World Tamil Blog Aggregator Thendral

Saturday, 4 October 2025

விழாஇரவு

விழா முடிந்து 
 நள்ளிரவு துவங்கும் பொழுது
விரைகிறேன் வாகனத்தில் வீட்டிற்கு..
மல்லியும் அல்லியும் 
மணம் பரப்பி விரியத் துவங்கி வரவேற்கும் சமயம்.
வாலைச் சுருட்டி தூங்கும் நாய்
தலையுயர்த்தி மீண்டும் தாழ்கிறது.
அசை போட்டுக் கொண்டிருக்கும்
மாட்டின் அலட்சியமான பார்வை கடந்து 
பின்வரும் வண்டியின் 
விளக்கைப் பார்த்ததும் மேலும் விரைகிறேன் .
அதுவும் என்னை வேகமாக 
நெருங்குகிறது
அனிச்சையாய் கழுத்திற்கு 
போகும் கை மனதில் சிறிது
அச்சத்தை விதைக்கிறது .
நடப்பது நடக்கட்டும் என இரு வாகனங்களும் ஒன்றோடொன்று விரைய 
சட்டென நிறுத்தி திரும்பினேன்,
டீச்சர் உங்கள் பின்னாடியே
வந்தது அச்சத்தை போக்கியது 
என்றபடி தொடர்பவளை புன்னகைத்து
இரவை நேசிக்கத் தொடங்கினேன்.

Sunday, 17 August 2025

சொந்த ஊர்

நீண்ட நாட்களுக்கு பிறகு 
பிறந்த மண்ணில் நடக்கிறேன் .

மண்வாசம் தாய்ப்பாலின் 
சுவையை நாவினில் ஊட்டியது.

கண்கள் இடுக்கி பார்க்கும் 
சைக்கிள்கடை முனுசாமி அய்யாவின் 
சின்ன சைக்கிளை
வாடகைக்கு எடுக்க
 அவரின் கடைக்கண் பார்வைக்காக
காத்திருந்த காலமவரின் முகத்தில் 
வரிகளாக ஓவியம் தீட்டி
கடையிருந்த இடத்தை விழுங்கி 
விட்டதைக் கூறாமல் கூறியது
அவரின் பெருமூச்சு.

அப்பாவின் துணையாய் வாழ்ந்த 
மாமாவின் சுவாசத்தை காற்றினில்
 சுவாசிக்க 
முயற்சித்து தோற்றேன்.
வழமையாக இரவின் மின்னல்முக
இளம்புன்னகையோடு
சட்டென தோன்றி மறைந்தாரவர்.

பாழடைந்து கிடந்த சிவன் கோவிலில் 
பைரவரை வணங்கச் சென்றவளைப் 
பார்த்து அங்கு போக முடியுமா?
என வியந்ததில் மறைந்திருந்தது 
சக்தி தியேட்டரில் பார்த்த திரைப்படத்தில் 
ஔவைப் பாட்டியிடம் பேசிய
பேயின் மண்டபமாயிற்றே என்றனதச்சம்.

மண்ணுக்குரிய மாம்பிஞ்சு நிற முகங்கள் மறைந்து எங்கெங்கு காணினும் வெண்ணிறமாக்கியதன் பிண்ணனியில் ஊரைச் சுற்றி 
பிரமாண்ட ராட்சஷனாய் எழுந்து 
நிற்கும் ஆலைகளின் வருகை.

தோட்டத்திற்கு அழைத்துச் சென்ற
தம்பி காட்டினான் எதிரில் முப்பது அடிக்கு குவாரி வந்து கொண்டுள்ளதென்பதை.

கடலுக்கு அடியில் இருந்த 
தொன்மையூர் தனது வளத்தை
கொடுத்து கொடுத்து 
நிலத்தில் மறைந்திடுமோ
என்ற கவலையில் மண்மகளிடம் 
வேண்டினேன் 
வாழவைக்கும் உன்னைச் சுரண்டும் 
இவர்களை மன்னித்து விடு.

