World Tamil Blog Aggregator Thendral: ஆலவாயன்

Thursday 12 March 2015

ஆலவாயன்

ஆலவாயன்-பெருமாள் முருகன்

காளியும் பொன்னாவும் இணை பிரியாது பன்னிரண்டு வருடங்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு குழந்தை இல்லை என்ற குறையால் அவர்களை இந்த சமூகம் என்ன பாடுபடுத்துகின்றது ...இறுதியில் தனதுஅண்ணன் ,அப்பா,அம்மா,மாமியார்ஆகியோரின் வற்புறுத்தலால் கரட்டூர் மலைக்கோவில் திருவிழாவில் பதினான்காம் நாள் விழாவிற்கு பொன்னா சென்றுள்ளாள் என்பதை அறிந்த கணத்தில்காளி தான் ஆசையாக வளர்த்த பூவரசு மரத்தில் தூக்கு போட்டுக்கொள்வதாக மாதொருபாகன் என்ற தனது நாவலில் எழுத்தாளர் பெருமாள் முருகன் முடித்திருப்பார்....

இதன் தொடர்ச்சியாக

காளி சாவதை ஏற்காத மக்களுக்காக  காளி இறவாமல் உயிரோடு இருந்து பொன்னாவுடன் வாழ்வதைக்கூறுவதாக அர்த்தநாரி என்ற நாவலையும்,காளி இறந்து விட்டால் அதன் பின்  பொன்னாவின் வாழ்க்கையைக்கூறும் ஆலவாயன்  என்ற நாவலையும் எழுத்தாளர் பெருமாள் முருகன் படைத்துள்ளார். காளியாகவும் பொன்னாவாகவும் வாழ்ந்திருக்கிறார் என்பதை இம்மூன்று நாவல்களும் நமக்கு உணர்த்துவதுடன் அக்கால மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளன.

ஆலவாயன் நாவலில் இழந்துவிட்ட தன் ஆசைக்கணவனை காணும்பொருளிலெல்லாம்  காணும்   பொன்னா, இறந்துவிடாமல்இருக்க பொன்னாவின் தாய் நல்லாயியும்,மாமியார் மாராயியும் கண்விழித்து பாதுகாக்கிறார்கள்.துவண்டு துவண்டு மயங்கிவிழும் பொன்னா சில நாட்கள் கழித்து காளி பார்த்து பார்த்து வளர்த்த கத்திரிக்காய்ச் செடிகளைப் பாதுகாக்க முனையும் போது உயிர்க்கிறாள்.
தனியொருத்தியாக தனக்குள்ளே வாழும் காளியுடன் பேசிக்கொண்டு, நிலைகுலைந்து வாழும் பெண்ணாக பொன்னா திகழ்கின்றாள்.பன்னிரண்டு வருடங்களுக்குப்பின் பொன்னாவின் நீண்ட கால ஏக்கம் வயிற்றில் கருவாக துளிர்க்கின்றது.தன் வயிற்றில் இருப்பது காளியின் குழந்தை என்றே நம்பும் பொன்னாவை ஊரார்  தூற்றி விடக்கூடாது என்பதற்காக ஊர்க்கூட்டம் அமைத்து செய்யும் சடங்கைப்பற்றி நாவலில் ...

ஊர்த்தலைவர் கூட்டத்தினரைப்பார்த்து

“இன்னைக்கு ஊர்க்கூட்டம் எதுக்குன்னு எல்லாருக்கும் தெரீம் .இது பொம்பள சம்பந்தப்பட்ட விசியம்.அதனால் பொம்பளைவ கூட்டம் வந்து சேர்ந்திருக்குது.பொம்பளைவள நாம ஊர்க்கூட்டத்துக்குக் கூப்பிடறது வழக்கமில்ல. இது சாங்கியம் நடத்தற கூட்டம்.அதனால எல்லோரும் வந்திருக்கிறாங்க .நெறஞ்ச கூட்டம் இது.அதே மாதிரி சம்பந்தப்பட்டவங்க மனசு நெறையறாப்பல இது நடக்கோணும் .செரி சக்கரக்கத்தி உம் வேலய ஆரம்பிக்கலாம் நீ”என்றார் ஊர்க்கவுண்டர்.

