World Tamil Blog Aggregator Thendral: ஊடறு

Wednesday 15 March 2023

ஊடறு

 

ஊடறு பெண் நிலை சந்திப்பும்/பெண்ணிய உரையாடலும்


உலக அளவில் பெண்கள் ஒன்றிணைந்து பெண்ணிய உரையாடல் நிகழ்த்தும் சந்திப்பு 11.3.23,12.3.23 ஆகிய இரு தினங்கள் தமிழ் நாட்டில் திருப்பத்தூர் மவட்டத்தில் உள்ள  ஏலகிரியில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் பெண்கள் திரு நங்கைகளும், மறு நாள் அனைவரும் கலந்து கொள்ளும் நிகழ்வாக திட்டமிடப்பட்டது.

ஒரு மாதமாக இந்த நிகழ்வை கவிஞர் புதியமாதவி,ஊடறு அமைப்பின் நிறுவனர் றஞ்சி, வழக்கறிஞர் சினேகா, கல்பனா, யோகி ஆகியோர் திட்டமிட்டு அனைவரையும் புலனக்குழுவின் மூலம் வழி நடத்தினர்.

முதல் நாளே சுவிட்ச்ர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், மியான்மர், சிங்கப்பூர் , மலேசியா,இலங்கை, டெல்லி , மும்பை மற்றும் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் ஏலகிரியில் உள்ள  ஒய் எம் சி   கேம்ப் செண்டருக்கு வந்துவிட்டனர்.

கரூரில் இருந்து சரோஜா தோழியுடன் புதுக்கோட்டையில் இருந்து நான் (மு.கீதா)  கவிஞர் நீலா, மதுரைவழக்கறிஞர் ரஜனி சென்றோம்.

அமர்வு -1

 காலை 9.30 க்கு துவங்கியது.

 ஊடறு அறிமுகம்

ஊடறு றஞ்சி அவர்கள் ஊடறு தோன்றிய விதம் அதன் செயல்பாடுகளைப்பற்றிக்கூறி அறிமுகம் செய்தார். 4500 கட்டுரைகள் ஊடறு இணையத்தளத்தில் பெண்களால் எழுதப்பட்டுள்ளது. கவிதை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது என ஊடறு பற்றி விரிவாக சிறப்பாக அறிமுகம் செய்தார்.

கவிஞர் சல்மா அவர்கள் ஊடறுவில் உள்ள  பெண்களின் களமும் வாழ்வும் என்ற தலைப்பில் பெண்களின் செயல்பாடுகளைப்பற்றி விரிவாக கூறினார். பெண்களுக்கான தளத்தை உருவாக்கியதில் ஊடறு மிகப்பெரிய பணி ஆற்றி வருகிறது. பெண்களின் எழுத்துகளைப்பதிவு செய்து அவர்களின் எழுத்துகளை நூலாக்கம் செய்து வெளியிட்டு வருவது சிறப்பு என்று வாழ்த்தினார். உரையாடல் இல்லாத சமூகம் தீர்வுகளை நோக்கி நகராது.தீர்வுகளை நோக்கி செயல்பட ஊடறுவிற்கு வாழ்த்துகள் என்றார்.

அமர்வு -2

முகமூடிகள் அரங்கம்

எங்கே நீதி? என்ற .விஜயலெட்சுமி அவர்களின் மொழிபெயர்ப்பு கதையை ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமியப் பெண்களின் நிலையை, கடவுளே இப்படி நீ இருந்தால் என்ன செய்வாய் என்ற கேள்வியை முன் வைத்த்து. தங்களது ஆகச்சிறந்த நடிப்பால் மனதில் பதிய வைத்தனர் ஆண்டனி ஜானகி மற்றும் ஸ்ரீதேவி இருவரும். அவர்களின் நடிப்பும் பாடலும் அரங்கை உறைய வைத்தது.

பௌத்தமும் பெண்விடுதலையும் என்ற தலைப்பில் பேராசிரியர் அரங்க மல்லிகா அவர்களின் உரை மிக அருமையாக இருந்தது.

பெண் எழுத்தும் பின் நவீனத்துவம்-ச.விஜயலெட்சுமி

தொழிற்புரட்சி ,அறிவுடமை எழுச்சிக்கு பின் உலக அளவில் மாற்றம் நிகழ்கிறது. நவீனத்துவத்தின் கருத்தாக்கம் மையத்தை நோக்கி ஈர்த்தல் என்பதே. இது எல்லா துறைகளுக்கும் பொருந்தும். மையத்தை நிறுவுதல் நவீனத்தின் நோக்கமாகிறது.

