World Tamil Blog Aggregator Thendral: Thalaivar Easwran -அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணித்தலைவர் ஈஸ்வரன்...அவர்களும் நானும்....

Thursday 30 October 2014

Thalaivar Easwran -அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணித்தலைவர் ஈஸ்வரன்...அவர்களும் நானும்....

நினைவலைகளில்....

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணித்தலைவர் ஈஸ்வரன்...அவர்களும் நானும்....


நான் 1988இல் படித்து முடித்ததும் பணியேற்று தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப்பதிமூன்று வருடங்கள் பணியாற்றியது வாழ்க்கையில் மறக்க முடியாத காலங்கள்..ஒரே குடும்பமாய் எந்தவித பேதமுமின்றி வாழ்ந்த காலங்கள்...

இன்று கைநிறைய ஆசிரியர்கள் ஊதியம் பெற அன்று நடந்த போராட்டங்களே காரணம்...அப்படி நடந்த போராட்டங்களில் ஒன்று தான் பஞ்சாயத்துராஜ் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியப்பள்ளிகளை கொண்டுவருவதை எதிர்த்து நடந்த போராட்டம்...பணிக்கு வந்த 5வருடங்களில் அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது..
தலைநகர் தில்லியில் இந்தியா முழுக்க அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்ட போராட்டம்...

தமிழ்நாட்டில் இருந்து ஒரு கம்பார்ட்மெண்ட்  நிறைய ஆசிரியர்களை ஏற்றிக்கொண்டு  தமிழ்நாடு விரைவுத் தொடர்வண்டி  புறப்பட்டது...தில்லியில் ஒரு குருத்வாரா எனப்படும் சீக்கியர்களின் கோவிலில் தான் தங்கியிருந்தோம்...மிகப்பெரிய மண்டபம்...அது...[சீக்கியர்களின் கடமைஉணர்வை தனியாக எழுத வேண்டும்...]

ஏன் போராட்டம்?

பஞ்சாயத்துராஜ் திட்டத்தின் கீழ் பள்ளிகள் வருமெனில் ஆசிரியர்கள் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளில் வந்து விடுவர்...வந்தால் என்னவெனில் முன்பெல்லாம் குடும்பக்கட்டுப்பாடு செய்ய மக்களை பிடித்து வர ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனாராம் ..கல்வி கற்பித்தலை விட இது போன்ற அரசின் திட்டங்களை நிறைவேற்ற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.ஒரு மாதத்திற்கு இத்தனை பேர் என நிர்ணயம் செய்யப்பட்டு மக்களைப் பிடிக்க அலைந்துள்ளனர்...ஊதியமும் நிரந்தரமற்ற நிலை..

 போராட்டம் ஏன் என்ற எனது சந்தேகத்திற்கு விடையாக அப்போது பணியில் இருந்த மூத்த ஆசிரியர்கள் பதில் கூறினர்.அதிர்ச்சியாக இருந்தது.ஊரட்சி மன்றத்தலைவர் வைத்ததே சட்டமான நிலையில் அவருக்கு கீழ் படிந்த ஆசிரியர்களே பணி புரியலாம் என்ற நிலை..இதை எதிர்த்துப்போராடி மாநில அரசின் கீழ் வந்த நிலையில் இப்போது தான் நிம்மதியாக கற்பித்தலில் மட்டும் செயல் பட முடிகின்றது .மீண்டும் பஞ்சாயத்துராஜ் சட்டம் வந்தால் தொடக்கப்பள்ளிகள் அனைத்தும் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வந்து விடும் என்பதற்காகத்தான் போராட்டம் நடக்கின்றது என்றனர்.

