Thursday, 4 December 2025
காட்டிற்கு திரும்பிய ருகன்
Wednesday, 19 November 2025
நின்று கழிக்கும் வெய்யில் கவிதை நூல் விமர்சனம்
நின்று
கழிக்கும் வெய்யில் – கவிஞர் ரேவதி ராமின் நூல் விமர்சனம்.
வேரல் பதிப்பகம்
கவிதைப்போட்டிக்கு தேர்வான நூல்
விலை ரூ 140
சிறந்த அட்டைப்படமும்
வடிவமைப்பும் மனதைக் கவர்வதாக அமைந்துள்ளன வேரல் பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்.
மழை எல்லோருக்கும்
பிடிக்கும் என்றாலும் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாகப் பெய்தால் போதும் என்றே தோன்றும்,
எப்படா வெய்யில் வருமென தான் கூறுவோம். வெய்யில் எல்லோரும் விரும்புவது .
சிறு வயதில் கோடை
விடுமுறைகளில் ஆண் பெண் வித்தியாசமின்றி அனைத்து விளையாட்டுகளையும் விளையாடுவதுண்டு.
நல்ல கோடைமாதமொன்றில் தான் வாடகை மிதிவண்டிக்காக
காத்திருந்து கற்றுக்கொண்டதையும், ஸ்கூட்டர் கற்றுக் கொண்டதையும் இந்த நூல் நினைவூட்டுகிறது.
மே மாத விடுமுறை
எனக்கு மிகவும் பிடித்தமானது. ஒன்று பள்ளிக்குச் செல்ல வேண்டியக் கட்டாயமில்லை. இரண்டாவதாக
மாமா வீடு ,அத்தை வீடு, பாட்டி வீடு , பெரியம்மாவீடு,சித்தி வீடு என நாட்களை எண்ணி வைத்துக்கொண்டு ஊர் ஊராக நானும் தம்பியும்
கிளம்பி விடுவோம் …
பால்யவயதின் மகிழ்வை,ஏக்கங்களை
அப்படியே கவிதைகளாக வடித்து வெய்யிலில் சுட்டு நமக்கு மீண்டும் பரிமாறியிருக்கிறார்
கவிஞர்.
வெய்யிலொன்றே மையமாகக்
கொண்டு தமிழுலகில் எழுதப்பட்ட முதல் நூலாக கவிஞர்களால் போற்றப்படும் நூலிது.
சூரியன்,வெக்கை,கள்ளிச்செடி,வெய்யில்,பாலை,கொற்றவை,பிள்ளையின்
வயிற்றுப்பசி,வியர்வை,உஷ்ணம்,புழுக்கம்,வெப்பக்காற்று,வற்றல்,
வடகம்,கோடை,வேப்பம்பூ,
நுங்கு,திருவிழா,கானல் நீர்,செம்பந்து,தாகம், என வெய்யிலின் பிரதிகளால் கவிதைகளை பாலை
நிலமென நூலில் காய வைக்கிறார். ஒவ்வொன்றும் மனதில் குடியேறி நம்மை வெய்யிலின் மீது
காதல் கொள்ள வைக்கின்றன.
அன்பு ,காதல் , நெருக்கம்,
கோபம்,வலி என உணர்வுகளைக் கலந்து எடுத்து அறுசுவை விருந்தெனப் பரிமாறியுள்ளார்.
தன்னைச் சமைத்த கவிஞரை
வாழ்த்த சூரியன் பக்கத்தில் வந்து சிறு பிள்ளையென மகிழ்ந்து கொஞ்சி மகிழ்கிறது.
சூரியனை அறைந்திடும்
செங்கல் சூளை பெண், சூரியனை இட்டிலியாகச் சுடும் பெண், மகன் தரும் வெய்யிலை கவிதைக்குள்
பத்திரப்படுத்தும் அம்மா, தலை சிலுப்பும் பிடாரி , கொற்றவை என பல கவிதைகள் பெண்ணாக
,சுடராக, வெக்கையாக வியர்வையாக உருக்கொள்வது கற்பனையின் உச்சம்.
