World Tamil Blog Aggregator Thendral

Sunday, 1 April 2018

பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் தமிழ் நெஞ்சம் இதழில் வெளிவந்த நேர்காணல்




பேரன்பிற்கு மிக்க நன்றி...
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இதழாசிரியர் Nenjam Tamil தமிழ் நெஞ்சம் அவர்களுக்கும்
இனிய தோழி பெண்ணியம் செல்வக்குமாரிஅவர்களுக்கும்.
பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் தமிழ் நெஞ்சம் இதழில் எனது நேர்காணல்.





Sunday, 11 March 2018

வீதி கலை இலக்கியக் களம் கூட்டம் 49


வீதி கலை இலக்கியக் களம் கூட்டம் 49
அன்புடன் அழைக்கிறோம்
நிதானமாக பயணிக்கும் வீதியின் பயணத்தில் வந்து போனவர்கள் தங்களின் இலக்கியச் சிந்தனைகளை நீராக ஊற்றி வளர்கின்ற தருவாக உருவெடுத்து ......தனது கிளை
பரப்பி சிட்டுக்குருவிகளுக்கு இடம் தந்து மகிழ்ந்து செழிக்கின்றது.
இலக்கியத்தில் இன்று சிட்டுக்குருவிகள் நாளை பெரும் புட்களாய் வளர்ந்து மேலும் பல சிட்டுகளை உருவாக்கும்...அவை .. மனிதநேயம் நிறைந்த புட்களாய் வளரும் என்ற நம்பிக்கையுடன் அழைக்கின்றோம்.
கவிஞர் முத்துநிலவன் அவர்கள் தலைமை ஏற்க..
சிறப்பு விருந்தினர்களாக
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் இதழாசிரியர் கவிஞர் திருமிகு Nenjam Tamil அவர்களும்..
இலங்கையில் விருது பெற்று இலக்கிய உலகிற்கு பெருமை சேர்த்துள்ள முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரிஅவர்களும்
கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
வீதியில் கவிஞர் எஸ்.உதயபாலா அவர்களின் "நிலாச்சோறு" நூல் வெளியிடப்பட உள்ளது.
ஆழமான எழுத்தால் சமூக பிரச்சனைகளை நாவலில் தடம் பதிக்கும் சிறந்த எழுத்தாளர் திருமிகு புலியூர் முருகேசன் அவர்களின் மூக்குத்தி காசி நாவலை கவிஞர் இந்துமதி அவர்கள் விமர்சனம் செய்ய உள்ளார்.
தினமணி எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதை 'கானல் நீர் காட்சிகள்'எழுதிய எழுத்தாளர் சோலையப்பன் அவர்களை பாராட்டி சிறப்பிக்க உள்ளது.
மாணவிகள் சிறுகதை வழங்க உள்ளனர்.
வீதி உறுப்பினர்கள் கவிதைகள் வழங்க உள்ளனர்.
இம்மாத அமைப்பாளர்கள் கவிஞர்கள் வம்பன் செபா மற்றும் சுந்தரவள்ளி.

