கறையாய் விசாரிப்பு
அன்பாக சேவை செய்கின்றனரா?
ஆதரவோடு நடக்கின்றனரா?
தூய்மை தூய்மையாக உள்ளதா?
எந்தக் குறையிருந்தாலும் கூறுங்கள்.
பின்னிற்கும் கண்களின் தவிப்புகளைக் காண்கையில்
எதையும் கூறிடக்கூடாதென்கிறது மனம்..
இத்தனை கவனிப்பும் உண்மையான தல்ல...
இனிமையான சொற்களைத் தீர்மானிக்கிறது
பணமும் அதிகாரமும்...
பலகணியில் காணும்
இயல்பாக வளரும் முட்காடு சிரிக்கிறது...

Thursday, 8 July 2021

தாய்

அலறல் சத்தம் தாளாமல் துடித்தாள்
அழும் குழந்தையின் பசி வெடிப்பின்.
முதுகில் குழந்தை அழ அழ
எடுத்த கணை இரையில் தைத்து 
எம்பி விழச்செய்தது....
பசி நீக்கிய தாய்க்கு முத்தம் தந்த
பச்சிளம் குழந்தையின் அண்மை
மலையைப் பெயர்க்கும் வல்லமை உடையது.
தூற்றும் காற்றை புறந்தள்ளி புறப்பட்டவளை
சற்றும் தடுக்க முடியாது புயல் ஒதுங்கியது.
இயற்கை அரவணைத்து மகிழ்ந்தது...
பாதை சமைத்தவழியில் பயணிக்கவில்லையே
என்பது ஒன்றே அவளின் கவலை....

Wednesday, 16 June 2021

a kid like jake

a kid like jake English film 2018

என் குழந்தை திருநங்கை ஆக இருந்தால் நான் என்ன செய்வேன்....
இந்த கேள்விக்கு பதில் தர இன்னும் சமூகம் தயாராக இல்லை ...
இத்தனை ஆண்டு கால அனுபவம், வாசித்த நூல்கள் என்னைப் பக்குவப்படுத்தி இருப்பதால் அதிர்ச்சியிலிருந்து மீண்டு அவனை(ளை) ஏற்க தயாராக இருப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால் சிறு வயதில் இத்தனை பக்குவம் இருக்க வாய்ப்பே இல்லை.எனக்குள் குமைந்து ,என் குழந்தையையும் ஏற்க முடியாது வதைத்து ,நானும் இறப்பை நாடி இருக்கக் கூடும்.
ஆண் பெண் இருவருக்கான சமூகத்தில் திருநங்கைகளுக்கு திருநம்பிகளுக்கான சமூகத்தை நாம் ஏற்று உருவாக்கி இருக்கிறோமா? என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கும்
அவர்களை சாதாரண குழந்தைகளுடன் இணைத்து பழக விடுவதில்,அவர்களுக்கான தனிப்பட்ட வசதிகளை செய்து தந்துள்ளோமா என்றால் இல்லை.
இன்னும் நமது இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை பேரூந்துகளில்,பொது இடங்களில்,தியேட்டர்களில் எங்காவது அவர்களுக்கான வசதிகள் உள்ளதா?
இந்த உலகில் அவர்களுக்கான இடம் இல்லையா?
உணவு விடுதிகளில் கூட அவர்களுக்கான இடம் இல்லாத நிலையில் அவர்களை கொஞ்சமாவது திரும்பி பார்க்க அரசு துவங்கி உள்ளது.
பெரும்பான்மையோரின் நலத்திற்கு தரும் முக்கியத்துவம் சிறுபான்மை குறைபாடுள்ள மக்களுக்கு தருவதில்லை என்பது மனித நேயம் அற்ற நிலை.
இப்படி யோசிக்க வைத்த திரைப்படம் 
"a kid like jake"
தனது 4 வயது மகனின் மாறுபாடான செயல்களை குழப்பத்துடன் உற்று நோக்கி பள்ளி தலைமையாசிரியருடன் கலந்து என்ன தான் சமாதானம் செய்து கொண்டாலும் ஏற்க முடியாது தவிக்கும் அம்மா அப்பாவாக நடித்துள்ளவர்களின் மனநிலையை நாமும் அடையும் படியான சிறப்பான தேர்வு...
இன்னும் மனிதன் வளர வேண்டும்... அதுவும் நமது நாட்டில் இந்த குழந்தைகளை ஏற்றுக்கொள்ள காலம் பக்குவப்படுத்த வேண்டும்...
தமிழ் நாடு இந்தியாவிற்கு முன்னுதாரணமாக தோழி நர்த்தகி நடராஜை உயர் பதவியில் வைத்து சிறப்பித்துள்ளது .
அவர்களின் துன்பங்களுக்கு மருந்தை தர முன்வந்துள்ளது போற்றத்தக்கது.
உணர்வுள்ளவர்கள் பார்க்க வேண்டிய படம்.. நன்றி ஆசிரியர் ரெ.சிவாவிற்கு..
மு.கீதா
புதுக்கோட்டை