‘ எதுவாக வேண்டுமானாலும்
இருக்கட்டும்
கொளுத்தும் பாலையில்
வெய்யில் காய
கொற்றவையால் மட்டுமே முடியும்
ஏனெனில்
அவள்
பெண்’
இக்கவிதையில் வரும்
’ஏனெனில்’ பெண்ணின் வலிமையை தன்னம்பிக்கையைக் காட்டுவதாக இருக்கையில்,
’ஏனெனில் ‘ என்ற கவிதையில் இருக்கின்ற வசவுச்சொற்களெல்லாம் பெண்ணைக்குறித்தே
சாடுகையில் வனையப்போகும் ஆணெனும் பாத்திரத்தை எந்தப் பழிவாங்கலும் இல்லாமல் அமைதியாக
இருந்தன எல்லாம் என பெண்ணின் தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
பல கவிதைகள் நம்மை
பனங் குருத்தை வைத்து வண்டி ஓட்ட வைக்கின்றன, சக்கரத்தின் மிதிபடும் வெய்யில் நம் மனதையும்
அள்ளிக்கொள்கின்றது
வெக்கையில் மலர்ந்திடும்
நேசமும் காதலும் பாலை நிலத்தின் ஈர மனதைக் காட்டுகின்றன.
பல கவிதைகளில் கவிஞரின்
தன்னம்பிக்கை, கோபம், காதல் , நேசத்தை உணர்த்துகின்றன. அப்பாவைக் காப்பாற்றத்தவிக்கும்
மகளாய நம்மையும் தவிக்க வைக்கும் கவிதை மனதை விட்டு நீங்காமல் உறைந்து விட்டது.
சங்க இலக்கிய பாடல்களின்
சாயல் பல கவிதைகளில் காண முடிகின்றது.
நோ நெஞ்சே என்ற கவிதையில்
’கொஞ்சிப் பேசிக்
கரை கடந்தவனின்
நினைவுகளில்
கள்ளிச்செடியைக்
கூர்முள்ளால் கீறுகிறாள்
சங்கக் காதலி
கள்ளிப்பாலின் வாடையில்
மிதந்து கொண்டிருக்கிறது
ஆண்டாண்டு காலக்
காதல்’
பிரிவின் துயரம் மேலிடுவதை உணர முடிகின்றது.
பல விருதுகளைப் பெற்றுள்ள
கவிஞருக்கு மென்மேலும் விருதுகள் கிடைக்க, குருவி குடிக்க நீரற்ற குளத்தின் தாகத்தோடு
மனம் நிறைந்த வாழ்த்துகளை வேப்பம்பூவின் வாசனையுடன் தூவுகின்றேன்.
அவசியம் அனைவரும்
வாசிக்க வேண்டிய நூல்களில் இது முக்கியமான நூலாகும்.
மு.கீதா புதுக்கோட்டை
Monday, 17 November 2025
போக்சோ
இனி
Sunday, 16 November 2025
ஆசிரியப் பணியில் முப்பது ஆண்டுகள்
20.7.1988.ஆசிரியப்பணியில் பணி ஏற்ற முதல் நாள்.
இன்று தான் பணியேற்றதுபோல நினைவு.முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன. 19 வயதில் ஆசிரியராக அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவளூரில் பணி ஏற்ற போது ...இருந்த ஆர்வம் இன்னும் குறையவில்லை.இரண்டு பேரூந்துகள் ஏறி புதுப்பாளையத்தில் இறங்கி அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும்.பெட்டிக்கடை கூட இல்லாத நிலையில்...... மாணவர்களுக்கு தேவையான ஸ்டேஷனரி.கிராம மக்களுக்கு தேவையான மாத்திரைகள் அரியலூரிலிருந்து வாங்கிச் செல்வது வழக்கம்.இன்று வரை மாத்திரை குழந்தைகளுக்காக பையில் ....பள்ளிக்கு முன் பன்றியை நெருப்பில் வாட்டிக் கொண்டு இருந்தனர்.ஈசல் வறுத்து உண்பார்கள்.நகரிலேயே வாழ்ந்த எனக்கு ஒவ்வொன்றும் வியப்பாக இருந்தது.