Saturday, 3 February 2018

கேமிராவும் நானும்
















நேற்று 3.2.18 வித்தியாசமான ஒரு நாள்.
என்னுடன் பணிபுரியும் ஆசிரியர் Premila Krish அவர்களின் மகன் ஒரு வித்தியாசமான இளைஞர்.புத்தகத்தின் வாசனை உணர்ந்த அவரின் செயல்கள் ஒரு பெருமிதம் தரக்கூடியது.
ஏதாவது செய்து மாணவர்களை நல்வழியில் அழைத்து செல்ல வேண்டும் என்ற தீராப்பசி உடையவர்.
தற்போது மெப்கோ சிவகாசி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு பயில்கிறார்.
இரண்டு வருடங்களாக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது இடங்களில் ஊக்குவிக்கும் பயிற்சி, மேஜிக் பயிற்சி, கார் பற்றிய வொர்க் ஷாப்.என பாண்டிச்சேரி தமிழ் நாடு முழுவதும் பயிற்சி பட்டறை வைத்து மாணவர்களுக்கு திறன்களை வளர்த்து வருகிறார்.
அப்படி நேற்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் ஃபோட்டோ கிராபி பற்றிய ஒருநாள் பயிற்சி அவரது நண்பர்கள் கணபதி மற்றும் பிரசாத் ஆகியோருடன் இணைந்து நடத்தினார்.அவர் இப்பயிற்சி குறித்து கூறியதும் அவருக்கு வழிகாட்ட புதுகை செல்வா அவர்களிடம் கேட்டபோது மகிழ்வுடன் சம்மதித்தார்.
75 மாணவர்கள் நேற்றைய பயிற்சியில் கலந்து கொண்டனர்.
ஒரு கேமிரா குறித்த பருந்து பார்வையில் பயிற்சி இருந்தது.
கேமிராவின் பாகங்கள், வகைகள், அதன் விலை,கேமிராவை பயன் படுத்தி எடுப்பது எப்படி, எடிட்டிங் என அந்த மாணவர்கள் தங்களின் அனுபவ அறிவைப் பகிர்ந்த போது நகர்மன்றம் வியப்பில் ஆழ்ந்தது.
ஸ்மார்ட் போன் வந்தது பின்னர் தான் நான் ஃபோட்டோ எடுக்க துவங்கினேன்.
நேற்றுDSLR கேமிராவை தொட்டபோது ஒரு புதிய உலகில் அடியெடுத்து வைக்கும் உணர்வு.
ஒரு மாணவி பேசும் போது நான் விஸ்காம் படிக்கணும்னு கேட்டேன் பொம்பள புள்ளக்கி அதெல்லாம் ஒத்து வராதுன்னு என்னைப் படிக்க விடல.இன்று இந்த பயிற்சி என்கனவை அடைய வழி காட்டியது என்ற போது மனம் நெகிழ்ந்தது.உண்மைதானே பாத்திங்களைக் கையாள கற்க சொல்லும் சமூகம் பெண்களின் கையில் கேமிராக்களை எப்படி எளிதாக தந்து விடும்.
சின்ன பசங்க கூட அழகாக கேமிராவை கையாண்ட விதம் ஆச்சரியமாக இருந்தது.காலையில் வகுப்பும் மதியத்திற்கு மேல் செயல்பாட்டு கல்வியாக நகர்மன்றத்தின் வெளிப்புற அத்தனை பேரும் கேமிராவை தூக்கிக் கொண்டு படம் எடுக்கத்துவங்கினோம்.
அத்தனை ஆர்வத்துடன் ஆறாம் வகுப்பு மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை கற்றுக்கொள்வதை கண்ட பொழுது அடைக்கப்பட்ட வகுப்பு சிறைகளில் காப்பாற்ற சொல்லும் குழந்தைகளின் கரங்கள் அலைவதை உணர்ந்தேன்.
புதுகை செல்வா அவர்கள் கேமிராவை தொட்டு பாருங்கள்,தைரியமா பயன்படுத்துங்கள் என்று மாணவர்களை ஊக்குவித்தார்.ஒரு படத்தில் விரியும் காட்சிகள் எப்படி எடுப்பார்கள் என்று அவர் கூறியபோது எப்படி எல்லாம் ஏமாத்துறாங்கன்னு தோன்றியது.தனது உடலில் ஒருபகுதியாக கேமிராவோடு பயணிக்கும் அவருக்கு வாழ்த்துகள்.
ஃபோட்டோ எடுப்பதை கவிதையாக அழகாக உணர்வுபூர்வமாக விவரித்த மாணவர் கணபதிக்கு மிகச் சிறந்த எதிர்காலம் காத்துக்கொண்டு உள்ளது.
பெரியவங்க நாங்கள் நாட்டை அழிச்சு கெடுத்து வச்சிட்டோம்பா.இனி இவர்களை போன்றவர்களை வழிகாட்டியாக எண்ணி வாழ்க்கையை வடிவமைத்திடுங்கள் என்று கூறினேன்.
வாழ்த்துகள் வளரும் விருட்சங்களுக்கு.

Tuesday, 30 January 2018

வீதி கலை இலக்கியக் களம் கூட்டம் 47

வீதி கலை இலக்கியக்களம் -௪௭ (47)

இம்மாத வீதிக்கூட்டம் மிகச் சிறப்பாக இளைஞர்கள் சூழ ௨௧.௧.௧௮ (21.1.18) ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது .

வரவேற்புரை:இம்மாத கூட்ட அமைப்பாளரான கல்வியாளர் சுதந்திரராஜன் அவர்கள் வீதியின் சிறப்பைக் கூறி அனைவரையும் வரவேற்ற விதம் சிறப்பு .

