World Tamil Blog Aggregator Thendral

Tuesday, 17 June 2014

இரை

தோட்டத்தில் நீர்
வார்ப்பவளை
கடைக்கண் பார்வையால்
விரட்டுகிறது
தாய்க்குருவி இரை சுமந்த
அலகுடன்


வாழையிலை

கண்கள் நிறைக்கும்
இளந்தளிர் பச்சை
செயற்கை வாழையிலை
அறுசுவை உணவுகள் தாங்கி...

அடுத்தது காட்டும் பளிங்காய்
நெகிழிக்குவளை நீர் சுமந்து...

வண்ணச்சித்திரங்கள் தாங்கிய
பிளாஸ்டிக் வட்டிகளில்
பால்பணியாரமும்
 பனிக்குழைவும்.....

குவிந்து கிடந்தன
உண்ணவும்...!
உண்ணப்பட்டும்...!

சுகாதாரத்துறை அதிகாரியின்
இல்லத்திருமணத்தில்...!

Friday, 13 June 2014

கற்றல்

அனைத்தும் கற்று தருகின்றோம் குழந்தைகளுக்கு.வாழ்க்கையைத் தவிர.....

பவித்ரா



சென்ற ஆண்டு ஹதீஜா போலவே இந்த ஆண்டு பவித்ரா கொஞ்சம் முரட்டுத்தனமும் .அறிவும் உள்ள குழந்தை.நார்மல் சைல்ட் அல்ல.சட்டென்று அடித்து விடுவாள் மற்ற மாணவிகளை.முகத்தில் அடித்தாற் போல் பட்பட்டென்று பேசுகின்றாள் எதை செய்ய சொன்னாலும் முடியாது போவென்றே கூறுகின்றாள்.நல்லவேளை என்னை பிடித்து விட்டது அவளுக்கு.சாக்லேட்டும் ,பாராட்டும் தான் இப்போதும் கை கொடுக்கின்றது.என் அருகிலேயே அமரவைத்துள்ளேன். எழுத தெரிகின்றது.கொஞ்சம் படிக்கின்றாள்.
நேற்று மதியம் கை கழுவும் இடத்தில் கல்லால் குழந்தைகளை அடித்துக் கொண்டிருந்தாள்.பத்தாம் வகுப்பு ,பன்னிரெண்டாம் வகுப்பு குழந்தைகள் கூட அவளைச் சீண்டி மகிழ்கின்றன. வருத்தமாயிருந்தது.இப்பதான் அவளை பள்ளியை விரும்பும் படி ஆக்கியுள்ள நேரத்தில் இப்படி....
சீண்டிய குழந்தைகளிடம் அவளின் நிலையைக் கூறி முடிந்தால் அவளுக்கு சாக்லேட் கொடுத்து அன்பாயிருங்களென அறிவுறுத்தி விட்டு பவித்ராவிடம் வந்து அந்த அக்காவை கண்டிச்சிட்டேன்மா இனி உன்ன வம்பிழுக்க மாட்டாங்க ....ஏதும் பிரச்சனை என்றால் என்னிடம் தான் கூறனும் கல்லால் அடிக்க கூடாதென்றேன்.. சிரிப்புடன் தலையாட்டினாள்....
இந்த குழந்தையையும் மென்மையாக்கி பிற குழந்தைகளுடன் இயல்பாய் பழக்க வைக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் நான்...

Wednesday, 11 June 2014

மாறிய உலகம்

பதின் வயதில் பாவாடைக்கட்டி
பறக்கும் ஆசையும்,
பருவத்தில் தாவணி புடவையில்
காளையரை  கவரும் ஆசையும்,
மனம் படபடக்க காதலன்
முத்தமிட உடலெங்கும்
மின்சாரம் பாயும் ஆசையும்,
உடல்வளைத்து அழகு திமிர
ஒய்யாரமாய் நடந்து
கணவனை அன்பில் வீழ்த்தும் ஆசையும்,
வந்தது கண்டு அருவெறுத்து விரட்டிய
உறவுகளிடம்   அடையாளம் அறுத்து
பெண்ணாய் மாறிய மகிழ்வை
பகிர்ந்து கொள்ளும் ஆசையும்
 தாங்கி உலவுகின்றோம்
எங்கள் உலகில்....!


Tuesday, 10 June 2014

தங்கமகள்

கண் விழித்து கற்று
வகைவகையாய் வரைந்து
கட்டிடப் பொறியியலில்
களிப்புடனே கோல்டு மெடல்
பெற்ற மனைவியை.......!

வட்டவட்டமாய் ஆடைதனை
கண்ட இடத்தில் கழட்டி வீசும் கணவன்

வட்டமாய் தோசையில்லையென்றும்
அம்மாவின் குழம்பைப் போல் வாராதென்றும்
தன் குடும்பத்துடன் நக்கலடிக்கின்றான்
அப்பாவின் பிரதிபலிப்பாய்..... !

எதிரிலிருப்பவளை
 எரிமலைக் குழம்பாய்
ஆக்குவதை உணராமல்...!