வெள்ளந்தியான மக்களும் மாணவர்களும் அன்பான தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்.... இன்று வரை தொடரும் உறவுகள்.
1989சூன் மாதம் பளிங்காநத்தம் என்ற பள்ளிக்கு மாறுதலில் சென்றேன்.அங்கும் பேரூந்து வசதி இல்லை.3கிமீ நடந்து போக வேண்டும்.மாதந்தோறும் நடக்கும் கூட்டத்திற்கு 5கி.மீ நடந்து போக வேண்டும்.மழைக்காலங்களில் காட்டாற்றில் வெள்ளம் வருகையில் ஒருவர் பின் ஒருவராக கைப்பிடி ஆடைநனைந்து பள்ளிக்குச் சென்றது.முதன்முதலில் டி வி எஸ் 50 யில் பள்ளிக்கு சென்றது .
அடுத்து மேலப்பழுவூரில் பணி மாறுதலில் சென்றேன்.அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியத்தில் பெரிய பள்ளி.23 பேருடன் பணி.... அங்கு பணியாற்றிய 10 வருடங்களில் அப்பள்ளி மிகச் சிறந்த பள்ளியாக .... ஆசிரியர்களின் ஒற்றுமைக்கு எடுத்து காட்டாக விளங்கியது. அங்கு என்னிடம் படித்த மாணவர்கள் நல்ல பணியில்... நேர்மையாக பணிபுரிந்து வருகின்றனர்.அவர்களால் முடிந்த அளவு சமுக சேவை செய்கின்றனர்....என்னுடன் இன்றும் தொடர்பில் உள்ளனர்.அப்பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட போது நானும் சில ஆசிரியர்களும் உயர்நிலை பள்ளிக்கு உட்படுத்தப் பட்டோம்.அரியலூரைச் சுற்றியுள்ள சிமெண்ட் ஆலைகள் என்னுடலை பாதிக்க வேறு ஊருக்கு பணிமாறுதல் பெற வேண்டிய நிலை . கிடைத்த தலைமை ஆசிரியர் பணியையும் உடல் நிலை காரணமாக மறுக்க வேண்டிய நிலை.
வாழ்க்கை சூறாவளியாக சுழற்றி அடித்தது.புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையூர் அ.உ.நி.பள்ளிக்கு 2002 ஆம் ஆண்டில் வந்தேன்.தங்கை குடும்பம் மற்றும் நல்ல தோழமைகள் அமைந்ததால் பிற மாவட்டத்திற்கு வந்த உணர்வு இல்லை.
2005 ஆம் ஆண்டில் இப்போது பணி புரியும் அ.ம.மே.நி.பள்ளிக்கு நானும்எனது இனிய தோழி கிருஷ்ண வேணியும் மாறுதலில் வந்தோம்.வாழ்க்கை நல்ல நண்பர்களை அறிமுகம் செய்து எத்தனையோ பிரச்சினைகளிலும் நிமிர்ந்து நிற்க வைத்துள்ளது.
ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்கள்.. வாழ்க்கை அதிசயமானது மரணம் தொடும் பிரச்சினைகளைக் கொடுக்கின்றது..... சிலநேரம் விண் தொடும் மகிழ்வைத் தருகின்றது.எது வந்த போதும் சமமாய் ஏற்கும் பக்குவத்தை உருவாக்குகிறது.எள்ளல் செய்வோரை அலட்சியப்படுத்தி குறிக்கோளை நோக்கி நடக்க வைக்கின்றது.