அஞ்சலி :மறைந்த எழுத்தாளர் ஞானி ,கவனகன் ஆகியோருக்கு வீதியின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது .

கவிதை:

ஆசிரியர் சுந்தரவள்ளி தூக்கத்தை தொலைக்கச் செய்யும் புத்தகமே நல்ல புத்தகம் என்று கூறி அவருக்குப் பிடித்த கவிதைகள் சிலவற்றைக் கூறினார் .

காரைக்குடியில் இருந்து வீதியில் கலந்து கொண்ட கவிஞரும் முகநூல் நண்பரும் ,ஆசிரியருமான கிருஷ்ணவேணி அவர்கள் வீதியின் சிறப்புகளைக்கூறி "அச்சம் தவிர் "என்ற தலைப்பில் மிக அருமையான கவிதையை வழங்கினார் .
 

அறிமுக மாணவக் கவிஞர் அம்பி .பாலச்சந்திரன்தனது முதல் கவிதையான  பல் தொடை வெண்பாக்கவிதையை "எண்ணங்கள் "என்ற தலைப்பில் வழங்கிய போது அனைவரும் மகிழ்ந்து பாராட்டினர் .வீதிக்கு கிடைத்துள்ள மற்றுமொரு தமிழ்ப்புதையல் அவர் .

பேராசிரியர் பாண்டியராஜன் அவர்கள் தனது ஹைக்கூ கவிதைகளால் வீதிக்கு கலகலப்பு ஊட்டினார் .
           

கவிஞர் மலையப்பன் "இடைவிடாத "எனத்துவங்கும் கவிதையை வழங்கி வீதிக்கு மெருகூட்டினார் .

சிறுகதை :



எங்கள் பள்ளியில் படிக்கும் எனது ஏழாம் வகுப்பு மாணவி விவேதா "செய்யும் தொழிலே தெய்வம் "என்ற தலைப்பில்
 " பணம் சேர்ந்த பின் தொழிலைக்கவனிக்காத வியாபாரியைத்தேடும் மக்களுக்காக மீண்டும் அவன் வியாபாரம் செய்ய வருகிறான் "என்ற கருத்து மிக்க கதையைக் கூறிய விதம் அனைவரையும் கவர்ந்தது .

தலைமை


:தலைவராகஅரசுப்பள்ளிகளுக்காக,அரசுப்பள்ளி மாணவர்களுக்காக குரல் கொடுக்கின்ற ,சமூகச்செயற்பாட்டாளர் ,புதுகையின் ஒளிப்பதிவாளர்களுள் குறிப்பிடத்தக்கவரான புதுகை செல்வா அவர்கள் தலைமை ஏற்று மிகச்சிறப்பாக வழி நடத்தினார்கள் .கவிஞர் வைகறை அமைப்பாளராக இருக்கையில் தலைமை ஏற்ற வீதியின் நினைவுகளைப்பகிர்ந்து ,தற்போது ரோஸ்லின் அவர்கள் அமைப்பாளராக இருக்கும் வீதியில் தலைமைப்பொறுப்பை ஏற்பது குறித்து நெகிழ்வின் உரையாகத்துவங்கினார்கள் .சமூகசீர்கேடுகளைக்  கலைஞர்களால் மட்டுமே சுட்டிக்காட்டி திருத்த முடியும் என்றும்,ஜல்லிக்கட்டுத்துவங்கி இன்று வரை மாணவர்களின் போராட்டம் தொடரும் வகையில் சமூகம் நிலை சீர்கெட்டு கிடக்கும் நிலை உள்ளது .இலக்கியம் அதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. என்று சமூகம் சார்ந்த அவரது பேச்சு வீதிக்கு வலு கூட்டியது .

கட்டுரை :சகோதரி ரோஸ்லின்  "மெரீனா இளைஞர் எழுச்சி "என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டுப்போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் திரண்ட மாணாவர்களின் எழுச்சி ,இளைய சமுதாயத்திற்கான அறைகூவல் ....தீக்கங்கு போல அது சுடர் விட்டுக்கொண்டே இருக்கும் என்ற கருத்தில் கம்பீரமானக் குரலில்  படைத்த விதம் மிக அருமை .அது குறித்த வீதி உறுப்பினர்களின் உணர்வான விமர்சனம் மிகச் சிறப்பு .