நாங்கள் காலையில் குருத்வாராவிலிருந்து, டில்லியில் போராட்டம் நடந்த பூங்காவிற்கு பேரூந்தில் சென்றோம்..
மிகப்பெரிய மைதானம் அது ..இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஆசிரியர்கள் குழுமியிருந்தனர்.நாங்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணித்தலைவர் ஈஸ்வரன் அவர்களின் தலைமையில் சென்றிருந்தோம்..எங்கு பார்த்தாலும் ஆசிரியர்களின் குரல் ஓங்கி ஒலித்தது...பஞ்சாயத்துராஜ் சட்டத்தை எதிர்த்து...எனக்கு ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டு கூட்டத்தைப்பார்த்து வியந்தும் பயந்தும் என்ன நடக்கப்போகிறதென்று
தெரியாமல் கவனித்துக்கொண்டிருந்தேன்..அப்போதைய பிரதமராக மாண்புமிகு நரசிம்மராவ் அவர்கள் இருந்தார்கள் .போராட்டம் துவங்கிவிட்டதென அறிவித்தார்கள்.
போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை சிறையிலும் அடைக்கலாம் என்ற நிலை..எங்கும் ஓங்கி ஒலித்தது எதிர்ப்பு கோஷங்கள்..
திடீரென்று ஒரே கூச்சல் நாங்கள் இருந்த பூங்காவை இரும்பு கேட் கொண்டு மூடிவிட்டார்கள்..ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் குவிந்து கொண்டு இருந்தனர்..பிரதமர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்ற ஆவேசத்தில் முழக்கம் அதிகமாகியது..திடீரென்று இரும்புகேட்டை உடைத்துக்கொண்டு ஆசிரியர்கூட்டம் வெளிக்கிளம்பியது..

                .பூங்காவிற்கு வெளியே உள்ளபகுதி  புல்வெளி மேடாக இருந்தது.....கூட்டம் திரளாக வெளியேறியது ஆவேசத்துடன்..அச்சத்துடன் நாங்கள் முழக்கத்தோடு கூட்டத்தின் பின் பகுதியில். முன் பகுதியில் வட மாநில ஆசிரியர்கள் பெண் ஆசிரியர்கள் உள்பட தீவிர போராட்ட உணர்வில்  முழங்கிசென்றனர்.திடீரென்று ஒரே சத்தம் .இரும்பு கேட்டை ஆசிரியர்கள் உடைத்துவிட்டனர் என்றார்கள்...வெளியே கதவை உடைத்துச் சென்றக் கூட்டம் சிதறி ஓடியது.கூட்டத்தை மறைத்து.எங்கும் புகை சூழ்ந்தது..காவலர்கள் கூட்டத்தைக்கலைக்க கண்ணீர்ப்புகைக்குண்டு வீசியதால் ஏற்பட்ட புகையெனக்கூறினர்...மீண்டும் நாங்கள் போராட்டப்பூங்காவிற்கே வந்தோம்...அப்போது காவலர் வீசிய கண்ணீர்புகைக்குண்டு ஒன்றை கூட்டணித்தலைவர் ஈஸ்வரன் அவர்கள் பிடித்துவிட்டதாகக் கூறிக்காட்டினர்கள் .அவர்காலில் காயத்துடன் அமர்ந்திருந்தார் அப்போது தான் அவரை நான் அருகில் பார்த்தேன்...அன்றையப்போராட்டம் அத்துடன் முடிந்தது..மீண்டும் நாளை மற்றவர்கள் கலந்து கொள்வார்கள் எனக்கூறினர்..பகுதி பகுதியாகக் கலந்து கொண்டு நடைபெற்ற போராட்டம் அது.....1994ல் நடந்த போராட்டமென்று நினைக்கின்றேன்.

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணித்தலைவரான ஈஸ்வரன் அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி இந்நினைவலைகளை மீட்டெடுத்தது...

இதைப்பதிய சொன்ன சகோதரர் கஸ்தூரிரங்கன் ஆசிரியருக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் ..என் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று...இப்போது நான் உயர்நிலையில் பணி புரிந்தாலும் தொடக்கநிலையில் பணிபுரிந்த பதிமூன்று வருடங்களும் என் வாழ்க்கையின் மறக்க முடியாத பசுமையான காலகட்டங்கள்..





4 comments :

  1. மறைந்த திரு ஈஸ்வரன் அவர்கள் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  2. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...