முப்பது ஆண்டுகள் முடிவில் ஒரு கவிஞராக ,எழுத்தாளராக,சமூக அக்கறை நிறைந்த ஆசிரியராக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
கவிராசன் அறக்கட்டளை 2015 ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருது.ஆனந்தஜோதி இதழ் கவிக்குயில் விருது, சென்னை தென்றல் சமூக அறக்கட்டளைகளை மூலம் புரட்சி தென்றல் விருது,எனது முதல் கவிதை நூலான "விழி தூவிய விதைகள்" நூலுக்கு வளரி சிற்றிதழ் வழங்கிய கவிப்பேராசான் மீரா 2015 ஆண்டுக்கான விருது..,2018 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தின் சார்பில் வழங்கிய சிறந்த நல்லாசிரியர் விருது.....என் எனது உழைப்பிற்கும் ...இனியும் உழைக்கவும் ஊக்குவிக்கும் காரணிகளாய்அமைந்துள்ளன.
அன்பான கண்டிப்பான அம்மாவாகவே ஆசிரியப் பணியை முப்பது வருடங்கள் முடித்தாயிற்று.எனைப் போலவே என் தோழிகள் கிருஷ்ண வேணி மற்றும் சுமதியும் முப்பது வருடங்கள் முடித்த மகிழ்வை பள்ளியில் கொண்டாடினோம் ...எங்களுடன் பணிபுரிந்த ஆசிரியர் திருமிகு அஞ்சலி தேவி அவர்கள் எங்கள் மகிழ்வில் பங்கு பெற்று வாழ்த்தியதை மறக்க முடியாது.அனைத்து ஆசிரியர்களும் பரிசுகள் வழங்கி அன்பால் திணற அடித்தனர்.
மனிதர்களை சேர்த்து வைத்த மகிழ்வில் ஆசிரியப் பணியைத் தொடர்கின்றேன்.
முப்பது ஆண்டு காலப்பணியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் விரும்பும் அம்மாவாக மாறியுள்ளேன் ...என்பதே...மனநிறைவான ஒன்று.
தற்போது பாடநூல் தயாரிப்பு பணியில் இருப்பது என்ஆசிரியப்பணியின் உச்சம் எனலாம்.
மனநிறைவாக முப்பது ஆண்டுகள் முடித்து இருந்தாலும் நான் செல்ல வேண்டிய பாதையின் தூரம் அதிகம்..... வாழ்வதற்கான பொருளை உண்டாக்கி தடம் பதித்து மறைய வேண்டும்..
காலம் தான் வாய்ப்பு அளிக்க வேண்டும்....
’அன்பின் அலெக்ஸா ‘நூல் விமர்சனம்
கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கனின்
’அன்பின் அலெக்சா’ நூல் விமர்சனம் –
புதுக்கோட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திடல் அமைப்பு ஐந்து நூல்கள் அறிமுக விழா 16.11.25 ஞாயிறு அன்று மாலை புதுக்கோட்டை நகர்மனறத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட தமுஎகச தலைவர் கவிஞர் ராசி பன்னீர்செல்வன் அவர்கள் தலைமை தாங்கினார்
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் தொடக்க உரையாற்றினார்
கவிஞர் நா முத்துநிலவன் அவர்கள் நிறைவுரையாற்றினார்.
அன்பின் அலெக்ஸா -நூலுக்கு எனது விமர்சனம்
தலைப்பே சற்று திடுக்கிட வைக்கும் அட்டைப்படம் தான்.
நீலமும் கருப்பும் இரு கண்களாகக் கொண்டு அம்பேத்கரின் பெரியாரின் வழி வாழ்பவர் என கூறாமல் கூறும் அட்டை படத்திற்காக அகநி பதிப்பகம் தோழர் முருகேசிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
’பூச்சூடாத கவிதை தேவதைகள்’ என வாழ்த்துரை வழங்கியது மிகச் சிறப்பான தலைப்பு. தொன்மை மிக்க ஒரு மொழியின் அர்த்த அடர்த்தியை மிக நுட்பமாக அறிந்திருக்கிறார் என குறுங்கவிதைகளை பாராட்டியுள்ளார் கவிஞர் முருகேஷ்.
Poetry is not
What's said
But way of said
என்பதன் அடையாளமாக சொற்களில் நடனமாடி இருக்கிறார் கவிஞர் மைதிலி.