Sunday, 8 June 2014

தீண்டல்

சில்வண்டின் ரீங்காரமாய்
நினைவலைகள் சுவீகாரமெடுத்த
தருணங்களில்....
பூவின் மென்மையை
உணர்ந்த தீண்டலில்
கூடலில் பருகிய தேனின்
சுவையில் மயங்கிய வண்டின்
தீண்டலில் சிலிர்த்த பூவின்
தலைகோதி முத்தமிட்ட
அலைகளின் சுவடுகளாய்
இதழோரச் சிரிப்பு......





5] என் வண்ணத்தூறலில் ஐந்து


--------------------------------------------------------
காளையவன் கைபிடியில்
துவண்டு சரிந்து
தோளில் மாலையாகி
படர்ந்து பறக்கும் தருணம்
பட்டென்று நீர் தெளித்து
போதும் எழுந்திரென்றாள்
முதிர்கன்னியை...
வாழ்ந்து முடித்த தாய்....

கனவு வாழ்க்கை
 கானல் நீராய்
கண்ணில் முத்துக்களாய்
கடத்துகின்றாள் காலத்தை
கன்னிமகள்...

தனிநாடு விரும்பும்
ஈழப்பெண்ணாய்..

Friday, 6 June 2014

இயற்கை



வெயிலில் விளையாடி
வியர்வையில் அழுக்கான
புதுகை குழந்தையை
மரநார் கொண்டு
தேய்த்து குளிப்பாட்டி
வெளுத்துவிட்டாள்
இயற்கை ....

கார் மேகம்



1]குவலயம் விரித்தது
 குடையை,
 நனைந்திட..
---------------------------------------------


2]வான் மகள்
விரித்த கூந்தளின்
மணம் மண்ணில்....

தாயின் மணமாய்,,,

Thursday, 5 June 2014

சேர்க்கை

மேட்டூர் அணைச்
சேரும் காவிரியாய்
அரசுப்பள்ளியில் மாணவர்
சேர்க்கை.....

Tuesday, 3 June 2014

வாழ்த்துப்பா

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உலக சாதனைக்கவியரங்கத்தில் பணியாற்றிய புலவர் இராம.வேதநாயகம் அவர்களுக்கு எனது
” விழி தூவிய விதைகள்”
 நூலை நினைவாகத் தந்தேன் .

அந்நூல் படித்து அவர் எனக்கு எழுதி அனுப்பிய வாழ்த்துப்பா..

எண்சீர்

சமூகத்தின்           பார்வையினைக்
                               கொண்ட கீதா
                               சந்தனமாய் மணக்க ,கவி
                                மேலும்      தாதா  !

 இமயத்தின்          உச்சிவரை
                               புகழே செல்லும்
                               இன்கவிதை பென்ணுரிமை
                               பேசி வெல்லும் !

கமழ்கின்ற            தமிழன்னை
                               மடியில் நீயும்
                               கண்ணாகத் தவழ்ந்திடுவாய்
                               என்றும் சேயாய் !

சமைத்திட்ட         “விழிதூவி
                                யவிதை”     நூலே
                                சரித்திரத்தைப் படைத்திடும் உம்
                                ஆற்ற     லாலே !

பெண்ணிற்கு         விடுதலையே
                               கிடைக்க வேண்டிப்
                               பூரிப்பாய் பலகவிகள்
                                யாத்தே  உள்ளாய் !

மண்ணிற்கே          உம்போலக்
                                கவிஞர் தேவை
                                மாதர்நலன் காப்பதற்கு
                                மாதர்  தேவை !

உன்னாலும்            முடியுமென
                                அறிந்தேன் யானும்
                                  உள்ளன்பில் கவிதைமட்டும்
                                  இருக்கக் கண்டேன் !

பன்னாளும்           வாழியவே
                               கவியே கீதா
                              பல்லாண்டு பல்லாண்டு
                              தமிழாய் வாழி !
                         
மறக்காமல் நூலைப்படித்து எனை ஊக்கப்படுத்தி,வாழ்த்திய
 ”வெண்பா வேந்தர்”
புலவர் இராம.வேதநாயகம்,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.எட்.,அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்

Monday, 2 June 2014

ஆலங்கட்டி

வியர்வை
முகர்ந்து சுமை தாளாத
முகிலின் பிரசவமாய்
ஆலங்கட்டி



Saturday, 31 May 2014

ஹதீஜா

                                                          சென்ற வருடம் ஆறாம் வகுப்பில் குழந்தைகள் சேர்க்கை.வேறு பள்ளியிலிருந்து புதிதாய் இங்கு வருவார்கள் .பரபரன்னு புத்தாடையில் முதுகில் பையைச் சுமந்தபடி,கண்களை அகல விரித்தபடி,அம்மாவின் பின்னே ஒளிந்தபடி வரும் சிட்டுக்குருவிகளை காண்பதே தனி அழகு.
                                