தீப்பந்தம் ஒன்று மரத்து விரிந்திருந்த இடத்திற்கு பக்கத்தில் வந்தது.சாணியில் ஒரு பிள்ளையாரைப் பிடித்து வைத்தான் பின் தேங்காயை உடைத்து நிறை சொம்புத்தண்ணியில் விட்டான் .அரிக்கஞ்சட்டியில் பிசைந்து வைத்திருந்த சோற்று உருண்டையை அதன் முன் வைத்தான்.பொன்னாவை அழைத்துவரச்சொன்னான்.பிள்ளையாருக்கு முன்னால் வந்து நின்றதும்

சொம்புத்தண்ணீரை விளாவச்சொன்னான் பின் செஞ்சோற்று உருண்டைகள் மூன்றைக்கொடுத்து ப் பில்ளையாரைச்சுற்றி மூன்று பக்கம் போடச்சொன்னான்.ஊரைப்பார்த்துக் கும்பிடச்சொன்னதும் தலையை லேசாக நிமிர்ந்து கைகளைக்குவித்தாள்.அவளை ஒருபக்கம் போய் நிற்கசொல்லிவிட்டுச் சக்கரைக்கத்தி சத்தமாகத் தொடங்கினான்.

“பெரியவங்க சின்னவங்க பொண்டு பிள்ளைவ எல்லாரும் கூடியிருக்கிற இந்த ஊர்ச்சபைக்கு கும்புடுங்க சாமீ..இன்னைக்கு இந்தச் சேதிக்கூட்டம் போட்டுருக்கிறது என்னத்துக்குன்னா ,இன்னைக்கு ரெண்டு மாசம் எட்டு நாளைக்குப்பின்னால வைகாசி மாசம் இரவத்தி ரண்டா நாளு வெசாலக்கிழம அன்னைக்கு வெடிகாலம் நம்மூரு பெரியக்காட்டு ராமசாமிக்கவுண்டரு மாராயி கவுண்டச்சி அவுங்க மகனும்,பொன்னாயிக்கவுண்டச்சி ஊட்டுக்காரருமான காளிக்கவுண்டரு தன்னுசிர மாச்சிக்கிட்டாருங்க சாமீ.

.அதுக்கப்புறம் ரண்டு மாசம் கழிச்சு ப் பொன்னாயிக்கவுண்டிச்சி அவுங்களுக்கு ஓங்கரிப்பும் வந்து சேர ஊரு பண்டிதக்காரிச்சி நாடிபாத்துக் கரு உருவாயிருக்குதுன்னு சொல்லீட்டாங்க சாமீ...இப்ப மூணாவது மாசம் நடக்குதுங்க.பத்து பாஞ்சு நாளு முன்ன பின்ன இருக்கலாமுங்க சாமீ.

ஊருக்கு மின்னால பொன்னாயிக்கவுண்டச்சி இந்த கருவு தன்னூட்டுக்காரருக்குத்தான் உருவாச்சுன்னும் இப்ப மூணு மாசம் நடக்குதுன்னும் சொல்ல மூணு சோத்துருண்டைய போட்டுருக்கறாங்க சாமீ.அவங்க வயித்துல வளர்ற கருவு காளிக்கவுண்டரு பேரு சொல்லோனும்.சூரியனும் சந்திரனும் சாட்சி சாமியோவ்.பத்தூட்டு பங்காளிவரும் இத ஏத்துக்கிட்டு இங்க வந்துருக்கறாங்க.சொந்தம் பந்தம் உத்தாரு ஒரம்பர,மானம் மச்சான் எல்லாரும் வெளியூர்ல இருந்து இங்க வந்திருக்கிறாங்க .அவிய எல்லாரும் கருவு காளிக்கவுண்டரு பேரு சொல்லறது தான்னு ஏத்துக்கிட்டிருக்காக சாமியோவ்.வராத ஊட்டுல,காட்டுல,உள்ளூர்ல,வெளியூர்ல இருக்கறவங்களுக்கும் இது சம்மதம் தானுக .அதனால இத இந்தூரும் ஏத்துக்கணும் சாமீ”என்று எல்லோருக்கும் கேட்கும்படி சொல்லி சற்றே இடைவெளி விட்டான்....   
கணவனை இழந்த பெண் கருவுற்றிருந்தாள் அவளை மதிக்கும் விதமாக இந்த சடங்கு நடத்தப்பட்டுள்ளது என்பதை இந்நூல் வாயிலாக அறிய முடிகின்றது.
கவலையால் உருக்குலையும் பொன்னாவிற்கு வாழ்க்கையின் மேல் ஒரு பிடிப்பைத்தருகின்றது அந்தக் குழந்தை.பன்னிரண்டு வருடங்களாக தான் பட்ட துன்பத்தைபோக்கவந்த குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியும் பொன்னாவால் உற்று நோக்கப்படுவதை நாவல் கூறுகின்றது.
எழுத்தாளர் நாவலில் வாழும் மக்களுடன் நம்மையும் பிணைக்க வைக்கின்றார்.....கிராம மக்களின் எளிமையும்   இயல்பான வாழ்க்கையையும் அழகாக எடுத்துக்காட்டுகின்றது..
ஆலவாயன்

7 comments :

  1. ஓ இப்படி ஒரு சடங்கு இருந்ததா? ஹ்ம்ம் என்னவோ கீதா..பெண்ணை மதிச்சா இந்தச் சடங்கு எதுக்குன்னு தோணுது..ஆனால் அதுதான் சமூகம் :)

    ReplyDelete
  2. இன்னும் தொடர்கிறீர்களா...?