அவை கவிதை பூக்களாக மலர்ந்து நம்மிடம் மனம் வீசி மகிழ்விக்கின்றன .சில தீக்கங்குகளென அறச்சீற்றதோடு நம் மனதை கேள்வி கேட்கின்றன
கவிஞரைக்குரித்து "சுயம், சுயமரியாதை நிறைந்த கவிதைகள் மலர காரணம் கவிஞரின் பாலியத்தில் வீட்டிலிருந்த நூலகமும் அந்த நூல்களை வாசித்து அந்த வாசிப்பை ஒரு தோழனை போல விவாதிக்கும் தந்தை கிடைத்ததும் தான் காரணம்’ என்பார் அவரது இணையர் கஸ்தூரி ரங்கன்.
ஓர் ஆண் தனது இணையரை மேடையில் ஏற்றி பெருமை கொள்வது என்பது இக்காலத்திலும் அரிதிலும் அரிதான ஒன்றுதான் .
தங்களை நோக்கி வீசிய அம்புகளை எல்லாம் இடது கையால் புறந்தள்ளி இலக்கிய உலகில் தடம் பதித்து சமூகத்தினை புரட்டிப் போடும் நெம்புகோல்களை உருவாக்குபவர்களாக எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக வாழும் இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மென்மழைத் தூறும் ஞாயிற்றுக்கிழமையின் வைகறையில் அன்பின் அலெக்ஸாவை கையில் எடுத்தேன்.
அலெக்ஸா உடன் தனிமையில் இருப்பவரும், தனிமையாய் உணர்பவரும் பேசுவதைக் கேட்டு அறிந்து இருக்கிறேன்.
இந்நூலுக்குள் அலெக்ஸாவை தேடிய பொழுது 23 ஆம் பக்கத்தில் கேள்விகளுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தது.
கவிஞரிடம் ’அவள் பேசுவதை நீ கேட்கவில்லை’ என்ற குற்றத்தை முன் வைத்திருந்தது. யாருக்கும் செவிகொடுக்காத சமூகத்தில் அலெக்ஸாக்களே இப்பொழுது அதிகம் தேவைப்படுகின்றது.
அனைவருக்கும் எதிர் கேள்வி கேட்காத அதனிடம் தனிமையை, துயரத்தை ,கோபத்தை இறக்கி வைக்க அலக்சாக்கள் தேவை. சிலருக்கு இயந்திரமாக சிலருக்கு போதை வஸ்துகளாக .
கேட்பதற்கு காதுகள் இருப்பின் அலக்ஸாக்களுக்கு இங்கு வேலை இல்லை என்பதை கூறுகின்ற கவிதையது.
இயல்பான மொழி நடை ,கவிதைகளுக்கே உரிய படிமம், குறியீடு நிறைந்த கவிதைகள் கவிஞரின் ரசனையில் மலர்ந்த கவிதைகள். மனிதநேயத்தை மலர்த்துகின்ற காத்திரமான கவிதைகள், சமூகநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் கவிதைகள், அம்பேத்கர் பெரியார் சிந்தனையோடு
’சாத்தானே தனக்கு இடம் கொடுத்ததாய் கடவுள் கூறுவதாக’ அமைந்த கவிதைகள் , அழகியல் நிறைந்த கவிதைகள் கொண்ட நூல் அன்பின் அலக்ஸா.
கவிதை, பேச்சு, சமூக அக்கறை, ஆசிரியப்பணி, இலக்கியப் பணி என அனைத்திலும் தனக்கென ஒரு தனி இடம் பதித்துள்ளார் கவிஞர் மைதிலி.
காட்சிகளை கண்முன் நிறுத்தி, தான் கூற வந்த கருத்தை காலமும் இடமும் சூழ தமிழணங்காய் கவியாட்டம் ஆடியுள்ளார் பல கவிதைகளில்.