தனது தடம் மறைந்த வலியில் 
ஓலமிடும் ஊரின் வலியை
உணர்ந்த பிச்சியாய் நானும்.

Monday, 17 March 2025

ஐரோப்பா

இரண்டு தமிழ்ப்பெண்களும் ஐரோப்பிய நாடுகளும்.
ஆங்கிலம் ஒன்றை மட்டும் நம்பி போலந்தின் தலைநகர் வார்சா, இத்தாலியின் ரோம் மற்றும் வெனிஸ் , செக் குடியரசின் பிராக்,சுலோவேகியா நாட்டின் பிராட்டிஸ்லாவா,ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யப் புறப்பட்டோம்.
நானும் Subhasree Muraleetharan னும்.
ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் படிக்கும் சுபா முரளியின் மகள்கள் இருவரும் ஆங்கிலம் தெரிந்ததால் அங்கு படிக்க முடிவெடுத்து உளவியலில் ஆராய்ச்சி படிக்கும் ஆவலில் இளநிலை முதுநிலை படித்துக் கொண்டு இருக்கிறார்கள் .

புடாபெஸ்ட்டில் நிறைய இந்திய மாணவர்கள் படிப்பையும் காண முடிந்தது.ஹங்கேரியர்களுக்கு ஆங்கிலம் சுமாராக தெரியும் நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.

வார்சாவில் அவர்களுக்கு போலிஷ் மட்டுமே தெரிந்த நிலையில் கூகுள் மேப் மட்டும் உதவிட நாங்கள் இருவரும் இரண்டு நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்தோம்.அங்கும் எங்களைக் கண்டு பிடித்த ஒரு இந்திய ஜோடி மகிழ்வாக வந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

மற்ற நாடுகளில் ஆங்கிலம் சரளமாக அனைவருக்கும் தெரிய கவலையின்றி சுற்றி பார்த்தோம்.

இத்தாலியில் சரவணபவன் ஹோட்டலில் தஞ்சாவூர் குடும்பத்தினர் பார்த்த போது மகிழ்வாக இருந்தது.

இப்படியாக இந்தி படித்தவர்களும் ஆங்கிலம் தெரிந்ததால் தான் உலக நாடுகளில் பணி செய்து வருவதை காண முடிந்தது.

இதற்கும் இப்போதைய மும்மொழி பிரச்சினைக்கும் தொடர்பு உண்டுங்கோ.

Wednesday, 7 August 2024

கவிதை

வெற்றிபெற்ற பூரிப்பில்
விரிந்த மெய்யது.
நூறு கிராம் கூடியதாக 
தகுதி நீக்கமென 
கொக்கரிக்கிறது.

ஆயிரமாயிரம் ஆண்டு பகையிது 
ஆண்டையின் மடிசாயவில்லையென 
அக்னி செரித்த வம்சமிது.

பாலியல் வன்முறை போராட்டத்திற்கு
பாவிகளுக்கு தரும் பிச்சையிது .
பொறுக்கிகளே
 பொறுக்கிக் கொள்ளுங்கள் .

மனங்களை வென்றவளுக்கு உலோகம் 
பொருட்டல்ல.

மு.கீதா

Monday, 29 January 2024

தியாகிகள் தினம்

இன்று தியாகிகள் தினம்.

எங்கள் தாத்தா திருமிகு மாணிக்கம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தரப்பெருமாள் கோவிலில் தீவிர சுதந்திர போராட்ட வீரர்.
நான்  பார்க்கும் போது அவர் உடல்நலக்குறைவில் இருந்தார்.
பத்து வயதாகும் போது அவரின் மறைவு நினைவுகள் இப்போது இலேசாக நிழலாடுகிறது.

தாத்தாவைப் பற்றி ஆத்தாவிடம் அதிகம் பேசுவதுண்டு. வீட்டையும், மனைவியையும், குழந்தைகளையும் கவனிக்காமல் சுதந்திர போராட்டமே கதியென்று கிடந்துள்ளார்.