நூல் விமர்சனம்


கவிஞர் இரவி உதயன் அவர்களின் நூலை கவிஞர் அமிர்தாதமிழ் மிக எளிமையாக கவிதைகளை உணர்ந்து ஆழ்ந்து செய்த விமர்சனம் பாராட்டுதற்குரியது . .கவிஞர் செல்வா தனக்கே உரிய பாணியில்"பழகிக்கிடந்த நதி " என்ற நூலை  கவிதையில்  விமர்சனம் செய்தமுறை   சிறப்பு .

கவிஞர் சாமி.கிருஷ் அவர்களின்  "துருவேரியத்தூரிகைகள் "என்ற நூலை
"விதைக்கலாம்" மலையப்பன் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல அதன் சாரத்தை அட்டகாசமாக கூறிய போது நூலின் பெருமையை அனைவரும் உணர்ந்தனர் .சில முத்துக்களில் ஒன்று

      "ஒரு கன்னத்தில் அறைந்தால்
       மறு கன்னத்தைக் காட்டலாம்
      நாங்கள்
      அடி வயிற்றில் அல்லவா
      அடிக்கப்படுகிறோம் "

அதை மனம் நெகிழ்ந்து நூலாசிரியர் சாமி கிருஷ்  ஏற்றுக்கொண்டார் .

"காலத்தின் குரல் பெரியார் "

என்ற பேராசிரியர் தமிழரசன் அவர்களின் நூலை வீதியின் பெருமைக்குரிய குழந்தையான எழில் ஓவியா தனக்கே உரிய பாணியில் வியந்து பாராட்டி செய்த விமர்சனம் போற்றுதலுக்குரியது .பெரியாரை பெரியவர்களே உணராத காலத்தில் ,குழந்தைகள் உணர்வது என்பது ஆச்சர்யமான ஒன்று தானே ...

சிறப்புரை :

வீதியின் வேராகவிளங்கும் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் வீதியின் ஐம்பதாவது கூட்டம் குறித்த ஆலோசனையை வழங்கினார் .கதையை கூறிய சிறுமிக்கு கவிஞர் சாமிக்கிருஷின் நூலை வாங்கி ,வழங்கி பாராட்டினார் .

                    டீ குடிப்பது என்பது
                    டீ குடிப்பது மட்டுமல்ல ...
அது போல ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஜல்லிக்காட்டுக்கானது மட்டுமல்ல .கொக்கோகோலா பாட்டிலைத் தலைகீழாகக்கொட்டி தனது எதிர்ப்பை காட்டிய மாணவர்களின் உணர்வின் வீச்சு .உடையில் இல்லை பண்பாடென்பது இரவிலும் பெண்களை மரியாதையாக பாதுகாப்பாக நடத்தி உலகிற்கே வழிகாட்டிய முன்மாதிரியான போராட்டம் .அது அக்னி என்றும் அணையாது என்று மிகச்சிறப்பனதொரு உரையை வழங்கினார் .
பாராட்டு


அண்மையில் நூல் வெளியிட்ட எழுத்தாளர்களான கவிஞர் சாமி கிருஷ் மற்றும் கவிஞர் பாக்யராஜ் ஆகியோரை வீதி பாராட்டி கௌரவித்து மகிழ்ந்தது.

நன்றியுரை :அமைப்பாளர் ரோஸ்லின் நன்றியுரை வழங்கினார் .

வீதியை திட்டமிட்டு மிகச்சிறப்பாக வழங்கிய அமைப்பாளர்கள் இருவரையும் வீதி பாராட்டி மகிழ்கின்றது .

Wednesday, 24 January 2018

ஆண்டாள்

சீச்சீ என்றே
ஊடகங்கள் காலடியில் வீழ்ந்தால்
உண்மைகள் உறங்கிடுமே!
ஊமையாய் ஒளிந்திடுமே!

அறம் வீழ
அநியாயம் தலைவிரித்தாட
ஆயிரம் ஆண்டுகளாக
அறிவிலிகளாய் அடிமைப்பட்டு
அழிவதை உணரவில்லை.

தமிழன் வீழ
தமிழ் எண்ணுமா?
ஆண்டாளின் தமிழ் கூறி
என் தமிழால்
என்னையே வதம் செய்யவும் கூடுமா!