Tuesday, 15 June 2021

திரைப்படம்wonderfilm

Wonder cinema
ஆகி முதல் நாள் பள்ளி செல்கிறான்‌பள்ளியின் முதல்வர் அவன்மீது மிகுந்த அன்பு காட்டுகிறார்.எப்போதும் அவனது உணர்வுகளைப் புரிந்து செயல்படுகிறார்.ஆகியை கேலி செய்த மாணவனை பள்ளியை விட்டு அனுப்புகிறார்.
ஏனெனில் ஆகி Treacher collins syndrome ஆல் பாதிக்கப்பட்டு 27 முறை அறுவைச் சிகிச்சை செய்து தற்போதுள்ள முகத்தைப் பெற்று இருக்கிறான்.
எப்போதும் அவன் விண்வெளி வீரரின் முகமூடியை அணிந்து தனது சிதிலமான முகத்தை மறைத்துக் கொள்கிறான்.அவனது அன்னை நல்ல எழுத்தாளர்.அவரது உலகமாக ஆகி . ஆகி பிறந்த பிறகு அவளது அக்கா தனிமையை உணர்கிறாள்.அவளது பாட்டியே அவளுக்கு பிடித்த நபராக இருந்திருக்கிறார்.பாட்டியின் இறப்பு மேலும் அவளுக்கான நபரைத் தேட வைக்கிறது .அவளது தோழியின் விலகலும் அவளால் தாங்கிக் கொள்ள முடியாத சூழல்.
ஆகி பள்ளி சென்று படிக்கும் காலம் வந்துவிட்டது என அவனது அம்மா அவனை பள்ளியில் சேர்க்கிறார்.
பள்ளியில் மாணவர்கள் செய்யும் கேலியில் மனம் உடைந்து அழுகிறான்.
அவனது அம்மா நீ பள்ளிக்குச் செல்லும் போது விண்வெளிக்குச் செல்வது போல மகிழ்வுடன் செல் என்ற வார்த்தை அவனது துன்பங்களில் இருந்து அவனை மீட்டெடுக்க முயல்கிறது.
தனது முதல்நாள் பள்ளி அனுபவத்தை தனது பெற்றோரிடம் கூற மறுப்பவனைக் கண்டு அம்மா வேதனைப்படுகிறாள்.பள்ளிக்குப் போக வேண்டாம் என்று அவள் கூறுகையில் பள்ளிக்குச் செல்வேன் என்று அவன் உறுதியாகக் கூறுகிறான்.
அறிவியல் பாடத்தில் அவனது ஆர்வம் நண்பர்களைத் தருகிறது.ஒவ்வொரு குழந்தையும் ஆகியின் மேல் அன்பு செலுத்தத் துவங்குகின்றனர்.
குழந்தைகளுக்கான உலகை பெரியவர்கள் புரிந்து கொள்ள முயல்வதே இல்லை.
அவர்களின் துன்பங்களுக்கு மருந்தை அவர்களே கண்டு பிடிக்கின்றனர்.
அவனது ஒவ்வொரு அசைவையும் புரிந்து கொண்டு நடக்கும் அம்மா அப்பா அக்கா அவர்கள் வளர்க்கும் நாய் கூட.
முகமூடியை கழற்றி எனது மகனின் முகத்தை நான் காண வேண்டும் என அன்பு ததும்பி கூறும் அப்பா .
அவனது மகிழ்வே தனது வாழ்வாக எண்ணி வாழும் அம்மா...
மனதை நெகிழ வைத்த உண்மைக் கதை.ஆசம்.
குழந்தைகளுக்கான உலகை உலகம் எப்போது படைக்கப் போகிறது?
இப்படிப்பட்ட படங்கள் தமிழில் வரும் காலம் எப்போது?
இப்படத்தை அறிமுகம் செய்த ஆசிரியர் ரெ.சிவா விற்கு மனம் நிறைந்த நன்றி.
மு.கீதா
புதுக்கோட்டை

Friday, 7 May 2021

முதன்மை தலைமைச் செயலாளர் உதயச்சந்திரன் இ.ஆ.ப

மதிப்பிற்குரிய முதன்மைச் செயலர் இ.ஆ.ப உதயச்சந்திரன் அவர்களின் மாண்பு.
பாடநூல் தயாரிப்புக் குழுவில் ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடநூல் குழுவில் மதிப்பிற்குரிய உதயச்சந்திரன் அய்யாவின் கீழ் பணி செய்த காலங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.
ஒவ்வொரு நாளும் பாடங்களின் தன்மை குறித்து மாணவர்களின் மனநிலையில் நின்று அவர் படும் கவலை வியப்பாக இருக்கும்.
இரவு ஒரு மணிக்கு கூட நாங்கள் எழுதித்தந்த பாடங்களைத் திருத்தம் செய்து அனுப்புவார்கள்...எப்போது தான் தூங்குவார்கள் என்ற சந்தேகம் வரும்.

தமிழ் எழுத்துகளில்' ரகர ' எழுத்து பிழையாகவே அச்சிடப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய போது , ஏன் இதை இத்தனை நாட்களாக கவனிக்க வில்லை என்று கூறி உடனே அச்சு இயந்திரத்தில் மாற்றம் நடவடிக்கை எடுத்தார்.

தமிழ் மொழி மீது அவர் கொண்டிருந்த தீராக்காதலை அவரின் செயல்களில் ஒவ்வொரு முறையும் உணர முடிந்தது..

உங்கள் அறிவை எல்லாம் பாடநூலில் காட்ட வேண்டாம் என்று நினைக்காதீர்கள்.அவர்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் அவர்கள் விரும்பி படிக்கும் படி வண்ணப் படங்களுடன் கண்களைக் கவரும் வகையில் பாடநூல் அமைய வேண்டும் என்று வலியுறுத்துவார்...

அவரது நல்ல எண்ணத்தை செயலாக்கம் செய்ய பிடிவாதமாக இருப்பார்.அவரது எண்ணப்படியே பாடநூல்களில் புதிய பல கருத்துக்கள் செயலாக்கம் பெற்றன.

மகத்தான தலைமையின் கீழ் பணிபுரியும் பெருமையுடன் ஏற்பட்ட அத்தனை சிரமங்களையும் புறந்தள்ளி புன்னகையுடன் வலம் வருவோம்...

பாடநூலில் தொழில்நுட்பங்களைப் புகுத்தி விரைவுக்குறியீடைப் பயன் படுத்தி இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ அவரது சீரியத் தலைமையின் கீழ் முனைவர் நா.அருள்முருகன் அய்யா வழிநடத்த பணிபுரிந்த காலங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.

அவரது அனுபவங்களைத் தொகுத்து 'மாபெரும் சபைதனில்' என்ற நூலில் அவர் சந்தித்த எளிய மனிதர்களின் உன்னதமான பண்புகளை எழுதியுள்ளார்...

எந்த நிலையிலும் குறை கூறாமல் நிறையை மட்டுமே கூறும் அவரது பண்பு போற்றத்தக்கது...

இரு மாதங்களுக்கு முன்பு வீதி கலை இலக்கியக் களம் நிகழ்வில் அவரது 'மாபெரும் சபைதனில்'நூல் அறிமுகம் செய்த போது முழுமையாக கலந்து கொண்டு தனது ஏற்புரையைக் கூறிய போது ஒரு மயிலிறகு வருடலாக அவரது தன்மையை உணர்ந்தோம்....
அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்களில் முதன்மையான நூல் அது.

இன்று மதிப்பிற்குரிய ஆட்சியர் இறையன்பு அவர்களின் உடன் பணியாற்ற உள்ளார்...

தொழில் நுட்பங்களின் உதவியோடு தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க உள்ளது .

தகுதியான அதிகாரிகளைத் தேர்வு செய்து ஆட்சி செய்ய புறப்பட்டுள்ள மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களின் பண்பாடு அனைத்து மாநிலத்திற்கும் எடுத்துக்காட்டாக அமையும் என்பது மறுக்க முடியாத உண்மை...

மனம் நிம்மதியாக உள்ளது....