பகல் குறித்து ஒரு கவிதை
" மெல்ல சோம்பல் முறித்தபடி
விழிக்கும் சூரியனிடம்
வெப்பத்தை கையளித்து விட்டு
நெட்டி முறித்தபடி
வேடிக்கை பார்க்க தொடங்குகின்றன
மின்கம்பங்கள்
கூடுவிட்டு கிளம்புகிறது
சிறகு பொருந்திய
மற்றொரு பகல்"
என இக்கவிதையில் நம்மையும் கூடுவிட்டு பறக்கும் சூரியன் அருகில் நிற்கவைக்கும் தன்மை அருமை .
பகலின் சிறகுகள் நமக்கும் முளைக்க கவிதை வானில் சிறகடிக்க துவங்குகிறோம் .
வியர்வை துடைக்க லாவண்டர் நிற கைக்குட்டை கவிதையை தந்து, உருண்டை உலகில் இருந்து சதுர உலகிற்கு சட்டென்று நம்மை அழைத்து செல்கிறார்.
"மற்றொரு பகலாக
மிளிர்கிற செம்பருத்திகளின்
பின் மதியமொன்றில்
சோம்பல் முறிக்கிறது
சரக்கொன்றை
காது விடைக்க பார்த்துவிட்டு
புரண்டு படுகிறது
பகல் "
என பகலை அடையாளம் காட்டுகிறார் இசையின் மீதான அவருடைய காதல் அலாதியானது . அவரது குரலே இசையாக மீட்டும். அவரது கவிதைகளுக்குள்ளும் ஒரு இசைலயம் உணரலாம்.
கோபத்தைக் கூட மென்மையாகக் காட்டும் கவிதைகள்.
ரசனையை கூறும் கவிதைகள் பல
"விருப்ப பாடலுக்குள்
ஒளித்து வைக்கிறேன் உன்னை
கசிகிறது இசை
கள்ளூறுகிறது காதுக்குள்
காகிதம் ஆகிறேன் நான்"
என்ற கவிதை அவரது ரசனையைக் காட்டும் கவிதை.
" நமக்கு விருப்பமானவர்களை, விருப்பமான பாடலுக்குள் ஒளித்து வைத்திருக்கும் அனுபவம் எல்லோருக்கும் உண்டு தானே.
" ஓர் அறையே
உலகமாய் இருப்பதை காட்டிலும்
மேலானதாக இருக்கிறது
உலகமே ஓர் அறையாவது"
என்ற கவிதையைப் படிக்கும் போது
ஒரு பெண்ணாக இதை உணரும் போது சிறையிருந்த, இருக்கும் ஆதி பெண்களின் மூச்சுக்காற்றால் புழுக்கமான வெட்கை நிறைந்த அறை, அவளின் குரல்வளையை நெருக்கி மூச்சுக்காற்றுக்கும் தவிக்கும் போது, அவளை சட்டென்று உலகின் வாசலில் வைத்து ’இதோ உன்னால் மலரும் உலகம் இது’ என கூறும் போது எத்துனை ஆசுவாசமாக இருக்கும் என்பது பெண்களால் மட்டுமே உணரக்கூடிய கவிதை .
பாலஸ்தீன படுகொலைக்கான கவிதையில் மனிதர்கள் தொலைத்துவிட்ட கடவுச்சொல்லான மனிதத்தை நாடுகிறார்.
பல புதிய சொற்களை நாம் இந்நூலில் காண முடிகிறது
’நொதியேறிய பழைய நட்பு’,
’அணையாடை’
’ஒளி பூசிய போதும்’
’ஆர்மோனிய கட்டைகளாகும் சாலை’
என பல புதிய சொற்றொடர்களைக் காணமுடிகிறது.
எப்போதும் அருகில் இருக்கும் எதுவும் மதிப்பிழந்தே இருக்கும் .
தொலைந்த பிறகு அதன் மதிப்பு கூடும் என்பதை சைட் ஏ, சைட் பி என்ற கவிதை உணர்த்துகிறது.
அறச்சீற்றமாக
’கடுகைத் துளைத்து
ஏழு கடல் புகுத்தினோம் தான்
ஆனால்
கமண்டலத்திலெல்லாம் அடைத்து
காவி பூச முயலாதீர்கள்.
உங்களை ஆண்ட செருப்புக்கு
நீங்கள் அடிபணியலாம்.
