Sunday, 17 August 2025

சொந்த ஊர்

நீண்ட நாட்களுக்கு பிறகு 
பிறந்த மண்ணில் நடக்கிறேன் .

மண்வாசம் தாய்ப்பாலின் 
சுவையை நாவினில் ஊட்டியது.

கண்கள் இடுக்கி பார்க்கும் 
சைக்கிள்கடை முனுசாமி அய்யாவின் 
சின்ன சைக்கிளை
வாடகைக்கு எடுக்க
 அவரின் கடைக்கண் பார்வைக்காக
காத்திருந்த காலமவரின் முகத்தில் 
வரிகளாக ஓவியம் தீட்டி
கடையிருந்த இடத்தை விழுங்கி 
விட்டதைக் கூறாமல் கூறியது
அவரின் பெருமூச்சு.

அப்பாவின் துணையாய் வாழ்ந்த 
மாமாவின் சுவாசத்தை காற்றினில்
 சுவாசிக்க 
முயற்சித்து தோற்றேன்.
வழமையாக இரவின் மின்னல்முக
இளம்புன்னகையோடு
சட்டென தோன்றி மறைந்தாரவர்.

பாழடைந்து கிடந்த சிவன் கோவிலில் 
பைரவரை வணங்கச் சென்றவளைப் 
பார்த்து அங்கு போக முடியுமா?
என வியந்ததில் மறைந்திருந்தது 
சக்தி தியேட்டரில் பார்த்த திரைப்படத்தில் 
ஔவைப் பாட்டியிடம் பேசிய
பேயின் மண்டபமாயிற்றே என்றனதச்சம்.

மண்ணுக்குரிய மாம்பிஞ்சு நிற முகங்கள் மறைந்து எங்கெங்கு காணினும் வெண்ணிறமாக்கியதன் பிண்ணனியில் ஊரைச் சுற்றி 
பிரமாண்ட ராட்சஷனாய் எழுந்து 
நிற்கும் ஆலைகளின் வருகை.

தோட்டத்திற்கு அழைத்துச் சென்ற
தம்பி காட்டினான் எதிரில் முப்பது அடிக்கு குவாரி வந்து கொண்டுள்ளதென்பதை.

கடலுக்கு அடியில் இருந்த 
தொன்மையூர் தனது வளத்தை
கொடுத்து கொடுத்து 
நிலத்தில் மறைந்திடுமோ
என்ற கவலையில் மண்மகளிடம் 
வேண்டினேன் 
வாழவைக்கும் உன்னைச் சுரண்டும் 
இவர்களை மன்னித்து விடு.

தனது தடம் மறைந்த வலியில் 
ஓலமிடும் ஊரின் வலியை
உணர்ந்த பிச்சியாய் நானும்.

1 comment:

  1. நல்லதோர் கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...