Tuesday, 30 March 2021

தேர்தல் பணி

நானும் தேர்தல் பணியும்...
1988 இல் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த அடுத்த வருடமே சட்டமன்றத் தேர்தல் பணி.திருமானூர் அருகே அழகிய மணவாளன் என்ற ஊரில்...
தேர்தல் நாளுக்கு
முதல் நாள் தான் தெரியும், எந்த ஊரில் பணி  என்பதால் எனது அப்பாவும் கூட துணையாக வர ..பேரூந்தே இல்லாத ஊருக்கு எப்படி போவது?
பணிபுரியும் பள்ளிக்கு இரண்டு பஸ் ஏறி இரண்டு கிமீ நடந்து செல்ல வேண்டும்.பேருந்து இல்லாத போது சிமெண்ட் ஆலைக்கு ஜிப்சம் எடுத்து செல்லும் டிப்பர் லாரியில் ஏறி பல நாட்கள் சென்றிருக்கிறேன்.
அழகிய மணவாளன் ஊருக்கு முதலில் செம்மண் லாரியில் சென்று பிறகு சைக்கிளில் அப்பா கொண்டு விட்டார்கள்..
ஒரு உடைந்த ஓடுகளால் ஆன பள்ளி அது.இரண்டு வகுப்பறைகள் கொண்ட ஒரே ஒரு கட்டிடம்.
ஒரு பக்கம் போலீஸ்காரர் உறங்கிக்கொண்டிருக்க மறுபக்கம் செய்வதறியாது அமர்ந்திருந்தேன்.நல்லவேளையாக இன்னொரு பெண் ஆசிரியர் துணைக்கு வந்த பிறகு அப்பா சென்றார்கள்...
இரவு இருபது வயதில் முதன் முறையாக தனியே அத்துவானக் காட்டில் தங்கிய உணர்வு...
காலையில் குளிக்க கழிவறை எங்கே என்று கேட்டபோது பள்ளிக்கு பின்புறம் சற்று தொலைவில் குளத்தைக் காட்டி போக சொன்னார்கள்..

பயத்தில் குளிக்காமல் முகம் மட்டும் கழுவிக் கொண்டு தேர்தல் பணி செய்தேன்...இரவு ஒரு மணிக்கு கடைசி பூத் என்பதால் தாமதமாக வந்தனர்.வாக்குப்பெட்டியை ஏற்றிய  லாரியில் நல்லவேளையாக எங்களையும் ஏற்றிக்கொண்டு அரியலூரில் இறக்கிவிட்ட போது மணி இரண்டு...

இரண்டு கிமீ தொலைவில் உள்ள வீட்டிற்கு ,முதன் முறையாக தனியே நாய் ஊளையிடும் சத்தத்திற்கு அஞ்சி ஓடாத குறையாக ஓடி அடைந்தேன்.அப்போதெல்லாம் அலைபேசி இல்லை என்பதால் தகவல் தெரிவிக்க முடியாத நிலை...

அடுத்து வந்த அத்தனை தேர்தல் பணிகளும் இதே நிலை தான்.
இரண்டு வருடங்களுக்கு முன்
 32 வருடங்கள் கழித்து பாராளுமன்ற தேர்தல் பணி இலுப்பூருக்கு அருகே ஒரு கிராமத்தில்... அங்கு ஒரு மோட்டார் ரூம் போல தொங்கிய கதவு தான் கழிப்பறை என்றதும்..சொல்ல முடியாத துயர்..
பெண்கள் தங்கள் மாதவிடாய் துன்பத்திலும் தேர்தல் பணிக்கு வரும் போது இப்படி கழிவறை இருந்தால் என்ன செய்வது?
சில நேரங்களில் ஐந்து கிலோமீட்டர் கூட நடந்து சென்று பணி பார்த்து திரும்பியது உண்டு...

முகநூலில் வேதனையைப் பகிர்ந்ததும் பதறித் துடித்த தலைமைஆசிரியர் பள்ளிக்கு பின்புறம் இருந்த வீட்டின் கழிவறையைப் பயன்படுத்தி கொள்ள அனுமதி வாங்கி தந்தார்.. ஒரு வழியாகப் பணி முடித்து, வாக்குப்பெட்டி எடுக்க பதினோரு மணி ஆயிற்று..

வாக்கு பதிவு முடியும் வரை சில ஊர்களில் உணவு ஏற்பாடு செய்து தருவார்கள்.முடிந்ததும் மாலை டீக்கடைகள் கூட அடைக்கப்பட்ட நிலையில் உணவுக்கு வழி ஏது?
இரவு வீடு வந்தபிறகு தான் உணவு..

கார் இருந்த ஆசிரியர்கள் உடனே கிளம்ப மற்ற பெண் ஆசிரியர்கள் அந்த நள்ளிரவில் பேரூந்தே இல்லாத பேரூந்து நிலையத்தில் காத்து இருந்தார்கள்.ஒரு நாள் முழுவதும் சாப்பிட நேரமின்றி பணியாற்றி தேர்தல் பணிக்கான கடமையைச் செய்யும் ஆசிரியர்களின் நிலைமை இது தான்...

ஒரு கழிப்பறை தண்ணீர் வசதியுடன் கேட்கிறோம் அதைக்கூட தர இயலாத நிலை தான்  சுதந்திர இந்தியாவில்...
இதோ அடுத்த தேர்தல் பணிக்கு தயாராகி விட்டோம்... 
இந்த கோடைகாலத்தில் எந்த பள்ளியில் பணி என்று தெரியாமல் தவிக்கும் நிலை.எனது தோழி தேர்தல் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கு கீழே மூன்று ஆண் ஆசிரியர்கள்...இரவு பாதுகாப்பு இல்லாத பள்ளியில் இவர்களோடு வாக்குப் பெட்டிகளைப் பாதுகாத்து மறுநாள் பணி புரிய வேண்டும்...

எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை..அதற்கு துணிந்தே தான் பணியை ஏற்கின்றோம்..பல ஆசிரியர்களை தேர்தல் பணியில் இழந்து உள்ளோம்.. இருந்தாலும் இந்த நிலையில் சற்றும் மாற்றமில்லை என்பது  வேதனையான உண்மை....

Wednesday, 10 February 2021

அசுரனதிகாரம்

மென்மலரை தீண்டுவதாய்
தட்டிக்கொடுக்கிறான்
அவனது ஆணைக்கு கட்டுப்பட்டு துயில்வதாய் நடிக்கின்றன சின்னாவும பின்னியும்.
அருகில் அவனது அண்மையை ரசித்து 
கண்சிமிட்டிக் கொள்கின்றன.
அவைகளின் உறக்கத்தை கலைத்து விடாத
அக்கறையுடன் மெதுவாய் அருகில் படுக்கிறான் மலர்மண்மீது உறங்குவதாய்.
சத்தமிடாது அகன்ற என்னைக் 
கடைக்கண்ணால் அதட்டி அழைக்கின்றான்..
கண்களால் ஏனென்று கேட்க..
கையால் உத்தரவிடுகிறான் படுஎன...
அவனெழுந்த இடத்தில்..
முயல்குட்டியின் வாஞ்சையுடன்
குட்டிப்பூனை  உரசுவதாய்..
உறங்க முயல்கிறேன்..
சின்னாவும் பின்னியும் அடக்க முடியாத சிரிப்பையடக்கி
கைதட்டி கண்கொள்ளாத குறையாய்
அவனின் அதிகாரத்திற்கு நடித்து
கண்மூடிக் கிடக்கின்றன.
காலம் சற்று உறைந்து ரசித்து
நகர்கின்றது...