மதம் பிடித்த மதம்
கதம்கதம் ஆவது எப்போது.?
மனிதம் தழைக்கும் அப்போது...

Friday, 19 January 2018

சனவரி 2018 மாத வீதி கூட்டம்

இம்மாத வீதி அமைப்பாளராக கவிஞர் வைகறையின் மனைவி ரோஸ்லின்....
இரண்டு வருடங்களுக்கு முன் பேரிழப்பாய் வைகறையை புதுக்கோட்டை இழந்தது.

அரசின் உதவி தொகை எதுவும் கிடைக்காது என்ற நிலையில் வைகறையின் மனைவி ரோஸ்லின் மற்றும் மகனை பாதுகாக்கும் முயற்சியில்.... வலைப்பதிவு நண்பர்கள், முகநூல் நண்பர்கள் மற்றும் அனைவரின் உதவியில்  நிதி திரட்டி வீதி நிறுவனர் முனைவர் அருள்முருகன் அய்யா அவர்கள் தலைமையில் வழங்கினோம்.
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் தங்கள் பள்ளியில் ரோஸ்லினுக்கு ஆசிரியப் பணி வழங்கி அவரின் வாழ்விற்கான தன்னம்பிக்கையை அளித்தது மறக்க முடியாத உதவி.
அரசு பணி வாங்குவதற்கான முயற்சிகளில் கவிஞர் முத்துநிலவன் மற்றும் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவில் கவிஞர் வைகறை மற்றும் ரோஸ்லின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
இன்று தன்னம்பிக்கை உடைய ஆசிரியராக ரோஸ்லினை பார்க்கும் போது கண்கள் கலங்குகிறது வைகறைஇல்லையே என்று.
இம்மாத வீதி கூட்டத்தை நடத்தும் பொறுப்பை மிகுந்த அக்கறையுடன் அவர் செயல்படுவதை பார்க்கையில் மனம் பெருமிதம் கொள்கிறது.
வீதி தாங்கிய மகள் அவர்...
கோழிக்குஞ்சை போல பாதுகாத்துவாழ்வில் நிமிர்ந்து நிற்பவரை கண்டு மனம் நெகிழ்ச்சியுடன் ...
வீதி கலை இலக்கியக் களம் என்பது கலந்து பிரியும் கூட்டமல்ல.....
கவிஞர் முத்துநிலவன் அவர்கள் வழிநடத்த அனைவரும் இணைந்து மகிழும் குடும்பம்....
அக்குடும்பம் அழைக்கிறது மகிழ்வாய் உங்களை தன்னோடு இணைய...
வாருங்கள்.....
அன்பின் மழையில் நனைய...
இம்மாத அமைப்பாளர்கள்
திருமிகு சுதந்திர ராசன்
திருமிகு ரோஸ்லின்....

Sunday, 10 December 2017

மாணவன் பாலா

10.12.17.
சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்.
19 வருடங்கள் கழித்து பார்க்கிறான் கறாரான ஊபர் டிரைவராக Osthi Bala என்கிற பாலு.
1990முதல் 2002 வரை அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூரில் பணிபுரிந்த போது ... என்னிடம் படித்த பாலு என்கிற வாலு.
இவன் அண்ணன்  என்மீது அதிக பிரியமாக இருக்கும் Selva Kumar  .
அதே சேட்டை, அதிகாரம் , எப்போதும் வாய் ஓயாமல் பேசும் பேச்சு.
சின்ன வண்டில லக்கேஜ் ஏத்த கூடாதுன்னு சண்டை போட்டுக்கொண்டு வண்டியை எடுத்தவன்.என்னை பார்த்ததும் நீங்கள் கீதா டீச்சர் தானேன்னு ஆச்சரியமாக கேட்டான் .
நான் யாருப்பா நீ என்றேன் . என்ன டீச்சர் என்னை தெரியவில்லையா நான் தான் பாலு என்றான்.
அப்பா மாதிரியே  நீயும் கார் வாங்கிட்டியா என்றேன்.
நான் தான் அப்பவே டிரைவராக தான் ஆவேன்னு சொன்னேன்ல என்றான்.
பாருங்கள் உங்களப்போல வலதுகை ல வாட்ச் கட்டிருக்கேன் என்கிறான்.என்னா அடி அடிப்பீங்க டீச்சர் அதனால் தான் நல்லா இருக்கேன் என்கிறான்.
சென்னை ட்ராஃபிக் ல அட்டகாசமாக வண்டி ஓட்டியவனை பார்த்து ரசித்து கொண்டே வந்தேன்.
சொந்த காரில் ஜம்முன்னு என்னை இறக்கி விட்டு பணம் வாங்கவே மாட்டேன்னு கண்கலங்க மறுத்தவனின் அன்பிற்கு என்ன கைம்மாறு செய்வது.
மாணவர்கள் மனதில் நிற்கும் ஆசிரியராக வாழ்கிறேன் என்பதை விட வேறு என்ன வேண்டும்?.

