Thursday 23 November 2023

அது

உயிரிழந்த உடலின் 
விரிந்த கால்களைக் கட்டுவது போல 
பாவாடை அணிந்து தூங்கும் போது
 கால்கள் விரியக்கூடாதென 
கட்டித் தூங்கிய பருவம்.
உதிரம் உதிரத்துவங்கிய நாளிலிருந்து
உலக்கை தாண்டக்கூடாதென
உதிரமும் நானும் உலக்கையின்
உலகில் வாழ்ந்த பருவம்.
புடவையை பாதியாய் கிழித்து
அணிந்த தாவணிக்கந்தையை மடித்து
கால்களின் நடுவே சுமந்து கடந்த பருவம்.
எட்டு முறை மடித்து வைத்த
துணிமூட்டையை நனைத்து பாவாடையில் பட்ட உதிரம் 
மறைக்கத் துடித்து வலியுடன் 
பள்ளியிலிருந்து வீட்டிற்கு 
தொடை உரசிய புண்களும்
எரிய எரிய வீடடைந்த பருவம்.
நல்ல நாளில் வரக்கூடாதென
அத்தனைக் கடவுளையும் கும்பிட்டழுதாலும் வந்து 
மூலையில் அமரவைத்து மூதேவி பட்டம்
வாங்கித்தந்த பருவம்.
தெருவெல்லாம் உறவுகள்
தலைநிமிராமல் தரைப்பார்த்தே 
நடந்த பருவம்.
அதிகாலைப்பனியில் ஆணெழும் முன்னே உறையவைக்கும் குளிரில் 
குளித்து விடியும்  பருவம்.
குளிருதும்மா,
அப்படி தான் குளிரும்
வெளியே சொல்லாதே
வயிறு பிழியும் வலிம்மா
அப்படி தான் வலிக்கும் தாங்கு.
பசி தாங்கு,
அவமானம் தாங்கு,
சுயமரியாதையின்றி வாழப்பழகு,
குரலெழுப்பாதே,
ஒங்கி சிரிக்காதே,
கடந்த காலம்
கடந்து போன காலம் மட்டுமல்ல.

மு.கீதா

No comments:

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...