பின் நவீனத்துவம் என்பது மையத்தை தகர்த்தலாகிறது இது எல்லா துறைகளிலும் ஏற்படுகிறது. இதில் முக்கிய கூறுகளாக பெண்ணியம்,தலித்தியம் முக்கியமாகிறது. 1990 களில் பெண் எழுத்து எப்படி இருந்தது என்று துவங்கி தற்காலச்சூழல் வரை விரிவாக உரையாற்றினார்.

இயக்குனர்  சந்திரா--காமிராக்கண்கள் பெண்ணுலகம்(இந்திய சினிமா) என்ற தலைப்பில் உரையாற்றினார். துவக்கத்திலிருந்து அண்மைக்காலம் வரையில் திரைத்துறையில் பெண்களின் பங்களிப்பைச்சிறப்பாக கூறினார்.

அமர்வு 3

புவனேஸ்வரி அவர்கள் ஒருங்கிணைத்த புலம்பெயர் வாழ்வும் பெண்களும்   நிகழ்வு

கோலார் தங்க வயலில்  இருந்து வந்த புவனேஸ்வரி கோலாரில் உள்ள தமிழர்களின் நிலைப்பற்றிக் கூறி, மகளிரைப் பற்றியக் கவிதையைச் சிறப்புடன் வாசித்தார் .

மலேசியாவில் இருந்து வந்த ஊடறு யோகி

மலேசிய வாழ்வும் உழைக்கும் பெண்களும் என்ற தலைப்பில் மலேசியாவில் உள்ள பெண்களைப் பற்றி  உரையாற்றினார்.

இலங்கைப் பெண்  சப்னா இக்பால்  தற்போது உயர்கல்வி டெல்லியில் படிக்கின்றார்.

இளைய தலைமுறைச் செயல்பாடுகளும்  ஊடறுவின் பங்களிப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தர்சிகா ரமணாகரன்

பெண்களை ஆவணப்படுத்தலில் ஊடறுவின் பங்களிப்பை கூறினார். ஆவணப்படுத்தல் என்பது பெண்களின் வாழ்வில் எவ்வளவு முக்கியமானது என்பதை அவரது உரை அறிவுறுத்தியது.

கவிஞர் புதிய மாதவி பொதுவாக கூறுவதை விட .அங்கிருக்கும் அரசு பெண்களின் நிலையை எப்படி அணுகுகிறது பணி செய்யும் பெண்களுக்கான உரிமைகள், சட்டங்கள் பற்றி கூறலாம் என்று அறிவுறுத்தினர்.ஆவணப்படுத்தலில் ஸ்டோரி அஃப் சிவிலிசேஷன்  ஹிஸ்டரி அஃப் சிவிலிசேஷன்“, இந்த நூல்கள் தான் முக்கியமாக உள்ளது ஆனால் இந்த நூல்களில் பெண்களை ஆவணப்படுத்தவில்லை. தமிழ்த்தாத்தா .வே.சா தனது சுய சரிதையில் தனது மனைவியைப்பற்றி ஒரு வரி கூட இல்லை. நான் ஒருமுறை ஒரு பெண் சொளகு புடைத்துக்கொண்டிருப்பதை எழுதிய போது அம்பை அதை ஆவணப்படுத்த வேண்டும் என்றார். ஸ்பேரோ ஆவணப்படுத்தலில் முக்கியப்பங்கு வருகிறது.சம காலத்தில் நடக்கும் செய்திகளை கட்டாயம் ஆவணப்படுத்த வேண்டும் என்றார்.

அமர்வு 4

சமூகம் பெண்ணுடல் என்ற அமர்வு

முனைவர் மனித உரிமை செயற்பாட்டாளர் கல்பனா அவர்களின் ஒருங்கிணைப்பில் துவங்கியது. பெண் உடலை இந்த சமூகம் மதம் என்ற கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பதை விரிவாக்க் கூறினார்.

கவிஞர் நீலாவின் - விராலிமலை கள ஆய்வுகள் பற்றிய உரை தேவதாசிகள் குறித்த புரிதலை ஏற்படுத்தியது.

கல்பனா தனது உரையில் பிரேமான்ந்தா வாழ்ந்த பகுதியும் அதுதான்.ஆன்மீகம் பெண்களை எவ்வாறு இழிவாக நட்த்துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

அடுத்ததாக எழுத்தாளர் லதா அவர்கள்  இவ்வுலகில் ஆண் பெண் மட்டுமே இல்லை 149 நபர்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.