Thursday, 23 November 2017

புதுக்கோட்டை புத்தக திருவிழா

அன்புடன் அழைக்கிறோம்
புதுக்கோட்டை புத்தக திருவிழா விற்கு...
தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் சிறப்பான திட்டமிடலில் மிக அருமையாக இன்று இரண்டாவது புத்தக திருவிழா காலை 9.30 மணிக்கு துவங்கும் உள்ளது.
இவ்வாண்டு மாணவர்களுக்கு உண்டியல் வழங்கி சலுகை விலையில் புத்தகங்கள் வாங்க அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இரண்டுஇலட்சத்திற்கும் மேல் மாணவர்கள் சேமித்து புத்தகங்கள் வாங்க உள்ளனர்.
விழாவிற்காக puthukkottai book fair என்ற செயலி நேற்று வெளியிடப்பட்டது.
மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் புதுகையை கலக்கப்போகிறது.
சிறந்த பேச்சாளர்கள் செவி விருந்தளிக்க உள்ளனர்.
மனதை விசாலமாகட்டும் புத்தகங்களை குழந்தைகளுக்கு தந்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்.வாருங்கள்.

Tuesday, 21 November 2017

அன்புடன் அழைக்கின்றோம்

வீதி கலை இலக்கியக்களம் மற்றும் வலைப்பதிவர் சந்திப்பு குறித்த கூட்டத்திற்கும்   புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவிற்கும்

நாள் :26.11.17.
காலை :10மணி 
இடம் :ஆக்ஸ்போர்டு சமையர்கலைகல்லூரி.புதுக்கோட்டை.புதிய பேரூந்து நிலைய மாடியில்.

வீதி கலை இலக்கியக்களம் 45 ஆவது கூட்டம் .

குழந்தைகள் இலக்கிய சிறப்புக்கூட்டம்

சிறப்பு விருந்தினர் :கவிஞர் மு.பாலசுப்ரமணியம் புதுச்சேரி
                   சிறுவர் இலக்கியப்படைப்பாளர் ,விருதாளர் ,பொறியியலாளர் .


வீதி உறுப்பினர்களுடன் வலைப்பதிவர்களும் சங்கமிக்கும் சிறப்பு விழா ..

வருக வருக .

நன்றி

கூட்ட அமைப்பு கவிஞர்  மீரா செல்வகுமார்


வேலுநாச்சியார் நூல்

எனது முதல் வேலுநாச்சியார் ஆய்வு நூல் மறுபதிப்பில்

"வேலுநாச்சியார் நாவலில் பெண்ணயச்சிந்தனைகள் "-
இளமுனைவர் பட்ட ஆய்வு நூலாக மறுபதிப்பு காண்கிறது .

எழுத்தாளர் கே.ஜீவபாரதி அவர்களின் வேலுநாச்சியார் நூலே எனது வாழ்வை புரட்டி போட்ட ஒரு நூல் அன்றிலிருந்து இன்று வரை என் குருதியில் கலந்த பெயர் ...நினைக்கும் தோறும் சிலிர்க்கும் அவரது திண்மையும் ,திறமையும் .

சமீபத்தில் சென்னையில் வேலுநாச்சியார் என்ற பெயர் கொண்ட ஆசிரியரைப்பார்த்த போது என்னவோ அவரையே பார்த்த மகிழ்வு .

ஜான்சிராணிக்கு 77 ஆண்டுகளுக்கு முன்பே சிவகங்கை சீமையை தந்திரமாகப்பி டித்த ஆங்கிலேயரை எட்டு வருடங்கள் மறைவு வாழ்க்கை வாழ்ந்திருந்து மன்னர்ஹைதர் அலியின் உதவியோடு அடித்து விரட்டிய வீரமங்கை வேலுநாச்சியார் தமிழகப் பெண்களுக்கு முன் உதாரணம் .