           ஒரு அம்மா தனது குழந்தையைச் சேர்க்கும் போது அவள் வகுப்பிலேயே இருக்க மாட்டாம்மா...வெளியே அடிக்கடி ஓடிடுவா ,வகுப்புல மட்டும் உட்கார வச்சுடுங்கம்மான்னு கண்கலங்கி கூறிய போது அவளைப் பார்த்தேன் அணில் குட்டியின் பற்களோடு அழகு முகத்துடன் அம்மாவின் பின்னே ஒளிந்து கொண்டிருந்தாள்.நான் பார்த்துகிறேன் கவலைப்படாதீங்கன்னு அனுப்பி வைத்தேன்.அவளை இங்க வாடா உன் பேர் என்ன என்றதற்கு மெதுவாய் ஹதீஜா என்றாள்.அழகு குட்டியா இருக்கியே என்றதற்கு நம்ப முடியா ஒரு பார்வையை என்மீது தூக்கிப் போட்டுச் சென்றாள்.

Thursday, 29 May 2014

உலக சாதனை கவியரங்கம் 22.05.14-25.05.14

தமிழக கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தென்றல் சமூக அறக்கட்டளை இணைந்து நடத்திய உலக சாதனைக்கான தொடர்
கவியரங்கம்
22.05.14 முதல்-25.05.14 முடிய 77 மணி நேரம் தொடர்ச்சியாக கவிதை வாசித்து கின்னஸ் ரெக்கார்ட் பதிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது

400 கவிஞர்களுக்கு மேல்

4000கவிதைகளுக்கு மேல்

இடைவெளியின்றி தொடர்ச்சியான கவிதைகள் சரம் சரமாய் தொடுக்கப்பட்டன.

கவிதை வாசித்தவர்களுக்கு உடனுக்குடன் புத்தகமும்,சான்றிதழும் அளித்து பாராட்டினர்.

எனக்கு புதிய அனுபவம் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஏற்பாட்டாளர்களின் பங்கு பாராட்டுதற்குரியது.



நிறைய கவிஞர்களைப் பார்த்தது,நிறைய கவிதைகளைக் கேட்டது மனதிற்கு நிறைவான நிகழ்வு.

Wednesday, 28 May 2014

குழவி2

குவலயம் மறக்கும்
குழவியின்
பிறைச் சிரிப்பில்

குழவி1

அள்ளி வைத்த
பொம்மைக்கூடையை
தலையில் கொட்டிச்
சிரித்த பூவைச்
சிந்தாமல் வாரிக்கொண்டேன்
கார்முகிலாய்

Tuesday, 20 May 2014

கொடை

காய்த்த காய்களை
சுற்றத்திற்கு வழங்க
கொடைவள்ளலென
பட்டமெனக்கு.
மரமோ
கேலியாய். ..!


இனி இந்த நேரத்தில போவேன்...?




நேற்று தோழி வீட்டுக்கு நீண்ட நாள் கழித்துச் சென்றேன் .வழக்கம் போல் பேசிய சிறிது நேரத்தில் அக்கா டி,வி. பாக்கலாமா என்று விஜய் டி.வி ல மகாபாரதம் பாக்க அழைத்தாள்.

திரௌபதியின் சேலையை உருவும் காட்சியாம்...2 குழந்தைகளும் வைத்த கண் அகலாது பார்த்துக் கொண்டு அதில் கேட்டது ..கர்ணன் .துரியோதனன் ,துச்சாதனன்,மூவரும் மாற்றி மாற்றி திரௌபதியை தாசி,வேசி என சொல்லிக் கொண்ட்டே இருந்ததைப் பார்த்து குழந்தை கேட்டாள்

தாசின்னா என்ன ?
தோழி சங்கடமாய் என்னை பார்த்தாள்
5பேர கல்யாணம் பண்ணதால அவள அப்படி கூப்புடுறாங்க..
2பேர பண்ணாலும் அப்படித்தானா?
ஆம் என்றேன்...

கொஞ்சம் சிந்திக்கும் குழந்தை அடுத்து என்ன கேட்பானோன்னு அச்சத்தில் நான்..
தசரதனுக்கு 60,000 மனைவியாமே....அவனுக்கு என்ன பேர் என்றான்

சக்கரவர்த்தி என்றேன் ....
நல்ல வேளை தாசி என்பது பெண்களை திட்டும் இழிவான சொல் என தெரியவில்லை...
என்ன சொல்வது...?

கடைசில சேலைய உருவலன்னு கவலையுடன் எப்படியும் இந்த வாரத்திற்குள் உருவிடுவான்னு சமாதானம் செய்து கொண்டே எழுந்தாள்

மனதிற்குள்...கொதித்தது..
பெண்களை அரச சபையில் நிர்வானப்படுத்துவது போன்று எழுத ஒரு ஆணால் தான் முடியும்.எந்த பெண்கவிஞரும் இப்படி எழுத மாட்டார்கள்.....

சிலம்பின் கண்ணகியா
இருந்தா  என்ன செய்வான்னு ஏன் எனக்கு தோணுச்சு..தெரியல