Tuesday, 26 January 2021

திரை விமர்சனம் The last colour

The last colour -Hindi film 2019

மனதை விட்டு நீங்காத படிமமாக மனதில் உறைந்து நிற்கிறது..
சமூகத்தின் மறைக்கப்பட்ட பக்கங்களை யாரும் அறிந்திராத அல்லது அறிய விரும்பாத ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வினை கண் முன் காட்சிப் படுத்துகிறது" தி லாஸ்ட் கலர் ."
எழுதி, இயக்கி ,தயாரித்த விகாஸ் கண்ணாவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ஒளிப்பதிவாளர் subhrasnu kumar dass
நீனா குப்தா நூராக,
Princy suthakaran நூர் சக்ஸேனாவாக
,Aqsa Siddique,சோட்டியாக ,சிண்ட்டுவாக ராஜேஸ்வர் கண்ணா ,ருத்ராணி செட்ரி அனார்கலியாக,ராஜாவாக aslam shaik வாழ்ந்துள்ளனர்.
ஏன் மதத்திற்கு எதிராக, சமூக பண்பாட்டிற்கு எதிராக போராடுகிறீர்கள் என்ற கேள்வியுடன் படம் துவங்குகிறது.
எந்த மதமும் ஒருவரை மோசமாக நடத்த அனுமதிக்காது.யாருக்கு எதிராகவும் போராடவில்லை.உரிமைக்காக போராடுகிறேன் என்று கூறும் நூர் சக்ஸேனா திருநங்கைகளுக்கான ,தெருவோர குழந்தைகளுக்காக போராடி வெற்றி பெற்ற வழக்கறிஞர்.
தற்போது விதவைகளும் ஹோலி பண்டிகை கொண்டாட உரிமை கேட்டு போராடி வெற்றி பெறுகிறார்.
இதனால் இந்தியாவில் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு இது துவக்கம் என்ற பதில் மாற்றத்திற்கு விதையாகிறது.
விதவை நூராக நடிக்கும் நீனா குப்தா அவரது மென்மையான உணர்வுகளை எளிதாக நம்மீது கடத்தி விடுகிறார் இயல்பான நடிப்பால்.யாரோடும் பேசாமல் மந்திரங்களைக் கூறிக்கொண்டு உணர்வற்ற சடப்பொருளாக வாழும்  நூரை, சோட்டி தனது அன்பால் அவரது இறுகிய மனதில் வேர் விட்டு பாசத்தால் கட்டிப் போடுகிறாள்.
படிக்கத்தெரியாத நூர் தாகூரின் கீதாஞ்சலி புத்தகத்தோடே வாழ்கிறாள்.தாத்தா படிக்க வைக்க ஆசைப்பட்டும் குடும்பத்தினர் சம்மதிக்காத காரணத்தால் படிக்க முடியாத நூர் படிக்க கற்றுத்தர ஆசிரமத்தலைவியிடம் கேட்கும் காட்சி பெண்கல்விக்கான வித்து.
ஏன் வண்ணங்களைப் பிடிக்காது என்றவளின் கேள்வி சமூகத்தின் முகத்தில் அறையப்படுகிறது.

நூருக்கு பிடித்த பிங்க் வண்ணம் பூசி ஹோலி கொண்டாட நினைக்கும் சோட்டியின்  வாழ்க்கை படிக்க காசு சேர்ப்பதற்காக கழைக்கூத்தாடியாக கயிற்றிலும் வாழ்விலும் ஊசலாடுகிறது.
நண்பனாக சோட்டியைக் காக்கும் சிண்ட்டு தவிக்கும் தவிப்பு நம்மையும் தவிக்க வைக்கிறது.
தெருவோர குழந்தைகளின் வலியை ,திருநங்கைகளின் துயரங்களை நாம் அறியாத சமூகத்தை அறிய வைக்கிறது இப்படம்.
பெண்குழந்தை பிறக்காததற்காக காவலராக வரும் ராஜாவின் மனைவி படும் துயரம்,கல்விக்காக பெண்குழந்தைகள் ஏங்கும் நிலை,கணவனை இழந்த பெண்களின் நிலை ,திருநங்கைகளின் நிலை, தெருவோரக் குழந்தைகள் நிலை என ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வியலைக்  காட்சிப்படுத்துகிறது.
இறுதியாக வழக்கறிஞராகி அம்மாவாக நினைத்த நூரிடம் கொடுத்த  உங்கள் மீது நிச்சயமாக ஹோலியன்று வண்ணம் பூசுவேன் என்ற வாக்குறுதியை ,சட்டத்தின் துணைகொண்டு ஆசிரமத்தில் வாழும் அத்தனை விதவைகளுடன் வண்ணங்களை இறைத்து பூசி கொண்டாடி நிறைவேற்றுகிறாள் பெயரே இல்லாது வாழ்ந்த சோட்டி .
வயதான ஆண்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து அவர்கள் இறந்த பிறகு விதவையாக்கி அவர்களை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்குவது எந்த மதமாக இருந்தாலும் ஏற்க முடியாத ஒன்று...
Water என்கிற படத்தை சமீபத்தில் பார்த்து முடித்த நிலையில் The last colour என்ற இந்தி படம் பெண்கள் சட்டங்களை வெறும் பேப்பரில் மட்டுமே படிக்காமல் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பதாக உள்ளது.

இன்னமும் தமிழ்ப்படங்கள் நான்கு பாடல்கள்,நான்கு சண்டைகள் என்று ஹீரோயிசத்தை ஒழித்து சமூகத்திற்கான பாதையில் எப்போது பயணிக்கப்போகிறது என்பதை காலம் தான் உணர்த்த வேண்டும்.

மு.கீதா

Monday, 23 November 2020

உவமைக்கவிஞர் சுரதா

உவமை கவிஞர் சுரதா நூற்றாண்டுவிழா
தமிழ் வளர்ச்சித் துறை நாகப்பட்டினம்.

உயிரில் கலந்து உணர்வில் உறைந்த
உன்னதத் தமிழே தாயே!
மேதினி வியக்கும் உயர்ந்தோர் போற்றும்
மேன்மையானவளே!
வணங்குகின்றேன் உனையே!

நல் ஏரென்றே
சொல் ஏரெடுத்து
பல்லோர் போற்ற
பாரினில் சிறக்கும் தலைவா!
சின்னவள் நானும்-உனையே
சீரியத் தமிழால் வணங்குகின்றேன்.

கவிச்சரம் தொடுத்து
கனிவுடன் படைத்து
மணியென தந்திடும்
மக்காள்!
மலைவாழைத்தமிழை 
பாமாலையெனவே
மகிழ்ந்தே படைத்திடுவோம் வாரீர்!

கனித் தமிழைச் சுவைக்கவே
அணிஅணியாய் திரண்ட
சான்றோரே!
படைக்கின்றோம்
செவிமடுத்து கேளீரென வணங்குகின்றோம்.

உவமைக்கவிஞர் சுரதா
--+++++++++++++++++++++
சங்கம் போற்றியத் தமிழே!
அங்கம் மரபாயான தமிழே!
சங்கத் தமிழ் மலர்ச்சோலையில்
சிந்தும் தேனை எடுத்தே
சிதறாமல் தமிழைச் சுவைத்தீர்.
தங்கத் தமிழே!- எங்கும்
பொங்கி முழங்கிடும் சிங்கத் தமிழே!
மங்கா புகழுடைய வேந்தே
தங்கிடும் புவியில் நிலைத்தே
எங்கும் சிறந்திடும் உம்பாட்டே!