அவரது பன் மொழித்திறமை ஆசம்.திருமணப்பரிசாக ஒரு சிறுமி குதிரை கேட்க முடியுமா ?கேட்டவர் அவர் .
அப்படி கேட்கும் உரிமையைத்தந்தவர் அவரது தந்தையார் இராமநாதபுர மன்னர்செல்லமுத்து சேதுபதி .

அவரது பிரியத்திற்குரிய குயிலியே சுதந்திரப்போரில் முதல் தற்கொடைப்போராளி ....தாய்நாட்டிற்காக தனது உடலில் நெய்ஊற்றிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை சின்னாபின்னமாக்கிய தீரப்பெண்மணி.
தனது அரசிக்காக அவரைக்காட்டிக்கொடுக்க மறுத்து தனது தலையையே தந்தவள் உடையாள் எண்ணும் சிறுமி .அவளின் தியாகத்திற்கு தனது வைரத்தாலியையே பரிசாகத் தந்து பெருமைப்படுத்தியவர் வேலுநாச்சியார் .
நம் குழந்தைகளுக்கு அடையாளம் காட்டி ,அவரது பெயரை இட்டு வளர்க்க தகுதியானவர் .

சிலர் அவரை சாதிக்குள் அடைக்கலாம்.ஆனால் யாராலும் அடைக்க முடியாத மாபெரும் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் ...
அவர் குறித்த ஆய்வை செய்ததே எனது வாழ்நாள் பயன் பெற்றதாக உணர்கிறேன் .மேன்மை பதிப்பகம் இந்நூலை அச்சிடுகிறது ...
மிக்க நன்றி அவர்களுக்கு .

Sunday, 19 November 2017

புத்தகங்களே துணை .

புத்தகங்களே துணை என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாவட்ட50ஆவது நூலக வார விழாவில் நடந்த கவியரங்கில் வாசித்த கவிதை.

எழுத்து பூக்களால் நிறைந்த
எண்ணச்சோலையின்
எழில் வனம்.

அடர் வனத்தின்
மணமுணர்த்தும்
மனோரஞ்சிதம்.

பருக பருகத் தீராத
போதை தரும்
மதுக்கோப்பை.

தூக்குக் கயிற்றையும்
முத்தமிடத் தூண்டும்
துணிவின் ஊற்று.

கேட்பதை யெல்லாம்
கேளாமல் வழங்கும்
அட்சயப் பாத்திரம்.

சிதறுண்ட தேசத்தை
சித்திரமாக்கும்
தேவகானம்.

பதரென்று எதையும்
விலக்க முடியாத
அமிழ்தம்.

களரான மனதையும்
வளமாக்கி
பண்படுத்தி
தளராமல் காத்திடும்
உன்னத சக்தி.

புத்தகங்கள் வெடிகுண்டென
வெடித்த வரலாறு உண்டு.

வீணாய் மடியும்
மாந்தர்களுண்டு.

வீணாய்ப் போன
புத்தகங்கள் எதுவுமில்லை.

வாழ்ந்த புத்தகங்கள்
வாழ்கின்ற புத்தகங்கள்
எல்லாவற்றையும் விட

சாகாவரம் பெற்ற
புத்தகங்களே
சாதிக்கும்
வல்லமை தந்திடும்.

சாதனையாளர்களை
சமைத்திடும்
சமூகச்சிற்பியது.

ஓவியங்கள் அழகாகும்
வண்ணங்களால்.

மனித மனங்கள்
வண்ணமயமாகும்
நூல்களால்.

எண்ணங்களின் தூவல்களை
விசிறி மனவீட்டை
ஜொலிக்கச் செய்திடும்
மாயவித்தைக்காரன்.

அலைபேசிக்கருவியை
ஆர்வமுடன் இயக்கும்
குழந்தைகளின் கரங்களில்,
தவழ்ந்திடத் துடிக்கும்
புத்தகங்களைத் தந்திடுங்கள்.
அவர்களின் மனங்களை
மலரச்செய்யும்
தப்பாமல்.

நூல் தொட்ட கைகளே
தைத்திடும்
சமூகக்கிழிசல்களை.

நூல்களைத் தொட்டு
தைத்திடுவோம்
வாரீர்..

