World Tamil Blog Aggregator Thendral: ஆனந்த வல்லி -லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

Tuesday 9 August 2022

ஆனந்த வல்லி -லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

ஆனந்தவல்லி -நாவல்
ஆனந்தவல்லி நாவலை லட்சுமி பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ளார்கள். இந்த நாவல் 2022 புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சிறந்த நாவலுக்கான போட்டியில் விருது பெற்ற நாவல்.
ஐந்து வயது பெண் குழந்தையை தனது பணத்தாசைக்காக தந்தையே திருமணம் செய்து கொடுக்கிறார்.மணமகன் வர முடியாத சூழலில் திருமணம் நடக்கிறது.பருவம் வராத குழந்தை என்று தெரியாத நிலையில் நிச்சயதார்த்தம் முடிவதால் மணமகன் வேறு வழியின்றி திருமணத்தை ஏற்கிறார்.பருவம் வந்த பிறகு அழைத்துச் செல்கிறேன் என்று வேலூரில் உள்ள கும்பினி படையில் வேலைக்குச் செல்கிறார். ஆனால் ஆனந்தவல்லியின் தந்தையோ மனைவி தனது தாய் வீட்டிற்குச் சென்ற போது  தனது மகளை வறுமை கடன் என்று பொய் சொல்லி அரண்மனைக்கு ஏவல் பெண்டிராக  விற்று விடுகிறான் .தாய் தனது உறவினர்களுடன் அரண்மனை அதிகாரிகளுடன் முறையிட்டு போரிட அவர்கள் மறுத்து விடுகிறார்கள்.
காலங்கள் செல்ல மனைவியை அழைத்துச் செல்ல வரும் கணவன் அவளது நிலை கேட்டு "தனது மனைவியை மீட்டுத் தாருங்கள்" என கணவன் ஆங்கிலேயருக்கு எழுதிய மடலே இந்நாவல் உருவாக காரணமாக அமைந்துள்ளது.
  நாவல் ஆசிரியர் அந்த ஒரு கடிதத்தின் பாதிப்பால் உண்மையை நோக்கி, வரலாற்றின் பாதையில் பயணித்து இந்த நாவலை அந்தக் காலச் மணிப்பிரவாள நடையில் நாவலை  எழுதியுள்ளார், பலதார மணம் எத்தனை இயல்பான ஒன்றாக இருந்துள்ளது என்பதை நாவல் உணர்த்துகின்றது
அக்கால பெண்களின் நிலை எவ்வளவு கொடுமையாக இருந்துள்ளது என்பதை கூறும் நாவல் இது, பெண்களை அடிமைகளாக விற்பதும், மூடநம்பிக்கையை எதிர்க்கும் ஆங்கிலேயர்கள், அவர்களும் பெண்களை அடிமையாக வாங்குவதும்,அன்பளிப்பாகக்கொடுப்பதும் என்பது மிக கொடுமையான ஒன்று.  பெண்கள் விஷயத்தில் யாராக இருந்தாலும் அடிமைப் பொருளாகவே கருதியுள்ளனர் . பாதிக்கப்பட்ட அரண்மணை ஏவல்  சிறுமிகள் இருவர்  தற்கொலை செய்ய முயற்சிக்கும் பொழுது இந்நாவலின் நாயகி ஆனந்தவல்லி கூறும் வார்த்தைகள் "நாம் வாழறதுக்கான மொத்த அர்த்தமும் காலுக்கு நடுவால இருக்கற ஒத்தை ஓட்டைக்குள்ளரத்தான் ஒளிஞ்சிருக்கா என்ன? என்ற கேள்வி இந்த சமூகத்தை நோக்கி எழுத்தாளர் எழுப்பும் தீக்கங்கு.
பெண்கள் கணவன் இறந்த பிறகு உடன்கட்டை ஏறுவது தனது மைந்தருக்கும் சகோதரருக்கும் நன்மையைத் தரும் என கூறுவதும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை சடங்கு செய்பவர் பார்த்து எவ்வளவு தேறும் என கணிப்பதும்  பெண்ணின் மரணத்தின் கூட இரக்கமில்லாத தன்மையைக்கொண்ட சமூகத்தின் தோலை உரித்துக்காட்டுகிறது.
தற்கால பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல் இது. இந்த நாவலைப் பரவலாக நாம் எடுத்துச் செல்ல வேண்டும் .
இக்கால குழந்தைகள் கல்வியை துச்சமாக மதித்து, திரைப்படங்களைப் பார்த்து சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்வது அதிகமாக உள்ளது. குழந்தை திருமணம் மீளவும் நடக்கிறதோ என்ற அச்ச உணர்வு தோன்றுகிறது.
இப்படிப்பட்ட வரலாற்று உண்மைகள் பெண்கள் கடந்து வந்த பாதையை, நம் பெண் சமூகத்திற்கு , வருங்கால சந்ததிக்கு கூறி இந்த முன்னேற்றத்திற்கு காரணமானவர்கள், அவர்கள் பட்ட அவமானங்கள், போராட்டங்கள் இதையெல்லாம் பெண் குழந்தைகள் உணர வைக்க வேண்டும்  பெண் ஒரு சடப் பொருளாக, போக பொருளாக , அடிமைப் பொருளாக வாழ்ந்த காலத்தை உணர்த்தும் நாவல். மிகச் சிறப்பாக கதாபாத்திரங்களை படைத்து, நாமும் அந்த உணர்வுகளை அடையுமாறு விறுவிறுப்பான கதை ஓட்டத்துடன் நாவலை எழுதியிருப்பது பாராட்டுதற்குரியது.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி லட்சுமி பாலா கிருஷ்ணன் அவர்களுக்கு .
அன்புடன்
மு.கீதா
புதுக்கோட்டை.

1 comment :

  1. இக்கால குழந்தைகள் கல்வியை துச்சமாக மதித்து, திரைப்படங்களைப் பார்த்து சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்வது அதிகமாக உள்ளது. குழந்தை திருமணம் மீளவும் நடக்கிறதோ என்ற அச்ச உணர்வு தோன்றுகிறது.
    உண்மைதான் சகோதரி.
    அருமையான, படிக்கத் தூண்டும் விமர்சனம் நன்றி

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...