ஏற்றிடும் தமிழில், கற்றோர்
போற்றிடும் தேன்தமிழ் கவிதனை
சாற்றிடும் அமிழ்தென படைத்திட்டீர்.
நாற்றென செழித்து வளர்ந்திடவே
ஏற்றமிகு கவிதனைப் பதியமிட்டீர்.

ஊற்றென உவமைகள் உம்மில் முகிழ்த்திட
காற்றென கவிமழை பொழிந்தே
நூற்றாண்டு கடந்தும் வாழ்கின்றீர்!
நூறாயிரம் வாழும் தமிழெனவே!

பாட்டினில் கற்பனை எதற்கென்றே-தமிழ்
காட்டினில் இயல்பாய் உவமைகளை
ஏட்டினில் எழுதிட உரைத்திட்டீர்.
நாட்டினில் நிலவிடும் தீமையெல்லாம்
வாட்டிடும் துன்பத்தீயில் என்றே
தீட்டிய வரிகளில் சுடர்விட்டே
சாட்டியே நீரும் தமிழ்ச்சாட்டையை எடுத்தீர்.
கூட்டினில் பறவையென இருந்தமிழை
பாட்டினில் படைத்தே விண்புகச் செய்தீர்.

கற்றிடு மரபை ,கற்றிடு சங்கத்தமிழை
பெற்றிடு உயர்வை, ஏற்றிடு பெருமை என்றீர்.

உன்னதத் தமிழால் உலகு பாடியே
கன்னல் தமிழைக் களிப்புடன் தந்தீர்.
மலரினில் வழிந்திடும் மதுஉண்ட வண்டென
மயங்கியே உம்மால் கிடக்கின்றோம்.


என்றென்றும் தமிழாய் வாழ்ந்தீரே
நன்றே நன்றே உம்பாட்டு
சென்றே திக்கெட்டும் சிறத்திடுமென்றே
வாழ்த்தியே நானும் அமைகின்றேன்.

மு.கீதா
புதுக்கோட்டை
 





,

Wednesday, 18 November 2020

சிறகுகள்

சிறகுகள் கண்டு வியக்கின்றாய்...
முளைத்த வலி கூறும்
 ஒவ்வொரு சிறகும்,
ஒவ்வொரு மரணத்தைக் தொட்டு உதித்ததென்பதை..
பறவைகளுக்கானதைப் போல இயல்பானதல்ல அவை.
அன்பில் முளைத்ததொன்று
ரௌத்திரத்தில் மற்றொன்று
பிடிவாதத்தில் பிறந்த சிறகு
பெற்ற வலியை அகங்காரம் என்பர்.
அவை பறக்கத் துடிக்கையில்
அன்பின் கத்தி கொண்டு
அறுத்து மகிழ்ந்தனர் .
திமிறி பறக்கத் தவிக்கையில்
திடீரென வெட்டிச் சிரித்தனர்.
பகடிகள்,ஏளனங்கள்,அலட்சியங்கள்
பரிகாசங்கள், அதிகாரங்கள்,அவமானங்களைக் உணவாக உண்டு முளைத்த சிறகுகளவை.
வெட்டவெட்டத் துளிர்ப்பது கண்டேனுக்கு
அச்சம்...
இது ஆதித்தாயின் மரபின் எச்சம்..
துளிர்க்கவே பிறந்த சிறகுகள்...

Thursday, 12 November 2020

சூரரைப் போற்று

வாழ்த்துக்கள் சூர்யா மற்றும் சுதா கோங்கராவிற்கு
தனது அட்டகாசமான நடிப்பை காட்டியிருக்கும் சூர்யாவின் உழைப்பு அசாத்தியமானது.எளிய மக்கள் விமானத்தை வானில் பார்த்து அதிசயிப்பதை விட்டு அவர்களும் அந்த பயணத்தின் மகிழ்வை அடைய வைத்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு கண்முன் காட்சியாக அமைத்துள்ள சுதாவிற்கு வாழ்த்துக்கள்..
படத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்துள்ளனர்.
பணம் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற கார்ப்பரேட் எதேச்சாதிகார செயல்களுக்கு எதிரே போராடி வெற்றி பெறுகையில் கண்கள் கலங்குகின்றன.அது உண்மைக்கு கிடைத்த வெற்றி என்பதை எண்ணி.
பேக்கரி கடை வைப்பதை குறிக்கோளாகக் கொண்டு அதில் வெற்றி பெறும் அபர்ணாவை வழக்கமான சினிமா கதாநாயகிகளின் முன் உயர்ந்து நிற்க வைத்து சுதாவிற்கு பாராட்டு.
முதலாளித்துவத்திற்கும் ஏழைகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்றும் தொடர்கதை.
பெண் இயக்குநர்கள் எடுக்கும் படத்தில் பெண்களை எப்போதும் சுயமரியாதை உள்ளவர்களாக காட்டுவதை தொடர்ந்து பார்க்கிறோம்... ஆணாதிக்க ஆண் இயக்குநர்கள் இன்னும் கதாநாயகிகளை ஊறுகாயாக, போகப் பொருளாக காட்டுவதை நிறுத்த வேண்டும்...
இனியும் தொடர்ந்தால் பெண்இயக்கங்கள் நிச்சயமாக எதிர்த்து குரல் கொடுக்கும்..
பெண்களை மதிக்கும் பாத்திரத்தில் சூர்யா தொடர்ந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சி...
சூர்யாவை வெறும் நடிகராக பார்க்க முடியவில்லை.மாணவர்களின் கல்விக்காக குரல் கொடுப்பவராகவும் தெரிவதை தடுக்க முடியவில்லை.. எங்கள் பள்ளி மாணவிகள் அகரத்தால் தொடர்ந்து பயன்பெற்று வரும் மகிழ்வு சூர்யாவை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைக்கத் தோன்றுகிறது....
படத்தில் குறைகள் இருக்கலாம்... ஆனால் சமுதாய பிரச்சினையை எடுத்து அதை சிறப்பாக காட்சிப்படுத்திய சுதாவை பாராட்டாமல் இருக்க முடியாது...
வாழ்த்துக்கள் சூர்யா... நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல படம்... தந்தமைக்கு

