Saturday, 4 October 2025

விழாஇரவு

விழா முடிந்து 
 நள்ளிரவு துவங்கும் பொழுது
விரைகிறேன் வாகனத்தில் வீட்டிற்கு..
மல்லியும் அல்லியும் 
மணம் பரப்பி விரியத் துவங்கி வரவேற்கும் சமயம்.
வாலைச் சுருட்டி தூங்கும் நாய்
தலையுயர்த்தி மீண்டும் தாழ்கிறது.
அசை போட்டுக் கொண்டிருக்கும்
மாட்டின் அலட்சியமான பார்வை கடந்து 
பின்வரும் வண்டியின் 
விளக்கைப் பார்த்ததும் மேலும் விரைகிறேன் .
அதுவும் என்னை வேகமாக 
நெருங்குகிறது
அனிச்சையாய் கழுத்திற்கு 
போகும் கை மனதில் சிறிது
அச்சத்தை விதைக்கிறது .
நடப்பது நடக்கட்டும் என இரு வாகனங்களும் ஒன்றோடொன்று விரைய 
சட்டென நிறுத்தி திரும்பினேன்,
டீச்சர் உங்கள் பின்னாடியே
வந்தது அச்சத்தை போக்கியது 
என்றபடி தொடர்பவளை புன்னகைத்து
இரவை நேசிக்கத் தொடங்கினேன்.

No comments:

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...