செக்ஸ் என்றால் என்ன? என்று கேட்டார். காமம் பற்றி பேசும் போது எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்.மனிதர்களை மனிதர்களாக சம்மாக நடத்த தெரியாதவர்களால் உண்மையான அன்பு செலுத்த முடியாது. பருவம் அடைந்தவுடன் இந்த உணர்வுகள் வந்து விடுகிறது.ஆனால் கல்யாணம் வந்தால் தான் காமம்  வர வேண்டும் என்ற சூழல் தவறு என்றும் பாலியல் கல்வி சமூகத்திற்கு மிக முக்கியம் என்றும் உரையாற்றினார்.

  ஊடகவியளாளர் மு.வி.நந்தினி அவர்கள்-  சூழலியல் பாதிப்பும் பெண்களும் குறித்து பேசினார்.

அமர்வு-5

கல்வியும் கற்பித்தலும் என்ற தலைப்பில் எழுத்தாளர் ச. விஜயலெட்சுமி அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.ஆசிரியர் மு.கீதா கல்வித்திட்டங்களும் குழந்தைகளும் என்ற தலைப்பிலும் ,  ஷெரின் ஆஷா தேர்வுகளும் தற்கொலைகளும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

அமர்வு 6

தொழிற்துறையில் பெண்கள்

விவசாயப்பெண்மணி சரோஜா அவர்கள் விவசாயத்தில் பெண்களின் நிலை தற்கால விவசாயத்திலிருந்து  சமூகம் பாரம்பரிய விவசாயம் செய்வதற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் குறித்தும் பேசினார்.

தோழர் மதி தொழிற்சங்க வாதியாக பெண்களின் நிலை குறித்தும் தோழர் தீபலெக்‌ஷ்மி ஐடி பூங்காவில் பெண்கள் குறித்தும்,தோழர் பரிமளா தொழிற்சங்கமும் ஐடி துறை குறித்தும் விரிவாக உரையாற்றினர்.

அமர்வு 7

ஓவியக்கவிஞர் சக்தி அவர்கள் ஓவியத்துறையில் பெண்கள் குறித்து ஆழமான உரையாற்றினார்.

ஊடக வெளி என்ற தலைப்பில் பாரதி ஊடக வெளியில் பெண்களின் நிலை குறித்து பேசியது சிறப்பு .

இரவு  நடந்த கேம்ப் ஃபயர் நிகழ்வு அனைவரின் நட்பையும் மேலும் வலுவாக்கியது.

அமர்வு 8

12.3.23 காலை நிகழ்வு அருகிலிருந்த கரடி மலையில் ஏறுவதில் துவங்கியது.

சட்டமும் பெண்களும் என்ற தலைப்பில் வழக்கறிஞர் மணிமொழி அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.வழக்கறிஞர் சினேகா ,ஹேமாவதி ஆகியோர் சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

அமர்வு 9

பஞ்சாயத்து ராஜ்யம்

கல்பனா அவர்கள்   ஊராட்சி மன்றத்தலைமைப்பொறுப்பேற்று சிறப்பாக பணிபுரியும் ரம்யா,வேத நாயகி, ராஜஸ்ரீ ஆகியோர் அரசியலில் தங்கள் அனுபவங்களை கூறும் நிகழ்வை சிறப்புடன் ஒருங்கிணைத்தார்.

அமர்வு 10

பெண்களும் அதிகாரமையமும்

புதிய மாதவி அவர்கள் அதிகாரப்பகிர்வும் பெண்களும் என்ற தலைப்பிலும் ,சிவகாமி ஐஏஎஸ் அவர்கள் நிலம் பெண் அதிகார மையம் என்ற தலைப்பிலும் ஆழமான உரையாற்றினார்கள் .

மியான்மரிலிருந்து கல்லூரி மாணவிகள் ரேவதி, கனகா இருவரும் கலந்து கொண்டு தங்கள் நாட்டுச்சூழல் குறித்து பேசினர்.

 

பெண்கள் சமூகம் சார்ந்து கலந்துரையாடும் அமைப்பாக ஊடறு திகழ்கின்றது.எதிர்காலத்தை கட்டமைக்கும் பெண்கள் ஊடறுவில் உருவாக வாய்ப்பு உள்ளதை உணர முடிந்தது.

இக்கூட்டம் அலங்காரம் சமையல் ,ஆடைகள் குறித்த தெளிவான புரிதலை உண்டாக்கி எதை நோக்கி பெண்கள் பயணிக்க வேண்டும் என்ற அறிவைத் தந்தது.

மு.கீதா

புதுக்கோட்டை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments :

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...