Sunday, 25 October 2020

வீதி கலை இலக்கியக் களம் 77

வீதி கூட்டத்திற்கு எழுத்தாளர் கி.ரா அவர்கள் வருகை

வீதி கலை இலக்கியக் களம் 77
இதுவரை நடந்த வீதி கூட்டங்களில் ஆகச் சிறந்த கூட்டமாக இன்றைய வீதி அமைந்தது.
மகிழ்வில் மனம் கூத்தாடுவதை உணர்கிறோம் ஏனெனில் எதிர்பாராத ஆச்சரியமாக எழுத்தாளர் கி.ரா அவர்கள் இன்று வீதி நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .மாபெரும் எழுத்தாளரை வீதி வணங்கி மகிழ்ந்தது.நம்ப முடியாத உண்மை.எத்தனை எளிமையாக நூற்றாண்டை நெருங்கும் அவரின் எளிமை உன்னதமானது.
கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.
எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கி.ராவின் கதைகள் குறித்தும்,அவருடனான நட்பு குறித்தும்,கரிசல் இலக்கிய வகைமையின் சிறப்பு குறித்தும் கை தேர்ந்த கதை சொல்லியாக கூட்டத்தை தன் வசப்படுத்தினார்.
வீதி உறுப்பினர்களான இரா.ஜெயா சுற்றுப்புற சூழல் கதையும்,மலையப்பன் கோபல்ல கிராமம் நாவலும், கிரேஸ் பிரதிபா அட்லாண்டா சொந்த சீப்பு கதையும், சுபஸ்ரீ முரளீதரன் சென்னை கதவு கதையும்,கமலம்எறும்பு கதையும், காரைக்குடி கிருஷ்ணாவேலைவேலையே வாழ்க்கை கதையும், சகோதரர் பாண்டியன்எழுத மறந்தகதையும்,கீதா பேதை கதையும், குறித்து மிகச் சிறப்பாக விமர்சனம் செய்தனர். சகோதரர் கஸ்தூரி ரங்கன் கூட்டத்திற்கு தலைமை பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்தி குருபூஜை கதையும் குறித்து மிகச் சிறந்த விமர்சனங்களைக் கூறிய விதம் அருமை.
கீதா வரவேற்புரை கூற,சோலச்சி நன்றியுரை கூற கூட்டம் நான்கு மணி நேரத்திற்கு மேல் வீதி நடைபெற்றது.
வீதி கூட்டத்திற்கு எழுத்தாளர் கி.ரா வை வரவழைத்த தோழர் நாறும்பூநாதன் அவர்களை வீதி வணங்கி மகிழ்கிறது.மிக்க நன்றி தோழர்.
இன்றைய பொழுது கி.ராவின் நினைவுகளோடு இனிமையாக கழிந்தது...
விரைவில் வீதி உறுப்பினர்கள் கி.ராவை சந்திக்க அனுமதி அளித்துள்ளார்.. மிக்க நன்றி அனைவருக்கும்.

Friday, 23 October 2020

உலகப் பெண்கவிஞர் யார் ? எவர்? தொடர் 1

உலகப் பெண் கவிஞர் -யார் எவர் ?

கவிஞர் மாயா ஏஞ்சலோ.



அமெரிக்கப் பெண் எழுத்தாளர் .கவிஞர் ,சமூகச் செயற்பாட்டாளர் ,நடிகை,பாடகி,பத்திரிக்கையாளர்,திரைப்படைப்பாளர் என பன்முகமாய் இயங்கியவர்.கறுப்பெழுத்தின் முன்னோடிமார்ட்டின் லூதர் ,மால்கம் எக்ஸ் ஆகியோருடன் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர் .இனவெறிக்கு எதிராகப் போராடியவர் ஆறு மொழிகளுக்கு மேல் எழுதவும் பேசவும் தெரிந்தவர் .எகிப்து கானா நாட்டுப்பத்திரிக்கைகளின் ஆசிரியராகப் பணிபுரிந்த கவிஞர் மாயா ஏஞ்சலோ அவர்கள் ....

அவரது கவிதைகள் அறச் சீற்றம் நிறைந்த சொற்களால் நிறைந்தவை, அவரது வாழ்வின் துயரத்தை காட்டும் கண்ணாடி. தனது ஏழு வயதில் தாயின் நண்பரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானபோது குடும்பத்தின் அன்பின் வலியில் அழுகுரலோடு தன்னை புதைத்துக்கொண்டாள். தனது குரல் அந்த மனிதனை நான்கே நாட்களில் கொன்றுவிட்டது என்பதை ஏற்க முடியாது ஆறு ஆண்டுகள் மௌனச் சிறையில் மூழ்கினாள். ஆறு ஆண்டுகால வாசிப்பு அவருக்கு மனித குலத்தின் உயிர் நாடியை உணர்த்தியது. பதினான்கு வயதில் அநீதிக்கு எதிராக, சொற்களை கொண்டே போர் தொடுக்க முடியும் என்பதை புரியவைத்தது.

 "I know why the caged bird sing (1969)". என்ற சுயசரிதை நூலை அடுத்து ஒன்பது நூல்களில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார்.

·         Life doesn't frighten me (1993).

·         My Painted House, My friendly chicken and me (1994).

·         Kofi  and his magic (1996).

·         ஆகிய நூல்களை குழந்தைகளுக்காக எழுதியுள்ளார்.அவரது முதல் சுயசரிதை நூல் வன்கொடுமைக்கு ஆளான கறுப்பின பெண்ணின் வழியைக் கூறிய போது உலகே அவரைத் தாக்கியது .நான் வன்முறையையும் ,அடக்குமுறையையும் வன்கொடுமைகளையும் இலக்கியத்தால் எதிர்கொள்ளத்துணிந்தார் .

          அவரது குரல் ஒடுக்கப்படுபவர்களுக்கான குரல் ,குறுகிய கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டாலும் கீழ் வானத்தில் எனது சிறகுகள் மிதக்கப் போவதில்லை என்பதை அறிந்தாலும் ,நான் எனது அலகைத்திறந்து பாட முயற்சிக்கிறேன் .கூண்டுப் பறவைதான் என்றாலும் தான் பாட மறப்பதில்லை என்றவரின் கவிதை கடத்தும் சோகம் படிப்பவர்கள் மனதில் உறைந்து நிற்கும் .

                      இன்றைய நவீன உலகில் பெண் உடல் மாற்றப்பட்டுள்ளதை ,பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தனது சொற்களால் நெய்து ஆயுதமாக்கினார் .

       'உங்கள் கடுப்பான ,திரிக்கப்பட்ட பொய்களால்

        வரலாற்றில் என்னை வரைந்திருக்கலாம்,

        பாழ்கதியில் என்னை நீங்கள் மிதித்து

        துவைத்திருக்கலாம் ,அப்படி இருந்தாலும்

        தூசிப்புழுதியாக ,நான் உதித்தேழுவேன்'

என்று காலத்தால் அழியாத . விளங்குகின்றார் .

அவரது கவிதை வரிகள் ...

'கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்

சுதந்திரப்பறவை காற்று மீதேறித் தாவிப் பாயும்

விசை தீரும்வரை சமநிலை கொண்டு மிதக்கும்

ஆரஞ்சு வண்ண சூரியக் கதிர்களில்

தன் சிறகுகளை நனைக்கும் .

வானத்தை உரிமை கொள்ளும் தைரியம் பெறும்.

