World Tamil Blog Aggregator Thendral: எப்படி அணுகுவது..?

Wednesday 29 October 2014

எப்படி அணுகுவது..?

எப்படி அணுகுவது..?

இன்றைய வளரும் சமுதாயத்தை அணுகுவது எப்படி என்றே புரியவில்லை.ஒரு பக்கம் கண்டிக்கவே கூடாது என அரசும், ஆசிரியரும் ,பெற்றோர்களும் முடிவெடுத்து அவர்கள் போகும் வழியிலேயே போவது தவறோ எனத்தோன்றுகின்றது.

.முன்பெல்லாம் அடித்தாலும் துடைத்து போட்டு விட்டு பெற்றோர்களை அணுகிவிடும் குழந்தைகள் தஞ்சமென..

ஆனால் இப்போது சிறு வார்த்தைக்கூடத்தாங்காமல் கோபப்பட்டு பெரியவர்களைப் பழிவாங்கவா அல்லது தோல்வியைத்தாங்கும் மனவலிமை இல்லாததா...அல்லது இப்படி நடக்கும் துணிவை தொலைக்காட்சியும்,திரைப்படமும்,சமூகமும் கற்றுக்கொடுத்ததா...எதுவெனப் புரியவில்லை .ஆனால் எங்கோ தவறு நடக்கின்றது..அதைப்பற்றி புலம்பியே வாழ்நாள் கழிகின்றது..பயனெதுவும் விழையாமல் ...

இன்று பள்ளியில் நுழைந்ததும் ஒரு அதிர்ச்சியான செய்தி...

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருத்தி, நன்கு படிக்கும் ,அமைதியான அனைத்து அசிரியர்களுக்கும் பிடித்த மாணவி...சிறந்த நல்லொழுக்கமான குழந்தை.எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பிய மாணவி..

அவளின் அம்மா மிகவும் சிரமமான நிலையில் தனது மூன்று பெண் குழந்தைகளையும் கணவரின் உதவியின்றி படிக்கவைத்து எந்தவிதக் குறையுமின்றி வளர்க்கின்றார்கள் மூன்று குழந்தைகளுமே புத்திசாலியான குழந்தைகள் ..இவளோ பள்ளியில் நடக்கும் அனைத்துப்போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுபவள்.பார்க்கும் போதெல்லாம் புன்னகை முகத்துடனே இருப்பாள்.

வீட்டில் நடந்த சிறு பிரச்சனைக்காக  மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டாள்.தற்பொழுது தீக்காயங்களுடன் போராடிக்கொண்டு அவளது உயிர்மூச்சு தவிக்கின்றது..

எப்பொழுதும் பள்ளியில் மாணவிகட்கு  அடிக்கடி கவுன்சிலிங் ஆசிரியர்களால் குழந்தைகட்கு வழங்கப்பட்டும் ஏன் இந்த நிலைமை... .இவளுக்கு எப்படி இந்த துணிவு வந்தது..?

பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஏன் அலட்சியப்படுத்தப்படுகின்றார்கள்..அவர்களின் பேச்சு ஏன் எடுபட மறுக்கின்றது...இப்படிப்பட்ட குழந்தைகள் மனவலியையே தருகின்றார்கள்..ஒருபக்கம் குழந்தைகளை வளர்க்க திராணியின்றி வீசி எறியும் பெற்றோர்கள்...ஒருபக்கம் ..தன் உடல்நிலை பாதிக்கப்பட்டும் கஷ்டப்பட்டு வளர்க்கும் அன்னையின் நிலையைப்புரிந்து கொள்ளாத மகள்...

வருடத்திற்கொரு குழந்தை இப்படி மாய்கின்றது..ஏதேதோ காரணங்களால்...

எங்கே தவறுகின்றோம்...?


6 comments :

  1. என்ன பிரச்சினை என்றாலும் தற்கொலை செய்துக் கொள்ளலாமா ?அன்னையின் பாசமறியா குழந்தைகளை என்ன செய்வது ?

    ReplyDelete
  2. ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும்
    தற்கொலையை நாடக்கூடாதென
    ஒரு மணித்துளி நேரமாவது
    மாணவர்களுக்கு வகுப்பு நடாத்த வேண்டும்!

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வதுபோல மொத்த சிஸ்டத்திலும் ஒரு இனம்புரியா மாற்றம் சமீப காலங்களில். அதற்குக் காரணம் என்ன என்றுஅறிய வேண்டும். எல் கே ஜி படிக்கும் காலம் முதலே, முன்னர் மாரல் சைன்ஸ் வகுப்பு இருந்தது போல இனி முன்னேற்பாடாக கவுன்சிலிங் கிளாஸ் போலத் தொடங்கலாம்.

    ReplyDelete
  4. எங்கே தவறுகின்றோம்....... புரியாமல் தான் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

    சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட பெரிய முடிவுகளை எடுத்துவிடும் நிலையில் தான் இன்று பலரும் இருக்கிறார்கள் என்பது வருத்தம் தரும் விஷயம்.

    இத்தனை அறிவான பெண் எடுத்த தீக்குளிப்பு முடிவு - வருத்தம் தந்தது.....

    கவுன்சிலிங்.... இது அனைத்து பள்ளியிலும் இருக்க வேண்டிய விஷயம் என்றாகி விட்டது இப்போது...

    ReplyDelete
  5. ஏதாவது செய்ய வேண்டும் கீதா..

    ReplyDelete
  6. சமூகம் குறித்தோ, ஆளுமை குறித்தோ வீட்டிலும் பேசுவதில்லை பள்ளியிலும் கற்றுத்தரப்படுவதில்லை.... பின் எங்கேதான் அவர்களுக்குத் தெரிகிறது... அவர்கள் பார்க்கும் மாய உலகத்தில் மட்டுமே... கண்டிப்பாக ஏதாவது செய்துத்தான் ஆக வேண்டும்.... கவுன்சிலிங் என்று சொல்லி அதையும் காசாக்காமல் இருந்தால் சரி....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...