World Tamil Blog Aggregator Thendral: தமிழர் உரிமை மாநாடு

Wednesday 21 June 2017

தமிழர் உரிமை மாநாடு

எது நமது நாகரீகம் ?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரீகமா ?
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட "கீழடி "நாகரீகமா ?

என் மாணவிகளிடம்நான்  அடிக்கடி விவாதிக்கும் கருப்பொருள் ...

 புதுக்கோட்டை 'திடல் 'இலக்கியக்கூடல் இன்று ,புதுக்கோட்டை மாவட்ட  த.மு.எ.க.ச.  "தமிழர் உரிமை மாநாடு" கூட்டத்தை மாலை  தமிழ்நாடு அறிவியல் இயக்கக்கூடத்தில் நடத்தியது .

மாவட்டச்செயலாளர் தோழர் மதியழகன் அவர்கள் ஒருங்கிணைக்க ,மாவட்டப்பொருளாளர்  தோழர்  ஸ்டாலின் அவர்கள் வரவேற்க  ,புதுக்கோட்டை மாவட்ட த.மு.எ.க.ச. தலைவர் தோழர் இரமா ராமநாதன்அவர்கள்  தலைமை ஏற்க ,,மாநிலசெயற்குழு உறுப்பினர் கவிஞர் முத்துநிலவன்  அவர்கள்
முன்னிலையில்,  மாநிலத்துணைச் செயலாளர் கவிஞர்  நீலா அவர்கள் பாடலுடன் துவங்க  ,சிறப்பு விருந்தினராக,   த.மு.எ.க.ச.வின் மாநிலப் பொதுச் செயலாளரும் ,சாகித்ய அகாதமி விருதாளரும் ,தமிழர் வரலாற்றை உலகுக்கு வெளிக்கொணர தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் .எழுத்தாளரும் விமர்சகருமான கவிஞர் ராசி பன்னீர் செல்வம் நன்றி கூறினார் .  



எதற்காக சென்னையில் தமிழர் உரிமை மாநாடு ?

தற்போது இந்தி திணிப்பு எதிர்ப்பை எல்லோரும் உணர வேண்டியத்தேவை என்ன?

இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக போராடிய தமிழர்களின் ,உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளின் தியாகம் இன்று மறக்கடிக்கப்பட்டு மீண்டும் நமது எதிர்ப்பை காட்டும் சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ள நிலையை ,காலத்தின் கட்டாயத்தை மிக தெளிவாக ,விளக்கமாக எடுத்துரைத்தார்..

1937 இல் தந்தைப்பெரியார் 147 பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கி கொண்டு வந்ததை எதிர்த்து தமிழக மக்களை அணி சேர்த்து போராடினார் .
மாற்று கருத்து இருந்தாலும் உங்கள் சிவனார் அருளியத்தமிழுக்கு ஆபத்து எனவே அனைவரும் ஒன்றினையுங்கள்..என்று போராடிச் சிறை சென்ற போதும் ,அவர் நினைத்தது நடக்கவில்லை என்று வருந்தினார் .

அப்போராட்டத்திற்கு பின் மத்திய அரசு 15 ஆண்டுகாலம் கெடு வைத்து ,அதற்கு பின் இந்தி கட்டாயமாக்கப்படும் என்று தள்ளி வைத்தது .அதன்படி மீண்டும் 1965 இல் செயல் படுத்த மீண்டும் போராட்டத்தை மாணவர்கள் நடத்தினர் ..40 இடங்களில் ஊரடங்குசட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததெனில் அப்போராட்டத்தின் வலிமை அவ்வளவு ...அதற்காக சிறையில் முதலில்உயிர் நீத்தவர்  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நடராஜன் அதற்கு பின் பிற்பட்ட இனத்தைச் சேர்ந்த தாளமுத்து இறக்க ...அரசு அதில் கூட சாதியை முன்வைத்து உயிர்நீத்த தியாகிகள் என தாளமுத்து நடராஜன் என கூறியது ...தாழ்த்தப்பட்டவர்களை எப்போதும் முன்னிறுத்த கூடாதென்பதற்காக என விரிவாக விளக்கிய போது சாட்டையால் அடி வாங்கியது போல் இருந்தது,

இன்று நாடாளுமன்றக்குழு ,குடியரசு தலைவரிடம் 117 பரிந்துரைகளை ஒப்புதல் பெற்றுள்ளது .இனி நாடாளுமன்றத்தில்  இந்தி பேசத்தேரிந்தவர்கள்  இந்தியில் மட்டுமே பேசவேண்டும் .அனைத்து பள்ளிகளிலும் ,கல்லூரிகலிலும் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பவையும் அதில் அடக்கம் ...இந்தியாவில் இந்தி பேசுபவர்கள் 20% ,மாநில மொழி பேசுபவர்கள் 80% என்ற நிலையில் இப்படிப்பட்ட பரிந்துரைகள் மாநில மொழிகளை அழிப்பதற்கே ..