ஆனால் கூண்டுப்பறவை தன்

குறுகிய கூட்டுக்குள் அலைகிறது ......

என தொடரும் கவிதை அவரது வலியை காற்றில் எழுதி மனதில் உறைந்து நிற்கும் ..

அவரது நூல்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று ..

நன்றி .


உலகப் பெண் கவிஞர் யார் ? எவர்? தொடர் 2

உலகப் பெண் கவிஞர் யார்?எவர்?

கென்யா கவிஞர் வார்சன் ஷைர்.



அனைவருக்கும் வணக்கம் உலகில் புகழ் பெற்ற கவிஞர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த மாதம் மிக இளமையான பெண்கவிஞரான வார்சன் ஷைர்.சோமாலியப் பெற்றோருக்கு கென்யாவில் 1988 இல் பிறந்தவர்.பிறகு இங்கிலாந்திற்கு இடம் பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து பிரிட்டனைத் தாயகமாக கொண்டு வாழ்கிறார் ...ஏனோ பிரிட்டனை தனது சொந்த நாடாக எண்ணமுடியவில்லை. தாய் நாட்டிற்கு செல்லும் ஆசை கனவாகவே இருந்தாலும் அவர் தனது சோமாலிய ஆப்பிரிக்க மக்களின் வாழ்வியலை ,பண்பாட்டை ,அவர்களின் வலியை,அகதி வாழ்வின் துயரத்தை ,குறிப்பாக அகதிப்பெண்களின் தாங்கவியலா துன்பங்களைத் தந்து எழுத்தால் உலகெங்கும் உணரச் செய்தார் .

இளம் வயதினராக இருந்தாலும் அவரது எழுத்தின் வன்மை ஆப்பிரிக்க மக்களின் துயரத்தை ,வேதனையை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.தனது பூர்விக நாட்டு மக்களைப் பார்க்கும் பொழுது எல்லாம் தனது மக்களின் பழங்கதைகளை கேட்டு அறிந்து எழுத்தில் பதிவு செய்கிறார்.எல்லா அகதிகளின்  துயரங்களை தனது துயரங்களாக எண்ணி பதிவு செய்கிறார்

.”ஒன்று, நான் எந்த நபரைப் பற்றி எழுதுகிறேனோஅவரைப்பற்றி எனக்கு  தெரியும் அல்லது நான் எழுதும் ஒவ்வொரு நபரும் நான் தான் .அவர்களின் ஆழ் மன அமைப்பை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியும்என்கிறார் வார்சன் ஷைர்.

தனது கவிதைகளுக்காக இளம் வயதிலேயே பல பரிசுகளையும், அவருக்கான அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார்.2013 இல் ப்ரூனெல் பல்கலைக்கழகம் உருவாக்கிய ஆப்பிரிக்கக்கவிதைப் பரிசை அவருக்கு வழங்கியது.2014இல் லண்டனின் இளம் அரசவைக் கவிஞராக ஷைர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பிரபல பாப் பாடகி பியான்ஸே நோல்ஸ் 2019இல் வெளியிட்ட ’லெமனேடு’ஆல்பத்தில் வார்சன் ஷைரின் கவிதை வரிகள் இடம்பெற்றன.

எவ்வளவு புகழ் கிடைத்தாலும் அவரது எளிமையை உலகம் பாராட்டியது. .அகதிகளின் குரலாகவே அவரின் கவிதைகள் முழங்கின.

குறிப்பிடத்தக்க கவிதையாக

“வீடென்பது சுறாமீனின் வாயாக இருந்தாலொழிய

யாருமே தங்கள் வீட்டை விட்டு

வெளியேறுவதில்லை”

என்ற வரிகள் அகதி வாழ்வின் அடையாள வாசகங்களாக உள்ளன.

2011 இல் அவர் எழுதிய  நூலின் பெயரே அவரின் காட்சியாய்”குழந்தைப்பெற்றுக்கொள்ள என் தாய்க்கு கற்றுக்கொடுத்தல்”என்ற சிறிய தொகுப்பை வெளியிட்டுள்ளார்.அவரது கவிதைகள் அனைத்தும் கட்டப்படாத பூக்களென மணம் வீசி வலம் வருகின்றன.ஒரு தொகுப்பைக்கூட போடாத ஒரு கவிஞர் உலகப் புகழ் பெற்றுள்ளார் என்றால் அது வார்சன் ஷைர் மட்டுமே.ஏனெனில் அவரது கவிதைகள் நேர்மையைச் சுமந்து தவறு செய்தவர்களைச் சுட்டெரித்தது.உண்மையின் சுடரேந்தி துயரத்தின் வலியைக்காட்டியது..

தனிமைக்குறித்து”என் தனிமை மிகவும் நன்றாக இருக்கிறது. நீ என் தனிமையைவிட  நீ இனிமையாக இருந்தால் நான் உனக்கு மட்டுமே வேண்டும் .”என்றார்.

மிக நீண்ட கவிதைகளில் ஒன்றாக

அசிங்கம்

உன் மகள் அசிங்கம்

அவள் இழப்பை அணுக்கமாக அறிவாள்,

முழு நகரங்களை வயிற்றில் சுமக்கிறாள்.

குழந்தையில் உறவினர்கள் அவளைத் தூக்கமாட்டார்கள்

அவள் உடைந்த மரம்கடல் நீர்

அவள் போரை நினைவுபடுத்துவதாக அவர்கள்

சொன்னார்கள்.

அவளது பதினைந்தாவது பிறந்த நாளில் அவளுக்குச்

சொல்லிக்கொடுத்தாய்

அவள் முடியை எப்படி கயிறு போலக் கட்டிக்கொண்டு

சாம்பிராணி புகைக்காட்டி வாட்டுவதென.

அவளை பன்னீர் கொண்டு வாய்க்கொப்பளிக்க

வைத்தாய்

அவள் இருமியபோது சொன்னாய்

உன்னைப் போன்ற மகாந்தொ

தனிமையாகவோ வெறுமையாகவோ வாசம் வீசக்

கூடாது.

நீ அவள் தாய்

ஏன் அவளை எச்சரிக்கவில்லை

அரிக்கப்படும் படகென அவளை அணைத்தபடி

அவள் கண்டங்களால் போர்த்தப்பட்டிருந்தால்

அவளது பற்கள் சிறு காலனிகளென்றால்

அவள் வயிற் ஒரு தீவென்றால்

அவள் தொடைகள் எல்லைகளென்றால்

ஆண்கள் அவளை நேசிக்கப்பொவதில்லையெனச்

சொல்லவில்லை.

எந்த ஆணுக்கு

உலகம் எரிவதைப் பார்க்க வேண்டும்

தன் படுக்கையறையில் படுத்தபடி ?

உன் மகளின் முகம் ஒரு சிறிய கலகம்

அவள் கைகள் உள் நாட்டுப்போர்

ஒவ்வொரு காதுக்குப்பின்னும்

ஒரு அகதிமுகாம்

அசிங்கமான விசயங்கள் இறைந்து கிடக்கும் உடல்

ஆனாள் கடவுளே,

அவ்வளவு அழகாக அணிகிறாள் அல்லவா

இந்த உலகை?