ஆத்தா தனது ஒன்பது குழந்தைகளில், உயிரோடு ஆறு குழந்தைகளையும் வளர்க்கப் பட்டச் சிரமங்கள் ,தாத்தா மீது கோபம் இருந்தாலும் அவரை எப்போதும் வெறுத்ததில்லை.

ஆத்தா சிறுகச் சிறுக சேமித்து வைக்கும் நகைகளை தாத்தா வீட்டுக்கு வரும் போது எல்லாம் அடுக்குப் பானைகளை அப்படியே  கவிழ்த்துப் போட்டு அதிலிருக்கும் நகைகளை எடுத்து, சுதந்திர போராட்டத்திற்கு தந்துவிடுவார் எனக் கூறி திட்டிக் கொண்டு இருப்பார்.

"அவர் தலையில் காங்கிரஸ் தொப்பியை மாட்டிக் கொண்டு சுதந்திர கொடியை சுமந்து கொண்டு வந்தேமாதரம் என்று முழங்க தெருவெங்கும் நடந்த காட்சியைக் கண்டு காங்கிரஸின் மூத்த தலைவர் மதிப்பிற்குரிய கருப்பையா மூப்பனார் அவர்கள் சிறு வயதில் பார்த்து, சுதந்திர போராட்டத்தின் மீது ஆவல் கொண்டு கலந்து கொண்டதாக "தினமணி பொன்விழா மலரில் ஒரு கட்டுரையில் எழுதி உள்ளார்.

தாத்தாவின் அப்பா
,வங்காரம் பேட்டை,கஞ்சமேடு, உள்ளிக்கடை ,கபிஸ்தலம் உள்ளிட்ட ஏழு கிராமத்திற்கு காரியகாரராக இருந்து பல  வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். தீராத வழக்குகளைத் தீர்த்து வைப்பாராம்.சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமது.

ஒரு வழக்கில் தீர்ப்பு சொல்ல மூன்று நாட்கள் தாமதமாக, மூன்று நாட்களும் வந்திருக்கும் அத்தனை பேருக்கும் தாத்தா வீட்டில் உணவளித்து தங்க இடமளித்து பிறகு தீர்ப்பு வழங்கி உள்ளார்..

ஒரு தீர்ப்பில் குற்றவாளி குற்றத்தை ஒத்துக்கொள்ள மறுக்க, அவர் வீட்டிற்கு அந்த ஊரில் நடக்கும் காளிக்கோவில் திருவிழாவின் போது காளியம்மன் அவர் வீட்டிற்கு வராது என்று கூறி உள்ளார்.குற்றவாளியோ காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.காவலர்கள் "காளியம்மன்" அவரது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.
திருவிழா நாளன்று "காளியம்மன் " அனைவரின் வீட்டிற்கும் சென்று ஆசிர்வாதம் வழங்குவது வழக்கம்.அதுபோல் அன்றும் ஒவ்வொரு வீடாகச் சென்று பின்னர் குற்றவாளியின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் காளியம்மனின் பின்புறம் வந்த தாத்தாவின் அப்பா காளியம்மனை அந்த வீட்டில் விட்டு விட்டு நடக்க, அவரோடு வந்த ஊரிலுள்ள அத்தனை பேரும் அவரைப் பின்பற்றி செல்வதைக் கண்ட காவலர்கள் உண்மையை உணர்ந்து கொண்டனராம்.

ஒரு வழக்கில் விறகை வெட்டி யாரோ எடுத்துச் சென்று விட்டனர் என புகார் வந்ததைக் கண்டு தாத்தாவின் அப்பா அவரிடம் பணி புரிபவரிடம் யார் வீட்டில் எல்லாம் புதிதாக விறகு கிடக்கிறது என்று பார்த்து வரக் கூறி உள்ளார்.அவரது வீட்டிலும் இருப்பதாகக் கேட்டு அதிர்ந்த தாத்தா,விறகை எடுத்து வந்த தனது மனைவியை வேப்பமரத்தில் கட்டி விளார் குச்சியால் எடுத்து சரமாரியாக அடிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார். 