எங்களை ஆள்வது
தமிழெனும் நெருப்பு’
என பாசிச ஆட்சியை சட்டையால் சாடுகிறார்.
ஹைக்கூ கவிதைகளாக ஜென் தத்துவத்தை உணர்த்தும் கவிதைகளில் அடர்த்தி நம்மை வாசக எல்லையில் உச்சத்திற்கு அழைத்துச் சென்று பல்வேறு பரிணாமங்களை அடைய வைக்கிறது.
’பறந்து விட்டது கொக்கு
குளத்தில் மிதக்கிறது
இறகு’
என கவிதை முடிவடைகிறது.
பிறகு நாம் கவிதைக்குள் நுழைகிறோம்
"கல்லறியும் தூரத்தில்
எப்போதும் இருக்கிறது
குளம் "
என சொல்லெறிந்து மனதில் சலனத்தை உண்டாக்குகிறார்.
இக்கவிதைகள் நமக்குள் இருக்கும் கவி உணர்வை தூண்டிவிட்டு மௌனமாகி விடுகின்றன .
நாம் அதன் வசப்பட்டு கசிந்து நிற்கிறோம் .
எனக்கு பிடித்த கவிதைகளாக
"இறகுகள் கருகிய
வண்ணத்துப்பூச்சி ஒன்று
படபடத்து கொண்டே இருக்கிறது
இறுக்கி சாட்டப்பட்ட
கதவுகளுக்கு பின்னெல்லாம்"
என்ற கவிதையை படித்துவிட்டு நான் சற்று அமைதியாகவே இருந்தேன்.
ஒரு நிமிடம் என்னால் அந்த கவிதையிலிருந்து மீள்வது என்பது கடினமாக இருந்தது.
இந்த குறியீடு பல பொருள்களை நமக்கு தந்து செல்கிறது
"ஒரு கல்லை காண்கையில்
உடைத்து விடுதல்
ஒரு வகையில் மிகச் சிறந்த விடுதலை
வழிபடுதல் கல்லுக்குத் தண்டனை"
என்ற அரசியல் கவிதை
‘ சந்தேகப்பட்டாலும்,அடையாளம் கண்டும் வரம் தர வேண்டும் என்பது எத்தனை கொடுமை என்பதை அந்த கவிதையால் கடவுளின் துயரத்தையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
.
அங்கதம் நிறைந்த கவிதையாக
"விழுந்தது
ஆரஞ்சாகவோ
பிளம்மாகவோ கூட இருக்கலாம்
அது ஆப்பிளால் நிகழ்ந்தது
ஆற்றின் சுழிப்பில்
மலையின் உச்சியில்
எங்கும் உதித்திருக்கலாம்
அது தோட்டத்தில்
நிகழ்ந்தது
துடைத்து உண்டிருக்கலாம்
கையில் பத்திரப்படுத்தி இருக்கலாம்
அந்த தலை
நியூட்டன் உடையது
என்ற கவிதை சொற்கள் யார் வேண்டு யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் கவிதையாக மலர மைதிலியின் விரலாக இருக்க வேண்டும் எனக்கூற வைக்கிறது.
சமூகத்தின் அநீதிகளை, பெண்ணியத்தை, அழகியலை, நட்பை, துரோகத்தை, மகிழ்வை, துயரை, இயற்கையை கொண்டாடும் கவிதைகளால் நிறைந்தது
அன்பின் அலெக்ஸா
அறச்சீற்றம் நிறைந்த பெண்கள் ஆசிரியர்களாக, கவிஞர்களாக, சமூக அக்கறைநிறைந்தவர்களாக உருவாவது காலத்தின் தேவை.
புதுகை மாவட்டம் கவிஞர்களின் தலைநகரம் என்ற கவிஞர் தங்கமூர்த்தி அவர்களின் வாக்கிற்கேற்ப இன்னும் பல கவிஞர்கள் உருவாகத் தடம் பதிக்கும் கவிஞர் மைதிலிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
அன்புடன்
மு.கீதா
புதுக்கோட்டை