கவிஞர் வார்சன் ஷைர்.மேலும் அவரைப்பற்றி அறிந்து போற்ற வேண்டுகிறேன்.

நன்றி

மு.கீதா

 

 

  


Thursday, 1 October 2020

மனிதம்

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
தோழி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் பொறியியல் அறிஞர் சங்க இலக்கியம் பாடும் கவிஞர் இவர்... இவருக்கு உற்ற இணையராக சகோதரர் திருமிகு வினோத்.
கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாலும் இன்னும் இன்னும் என ஓடும் சமூகத்தில் இவர்கள் வித்தியாசமானவர்கள்..
தங்களின் ஊதியத்தில்‌ ஒரு பகுதியை எளிய மாணவர்களின் கல்விக்காக செலவிடும் நல்ல உள்ளங்கள்..
புதுக்கோட்டை மகளாய் எங்கள் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் தோழி இருப்பது வாழ்வின் வரம்.
கல்விக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து 5 கல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணத்தை தருவதாக பொறுப்பேற்று ரூ 50,000 அனுப்பி உள்ளார்.
திகைப்பில் மனம் நெகிழ்கிறது.இவரது மகன் படிக்கும் பள்ளியில் கல்வியில் ஒரு பகுதியாக சர்வீஸ் செய்து சான்று காட்ட வேண்டும் .
தங்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கி எப்படி சேவை செய்து பணம் திரட்டி இந்திய மாணவர்களின் கல்வி உதவுவது என்று திட்டமிட்டு உள்ளார்.எப்படி பணம் கிடைக்கும் என்று கேட்டேன்... அங்கு வீட்டு வேலைகளில் பிள்ளைகள் உதவி செய்தால் பணம் தர வேண்டுமாம்.இங்கு பணம் தரேன்னாலும் செய்ய மாட்டார்கள் தானே.மேலும் அருகில் உள்ள வீடுகளில் அவர்களுக்கு உதவிகள் செய்து பணம் திரட்டலாமாம் என்று கூறியதாக தோழி கூறிய போது கண்களில் நீர் நிறைந்தது.
எடுத்துக்காட்டாக வாழும் பெற்றோர்களின் பிள்ளைகள் வேறு எப்படி இருப்பார்கள்..
எங்கள் பள்ளியில் படித்து தற்போது கல்லூரியில் படிக்கும் இருமாணவிகளுக்கு தலா ரூ 5000 என ரூ 10000  நேற்று பள்ளி தலைமையாசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.. தலைமைஆசிரியர் உள்பட அனைவரும் மகிழ்ந்து பாராட்டிய போது நல்ல தோழமைகளை உறவாகப் பெற்ற நிறைவு.
ஆசிரியர் Antony Pudugai  அவர்கள் மூலமாக‌ வல்லத்திராக்கோட்டையில் படிக்கும் 4 மாணவர்களுக்கு ரூ40,000 கல்விக்கட்டணமாக தர உள்ளோம்.
பணம் எவ்வளவு வரலாம் ஆனால் மனம் ஒரு சிலருக்கே வாய்க்கும்‌...
இதற்கு முன்பும் நிறைய பள்ளிகளுக்கு நண்பர்களுடன் இணைந்து உதவிகள் செய்து உள்ளார்கள்.அவர்களுக்கு‌ நன்றி கூறப்போவதில்லை வாழ்வில் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.. அவர்கள் உயர்ந்தால் மேலும் பல மாணவர்கள் வாழ்வில் கல்வி ஒளியேற்றுவார்கள்.

Sunday, 27 September 2020

தமிழன்பன் அவர்களின் பிறந்தநாள் விழா

ஈரோடு தமிழன்பன் வாசகர் வட்டம் அமெரிக்கா (FETRA),
அமெரிக்க தமிழ் வானொலி,
ஒரு துளிக்கவிதை புதுச்சேரி,
உலகப் பெண் கவிஞர் பேரவை மற்றும் வல்லினச் சிறகுகள் இணைந்து வழங்கிய விழா.

மகாகவி ஈரோடு தமிழன்பன் பிறந்தநாள் விழாவில் வாசித்த கவிதை.
------------------------------------
மந்திரச் சொற்களால்
எந்திர மனங்களை
தந்திரமாய் கட்டுவிக்கும்
தமிழின் அன்பன்
தரணி போற்றும் தமிழன்பன்.
மாயச் சொற்களால் மயக்கவெண்ணாது,
மனிதம் தழைக்க
கனித்தமிழால் போராடிய
மகாகவி.
அதிகார வர்க்கத்தின்
எதேச்சாதிகார கொள்கைகளை
எதிர்த்து முழங்கியவன்
என்றும் புகழுக்காக பாடாத
ஏற்றக்கவியவன்.
சிந்தையொன்று செயலொன்றென
மந்தையாய் வாழ்வோரின்
மனங்களைப் பதப்படுத்தும்
சொல்லேர் உழவனவன்!
சூரியக் கதிர்களாய்
சுட்டெரிக்கும் கவிதைகள்
தமிழனின் மானத்தை
தலைநிமிரச் செய்யும்.
தண்ணிலவின் ஒளியென
தகதகக்கும் கவிதைகளோ
செந்தமிழின் செழுமைக் காட்டி
எந்தமிழ் எந்தமிழ் என்றே
எக்காளமிட்டு பெருமிதம் 
கொள்ளச்செய்யும்.
சீர்மிகு தமிழால்
சீரற்ற எண்ணங்களை
சொல்லேரெடுத்து உழுது
ஏற்றம் கொள்ள வைக்கும்
தமிழ் உழவ..
உன்புகழ்பாட
தமிழ்த்தாய் ஆணையிட
பாடவந்தேன்.-உன்னைப்
பாடுவதும் தமிழைப் போற்றுவதும்
ஒன்றே !ஒன்றே!
தமிழாய்  வாழும் மகாகவியே
தலைவணங்கி போற்றுகின்றேன்
தயங்காது ஏற்றருள்வாய் நீயும்...
நன்றி.
மு.கீதா 
புதுக்கோட்டை

Monday, 31 August 2020

பதில்கூறு

கணிகைநான்
குலமகள் ஆக விரும்பியே
உன்னில் கலந்தேன்...
வானம் வசமானது
 உனது அண்மையால்
உலகே கிடைத்ததாக
உயிர்ப்புடன் வாழ்ந்த என்
மனம் புரியாமல்...
என்ன வாழ்க்கை வாழ்ந்தாய் நீ?.
உன் பேர் சொல்லபிறந்த மகள்
உன்னாலே ஆணினம் வெறுத்து..
துறவறம் பூண்டாள்...
உதறித்தள்ளி மறந்தவனே 
நளன் வழிவந்தவன் தானே நீ.
அன்பின் மேன்மையை
அறியவேயில்லை
என்னிலும்
அவளிலும்.