இப்போதே வங்கிகளில் இந்தியும் ஆங்கிலமுமே உள்ள நிலையில் .....சிவில் சர்வீஸ் தேர்வில் முதலில் இந்தியும் ,அடுத்து ஆங்கிலமுமே இடம் பெற்ற நிலையில் மற்ற மொழி பேசுபவர்களின் கதி என்ன?

இது இந்தி அரசா?இந்திய அரசா?

சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்ற கோரி உயிர்நீத்த சங்கரலிங்கனாரின் தியாகம் ,மொழிப்போர் தியாகிகளின் தியாகம் இவற்றை  மாணவர்கள் உணர்வது எப்போது ?

கீழடி பாதுகாப்பு வேண்டும் என போராடுவது எதற்காக?

இதுநாள் வரை ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் தமிழர் நாகரீகம் பழங்குடி நாகரீகம் என்று வரலாறு இருந்த நிலையில் இன்று தமிழ்மொழியின் மீது மாறாத காதல்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் திருமிகு அமர்நாத் நாராயணன் அவர்களின் விடா முயற்சியினால் இன்று  தமிழர்களே உலகின் முதல் நாகரீக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்று நிரூபணம் ஆகும் நிலை ...இந்தியாவில் இதுவரை கிடைத்துள்ள ஒரு இலட்சம் கல்வெட்டுகளில் அறுபத்தைந்தாயிரம் கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. அதிலும் காலத்தால் பழமைவாய்ந்த முப்பத்தைந்து கல்வெட்டுகள் தமிழ்பிராமி எழுத்தில் உள்ளன.அதில் இருபத்தைந்து கல்வெட்டுகள் வைகை நதிக்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் கிடைத்துள்ளன ...

எனவே வைகை நதிக்கரையில் அகழ்வாய்வு செய்ய முடிவு செய்து கண்டுபிடித்துள்ளனர்.
கீழடி மக்கள் தந்தத்தில் சீப்பு,செஸ் காயின்கள். தந்தத்தில் பகடை என செல்வா செழிப்பு மிக்க வாழ்க்கை வாழ்ந்துள்ளதை ஆய்வு காட்டுகின்றது .வடிகுழாய் அமைப்பில் திறந்துள்ள அமைப்பு ,மூடியுள்ள அமைப்பு ,குழாய் வடிவ அமைப்பு என சிறப்பாக வடிவமைத்து  வாழ்ந்துள்ளார்கள் ...அகழ்வாய்வு நடத்த முடிவு செய்துள்ள இடம் 110 ஏக்கர் ..தற்போது அகழ்வாய்வு நடத்தியுள்ள இடம் வெறும் ஐம்பது சென்ட் மட்டுமே ...

வெறும் ஆறடி உயரக்குழியில் மூன்றடியில் கிட்டத்தட்ட ஐயாயிரம் மாதிரிகள் கிடைத்துள்ளன .இன்னும் மொத்த பகுதியும் ஆய்வு செய்தால் தமிழரே உலகின் தொன்மையான நாகரீக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்ற உண்மை வெளிப்பட்டுவிடும் என்பதற்காகவே மத்திய அரசு திட்டமிட்டு ஆய்வாளரை கவுகாத்தி காட்டில் உள்ள அருங்காட்சியகத்திற்கு காப்பாளராக நியமித்து தண்டித்துள்ளது ..

கார்பன் போட்டிங் டெஸ்ட் எடுக்க பணம் இல்லை என்று கூறும் மத்திய அரசு ராமர் பாலம் கண்டு பிடிக்க நூறு கோடி ஒதுக்கியதெப்படி?

இதைஎல்லாம் மாணவர்கள் உணர்வதெப்போது ?

தமிழர் உரிமை மாநாடு சென்னையில் காமராசர் அரங்கில் நடப்பது ....நமக்காக நாம் தான் போராடவேண்டும்..ஒன்றிணைவோம் ......உர்க்கக் குரல் கொடுப்போம் என்று வர பேசி முடித்த போது அரங்கு மௌனமாக சம்மதம் தந்தது ...







6 comments :

  1. ஒன்றிணைவோம் ......உர்க்கக் குரல் கொடுப்போம்

    ReplyDelete
  2. மிகவும் தெளிவான, உணர்வுபூர்வமான வருணனை.

    ReplyDelete
  3. “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட "கீழடி "நாகரீகமா ?”
    “கீழடி நாகரீகம்” என்பதை “வைகைச்சமவெளி நாகரீகம்” என்றே குறிப்பிடலாமே!!

    ReplyDelete
    Replies
    1. உண்மை வைகைச்சமவெளி நாகரீகம் ஏற்கிறேன் சார்

      Delete
  4. நிகழ்வில் பங்கெடுக்க இயலவில்லை
    வருத்தம்தான்
    ஆனால் அவரை சந்தித்தேன் பயிற்சியில்

    ReplyDelete
  5. அருமையான, உணர்வுபூர்வமான பதிவு. சென்னையில் 26-6-17 அன்று காமராசர் அரங்கத்தில் நடக்கவுள்ள "தமிழர் உணர்வு மாநாடு" சிறக்க ஒன்று கூடுவோம்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...