நியாயம் என்று வந்தால் குடும்பமாவது மனைவியாவது என்று வாழ்ந்துள்ளார்.
ஊருக்காக வாழ்ந்தவரை யாரோ குறை கூற ,அதைக் கேட்ட எங்கள் தாத்தா இனி ஊர்ப்பணி எதுவும் பார்க்க கூடாது என சத்தியம் வாங்கி அவரைத் தடுத்துள்ளார்.மீறி அவர் ஊர்க்கணக்கை ஒரு நாள் பார்த்ததைக் கண்டு குறிப்பேடுகளைக் கோபத்தில் கிழித்து போட்டுள்ளார். 

அதனால் தான் அவரும் அந்த பதவிக்கும் செல்லவில்லை.

சுதந்திர போராட்டம் துவங்கி உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடக்கும் நிலையில் தாத்தா சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை மற்றவரிடம் கூறிக் கொண்டு இருந்ததைக் கேட்ட அவரின் அப்பா,"நீ சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்" என்று கூற, ஊரே திரண்டு வந்து தாத்தாவை திருவலஞ்சுழி வரை வந்து உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு வழி அனுப்பி வைத்துள்ளதைக் கேட்ட போது கண்ணீர் வந்தது.

அதனால் ஆங்கிலேய அரசு இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை அளித்தது .சிறையில் பல்வேறு சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்துள்ளார். 

சிறையில் வேதாரண்யம் வேத ரத்தினம் பிள்ளை பிள்ளை உள்ளிட்ட பல தலைவர்களுடன் இருந்த நட்பால், தான் வாழ்ந்த சுந்தரப் பெருமாள் கோவில் ஊரில் அரசு மருத்துவமனை வரக் காரணமாக இருந்துள்ளார்.அந்த மருத்துவமனை அமைக்க ரூ 16000 குறைந்த நிலையில்,அவர் சிறை சென்றதற்காக அரசு சன்மானமாக அளித்த 15 மா நிலத்தை விற்று அதிலிருந்து வந்த பணத்தைத் தந்துள்ளார். அக்காலத்தில் அந்தத் தொகை எவ்வளவு பெரியது?

ஊரிலுள்ள பெண்களுக்காக மாதர் சங்கம் அமைத்து தையற்பள்ளி,ராட்டை நூற்கும் பயிற்சி அளித்து அவர்கள் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக துணை செய்துள்ளார். நெசவாளர்களுக்காக சொசைட்டி,கூட்டுறவு பண்டகச் சாலை அமைத்துள்ளார்.

நிறைய விதவைப் பெண்களை ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து ஆசிரியராக உருவாகக் காரணமாக இருந்துள்ளார்.

அவரால் படித்த பெண் ஆசிரியர் ஒருவரின் குடும்பம் இன்று  தஞ்சை மாவட்டத்தில் மிகப் பெரிய செல்வந்தராகத் திகழ்வதைக் கண் முன் காண்கிறேன்.அவர்கள் அதையெல்லாம் மறந்துவிட்ட காலமிது.

அம்மாப்பேட்டையில் வாழ்ந்த போது 40 நெசவாளிகளுக்காக இலவச  வீட்டுமனைப் பட்டாக்களைப் போராடி பெற்றுத் தந்துள்ளார். அவருக்கு ஒரு இடமும் சிலையும் தருவதாக நெசவாளர்கள் கூறியதை மறுத்துவிட்டார்

தனது குழந்தைகளின் நலனுக்காக எதுவும் செய்யவே இல்லை, ஏன் அவர்கள் எந்த வகுப்பு படிக்கிறார்கள் என்பது கூட அவருக்கு தெரியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆத்தாவின் வேதனைக்கு காரணம் இதுவே.

தனது குடும்பத்தை மறந்து நாட்டுக்காக உழைத்த திருமிகு மாணிக்கம் எனது தாத்தா என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.தியாகிகள் நினைவு மண்டபத்தில் தாத்தாவின் போட்டோவைப் பார்த்து மனம் நெகிழ நின்றேன்.

இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பெற்ற சுதந்திரத்தைச் சீர்குலைக்கும் மனிதர்களைக் கண்டு வேதனை மிகுகின்றது.
அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் கூட இல்லை என்பது எத்தனை கொடுமை.

 மு.கீதா
புதுக்கோட்டை

Thursday, 23 November 2023

அது

உயிரிழந்த உடலின் 
விரிந்த கால்களைக் கட்டுவது போல 
பாவாடை அணிந்து தூங்கும் போது
 கால்கள் விரியக்கூடாதென 
கட்டித் தூங்கிய பருவம்.
உதிரம் உதிரத்துவங்கிய நாளிலிருந்து
உலக்கை தாண்டக்கூடாதென
உதிரமும் நானும் உலக்கையின்
உலகில் வாழ்ந்த பருவம்.
புடவையை பாதியாய் கிழித்து
அணிந்த தாவணிக்கந்தையை மடித்து
கால்களின் நடுவே சுமந்து கடந்த பருவம்.
எட்டு முறை மடித்து வைத்த
துணிமூட்டையை நனைத்து பாவாடையில் பட்ட உதிரம் 
மறைக்கத் துடித்து வலியுடன் 
பள்ளியிலிருந்து வீட்டிற்கு 
தொடை உரசிய புண்களும்
எரிய எரிய வீடடைந்த பருவம்.
நல்ல நாளில் வரக்கூடாதென
அத்தனைக் கடவுளையும் கும்பிட்டழுதாலும் வந்து 
மூலையில் அமரவைத்து மூதேவி பட்டம்
வாங்கித்தந்த பருவம்.
தெருவெல்லாம் உறவுகள்
தலைநிமிராமல் தரைப்பார்த்தே 
நடந்த பருவம்.
அதிகாலைப்பனியில் ஆணெழும் முன்னே உறையவைக்கும் குளிரில் 
குளித்து விடியும்  பருவம்.
குளிருதும்மா,
அப்படி தான் குளிரும்
வெளியே சொல்லாதே
வயிறு பிழியும் வலிம்மா
அப்படி தான் வலிக்கும் தாங்கு.
பசி தாங்கு,
அவமானம் தாங்கு,
சுயமரியாதையின்றி வாழப்பழகு,
குரலெழுப்பாதே,
ஒங்கி சிரிக்காதே,
கடந்த காலம்
கடந்து போன காலம் மட்டுமல்ல.

மு.கீதா

Friday, 30 June 2023

முப்பாலில் ஒன்று

முப்பாலில் ஒன்று..

பட்டும் படாமலும் தொட முயலும்
கரங்களுக்கு ஆயிரம் வோல்ட்
மின்சாரம் தந்தது யார்?

 கூந்தல் கலைத்து மகிழும் தென்றலுக்கோ,
 நுதலில் படிமமாகும்
முத்த அருவியின் வாஞ்சை.

கோடைக்காற்றின் உப்புசத்திற்கு
கலவி முடித்துதிர்த்த
வியர்வையின் வாசம்.

ஊடலுக்கு பின்னான நெருக்கத்திற்கே
காற்றைக்கூட விட மறுக்கும் வேகம் .
கண்மூடி களித்துப் பிறக்கும் தலைவியின் புன்னகை நாடுபவன்,
நீளும் உச்சத்தின் பெருவெளியில் 
மகிழ்ந்து கரைந்து மறைபவளைக் கண்டு 
தவிக்குமவன் உயிர்.

கார் காலம் வர 
கடிதுமுயங்கும் புலிகளைக் கண்டு
வேட்டையாட மறந்த,
 தலைவனது தேரிலிருந்து
விரைந்து ஒலிக்கும் மணிகளின்
ஓசையைக் கேட்டாயோ தோழி.
அதென் தலைவனின் பெருமூச்சென
என்னையடைந்து மலர்த்துகிறது.
.