Friday, 17 November 2017

அறம்-திரை விமர்சனம்

இது சினிமா...'அறம்'

இப்படக்குழுவினரே காலத்தின் பிரதிபலிப்பு..
முதலில் அட்டகாசமான நடிப்பால் மதிவதனியாகவே வாழ்ந்துள்ள மதிப்பிற்குரிய தோழர் நயன்தாரா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.


ஒரு பெண்ணை அறிவுடைய வராக,தன்னம்பிக்கை மிக்கவராக,ஆளுமைத்திறனுடையவராக,துணிச்சல் மிக்கவராக,சுயம் உடையவராக, சுயமரியாதை உடையவராக,எளியவராக,மக்களுக்காக போராடுபவராக,சமூக அக்கறை உடையவராக,அதிகாரத்திற்கு அஞ்சாத வராக.....காட்டியுள்ள இயக்குநருக்கும்..படக்குழுவினருக்கும் மனம் நிறைந்த மரியாதையுடன் கூடிய நன்றியை முதலில் கூறிக்கொள்கிறேன்.

இத்தனை ஆண்டுகளாக ஊடகங்கள் காட்சிப்படுத்திய பெண்மயத்தை உடைத்து எறிய, காசுக்கு விலை போகாத அசாதாரண துணிச்சல் வேண்டும்.

அரைகுறை ஆடையில் கவர்ச்சிக்காக பயன்படும்பொருளாகவே திரையில் காட்டப்படுபவளை முதன்முதலாக மக்களோடு மக்களாக ஒரு மதிக்கக் கூடிய மனிதியாக படைத்த நல்ல உள்ளங்களுக்கு ஒரு ஹாட்ஸ் ஆஃப்.
காலத்தின் கட்டாயம் அறம்.
விஷச் செடிகளுக்கு நடுவே முளைத்த மூலிகை.
நாயக வழிபாட்டை உடைத்தெறியும் நிதர்சனம்.
குரலற்றவர்களுக்கான இடி முழக்கம்.
காமிராக்கள் கருப்பும் அழகென காட்டும் அற்புதம்.
எது தேவை என மக்களுக்கு உதவும் சிறு துரும்பு.
குழியில் வீழ்ந்து கிடக்கும் திரைக்கதையை, புறக்கணிக்கப்பட்ட மக்களை, ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனைகளை, மக்களின் சுயமரியாதையை,உண்மையை மீட்க வந்த கரம், அறம்.
சுயநலமான அரசியல் வாதிகள்,அதிகாரிகளின் முகத்திரையை கிழித்திடும் கூர்வாள்.
சமூக நலன் இல்லாத இலக்கியம் இருந்தால் என்ன? அழிந்தால் என்ன?
அறம் இந்தியாவின் உண்மை முகத்தை, உலகுக்கு பறை சாற்றும் ஆதிப் பறை.
மக்களுக்கு எதுவும் தெரிந்துவிடக்கூடாதென்றே சாராயம் மட்டுமே தெரியவைக்கும் கொடுமையை தகர்க்கும் சாட்டை.
மக்களுக்கான அரசு முதலாளித்துவ அரசாக மாறிவிட்ட நிலையில் தங்களைத்தாங்களே வழிநடத்திக் கொள்ள நிமிரும் உன்னதம்.
கரிசல் காட்டு காவியம்.
சிறந்த கதையமைப்பால், ஆகச் சிறந்த இயக்கத்தால், மதிவதனியின் மட்டுமல்ல படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அதில் வாழ்ந்துள்ளனர்.
படம் பார்க்கும் முன் இருந்த மனதை தூக்கி எறிந்து,படம் முடியும் போது அனைவரையும் படத்தில் வாழ வைத்த இயக்குநரை என்ன சொல்லி பாராட்டுவது.
இத்தனை அழகாய் கருமையான முகங்களை காட்ட இந்தப்பட ஒளிப்பதிவாளரால் தான் முடியும்.
விண்தொடும் அறிவியலின் தோல்வியில்
புறக்கணிக்கப்பட்ட மக்களின் வெற்றி உள்ளது என்பதை உலகுக்கு உரைக்கட்டும்.
ஒவ்வொரு வினாடியும் வாழ்ந்த உணர்வு.
அகனிக்குஞ்சை மனக்காட்டில் விதைத்துள்ள 'அறம்'திரைப்படக்குழுவினருக்கு மனம் நிறைந்த நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..