World Tamil Blog Aggregator Thendral: 2025

Saturday, 4 October 2025

விழாஇரவு

விழா முடிந்து 
 நள்ளிரவு துவங்கும் பொழுது
விரைகிறேன் வாகனத்தில் வீட்டிற்கு..
மல்லியும் அல்லியும் 
மணம் பரப்பி விரியத் துவங்கி வரவேற்கும் சமயம்.
வாலைச் சுருட்டி தூங்கும் நாய்
தலையுயர்த்தி மீண்டும் தாழ்கிறது.
அசை போட்டுக் கொண்டிருக்கும்
மாட்டின் அலட்சியமான பார்வை கடந்து 
பின்வரும் வண்டியின் 
விளக்கைப் பார்த்ததும் மேலும் விரைகிறேன் .
அதுவும் என்னை வேகமாக 
நெருங்குகிறது
அனிச்சையாய் கழுத்திற்கு 
போகும் கை மனதில் சிறிது
அச்சத்தை விதைக்கிறது .
நடப்பது நடக்கட்டும் என இரு வாகனங்களும் ஒன்றோடொன்று விரைய 
சட்டென நிறுத்தி திரும்பினேன்,
டீச்சர் உங்கள் பின்னாடியே
வந்தது அச்சத்தை போக்கியது 
என்றபடி தொடர்பவளை புன்னகைத்து
இரவை நேசிக்கத் தொடங்கினேன்.

Sunday, 17 August 2025

சொந்த ஊர்

நீண்ட நாட்களுக்கு பிறகு 
பிறந்த மண்ணில் நடக்கிறேன் .

மண்வாசம் தாய்ப்பாலின் 
சுவையை நாவினில் ஊட்டியது.

கண்கள் இடுக்கி பார்க்கும் 
சைக்கிள்கடை முனுசாமி அய்யாவின் 
சின்ன சைக்கிளை
வாடகைக்கு எடுக்க
 அவரின் கடைக்கண் பார்வைக்காக
காத்திருந்த காலமவரின் முகத்தில் 
வரிகளாக ஓவியம் தீட்டி
கடையிருந்த இடத்தை விழுங்கி 
விட்டதைக் கூறாமல் கூறியது
அவரின் பெருமூச்சு.

அப்பாவின் துணையாய் வாழ்ந்த 
மாமாவின் சுவாசத்தை காற்றினில்
 சுவாசிக்க 
முயற்சித்து தோற்றேன்.
வழமையாக இரவின் மின்னல்முக
இளம்புன்னகையோடு
சட்டென தோன்றி மறைந்தாரவர்.

பாழடைந்து கிடந்த சிவன் கோவிலில் 
பைரவரை வணங்கச் சென்றவளைப் 
பார்த்து அங்கு போக முடியுமா?
என வியந்ததில் மறைந்திருந்தது 
சக்தி தியேட்டரில் பார்த்த திரைப்படத்தில் 
ஔவைப் பாட்டியிடம் பேசிய
பேயின் மண்டபமாயிற்றே என்றனதச்சம்.

மண்ணுக்குரிய மாம்பிஞ்சு நிற முகங்கள் மறைந்து எங்கெங்கு காணினும் வெண்ணிறமாக்கியதன் பிண்ணனியில் ஊரைச் சுற்றி 
பிரமாண்ட ராட்சஷனாய் எழுந்து 
நிற்கும் ஆலைகளின் வருகை.

தோட்டத்திற்கு அழைத்துச் சென்ற
தம்பி காட்டினான் எதிரில் முப்பது அடிக்கு குவாரி வந்து கொண்டுள்ளதென்பதை.

கடலுக்கு அடியில் இருந்த 
தொன்மையூர் தனது வளத்தை
கொடுத்து கொடுத்து 
நிலத்தில் மறைந்திடுமோ
என்ற கவலையில் மண்மகளிடம் 
வேண்டினேன் 
வாழவைக்கும் உன்னைச் சுரண்டும் 
இவர்களை மன்னித்து விடு.

தனது தடம் மறைந்த வலியில் 
ஓலமிடும் ஊரின் வலியை
உணர்ந்த பிச்சியாய் நானும்.

Monday, 17 March 2025

ஐரோப்பா

இரண்டு தமிழ்ப்பெண்களும் ஐரோப்பிய நாடுகளும்.
ஆங்கிலம் ஒன்றை மட்டும் நம்பி போலந்தின் தலைநகர் வார்சா, இத்தாலியின் ரோம் மற்றும் வெனிஸ் , செக் குடியரசின் பிராக்,சுலோவேகியா நாட்டின் பிராட்டிஸ்லாவா,ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யப் புறப்பட்டோம்.
நானும் Subhasree Muraleetharan னும்.
ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் படிக்கும் சுபா முரளியின் மகள்கள் இருவரும் ஆங்கிலம் தெரிந்ததால் அங்கு படிக்க முடிவெடுத்து உளவியலில் ஆராய்ச்சி படிக்கும் ஆவலில் இளநிலை முதுநிலை படித்துக் கொண்டு இருக்கிறார்கள் .

புடாபெஸ்ட்டில் நிறைய இந்திய மாணவர்கள் படிப்பையும் காண முடிந்தது.ஹங்கேரியர்களுக்கு ஆங்கிலம் சுமாராக தெரியும் நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.

வார்சாவில் அவர்களுக்கு போலிஷ் மட்டுமே தெரிந்த நிலையில் கூகுள் மேப் மட்டும் உதவிட நாங்கள் இருவரும் இரண்டு நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்தோம்.அங்கும் எங்களைக் கண்டு பிடித்த ஒரு இந்திய ஜோடி மகிழ்வாக வந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

மற்ற நாடுகளில் ஆங்கிலம் சரளமாக அனைவருக்கும் தெரிய கவலையின்றி சுற்றி பார்த்தோம்.

இத்தாலியில் சரவணபவன் ஹோட்டலில் தஞ்சாவூர் குடும்பத்தினர் பார்த்த போது மகிழ்வாக இருந்தது.

இப்படியாக இந்தி படித்தவர்களும் ஆங்கிலம் தெரிந்ததால் தான் உலக நாடுகளில் பணி செய்து வருவதை காண முடிந்தது.

இதற்கும் இப்போதைய மும்மொழி பிரச்சினைக்கும் தொடர்பு உண்டுங்கோ.