    ReplyDelete
  3. வணக்கம்
    சொல்லிய விதம் நன்று த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ஊர் ஒருபெண்ணைதப்பா பெசக்கூடாது என்பதற்காகக் கூட
    இப்படிப்பட்ட சாங்கியம் சம்ரதாயம் ஊர் பஞாயத்து...............
    (நான் இன்னும்படிக்கவில்லை)அருமை அருமைதோழி.

    ReplyDelete
  5. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. குறையில்லாத பொன்னா, தான் "குழந்தை பெற தகுதியற்றவள்" என்கிற வீண் பழிச்சொல்லைத் தவிர்க்க தன் கணவனின் மானம், தன் குடும்ப கவுரவம் எல்லாவற்றையும் காப்பாத்த சாமிப்பிள்ளை பெற்றுக்கொள்ளப் போகிறாள் என்பதுபோல் கதை சொல்ல முயல்கிறான் "படைப்பாளி"..

    அதாவது பொன்னாள், கணவன் காளியைக் காதலிக்கிறாள், அவன் மேல் உசிரு அவளுக்கு..இருந்தாலும் அந்த இரவு இன்னொரு "சாமி"யை இருட்டில் விரும்பி அனுகும்போது அவளுக்கு எவ்விதமான "கில்ட்டி/குற்ற" உணர்வுகளோ இல்லை என்பதை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது. பொன்னாவைப் படைத்தவன் அதுபோல் நல்லுணர்வுகளை அவளுக்கு வேண்டுமென்றே கொடுக்கவில்லை. அவள் குழந்தைக்காகத்தான் அவ்வுறவுக்கு சம்மதித்தாளா? இல்லைனா one night stand என்று சொல்லப்படும் அவ்வுறவு அவளுக்கு மிகவும் பிடித்துத்தான் அவனுடன் உறவு கொள்ளுகிறாளா? என்கிற சந்தேகத்தை உருவாக்குகிறது அவள் அச்சாமியுடன் சல்லாபம் செய்யும்போதும், அவனோடு மிகுந்த மகிழ்வுடன் உறவுகொள்ளும் போதும்.

    பொன்னாவைப் படைத்தவன் படைப்பாளி ஒரு சாதாரண ஆண் என்பதால் அவன் மனநிலை நமக்குப் புதிதல்ல. தான் பெற்ற மகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத காட்டுமிராண்டி அப்பன்கள் நம்முடன் நம் கலாச்சாரத்தில் வாழ்கிறார்கள். அதேபோல்தான் பொன்னாவைப்படைத்த "அவள் அப்பன்" இந்த முருகன் ஒரு குரூரப்புத்திக் கொண்ட "அற்பன்" என்கிற உண்மை பொன்னாவின் உள்ளுணர்வுகளை புரிந்துகொள்ள முயலும் வாசகர்களுக்குத் தெளிவாகப் புரியும்.

    என்னுடைய சொந்த அனுபவத்தில் தன் வாழ்வில் கணவன் என்பவன் வந்தவுடன் அவன் மனம் புண்படக்கூடாதென்று பழைய நல்ல நண்பர்கள் உறவுகளை முறித்துக்கொள்ளும் பல பெண்கள் இந்தக் காலத்தில்கூட இருக்கிறார்கள். ஒவ்வொரு சமயம் அவர்களுடைய இம்மாற்றம் என்னை மிக ஆச்சர்யப்பட வைத்தது மட்டுமல்ல, எப்படி இவர்கள் இப்படி மாறுகிறார்கள்? என்று அவர்கள் மனநிலை ஒரு புதிராகவே இருப்பதுண்டு.

    --------------------

    ***கணவனை இழந்த பெண் கருவுற்றிருந்தாள் அவளை மதிக்கும் விதமாக இந்த சடங்கு நடத்தப்பட்டுள்ளது என்பதை இந்நூல் வாயிலாக அறிய முடிகின்றது.***

    "கருவுற்ற பெண் கணவனை இழந்துள்ளாள். கருவுற்ற நிலையில் கணவனை இழந்துள்ள அவளை மதிக்கணும் என்று நடத்தும் சடங்கு" என்று சொல்லப்பட்டு இருக்க வேண்டும்..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...